குழந்தைப் போராளி - 43



அடுப்பிலிருந்து நெருப்புக்குள்

ம்பாலா வந்து சேர்ந்தவுடனேயே அம்மாவைத் தேடிப் போனேன். ஓர் அதி பயங்கரமான ஆபத்து வளையத்திலிருந்து நான் மீண்டு வந்துவிட்டாலும் அந்தப் பயங்கரத்தின் வலியும் வடுவும் இன்னும் என்னுடனேயேயிருந்தன. என் மனம் வேதனையால் குமைந்துகொண்டிருந்தது. என்னைக் கண்டதுமே அம்மா உடைந்துபோய் அழத்தொடங்கினார். அம்மா அழுவதைக் கண்டதும் நான் அதுவரை பொத்தி வைத்திருந்த வலியும் ஆத்திரமும் கழிவிரக்கமும் வெறுப்பும் வெடித்து என்னை உலுக்கி விட்டன. நான் அலறிக்கொண்டே அங்குமிங்குமாகக் குதிக்கத் தொடங்கினேன். என் கால்களால் தொம் தொம்மென நிலத்தை உதைத்துக்கொண்டே என் கைகளால் என் முகத்தில் ஓங்கி ஓங்கி அறைந்துகொண்டேன். அம்மா அழுவது எனக்குப் பிடிக்கவில்லை. அதுவும் அவர் எனக்காக அழுவது அறவே பிடிக்கவில்லை. எனது நிலை அம்மாவை அதிர்ச்சியில் உறைய வைத்தது. எங்கே அம்மா மூர்சையாகி விழுந்துவிடுவாரோ எனப் பயந்துபோய் என்னையே நான் தணித்துக்கொண்டேன். ஆனாலும் என் வலி இலேசில் தணிவதாயில்லை.

நான் அம்மாவின் வீட்டில் சிதைக்கப்பட்ட ஆன்மாவுடன் கெட்ட கனவுகளுக்குள் நொறுங்கிப்போய்க் கிடந்தேன். ஒரு மாதத்தின் பின்பு நான் மெல்ல மெல்லப் பழைய நிலைக்குத் திரும்பினேன். கோட்பிரியின் இழி செயல்கள் என் மனதில் ஏற்படுத்தியிருந்த காயங்கள் மெதுவாக ஆறி வந்தன. கெட்ட கனவுகளும் இப்போது அதிகமாக என்னை வருத்துவதில்லை. காலம் தான் மனக் காயங்கஙளை ஆற்றும் மாமருந்து என்பார்கள். என் முன்னே நீண்டு கிடந்த இருள் வெளியினுள் அம்மா ஒரு தீக்குச்சியைக் கிழித்துப்போட்டார்.

அம்மா தனக்கு ரொனால்ட் என்றொரு இராணுவ அதிகாரியைத் தெரியுமென்றார். அந்த அதிகாரி ஏதாவது ஒரு வழியில் எனக்கு உதவக்கூடும் என அம்மா நம்பினார். ஒரு மாலை நேரத்தில் அந்த இராணுவ அதிகாரியைப் பார்க்க நான் அம்மாவுடன் சென்றிருந்தேன். நானும் அம்மாவும் அதிகாரி ரொனால்டிற்காகக் காத்திருந்தபோது ரொனால்டின் மெய்க்காப்பாளனாயிருந்த ஒன்பது வயதேயான சிறுவன் குசைன் ரொனால்டின் வீட்டின் முன்னே அங்குமிங்கும் நடை போட்டுக்கொண்டிருந்தான். குசைன் தன் பிஞ்சுக் கால்களால் சிறு அடிக ளாக எடுத்து வைத்தாலும் மிக விறைப்பாக எங்கள் முன்னே நடந்து சென்றான். அவனது இராணுவ நடை ஒரு களம் கண்ட போராளியின் நடையை ஒத்திருந்தது. ரொனால்ட் தான் விரைவிலேயே தனது படைப்பிரிவுக்குத் திரும்பவிருப்பதாகவும் அங்கே 'Kabamba Training Wing'ல் என்னைத் தன்னால் சேர்த்துவிட முடியுமென்றும் சொன்னார்.

சொன்னபடியே ஒரு வியாழக்கிழமை ரொனால்டும் அவரது மெய்க்காப்பாளன் குசைனும் அவரது மனைவி யுஸ்ரினும் எங்களது வீட்டிற்கு வந்து என்னை அழைத்துச் சென்றனர். முதலில் பஸ் பயணம் அதன்பின் இரயில் பயணமென பாதி உகண்டாவைச் சுற்றியதன் பின்பாக நாங்கள் கபாம்பாவை வந்தடைந்தோம்.

முதலாவது வாரம் எல்லாம் சுமுகமாகவே இருந்தது. ஒவ்வொரு நாள் காலையிலும் படுக்கையில் மூத்திரம் பெய்ததற்காக ரொனால்டின் சிறிய மெய்காப்பாளன் யுஸ்ரினிடம் அடி வாங்குவான். நித்திரையில் மூத்திரம் போனதற்காக ஒரு முறை புருசனும் பெண்சாதியுமாகச் சேர்ந்து குசைனை உதைத்தார்கள். ஓர் உறுதியான குழந்தைப் போராளி சாதாரண பெண்ணால் தண்டிக்கப்படுவதைக் காண எனக்கு வேதனையாயிருந்தது. குசைனில் நான் என்னையே கண்டேன். படுக்கையை ஈராமாக்கியதற்காக நானும் செம்மையாக உதைபட்டது என் நினைவுக்கு வந்தது. வளர்ந்தவர்களையும் விடத் தீவிரமாகவும் மனவுறுதியுடனும் போராடும் போராளிக் குழந்தைகள் கூடச் சராசரிக் குழந்கைளைப் போலவே படுக்கையை நனைக்கத்தான் செய்வார்கள். நான் குசைனுக்காகப் பரிதாப்பட்டேன். அவனுக்குக் கிடைக்கும் தண்டனைகள் என்னுள் பழைய ஞாபகங்களை உசுப்பிவிட்டன. எனக்கு யுஸ்ரின் மீது கோபம் மூண்டதெனிலும் கோபத்தினை அடக்கி வைக்க வேண்டிய நிலையில் நான் இருந்தேன். குழந்தைப் போராளிகளைக் கேவலமாக நடத்துவது தொடர்பான எனது அனுபவங்கள் என் ஞாபகத்தில் அழியாமல்தான் இருந்தன. எனது குழந்தைப் பருவத்தில் நான் நடத்தப்பட்ட விதமும் இங்கு குசைன் நடத்தப்படும் விதமும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவைதான். எனினும் என்னால் என்ன செய்ய முடியும்? இப்போது என்னிடம் எந்த அதிகாரமுமில்லை. நான் எந்தவிதப் பலமுமற்றவள். நாங்களே எங்களைப் பலமில்லாதவர்கள் என உணர்வது மிக மிக இழிவானது. இந்த இழிவுணர்வே இப்படியான சந்தர்ப்பங்களில் எங்களை மேலும் மேலும் தாழ்த்திவிடும். என்னால் குசைனுக்கு எந்த உதவியையும் செய்ய முடியவில்லை என்பதை வெட்கத்துடன் நான் ஒத்துக்கொள்ள வேண்டியிருந்தது.

இரண்டு கிழமைகள் கழிந்து போயின. ரொனால்ட் ஏன் இன்னும் என்னை இராணுவத்தில் பதிவு செய்யவில்லை என்ற கேள்வி என்னை அலைக்கழித்துக் கொண்டேயிருந்தது. நான் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு இது பற்றி ரொனால்டிடம் கேட்டபோது நான் அவரது மெய்காப்பாளர்களில் ஒருத்தியாக இருப்பதாகவும் அப்படியே இராணுவத்தில் பதியப்படுமென்றும் சொன்னார். நான்கு கிழமைகள் போயின. யுஸ்ரின் எனக்கும் குசைனுக்கும் ஏவும் சில்லறை வேலைகளை இராணுவத்தினளான என்னால் ஏற்றுக்கொள்ள முடியாமலிருந்தது. இராணுவ நடைமுறைகளுக்கும் அவள் ஏவும் வேலைகளுக்கும் எந்தவிதத் தொடர்புமில்லாதிருந்தது. யுஸ்ரினிற்கு நாள் முழுதும் கட்டிலில் கிடப்பதைத்தவிர வேறொன்றிலும் நாட்டமில்லை. அதுவும் அலுத்துவிட்டால் வீட்டிம் முன்னே ஒரு நாற்காலியைப் போட்டுக்கொண்டு உட்காருவாள். கண்ணாடியில் தன் முகச் சுருக்கங்களை ஆராய்ந்துகொண்டே மணிக்கணக்கில் அசையாது உட்கார்ந்திருப்பாள். நாளாக நாளாக எனக்கு அவள் மீதான வெறுப்பு அதிகரித்துக்கொண்டே வந்தது. யாராவது அவளைச் சுட்டுக் கொன்றால் கூட நன்றாயிருக்குமென எண்ணிக்கொண்டேன். முன்பு பாட்டி வீட்டிலும் எனக்கு இதே வெள்ளிடிதானே!

எனது வழமைப்படி நான் இங்கிருந்து ஓடிப்போய் இராணுவத்தின் இன்னுமொரு படையணியில் சேர்ந்திருப்பேன். அது மிகவும் இலகுவான காரியமும் தான். முன்பே நான் சொன்னது போல நாங்கள் எந்தப் பதிவுகளிலும் இல்லாதவர்கள். ஆனால் இந்தமுறை நிலைமை வேறு மாதிரியிருந்தது. இங்கே எண்ணிக்கையில் குறைந்தளவே இராணுவத்தினர் இருந்ததால் யாராவது ஒருவர் காணாமற் போனாலும் உடனே தெரிந்துவிடும். யுஸ்ரின் வீட்டு அடிமையாய் நான் இருக்க விரும்பாததால் ஏதாவதொரு மாற்று வழியைக் கண்டுபிடிப்பதில் நான் மும்முரமாக ஈடுபட்டேன்.

யுஸ்ரின் தனது பெற்றோரைப் போய்ப் பார்த்து வருவதென முடிவு செய்தாள். இந்தச் செய்தி எனக்குச் சற்று நிம்மதியைக் கொடுத்தது. அவளையும் அவளது மூஞ்சியையும் கொஞ்ச நாட்களுக்கு நான் பார்க்க வேண்டியிருக்காது. அவள் ஒரு வாசலால் வெளியே செல்ல மறு வாசலால் என்னைத் தேடி ஆபத்து உள்ளே நுழையலாயிற்று.

ரொனால்ட் வீடு திரும்பியதும் ஒரு நாற்காலியில் அமர்ந்துகொண்டு என்னையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார். நான் முள்ளின் மீது நிற்பவள் போல் அவரின் முன்னே நின்றிருந்தேன். சிறிது நேரம் இப்படியே போயிற்று. பின்பு அவர் குசைனை அழைத்து ஏதோ சொல்லி வெளியே அனுப்பினார். அவன் வெளியே போனதும் வாசற் கதவைத் தாளிட்டார். நான் ரொனால்டிடம் வசமாகச் சிக்கியிருக்கிறேன் என்பதைப் புரிந்துகொண்டு எனது சகல அங்கங்களும் ஒடுங்கிப்போயின. நான் முன்பு யாருடனாவது படுத்துக்கொண்டேனா என ரொனால்ட் அறிய விரும்பினார். எனது இதயத் துடிப்பு எகிறியது. அவருக்கு சொல்வதற்காக நான் ஒரு பதிலைக் கண்டுபிடிப்பதற்கு முன்னதாகவே ரொனால்ட் என்னைத் தூக்கிப் போய்க் கட்டிலில் எறிந்தார். நான் உதவி கோரிக் கூச்சலிட்டேன். அவரென்னை மெளனமாக்கினார். தனது அருவருப்பான கையால் அவர் எனது வாயைப் பொத்திப் பிடிக்க நான் மூச்சுத் திணறிப்போனேன். தனது வேலை முடிந்ததும் எழுந்துபோன அவர் கட்டிலில் கேவிக்கொண்டிந்த என்னைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை.
குசைன் திரும்பி வந்தபோது நான் கட்டிலின் ஒரு மூலையிலிருந்து சத்தமில்லாமல் அழுதுகொண்டிருந்தேன். ரொனால்டினது அழுக்குக் கை என் வாயை இன்னும் பொத்தியிருப்பதுபோல நான் உதடுகளை இறுக மூடிக்கொண்டு அழுதேன். குசைன் எனக்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக என் தோளின் மீது கையை வைத்தான். அவனுடைய தொடுகை என்னுள் அமுங்கிக் கிடந்த அழுகையை வெடித்துச் சிதறப்பண்ணியது. நான் அவனிடம் ஓலமிட்டு அழத் தொடங்கினேன். எனது தலை, முலை, யோனி எல்லாவற்றிலிருந்தும் வலி கிளம்பியது. நடந்து முடிந்த சம்பவத்தை நினைக்கும்போது அவமானம் என் முகத்தில் ஓங்கி அறைந்தது. குசைன் என்னைத் தேற்றியபோதும் என்னால் அழாமலிருக்க முடியவில்லை.

நான் நடந்ததைச் சொன்னபோது அதைப் புரிந்துகொண்ட விதத்தில் அவன் தன் வயதுக்கு மீறிய மன முதிர்சியுடையவன் என்பதைக் குசைன் வெளிப்படுத்தினான். அந்தச் சிறிய 'முகண்டா'ச் சிறுவன் நான் தைரியமாக இருக்கவேண்டுமெனச் சொன்னான். இதுபற்றி இங்கே எவரிடமாவது முறையிடுவதால் எனக்கு எந்த நியாயமும் கிடைக்கப்போவதில்லை. பெண்கள் விடயத்தில் அநேகமாக எல்லா அதிகாரிகளுமே மிக மோசமானவர்களாயிருந்தார்கள். நான் இனிமேலும் இங்கிருக்க முடியாது. நாளைக் காலையில் நான் இங்கிருந்து ஓடிவிடப்போவதாகக் குசைனிடம் சொன்னேன். குசைனைத் தனியனாக இந்த மிருகங்களிடம் விட்டுவிட்டுச் செல்வது எனக்கு வருத்தமளித்தது. ரொனால்டிலும் பார்க்க உயர் தரத்திலுள்ள ஒரு இராணுவ அதிகாரியிடம் சென்று அவரிடம் மெய்க்காப்பாளனாகச் சேர்ந்துகொள்ளுமாறு குசைனுக்கு ஆலோசனை சொன்னேன். தன்னிலும் வலியவர்களிடம் ரொனால்டால் முண்ட முடியாது.

அடுத்த நாள் காலையில் ரொனால்ட் வெளியே சென்ற பின் நான் நல்ல மனிதரென நம்பிய நாற்பது வயதுடைய ஒரு சார்ஜனைப் போய்ப் பார்த்தேன். நான் கண்ணீருடன் நேற்று நடந்தவற்றை விபரித்தபோது அவர் துயரம் தோய்ந்த முகத்துடன் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார். அவர் இராணுவப் படிநிலையில் ரொனால்டுக்கு கீழேயுள்ளவர். அவருக்கு ரொனரல்டிடம் பயமிருந்தது. எனினும் அந்த உன்னதமான மனிதர் எனக்கு உதவுவதென்று முடிவெடுத்தார். அவர் என்னை அவரது மனைவியிடம் அழைத்துச் சென்றார். எனக்கு உதவினால் தாங்களும் ஆபத்தில் சிக்க வேண்டியிருக்குமென முதலில் அவரது மனைவி தயங்கினாலும் அவரது அச்சத்தை அவரது கருணை வென்றது.

சார்ஜன் வீட்டில் பொந்து போன்ற ஒரு சிறிய அறையுள் நான் ஒளிந்திருந்தேன். அடுத்த நாள் காலையில் எனக்கு உணவு கொண்டுவந்த சார்ஜனின் மனைவி ரொனால்ட் என்னை மும்முரமாகத் தேடிக்கொண்டிருப்பதாகவும் எக்காரணத்தைக் கொண்டும் ஒளிந்திருக்கும் அறையை விட்டு வெளியே வர வேண்டாமெனவும் சொன்னார். அன்று மாலையே என்னைத் தேடி ரொனால்ட் சார்ஜனின் வீட்டிற்கு வந்தார். நான் அங்கே வரவேயில்லை எனச் சார்ஜன் ரொனால்டிடம் சாதித்தார்."நீ சொல்வதை நம்ப முடியாது நான் உனது வீட்டைச் சோதனை போடப்போகிறேன்" என ரொனால்ட் சார்ஜனிடம் சத்தம் போடுவதை நான் கேட்டேன். கட்டிலின் அடியில் ஒளிந்துகொண்டிருந்த நான் ரொனால்ட் ஒவ்வொரு அறையாகப் புகுந்து வரும் காலடி ஓசையைக் கேட்டுக்கொண்டிருந்தேன். என் முன்னால் அவரது பூட்ஸ் கால்கள் நின்றன. அச்சத்தால் என் இரத்தம் தண்ணீராய்ப் போனது மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டு இமைகளைக் கூட அசைக்காமற் கிடந்தேன். தேடுதலில் தோல்வியுற்ற ரொனால்டின் கால்கள் மெல்லத் திரும்பின. அந்த நரகத்தில் கூடக் ஒருகுருட்டு அதிர்ஷ்டம் என்னோடிருந்தது. நான் சார்ஜனின் வீட்டுக்குத் தஞ்சம் தேடி வந்திருந்த மூன்றாவது நாள் காலையில் சார்ஜன் எனக்குக் கொஞ்சப் பணம் தந்து என்னை எனது அம்மாவிடம் அனுப்பி வைத்தார். புகையிரத நிலையம் வரைக்கும் எனக்குப் பாதுகாப்பாகத் தன்னுடைய நம்பிக்கைக்குரிய ஓர் இளைய இராணுவ வீரனையும் அனுப்பி வைத்தார்.

குழந்தைப் போராளி - 42



தண்டனை முகாம்

ன்னுடைய அதிர்ஷ்டம், அந்த இராணுவ அதிகாரி என்னை நினைவில் வைத்திருந்தார். என்னைக் கண்டதும் மகிழ்ச்சியடைந்தவர் உடனடியாகவே தனது சிறு படையணியில் என்னைச் சேர்த்துக்கொண்டார். எல்லையைக் கடக்கும் வாகனங்களைச் சோதனையிடுவதுதான் இந்தப் படையணியின் வேலை. அங்கிருந்த இராணுவத்தினருக்கு அரசாங்கம் சம்பளம் கொடுப்பதில்லை. ஆனாலும் பணம் சம்பாதிக்கும் பல யுக்திகளை இராணுவத்தினர் தங்கள் கைகளில் வைத்திருந்தனர். நானும் சிறிது நாட்களிலேயே பணம் "சம்பாதிக்க"த் தொடங்கிவிட்டேன். கடத்தல்காரர்கள் எல்லையைக் கடக்கும்போது கண்டுகொள்ளாமலிருந்தால் பணம் கிடைக்கும். பணமென்றால் கொஞ்ச நஞ்சமல்ல! நிறையப்பணம்! பதின்மூன்று வயதுப் பெண்ணான நான் அதை எவ்வாறு செலவு செய்வது? நான் எனது பணம் முழுவதையும் கோழிக்கே செலவழித்தேன். உகண்டாவில் கோழி மாமிசம் விலை கூடிய உணவு. காலை-மதியம்-மாலை என மூன்று வேளையும் நான் கோழியாகவே தின்று தீர்த்தேன். என் பணத்தைக் கோழி தின்றது. ஆத்திர அவசரத்துக்குத் தேவையென்று ஒரு செப்புச் சல்லியைக் கூட நான் சேமித்து வைக்கவில்லை ஏன் சேமிக்க வேண்டும்? எனது நாட்கள் நன்றாகத்தானே கழிந்துகொண்டிக்கின்றன.

எனது புதிய இனிய வாழ்க்கையில் நான் மெல்ல மெல்ல மூழ்கிக்கொண்டிருக்கையில் திடீரென ஒரு நாள் நாங்கள் எல்லோருமே படையணியின் தலைமைக் காரியாலயத்திற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டோம். அங்கே தளபதி டேவிட் தின்யென்புஸா எங்களை விசாரணை செய்தார். விசாரணையின் முடிவில் எங்கள் மீதான இலஞ்சக் குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபணமாயின. காட்டுப் பகுதியான நாகசொன்கொராவிலிருந்த தண்டனை முகாமிற்கு நாங்கள் அனுப்பப்பட்டோம்.

தண்டனை விதிக்கப்பட்ட எங்களது குழு டேவிட் தின்யென்புஸாவினதும் அவரது துணைத் தளபதிகளினதும் நேரடிக் கண்காணிப்பில் இங்கு கொண்டுவரப்பட்டது. நாங்கள் ஆறு மாதங்களை இந்தத் தண்டனை முகாமில் கழிக்க வேண்டும். காலை ஆறு மணியிலிருந்து மாலை ஆறுமணி வரை எலும்புகளை நொறுக்கும் கடினமான பயிற்சிகளில் நாங்கள் ஈடுபடுத்தப்பட்டோம். எங்களக்கு வழங்கப்படும் தண்டனைகளை, பயிற்சிகளை டேவிட்டே நேரடியாக மேற்பார்வை செய்தார். அவர் தண்டனை முகாமுக்கும் தலைமை முகாமுக்குமாகப் போய் வந்துகொண்டிருந்தார். நாங்கள் மைதானத்தில் தொங்கிய தலைகளுடன் அணிவகுத்து நிற்கையில் டேவிட் எங்களது தலைகளுக்கு மேலாகத் தனது பார்வையைச் செலுத்தியபடி இராணுவத்தினர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகளைப் பற்றி எங்களுக்குப் 'போதனை' செய்தார். ஒழுங்கு விதிகளை மீறினால் இவ்வாறான தண்டனைகள் தான் கிடைக்குமென்றார். எங்களின் முகங்களைப் பார்க்கக்கூட அவர் விரும்பவில்லை.

அவரின் சொற்கள் கற்களைப் போல எங்களைத் தாக்கின. எந்தவித ஈரலிப்புமில்லாத இந்த நிலம் போலவே இங்கே சொற்களுமிருந்தன. எங்களின் ஓர் எதிர் வார்த்தையே எங்களின் இறுதி வார்த்தையாவதற்கு இங்கே நிறையச் சாத்தியக்கூறுகளிருந்தன. இந்த அதிகாரிகளிற்கு எங்களது வாழ்கையின் மேல் எல்லையற்ற அதிகாரங்களிருந்தன. நாங்கள் மனிதர்களாக அல்லாமல் சடப்பொருட்கள் போல கையாளப்ப்பட்டோம். ஆம்! நாங்கள் மயிராலும் தோலாலும் போர்த்தப்பட்ட சடப்பொருட்கள். இங்கே எவராவது சுயமாகச் சிந்திக்க முயன்றால் அதற்காக அவர் தனது உயிரைக் கூட விலையாகக் கொடுக்க நேரிடலாம்.

அதிகாரிகள் துன்புறுத்தலிலும் சித்திரவதைகளிலும் கைதேர்ந்தவர்களாய் இருந்தார்கள். தண்டனை முகாமிலிருந்த பெண் இராணுவத்தினரை அவர்கள் மிக மோசமாக நடத்தினார்கள். பெண்களுக்கென்றே பிரத்தியேகமாக விதம் விதமான தண்டனை முறைகளை உருவாக்கியிருந்தார்கள். பெண் இராணுவத்தினர் பயிற்சிகளில் மட்டும் தளபதிகளையும் அதிகாரிகளையும் திருப்திப்படுத்தினால் போதாது. அவர்கள் படுக்கைகளிலும் தங்களைத் திருப்திப்படுத்த வேண்டுமென்று தளபதிகளும் அதிகாரிகளும் இயல்பாகவே எதிர்பார்த்தனர். தளபதிகளிடமும் அதிகாரிகளிடமும் அதிகாரமிருந்தது. அவர்களுக்கு என்ன தேவையாயிருந்ததோ அதை அவர்கள் வெகுசுலபமாக எடுத்துக்கொண்டனர். அவர்களது அடிமைகள் அவர்களது தேவையை நிறைவேற்றி வைத்தனர். இராணுவத்திலிருந்த மற்றைய ஆண்களுக்கும் பெண்களுக்கு என்ன நடக்கிறதென்று தெரியும். அவர்கள் எங்களை "Chakula cha wakubwa guduria" என அழைத்தனர். இதன் பொருள் "அதிகாரிகளின் எச்சில் கலயங்கள்" என்பதாகும்.

நாள் முழுவதும் கடுமையான பயிற்சியின் பின்பு மாலையில் நெருப்பைச் சுற்றி வட்டமாக உட்கார்ந்திருந்தோம். தூரத்தில் எங்களை நோக்கி கோட்பிரி என்ற இராணுவ அதிகாரி வந்துகொண்டருப்பது தெரிந்தது. அவரது நடையே அவரைக் காட்டிக்கொடுத்தது. கோட்பிரிக்கு முப்பது வயதிருக்கலாம். மிகுந்த பலசாலியான அவரை எதிரிகளின் துப்பாக்கி சற்று ஊனமாக்கியிருந்தது. அவர் துப்பாக்கிக் காயத்தால் காலை நொண்டிக்கொண்டுதான் நடப்பார். எங்களருகே வந்ததும் கோட்பிரி தனது விரலைச் சொடுக்கி என்னைத் அழைத்தார். "நீ உன்னுடைய பொருட்களையும் எடுத்துக்கொண்டு என்னுடைய குவாட்டர்ஸுக்குப் போ!" எனக் கட்டளையிட்டார். அவரது கட்டளைக்குப் பணிவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. நான் எழுந்து நடக்கத் தொடங்கினேன். அவரது மெய்காப்பாளர்கள் என்னைத் தொடர்ந்து வந்தனர். அவரது குவாட்டர்ஸுக்கு வந்தபோது நான் தங்க வேண்டிய அறையை அவரது உதவியாளன் எனக்குக் காண்பித்தான். நான் திகிலுடன் அந்த அறையில் படுத்திருந்தபோது கோட்பிரி கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்தார். நான் படுக்கையிலிருந்து துள்ளிக் குதித்து எழுந்து நின்றேன். கோட்பிரி என்னைத் தன்னுடன் வரும்படி அழைத்தார். நான் சுவரைப் பார்த்தவாறு அசையாது நின்றேன். சிறிது நேரம் காத்திருந்து விட்டு அவர் போய்விட்டார்.

அடுத்தநாள் காலையில் கோட்பிரி மறுபடியும் எனது அறைக்கு வந்தார். " நீ ஒவ்வொரு நாள் இரவிலும் எனது படுக்கையறையில் இருக்க வேண்டும்!" என என்னைப் பார்த்து உறுமினார். நான் அவரிடமிருந்து தப்பிக்க முடியாது என்பதைக் காலையிலேயே சிவந்திருந்த அவரது கண்கள் சொல்லின. ஏதோ பெரிய படையணிக்கே கட்டளையிடுவதைப் போல "கட்டளையைச் சரியாக விளங்கிக்கொண்டாயா?" என அவர் என்னிடம் அடித்து முழங்கினார். நான் அவரின் முன்னே ஐந்தும் கெட்டு அறிவும் கெட்டு நின்றிருந்தேன். பின்பு மெல்லத் தலையசைத்து "ம்" எனக் கூறிவிட்டுக் காலைப் பயிற்சிக்குப் போனேன்.

அன்று மாலையில் பயிற்சி முடிந்ததும் கோட்பிரி என்னைச் சந்தித்தார். என்னை அவரது படுக்கையறைக்குப் போய்க் காத்திருக்குமாறு கட்டளை பிறந்தது. அவரின் படுக்கையறையில் தரை முழுவதும் பொருட்கள் அலங்கோலமாகப் பரவிக்கிடந்தன. அவற்றுக்கிடையே ஒரு 'பயனைட்' கத்தியும் கிடந்தது. நான் கத்தியை எடுத்து கட்டில் மெத்தையின் அடியில் மறைத்து வைத்துக்கொண்டேன். நான் அந்தக் கட்டிலின் மீது சாய்ந்தபோது என்மீதே எனக்கு ஆத்திரமாயிருந்தது, அருவருப்பாயிருந்தது. கோட்பிரி என்மீது பாய்ந்த போது "தூக்கத்திலேயே நீ சாகப் போகிறாய் நாயே" என மனதுக்குள் சொல்லிக்கொண்டேன்.ஆனால் அவரைப் பற்றிய பயம் என்னை விட்டு விலகவேயில்லை. அவருக்கெதிராகக் கத்தியை எடுக்கும் துணிவும் எனக்கு வரவில்லை. அந்த நீண்ட கத்தி கோட்பிரியை உடனடியாகக் கொல்லக் கூடியதுதான். ஆனால் முதல் குத்தே சரியாக விழாவிட்டால்? காலையும் வந்தது, நான் எதையுமே செய்யவில்லை.

மூன்று வாரங்களின் பின்பு எங்கள் படையணிக்குப் புதிய தலைவராக கப்டன் சாம் வசாவா பலிகரியே வந்து சேர்ந்தார். அவரின் மெய்காப்பாளர்களைச் சிநேகிதம் பிடிக்க நான் பெரும் முயற்சிகளைச் செய்தேன். முயற்சி திருவினையாக்கியது, ஒரு மெய்காப்பாளனின் நட்பும் எனக்குக் கிடைத்தது. வசாவா கம்பாலாவிற்குச் செல்லவிருக்கிறார் என அந்தப் புதிய சிநேகிதன் எனக்குத் தகவல் தந்தான். என்னை இந்த நாகசொன்கொரா தண்டனை முகாமிலிருந்து எப்படியாவது வெளியே அழைத்துச் செல்லும்படி நான் அவனிடம் மன்றாடினேன். தன்னால் முடிந்தளவு தான் முயற்சிப்பதாக அவன் எனக்கு வாக்குத் தந்தான். இன்னொரு மோசமான இரவை கோட்பிரியுடன் கழித்த பிறகு காலையில் வசாவாவின் இருப்பிடத்திற்குப் போனேன். மெய்காப்பாளர்கள் பிரயாண ஆயத்தங்களில் ஈடுபட்டிருந்தனர்.என்னுள் மகிழ்சி கரை புரண்டோடியது. எனக்காகக் காத்திருந்த எனது சிநேகிதன் என்னைக் கண்டதும் பரபரப்புடன்"வாகனத்தினுள் தாவிக்கொள்!" என்றான். நான் எனது எல்லாப் பலங்களையும் திரட்டி வாகனத்துள் ஒரே தாவாகத் தாவி விழுந்தேன். சில நிமிடங்களில் கப்டன் வசாவாவின் வாகனத் தொடரணி நாகசொன்கொராவிலிருந்து கம்பாலா நோக்கிப் பயணப்பட்டது.

குழந்தைப் போராளி - 41


மீண்டும் தப்பியோட்டம்

நிம்மதியற்ற, தூக்கமுமற்ற இரவுக்குப்பின் மீண்டும் நான் ஓடத் தொடங்கினேன். காலை ஐந்து மணிக்கே நான் எழுந்து உடைகளை அணிந்துகொண்டு புறப்பட்டபோது தம்பி ரிச்சட் அறையின் ஒரு மூலையில் உறங்கிக்கொண்டிருந்தான். வார்தைகளின்றி என் இருதயத்தால் அவனுக்கு நன்றி கூறினேன். சில விநாடிகளிலேயே பரந்த வானத்தின் கீழே நான் நின்றுகொண்டிருந்தேன். சூரியன் இன்னும் வெளியே வரவில்லை. நான் ஓட்டமும் நடையுமாகப் பிரதான வீதியை நோக்கிப் போனேன். வழியில் யாரையும் சந்தித்து விடக்கூடாது என்பதற்காகச் சாலையால் நடந்து செல்லாமல் காட்டுக்குள் இறங்கி நடந்தேன். அடர்ந்த பற்றைக்காடு என்னுள் ஒளிந்திருந்த பயத்தினைக் கிளறிவிட்டது. பயத்தின் காரணமாக மூளையற்ற முயலைப்போல நான் தாறுமாறாக ஓடாமலிருக்க என்னையே நான் பெரும் பிரயத்தனப்பட்டுக் கட்டுப்படுத்த வேண்டியிருந்தது.

பிரதான வீதிக்கு வந்து ஏதாவது வாகனம் வருமா என்று பார்த்துக்கொண்டு நின்றிருந்தேன். ஒரு சோமாலிய லொறிக்காரர் என்னை ஏற்றிகொண்டார். அவருக்குப் பெருமை பிடிபடவில்லை. என்னைப் போன்ற ஓர் இராணுவத்தினளுக்கு உதவுவதில் அவருக்கு ஒரு மகிழ்ச்சி, மிகவும் உற்சாகமாயிருந்தார். அவர் என்னையும் ஒரு சோமாலியப் பெண் என்றே நினைத்திருக்க வேண்டும். வழியில் பொலிஸாரால் ஏற்படும் தொல்லைகளிலிருந்து எனது இராணுவச் சீருடை அவரைப் பாதுகாக்கும்.

ஏற்கனவே மிகவும் களைத்துப் போயிருந்த சாரதி தான் தூங்கிவிடாதிருக்க என்னுடன் ஓயாது பேசிக்கொண்டேயிருந்தார். மனித நடமாட்டமேயற்ற பற்றைக் காடுகளுக்குள்ளாலும் வரண்ட நிலப்பரப்புகளுக்குள்ளாலும் லொறி ஓடிக்கொண்டிருந்தது. நேரமாக நேரமாகச் சூரியன் உச்சத்தில் தகிக்கத் தார்சாலை உருகி மிருதுவாய் மாறிவிட்டிருந்தது. அதோ 45வது படையணியின் தலைமையகம் தெரிகிறது; கூடவே என்னை எதிர்நோக்கியிருக்கும் ஆபத்தும் என் மனக் கண்ணில் தெரிகிறது. அப்பா இந்த விடயத்தை இலேசில் விடமாட்டார். அவர் இங்கு வந்து படைத் தலைமை அதிகாரியைச் சந்தித்து என்னை ஒரு திருடி எனக் குற்றம் சாட்டாமல் விடப்போவதில்லை. தலைமையகத்தில் இறங்காமல் தொடர்ந்து பயணித்துக் 'காபேலி'வரை சென்றேன். அங்கே உகண்டாவிற்கும் ருவாண்டாவிற்குமான எல்லையில் பணியிலிருந்த ஓர் இராணுவ அதிகாரியை எனக்குத் தெரியும்.அவர் எல்லையில் கள்ளக் கடத்தலைத் தடுக்கும் பொறுப்பிலிருந்தார்.

குழந்தைப் போராளி - 40


பழிவாங்கும் திட்டம்

ன்றே நான் முகாமிற்குத் திரும்பினேன். என் கோபம் இன்னும் அடங்கவில்லை. 'ஸாடிஸ'த்தனமான அப்பாவின் துன்புறுத்தல்களை என்னால் எளிதில் மறக்க முடியவில்லை. எனது ஞானஸ்நானத்தின் போது நான் மிகவும் நேசித்த, எந்தக் குற்றமுமே செய்திராத எனது ஆட்டுக்குட்டிகளை அவர் வெட்டியதையும் நான் மறக்கவில்லை. அப்போது - எனது ஆட்டுக் குட்டிகளை வெட்டும்போது - எனக்கொரு பாடம் கற்பிப்பதாக அவர் நினைத்திருக்கலாம். ஆனால் இப்போது என்னிடமிருந்து அவர் பாடம் கற்றுக்கொள்ளப் போகிறார். இந்தப் பாடத்தின் முடிவு எனது அம்மாவுக்கு நன்மையைக் கொண்டுவரும். எனது நம்பிக்கைத் துரோகத்துக்கு நான் செய்யும் சிறிய பிராயச்சித்தமாகவுமிருக்கும்.

ஒருநாள் காலையில் நான் முகாமிற்கு வெளியே புல்வெளியில் உட்கார்ந்திருந்தேன். உடனடியாகப் போர் அபாயம் ஏதும் எங்களுக்கில்லை. யுத்தத்திற்கான தயார் நிலையில் நேரத்தைக் கடத்திக்கொண்டு இருக்க வேண்டியதுதான். இங்கும் பிரச்சினைகள் இல்லாமலில்லை. அவ்வப்போது ஏதாவது பிரச்சினைகள் வந்துகொண்டேயிருந்தன. நான் எனது துப்பாக்கியோடு புல்வெளியில் அமர்ந்திருந்தபோது பிரச்சினை என்னைத் தேடி வந்தது.

எங்கள் படையணியில் எனது பரமவைரியாய் இருந்தவன் மூஞ்சியையும் தூக்கி வைத்துக்கொண்டு ஏதோ தானே உகண்டாவின் ஜனாதிபதி என்ற தோரணையில் என் பக்கம் வந்தான். நான் உட்கார்ந்திருக்கும் இடம் தனக்கு வேண்டுமென்றும் என்னை எழுந்து போகும்படியும் சொன்னான். நான் கோபத்துடன் "முடியாது! நீ வேறு இடத்தைத் தேடிக்கொள்" என்றேன். புல்வெளியில் நிறையவே இடங்களிருந்தன. அவனது மூக்கை உடைத்து இரத்தம் காண வேண்டுமென்று நினைத்தேன். அவன் என்னைவிட வயதிலும் வலிமையிலும் கூடியவன், அவன் எனது கையைப் பிடித்துத் தூக்கி என்னை இழுத்தெறிந்துவிட்டு எனது இடத்தில் உட்கார்ந்துகொண்டான். என்னைப் போலவே அவனும் உதவிக் கோப்ரல் தான். ஆனால் நான் தனக்கு மரியாதை தரவேண்டுமென அவன் சொன்னான். இப்போது என் இரத்தம் கொதிக்கத் தொடங்கியது. என் கையிலுள்ள துப்பாக்கியைப் பற்றிய பயம் கூட அவனிடமில்லை."வயதில் பெரியவர்கள் மரியாதையை எதிர்பார்ப்பது பிழையல்ல" என்னை ஆத்திரமூட்டுவதற்கென்றே அவன் இந்த வார்தைகளைக் கூறினான்.

தன்னை யாரென்று இவன் நினைத்திருக்கிறான்? கிராமத்து முதியவர் என்றா இவன் தன்னை நினைத்துக்கொண்டிருக்கிறான்? நான் கடுஞ் சினத்துடன் அவனை உடனடியாகவே அந்த இடத்திலிருந்து போகும்படி சொன்னேன். போகாவிட்டால் இனி நான் பேசமாட்டேன்,எனது துப்பாக்கி தான் பேசும் என்றும் சொன்னேன். அவன் எனது எச்சரிக்கையைக் கணக்கெடுக்கவேயில்லை.அந்த இடத்திலேயே கல்லுப்போல உட்கார்ந்திருந்தான். எச்சரித்தது போதும் இனிச் சொன்னதைச் செய்ய வேண்டியதுதான். துப்பாக்கியை அணைத்து அவன் காலுக்கு வெடி வைத்தேன். அவனது காலிலிருந்து இரத்தம் கொப்பளிக்க அவன் பயங்கரமாக அலறிக்கொண்டே எழுந்திருக்க முயன்றான். ஆனால் அவனால் எழுந்து நிற்க முடியவில்லை. அடுத்த கணத்திதில் இராணுவப் பொலிசார் என்னைச் சுற்றி வளைத்து எனது துப்பாக்கியைப் பிடுங்கிக்கொண்டனர். எனது பரமவைரியை முதலுதவி அறைக்கும் என்னைப் படையணியின் துணைத் தளபதியின் அலுவலகத்திற்கும் தூக்கிச் சென்றனர். நான் 45வது படைப்பிரிவில் சேர்ந்த நாளிலிருந்தே அந்தத் தலைக்கனம் பிடித்தவன் எப்படியெல்லாம் என்னைச் சீண்டினான், ஆத்திரமூட்டினான் என்பதை நான் துணைத் தளபதிக்கு விளக்கிச் சொன்னேன். எனது தரப்பு நியாயங்களைக் கேட்ட பின்பு துணைத் தளபதி என்னைக் குப்பைக் குழியில் போட்டு உருட்டி எடுக்கும்படி இராணுவப் பொலிசாருக்குக் கட்டளையிட்டார். தண்டனை நிறைவேற்றப்பட்ட பின் நான் ஒரு காட்டுப் பன்றிக்குட்டியைப் போல அலங்கோலமாக நின்றிருந்தேன். எனது செய்கைக்குத் தகுந்த காரணமிருந்ததென முடிவெடுத்த துணைத் தளபதி என்னைச் சிறைக்கு அனுப்பவில்லை. பறிமுதல் செய்யப்பட்ட எனது துப்பாக்கியை ஒரு மாதம் கழித்துத்தான் திருப்பித் தருவார்கள். ஆயுதமின்றி இராணுவச் சிப்பாய்க்குச் செய்வதற்கு ஒன்றுமில்லை எனவே இப்போது எனக்கு நிறைய நேரமிருந்தது. அப்பாவை மீண்டும் சந்திப்பதென முடிவெடுத்தேன்.

முதலில் மாடுவெட்டும் ஒருவரைத் தேடிப் பிடித்தேன். அத்துடன் வெட்டிய இறைச்சியை எடுத்துச் செல்ல ஒரு வாகனத்தையும் வாடகைக்கு அமர்த்திக்கொண்டேன். நாளைக் காலையில் வாகனமும் மாடுவெட்டுபவரும் வரவேண்டிய முகவரியையும் அவர்களுக்குக் கொடுத்தேன். இந்த ஏற்பாடுகளை முடித்துக்கொண்டு பேருந்து நிலையத்திற்கு நான் வந்தபோது அங்கே எதிர்பாராத விதமாக அப்பாவைச் சந்தித்தேன்.அப்பா என்னிடம் வழவழத்துக் கதையளக்கத் தொடங்கினார். நானோ ஒற்றைச் சொற்களில் மறுமொழிகளைக் கூறிக்கொண்டு நின்றேன்.எனது சிந்தனை முழுவதும் நாளைய திட்டத்தையே சுற்றிச் சுழன்றுகொண்டிருந்தது. அப்போது அப்பா என்னிடம் கேட்ட ஒரு கேள்வி என்னை வாயைப் பிளக்கச் செய்தது. "பேபி நீ எப்போது பாட்டியையும் பண்ணையையும் போய்ப் பார்க்கப் போகிறாய்?" என அவர் கேட்டார். அவரால் எனது எண்ணங்களை எப்படிப் படிக்க முடிந்தது? உணர்ச்சிகளற்ற அவரது முகத்தை ஒருமுறை பார்த்துக்கொண்டேன். அவரது கேள்விக்கு நான் பதிலேதும் சொல்லவில்லை.

பண்ணைக்குச் சென்றுகொண்டிருக்கும் போது எனது திட்டத்தை ஒருமுறை மீட்டிப் பார்த்து எதையாவது தவற விட்டுவிட்டேனா எனச் சரிபார்த்துக்கொண்டேன். மதியத்தில் பண்ணைக்கு வந்து சேர்ந்தேன். வழியில் என்னைக் கண்ட பக்கத்துப் பண்ணையின் உரிமையாளர் உடனடியாகவே என்னை அடையாளம் கண்டுகொண்டு என்னைக் கட்டி அணைத்தார். எனது இராணுவ உடைகளைத் தொட்டுப் பார்த்துக்கொண்டே "நீ நன்றாக வளர்ந்து விட்டாய், இந்த இராணுவச் சீருடை உண்மையிலேயே உனக்கு மிகப் பொருத்தமாயிருக்கிறது" என முணுமுணுத்தார். எனது 'ஆர்மி'ச் சப்பாத்து எனது தொடையின் அரைவாசிக்கு உயர்ந்திருந்ததை அவர் கவனிக்கவல்லைப் போலும். அப்படியிருந்தும் நான் அவரின் இடுப்பளவு உயரமேயிருந்தேன். அவரின் உயரத்துக்கு நான் என்றுமே வளரப்போவதில்லை.

பண்ணை வீட்டின் முன்னே நாய்க் குட்டிகள் சகிதம் நின்றுகொண்டிருந்த எனது சகோதரன் ரிச்சட் வைத்த கண் வாங்காமல் என்னையே பார்த்துக்கொண்டு நின்றான். எனது இதயம் வேகமாகத் துடிக்கத் தொடங்கியது. அந்தக் கணத்தில்தான் நான் அவனை எவ்வளவு நேசிக்கிறேன் என்பது எனக்கே புரிந்தது. தம்பி தனக்கேயுரிய நிதானமான முறையில் என்னை வரவேற்றான்.அவன் முன்பிருந்ததை விட இப்போது இன்னும் சிறுத்திருந்தான். மொத்தத்தில் எதுவித மாற்றங்களுமில்லாமல் அதே ரிச்சட்டாகத்தான் அவன் இருந்தான். இப்போதுதான் காட்டில் வேட்டையாடிவிட்டு வந்தவனைப் போல அவனது தோற்றமிருந்தது. அவனை என்னுடன் சோர்த்து இறுக்கமாகக் கட்டி அணைத்துக்கொண்டேன். அவன் தனது தலையை என் தோள் மீது சாய்தான். ஒரு நொடியில் அங்கே தோன்றிய பாட்டி எனது கைளைப் பற்றி வீட்டிற்குள் அழைத்துச் சென்றார். பாட்டியின் முகம் இன்னும் சூனியக்காரியின் முகமாகத்தானிருந்தது. ஆனால் இப்போது அந்த முகத்தில் ஒரு துயரப் புன்னகை ஒட்டியிருந்தது. நான் சத்தியம் செய்யக்கூடத் தயாராயிருக்கிறேன்; அன்று அவரது கண்களில் உண்மையிலேயே கண்ணீர் வந்தது.

பாட்டி பரிமாறிய உணவை நாங்கள் சாப்பிட்டு முடித்ததும் நானும் தம்பியும் வேட்டையாடப் புறப்பட்டோம். மீண்டும் எனது சகோதரனின் பக்கத்தில் இருப்பது எனக்கு மிகவும் மகிழ்வாயி ருந்தது. நாங்கள் காட்டுக்குள் நடந்துகொண்டிருந்தபோது நான் எதற்காகப் பண்ணைக்கு வந்திருக்கிறேன் என்பதைத் தம்பி அறிய முயன்றான். எங்களது உண்மையான அம்மாவிற்காகப் பண்ணையிலிருந்து சில மாடுகளையும் ஆடுகளையும் பிடித்துச் செல்லும் எனது திட்டத்தை நான் அவனுக்குக் கூறினேன்.
"களவாடவா நீ இங்கு வந்துள்ளாய்?"
"ம்!"
"அப்படியானால் நீ முட்டாள் தான்,துப்பாக்கியில்லாமல் நீ வந்திருக்கின்றாய்!"

சூரியன் மேற்கில் விழுந்துகொண்டிருந்தான். வேட்டை எங்களிருவரையும் நன்றாகக் களைக்க வைத்துவிட்டது. காடு எங்கள் இரையை ஒழித்து வைத்துவிட நாய்களும் களைத்துவிட்டன. வீடு திரும்பும்போது சோர்ந்துபோன நாய்கள் குற்ற உணர்வுடன் தங்களது எஜமானை அடிக்கொரு தடவை நிமிர்ந்து பார்த்துக்கொண்டே வந்தன. நானும் தம்பியும் கால்பந்து பற்றியும் எங்களின் வேட்டையைப் பற்றியும் பகடிக் கதைகள் பேசிக்கொண்டே வந்தோம். வேட்டையில் நாங்கள் தோற்றிருந்தாலும் எங்களுக்காகப் பண்ணையில் போதியளவு மாமிசம் காத்துக்கொண்டிருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியும்.

வீடு வந்ததும் வராததுமாக நான் பாட்டியிடம் சென்று எதற்காக நான் இங்கு வந்திருக்கிறேன் என்பதைச் சொன்னேன். புதினமறியும் ஆர்வத்துடன் எனது சகோதரனும் வந்து அறையின் மூலையில் உட்கார்ந்திருந்தான். ஒரு பெரிய பாத்திரத்தினுள் கை வேலையாயிருந்த பாட்டி என்னை பார்க்கக் கண்களை உயர்த்தினாள். நான் எனது பொய் மூட்டையை இன்னொரு தரம் அவிழ்க்கத் தொடங்கினேன். பட்டியிலிருந்து எட்டு மாடுகளையும் ஏழு ஆடுகளையும் பிடித்து ஒரு வண்டியில் ஏற்றிக் கொண்டுவரும்படி அப்பா என்னை இங்கு அனுப்பி வைத்திருக்கிறார் எனப் பாட்டிக்கு 'விளக்கம்' சொன்னேன். "வழமையாக அவர்தானே இந்தக் காரியங்களைச் செய்வார் இப்போது மட்டும் ஏன் மாறி நடக்கிறது?" எனப் பாட்டி கேட்டார். ஒரு இராணுவத்தினளாக வாழ்க்கை எனக்கு ஒரு முக்கியமான பாடத்தை கற்றுத் தந்துள்ளது. எப்போதுமே கைவசம் நாங்கள் ஒரு பதிலைத் தயாராக வைத்திருக்க வேண்டும். "இராணுவம் வாகனத்தில் இருந்தால் பொலீசார் லஞ்சம் கேட்க மாட்டார்கள் அப்பாவிற்கு அந்தப் பணம் மிச்சமாகும், அப்பா உள்ளதிலேயே நல்ல மாடுகளையும் ஆடுகளையும் கொண்டுவரச் சொல்லியுள்ளார்" எனப் பாட்டிக்கு விளக்கம் சொன்னேன். பாட்டி அரைகுறை மனதோடு தலையை அசைத்துவிட்டு, இன்னும் சிரித்துக்கொண்டிருக்கும் எனது சகோதரனை முறைத்துப் பார்த்தார். எனது சகோதரன் ஏன் சிரிக்கிறான் என்பது எனக்குத் தெரியும். ஆனால் அவனது சிரிப்பைப் பாட்டி எப்படி எடுத்துக்கொள்வார்? அவன் வழமை போலவே தன்னைக் கேலிபண்ணிச் சிரிக்கிறான் எனப் பாட்டி எண்ணக் கூடும் என நினைத்து நான் சமாதானமானேன்.

இரவுணவின் போது பக்கத்துப் பண்ணையின் உரிமையாளர் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். அவர் பாட்டியுடன் கதைப்பவற்றை நான் உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருந்தேன். அவர் பாட்டியிடம் சொன்ன ஒரு விசயத்தைக் கேட்டதும் என் இதயமே ஒரு கணம் நின்றுவிட்டது. உணவைச் சப்பிக்கொண்டிருந்த எனது வாய் ஆடாமல் நின்றது. பக்கத்துப் பண்ணைக்காரர் எனது தகப்பனாரை நகரத்தில் கண்டதாகவும் நான் இங்கு வந்திருப்பதை அவர் அப்பாவிற்குச் சொன்னதாகவும் பாட்டியிடம் கூறினார்.

நல்ல வேளையாகப் பாட்டியின் முழுக் கவனமும் உரையாடலில் இருக்கவில்லை. நானும் சாப்பாட்டில் கவனம் செலுத்துவது போலப் பாவனை செய்தேன். எல்லாமே திட்டமிட்டபடி நடக்கும் என எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கொண்டேன். ஆனாலும் நம்பிக்கையீனம் என்னைப் பலமாக ஆட்டிப் படைத்தது. நானே எனக்குச் சொன்ன சமாதானங்கள் எல்லாம் ஒன்றின் பின் ஒன்றாகச் சரிந்து விழுந்தன.பக்கத்துப் பண்ணைக்காரர் போகும்போது கதவைப் பிடித்துக்கொண்டே என்னைத் திரும்பிப் பார்த்து "உன்னைப் பார்ப்பதற்காக உனது அப்பா நாளை காலையில் இங்கு வருகிறார்" எனச் சொல்லிவிட்டுப் போனார்.

அப்போது பாட்டி என்னைப் பார்த்த பார்வையுடன் எனது கடைசி நம்பிக்கையும் செத்துப் போனது. அவரின் கண்களில் நாள் முழுவதும் இருந்த நெகிழ்வும் அன்பும் இப்போது காணாமற் போயிருந்தன. எனது இதயம் வேகமாக அடிக்கத் தொடங்கிப் பின் ஏறத்தாழ நின்றே விட்டது. பாட்டி என்னை முறைத்துக்கொண்டே "மாட்டுத் திருடர்களை உனது தந்தை எப்படிக் கொல்வாரோ அதேபோல உன்னையும் அடித்தே கொல்லப் போகிறார்" என்றார். அச்சம் எனது மூளையையும் அங்கங்களையும் முடக்கிப்போட்டது. இப்போது நான் இங்கிருந்து ஓடித் தப்பாவிட்டால் என்றுமே நான் இங்கிருந்து மீளப் போவதில்லை என நினைத்துக்கொண்டேன். பாட்டியோ தனது மிரட்டல்களையும் பயமுறுத்தல்களையும் நிறுத்துவதாயில்லை. கடைசியில் எனது சகோதரன் ஒரு கூச்சல் போட்டுப் பாட்டியை அடக்கினான். பின்பு ஒன்றுமே நடவாதது போலத் தனது வழமையான நிதானத்துடன் என்னருகே வந்து மெல்லிய குரலில் "பறிக்கப்பட்ட உனது ஆயுதத்தை மறந்து விடாதே" எனச் சொல்லிவிட்டுப் படுக்கைக்குப் போனான்.

குழந்தைப் போராளி - 39


மீண்டும் போராளி

தொண்டர் படைகளுக்கு ஆட்களைச் சேர்த்துக்கொள்வதற்காக NRA பல வாகனங்களை நாடு முழுவதுமே ஓடவிட்டிருந்தது. 'நயாசிஷாரா'விற்குப் போகும் வழியில் அப்படி ஒரு நான்கு சக்கர "இராணுவ அலுவலக"த்தை நான் கண்டேன்.

தொண்டர் படைக்குச் சேர்க்கப்படுபவர்கள் ஒரு மாத ஆயுதப் பயிற்சியின் பின்பாக போர்முனைகளுக்கு அனுப்பப்படுவார்கள். இந்த இடத்தில் எனது அனுபவம் எனக்குக் கை கொடுத்தது. இராணுவ நடைமுறைகள் எனக்குப் பரிச்சயமானதால் எங்கே எதைச் செய்தால் எனக்கு இலாபமுண்டு என்பது எனக்குத் தெரியும். நான் பயிற்சியின் முடிவில் போர்முனைக்கு அனுப்பப்படாததற்கு வேறொரு காரணமுமுண்டு. பயிற்சிக் காலத்தில் ஆயுதப் பிரயோகங்களிலும் அணிவகுப்புகளிலும் மற்றைய இராணுவ நுட்பங்களிலும் நான் காட்டிய திறமையைப் பார்த்து, எங்களைப் பயிற்றுவித்த கோப்ரலால் தன் கண்களையே நம்பமுடியவில்லை. இதில் எந்த ஆச்சரியமுமில்லை. எல்லாமே எனக்கு முன்பே தெரிந்த விடயங்கள் தானே! எனவே பயிற்சியாளர் என்னை உதவிக் கோப்ரலாக பதவி நியமனம் செய்து 45வது படையணிக்கு என்னை அனுப்பி வைத்தார்.

அங்கிருந்து உடனடியாகவே நான் எங்கேயிருக்கிறேன் என்பதை அம்மாவுக்கு அறிவித்தேன். ஒன்றிற்கு இரண்டு முறையாக அம்மாவிற்கு நான் செய்த நம்பிக்கைத் துரோகம் என் மனதை அரித்துக் கொண்டேயிருந்தது. அம்மாவின் கஷ்ட ஜீவனமும் அதைச் சமாளிக்க அவர் செய்து வரும் சிறியளவு பால் வியாபாரமும் என்னை வருத்தின. அப்பாவோ பெரிய பாற்பண்ணையும் மாடுகளுமாயிருக்கிறார். ஒருநாள் முழுவதும் இது குறித்துத் தீவிரமாகச் சிந்தித்த பின்பு அப்பாவுடன் ஒரு சிறிய சந்திப்பை நிகழ்த்துவதென முடிவெடுதேன்.

சிற்றன்னை பெற்றெடுத்த எனது சகோதரிகள் என்னைக் கண்டதும் மிகவும் மகிழ்ந்து போயினர். அப்பா வீட்டு விறாந்தையில் சாய்வு நாற்காலியில் படுத்திருந்தார். என்னை அடையாளம் கண்டதும் அவர் உறைந்து போனார். படபடக்கும் அவரது கண்கள் மட்டுமே அசைந்தன.ஒருவரை ஒருவர் சற்று நேரம் வரை பார்த்துக்கொண்டிருந்தோம். என் தலை கிறுகிறுத்துக்கொண்டிருந்தது."பேபி" எனக் கீச்சுக்குரலில் கூவிக்கொண்டே அப்பா எழுந்து நின்றார். பயந்தவர் போலக் காலடிகளை ஒன்றின் மேல் ஒன்றாக வைத்து அவர் என்னை நெருங்கினார். நான் ஆடாமல் அசையாமல் நின்றேன். முகத்தில் மிகக் குழப்பமான பாவனைகளைக் காட்டிக் கொண்டே அவர் வீட்டினுள்ளே போனார். அவர் திரும்பி வரும்போது எனக்காக ஒரு நாற்காலியைத் தூக்கிக்கொண்டு வந்தார். ஒரு மரியாதைக்குரிய விருந்தினரை வரவேற்பது போல அவரது சாய்வு நாற்காலிக்கு அருகே எனக்கு இருக்கை போடப்பட்டது. இருவருமே உட்கார்ந்துகொண்டு எதுவும் பேசாமல் ஒருவரையருவர் பார்த்துக்கொண்டிருந்தோம். பதறிப் படபடத்துக்கொண்டிருக்கும் அப்பா முதலில் கதையைத் தொடங்கட்டும் என நான் அமைதியாக உட்கார்திருந்தேன். எனது கொடுமைக்காரச் சிற்றன்னை வெளியே வந்து என்னை வரவேற்பதற்காகவும் நான் காத்திருந்தேன். சிறிது நேரத்திற்குப் பின் சிற்றன்னை கதவைத் திறந்து மெதுவாக வெளியே வந்தார். எனது கோபத்தை மிகச் சிரமப்பட்டு அடக்கிக்கொண்டே எனது உதடுகளில் புன்னகையை வரவழைத்தேன். அதன் பின்பு தான் அப்பா நிம்மதியாக மூச்சு விட்டார். அவரின் முகத்தில் இப்போது மகிழ்ச்சி ரேகைகள் தோன்றின. அப்பா, "பேபி நீ எப்போது இந்தப் பிரதேசத்துக்கு வந்து சேர்ந்தாய்?" எனக் கேட்டார். அதன் பின்பு ஒரு நசுங்கலான சிரிப்பு அவரிடமிருந்து வெளிப்பட்டது. "பொது மக்கள் இராணுவத்திடம் இம்மாதிரியான கேள்விகளைக் கேட்கக் கூடாது" என நான் சர்வ சாதாரணமாகச் சொன்னேன். மீண்டும் கதை பேச்சின்றி ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தோம். சிற்றன்னை கொண்டுவந்த பாலை 'நான் ஏற்கனவே சாப்பிட்டாகிவிட்டது' என்று காரணம் சொல்லிக் குடிக்க மறுத்துவிட்டேன். உண்மை என்னவென்றால் நான் அவரை நம்பவில்லை அவரிடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ள நான் விரும்பவுமில்லை.

குழந்தைப் போராளி - 38


பழைய பாதை

னது படையணியை விட்டு நான் சுலபமாகத் தப்பியோடி வந்தததற்கு அதிர்ஷ்டம் என் பக்கம் இருந்ததோடு NRA இராணுவத்தின் ஒழுங்கற்ற தன்மையும் ஒரு காரணம். குழந்தைகளான நாங்கள் 'பதிவில்லாத' போராளிகள். NRA இராணுவத்தின் பல நிர்வாக அலகுகளுக்கு நாங்கள் அங்கும் இங்குமாக அனுப்பப்படுபவர்கள். எங்களை பற்றிய எந்தக் கோப்புகளோ குறிப்புகளோ அவர்களிடமில்லை. இந்த நிலையில் அவர்களால்தான் என்ன செய்ய முடியும்? ஒட்ட வெட்டப்பட்ட முடியும் மண்ணிறக் கண்களையும் கொண்ட ஒரு குழந்தைப் போராளியை அவர்கள் எங்கேயென்று போய்த் தேடுவது? எங்களின் பெயர்களோ ஊர்களோ எந்த ஆவணத்திலுமில்லை. எங்களுக்கு ஊதியமுமில்லை. ஆக மொத்தத்தில் நாங்கள் அரூபங்கள்.

ஆனால் போர் இன்னும் முடியவில்லை. எனவே இராணுவ உடைகளை விட்டு விட்டுச் சாதாரண உடைகளையே அணிவதென முடிவு செய்தேன். எனது ஆயுதத்தை எடுத்துக்கொண்டு மீண்டுமொரு முடிவு தெரியாத பயணத்திற்குத் தயாரானேன். எனது வாழ்கையை ஒரு கட்டுக்குள் கொண்டு வர வேண்டுமாயின் முதலில் எனது உணர்வுகளைச் சிந்தனைகளை ஒரு கட்டுக்குள் கொண்டு வரவேண்டும். அதன் பின்புதான் நான் புதிதாக எதையாவது ஆரம்பிக்கலாம்.

நான்கு வருடங்களின் பின்பு திரும்பி வந்த போதிலும் எனது தாயின் வீட்டை ஒரு பிரச்சனையுமின்றி என்னால் கண்டுபிடிக்க முடிந்தது.. ஆனால் அந்த வீடு வெறுமையாகக் கிடந்தது. வீட்டிலிருந்தோர் அவசர அவசரமாக வீட்டை விட்டு ஓடியது போல வீடு அலங்கோலமாகக் கிடந்தது. வீட்டின் வாசற்படியில் உட்கார்ந்திருந்து யோசித்த போதுதான் நான் ஞாபக மறதியாக எனது பயணப் பையை பஸ்ஸிலேயே விட்டுவிட்டு வந்திருப்பது என் மூளையில் உறைத்தது. அப்படியொரு குழப்பிய நிலையில் நான் இருந்தேன். பதறியடித்துக்கொண்டே புயல் வேகத்தில் பஸ்ஸைத் தேடி ஓடினேன்.

பயணப் பையில் இருந்தவற்றிலேயே பெறுமதியானது எனது ஆயுதந்தான். அது போர்முனைகளில் என்னை ஒருபோதும் கைவிட்டதில்லை. வனாந்தரங்களில் அது என் வழித் துணையாகயிருந்தது. கடந்த சில வருடங்களாக அது எனது உடலின் ஓர் அங்கமாயிருந்தது. பேருந்துத் தரிப்பிடத்தில் கேட்டவர்களெல்லாம் எனக்கு உதவத் தயாராகயிருந்தனர். ஆனால் எனது பொருட்கள் தான் எனக்குத் திரும்பவும் கிடைக்கவேயில்லை. எல்லாவற்றையும் இழந்துவிட்ட உணர்வில் நான் தத்தளித்தக்கொண்டிருந்த போது எனது தாயின் அருகாமை என்றுமில்லாதவாறு இன்று எனக்குத் தேவையாயிருந்தது. பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்த பெண்ணொருத்தியிடம் எனது அம்மா பற்றிய விபரங்களைக் கூறி விசாரித்தேன். அவள் புன்னகைத்து "கவலைப்படாதே! இன்னும் சில நிமிடங்களிலேயே நீ உனது அம்மாவைச் சந்திக்கலாம். உன்னை நான் அவளிடம் அழைத்துச் செல்வேன்" என்றாள்.

நான் அந்த வீட்டினுள் நுழைந்தபோது வீட்டினுள்ளே ஒரு நாற்காலியில் அந்தச் சிறுமி அமர்ந்திருந்தாள். அவள் எனது சகோதரி மார்ஜி-பொன்பொன்ஸ். அவள் தலையிலிருந்து பாதம்வரை தோற்றத்தில் என்னையே உரித்து வைத்திருந்தாள். சில விநாடிகள் வைத்த கண் வாங்காமல் என்னையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த மார்ஜி மெதுவாக நாற்காலியிலிருந்து எழுந்து வந்து தரையில் விழுந்து எனது கால்களைக் கட்டிக்கொண்டு எனது பெயரைச் சொல்லிக் கதறினாள். நானோ என்ன செய்வதென்று தெரியாது சிலை போல நின்றுகொண்டிருந்தேன். அவளைத் தூக்கி அணைத்துக் கொள்ளவும் எனக்குத் துணிவு வரவில்லை. விம்மலுடன் தரையிலிருந்து எழுந்து நின்ற எனது சகோதரி கையைப் பிடித்து என்னை வெளியே தெருவிற்கு அழைத்து வந்தாள். நாங்கள் தெருவில் அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருக்கவில்லை. அம்மா தெருமுனையில் தோன்றினார். அவர் மிக நிதானமாக எங்களை நோக்கி நடந்து வந்தார். எங்களருகில் வந்த அம்மா எங்களிருவரையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டு சிறிது நேரம் நின்றிருந்தார். பிறகு வெகு இயல்பான தொனியில் "வாருங்கள் வீட்டுக்குள் போவோம்" என்றார்.

நாங்கள் வீட்டு முற்றத்தில் அமர்ந்திருந்து பேசிக்கொண்டிருந்தோம். அம்மாவும் மார்ஜியும் தான் அதிகமாகப் பேசினார்கள். நான் இவ்வளவு காலங்களாக எங்கேயிருந்தேன்? என்ன செய்தேன் என்பதை அறிய அவர்கள் ஆவலாயிருந்தார்கள். நான் திரும்பி வந்ததையிட்டு எனது சகோதரி தாங்கொண்ணாத மகிழ்ச்சியில் துடித்துக்கொண்டிருந்தாள்.
எனது தாயார் "மகளே என்றோ ஒருநாள் நீ என்னிடம் திரும்பி வருவாய் என்ற நம்பிக்கையினால் தான் நான் இந்தக் கிராமத்தை விட்டுப் போகாமல் இருக்கிறேன்" என்றார். "நீ ஓடிப்போன நாளிலிருந்து என்னை ஒரேஒரு கேள்விதான் அலைக்கழிக்கிறது. நீ ஏன் என்னை விட்டு ஓடிப்போனாய்?" எனக் கேட்டு அம்மா என்னைப் பரிதாபமாகப் பார்த்தார். நான் அவரை விட்டு ஏன் ஓடிப் போனேன்? நான் முதன்முறையாக எனது தாயின் கண்களை நேராகப் பார்த்துக்கொண்டே உண்மையைச் சொல்லத் தொடங்கினேன். நான் அம்மாவை விட்டு ஓடிய இரவில் அம்மாவும் அம்மாவின் கூட்டாளிகளும் என்னைத் தின்று விடுவார்கள் என நான் அஞ்சினேன் என நான் சொன்னதுதான் தாமதம் அம்மா அடக்கமாட்டாமல் வெடித்துச் சிரித்தார். அவர் கண்களில் நீர் கோர்த்தது. அந்தக் கண்ணீர்த் துளிகள் சிரித்ததால் துளிர்த்தவையல்ல. மார்ஜி கண்களைச் சுருக்கிச் சிரித்துக்கொண்டே "அம்மா செய்தாலும் செய்திருப்பார்" என்றாள். சிறிது நேரம் நாங்கள் ஒன்றுமே பேசாதிருந்தோம். முற்றத்தில் கோழியொன்று மேய்ந்துகொண்டிருந்தது. "இது நம்முடைய கோழியா?" என நான் கேட்டுக் கேட்ட வாயை மூடவில்லை அம்மா கோழியைப் பிடிக்கும்படி சொன்னார். கோழி சட்டியில் வெந்துகொண்டிருக்கும் போது அம்மா என் காதில் இரகசியமாக ஒரு பொய்யைச் சொன்னார். இந்தக் கோழியை நான் திரும்பும் வரை அவர் எனக்காகவே விட்டு வைத்திருந்தாராம். அது அன்பை உணர்த்தச் சொன்ன பொய். நான் ஓடிப் போன காலத்தைக் கணக்கிட்டால் கோழியின் வயதென்ன?

அம்மா என்மீது அன்பையும் பாசத்தையும் பொழிந்த போதும் அவரை நான் அந்நியமாகவே உணர்ந்தேன். முதலில் எனக்கு அவரைச் சரிவரத் தெரியாது, அத்துடன் எனது கடந்த கால வாழ்வில் நான் யாருடனும் கடும் நெருக்கத்தைப் பேணியதுமில்லை எவரையும் நான் சீக்கிரத்தில் நம்பியதுமில்லை. அம்மாவிடம் எப்போதுமே நகைச்சுவைக் கதைகள் கைவசமிருக்கும். ஆனால் அந்தக் கதைகளின் நம்பகத்தன்மை கேள்விக்குரியதே. ஆனாலும் கேட்பவர்களால் சிரிக்காமலிருக்க முடியாது. அம்மா சொன்ன ஒரு கதை என்னையும் எனது சகோதரியையும் சிரிப்பால் உலுக்கியது. பாப்பரசரின் தாய் துற்சி இனத்தைச் சேர்ந்தவளென்று அம்மா சொன்னார். இதைச் சொல்லும் போது ஒரு அசைக்க முடியாத உண்மையை வெளியிடுவதைப் போலவே அவரின் முகபாவனைகளிருந்தன. கேட்பவர்கள் என்ன நினைப்பார்கள் எனபது பற்றியெல்லாம் அவருக்குக் கவலையில்லை. ஆபிரிக்கப் பெண்கள் குறிப்பிட்ட வயதுகளில் சாப்பிடக் கூடாத சில உணவு வகைகளுண்டு. ஆனால் அம்மா அந்தக் கட்டுப்பாடுகளைப் பொருட்படுத்துவதே இல்லை.யாராவது அவரது உணவுப் பழக்கத்தினைக் கேலி செய்தால்,"என் முன்னே வைக்கப்படும் எதையும் நான் சாப்பிடுவேன்" என அம்மா மார் தட்டுவார். வயது வித்தியாசமின்றி எல்லோரும் அவரை விரும்பினார்கள். அம்மா என்மீது அன்பைப் பொழிந்தாலும் அதனைத் திருப்பிச் செலுத்த என்னால் முடியவில்லை. நான் பிறந்தது முதலே அன்பில்லாத வாழ்க்கையையே வாழ்ந்தது இதற்கு காரணமாயிருக்கலாம்.

எனது தாயாரின் வாழ்கையும் மிகச் சிரமமானது. அவர் கணவனை இழந்தவர். அவரின் சொத்துக்கள், இறந்த கணவனின் உடமைகள் எல்லாவற்றையுமே அவர் கலவரத்தின் போது பறிகொடுத்து விட்டார். இப்போது அவர் வசிக்கும் சிறிய வீடும் வாடகை வீடே. என்னால் அந்தச் சூழலில் இயல்பாக இருக்க முடியவில்லை. கிராமத்திலுள்ளவர்கள் சோம்பேறிகளாகவும் எதிலும் கவனமற்றவர்களுமாயிருந்தனர். ஏதாவது ஒரு வேலையைத் தன்னும் அவர்கள் நேர்த்தியாகச் செய்வதில்லை. பொறுப்பின்மையும் அசட்டையும் எங்கும் நிறைந்திருந்தன. அங்கே என் விருப்பம் போல எதுவும் அமைவதாயில்லை. யாரும் நான் விரும்பியது போல என்னை மதிப்புச் செய்யவில்லை. ஒரு போராளி சாதாரண மக்களை விடப் பலமடங்கு உயர்ந்தவர் என்பதே எங்களுக்கு ஊட்டி வளர்க்கப்பட்ட சிந்தனை. நானும் அதனை உறுதியாக நம்புவள். எனது சொற்கள் மற்றவர்களால் தட்டாமல் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியன என்பதில் எனக்கு இருவேறு கருத்துக்களில்லை. ஆனால் என் பருப்பு கிராமவாசிகளிடம் வேகுவதாயில்லை. என்னாலோ எனது போராளி முறுக்கை எளிதில் கைவிடவும் முடியவில்லை. மறுபடியும் NRA இராணுவத்திற்குத் திரும்புவதும் இயலாத காரியம். ஏனெனில் எனது ஆயுதத்தை நான் தொலைத்து விட்டேன். ஆயுதத்தைத் தொலைத்தவர்கள் கடுமையான தண்டனைக்குள்ளாவார்கள். சிலவேளைகளில் அது மரண தண்டனையாகக் கூட இருக்கும். வேறு வழியில்லை! இந்தக் கிராமத்திலேயே நான் கிடந்து அழுந்த வேண்டியதுதான்.

மார்ஜி நான் எனது பதின்மூன்று வயதில் மறுபடியும் பாடசாலைக்குச் செல்ல வேண்டுமென விரும்பினாள். இந்த விடயம் எனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. ஆனால் வேறு வழிகளும் இருக்கவில்லை. வீட்டில் அடைந்து கிடப்பதை விடப் பாடசாலைக்குப் போய் வருவது நல்லதுதான். பாடசாலையில் என் பெயரைப் பதிவு செய்து படிப்பும் தொடங்கியாயிற்று.

ஒவ்வொரு நாளும் வகுப்புகள் முடிந்ததும் நான் யாருடனாவது அடிதடியில் இறங்கிவிடுவேன். பொதுவாக என்னிலும் வயது கூடிய மாணவர்கள் எப்போதுமே என்னை ஆத்திரமூட்டுவார்கள். சண்டையில் பல முறைகள் தோற்றுப் போனாலும் என்னால் சண்டையை விட முடியவில்லை. நான் இரத்தம் ஒழுக வருவதைப் பார்த்துவிட்டு அம்மா பதறிப்போய் என்ன நடந்ததென்று விசாரிப்பார். நான் பதிலெதுவும் சொல்வதில்லை. அம்மா எனது நாளாந்தப் பிரச்சனைகளையும் தோல்விகளையும் அறிந்துகொண்டால் உடைந்து போய்விடுவார் என்றே நினைத்தேன்.

பாடசாலையில் நான் ஒதுக்கிவைக்கப்பட்ட ஒருத்தி. இதுவே எனது அடிப்படைப் பிரச்சினை. யாருமே எனக்கு உதவி செய்யவில்லை. நானும் யாரிடமும் உதவி கோரவுமில்லை. பாடசாலை எனக்கு நரகமாக மாறியது. நான் பைத்தியக்காரி போல அந்தச் சோம்பேறிக் கிராமத்தில் உழன்றுகொண்டிருந்தேன்.அம்மா எனக்கு உதவ முன்வந்தார். ஒரு மாறுதலுக்காக அவர் தனக்குத் தெரிந்த ஒரு தம்பதிகளின் வீட்டில் சில நாட்கள் தங்கியிருப்பதற்காக என்னை அனுப்பிவைத்தார். நான் அங்கு மிக மோசமான பாலியல் பலாத்காரத்திற்குள்ளானேன். முன்பு ஏழு வயதில் நடந்ததுபோன்றே இம்முறையும் நடந்து முடிந்தது. மீண்டும் அம்மாவிடம் வந்து வீட்டினுள்ளே கூண்டில் அடைபட்ட மிருகம் போல சுருண்டு கிடந்தேன். அமைதியில்லாது வீட்டையே வளைய வந்துகொண்டிருந்த என்னை வெளியே போய் எதையாவது செய்ய வேண்டுமென்ற வேட்கை ஆட்டத் தொடங்கியது. அம்மா வேறு நாளும் பொழுதும் என்னைப் பார்த்து மனம் வருந்திக்கொண்டிருந்ததையும் என்னால் பொறுத்துகொள்ள முடியவில்லை. அவரை மேலும் வருத்தாதிருக்க ஒரு கப்டனின் வீட்டில் வேலைக்குப் போய்ச் சேர்ந்தேன். அங்கும் என்னால் இருக்க முடியவில்லை.வீட்டு வேலைக்காரியாக என்னால்அந்த வீட்டில் தாக்குப் பிடிக்கமுடியவில்லை. அத்துடன் அந்த வேலை என்னை இழிவுபடுத்துவதாகவும் எனக்குப்பட்டது. மீண்டும் அம்மாவிடம் திரும்பி வந்தேன்.

நான் சலிப்பற்ற வேறு வாழ்க்கையைத் தொடங்கவேண்டும். காலம் என்னைத் தோற்கடித்து விடக்கூடாது. என்னைப் போன்ற இரத்தம், துப்பாக்கி,கொலை, இராணுவம் எனப் பின்னணியுள்ளவளைச் சமூகம் அவ்வளவு சுலபமாக தன்னுள் உள்வாங்கிக் கொள்ளுமா? எனக்கும் இராணுவ வாழ்க்கையைத் தவிர வேறென்ன தெரியும்? மெல்ல மெல்ல ஒரு திட்டம் என்னுள் வடிவம் பெறத் தொடங்கியது. நான் மீண்டும் இராணுவ வாழ்கையை முதலில் இருந்து தொடங்க வேண்டும். இராணுவ வாழ்க்கையில் தான் என்னால் எனது திறமைகளை முழுமையாக வெளிக்காட்ட முடிந்தது. நான் இன்னும் உயிருடன் இருப்பதே எனது திறமைக்கான மிகப்பெரிய அத்தாட்சி.

அம்மாவிடம் எனது திட்டத்தைப் பற்றிப் பேச முடியாது. ஆனால் திட்டத்தை நிறைவேற்ற எனக்குப் பணம் தேவை. முந்தைய முறை போலவே இம்முறையும் அம்மாவை விட்டுப் போகும்போது பணத்தைத் திருடிக்கொண்டு போனேன். அவரிடம் ஒரு வார்த்தை கூடச் சொல்லாது வீட்டை விட்டு வெளியேறினேன். நான் அம்மாவிற்குச் செய்யும் இந்தத் துரோகங்கள் எல்லாவற்றிற்கும் என்றோ ஒருநாள் பிராயச்சித்தம் தேடிக்கொள்வேன் என எனக்குள்ளேயே நான் சத்தியம் செய்துகொண்டேன்.