குழந்தைப் போராளி - 36



நாயகிகளின் நாயகி

ம்பாலாவை நெருங்க நெருங்க எனது கால்களில் வேகம் கூடியது. மனித நடமாட்டமே இல்லாத வீதிகளில் நான் வியர்த்துக் களைத்து நடந்துகொண்டிருந்தேன். ஒரு மதிற் சுவரின் நிழலில் களைப்பை ஆற்றிக்கொள்வதற்காக உட்கார்ந்தேன். இந்த உயர்ந்த மதில்கள் வேண்டப்படாத விருந்தாளிகளைத் தடுத்து நிறுத்தக் கட்டப்பட்டிருந்தன போலும். இப்போது நான் தங்குவதற்கு ஓர் இடத்தைக் கண்டுபிடித்தேயாக வேண்டும் என்ற யோசனையுடன் நான் உட்கார்ந்திருந்தபோது ஒரு கார் என் முன்னே மெதுவாக வந்து நின்றது. நான் மெதுவாக எழுந்து நடக்கத் தொடங்கினேன். காரின் ஓட்டுனர் இருக்கையில் நடுவயதுடைய ஒரு 'முகண்டா' பெண் இருந்தாள். அவளின் பார்வை என் மீதேயிருந்தது. நான் நடையை வேகமாக்கியபோது அவள் காரிலிருந்து 'ஹோர்ன்' அடித்தாள். நான் திரும்பி 'என்னையா அழைக்கிறாய்?' எனச் சைகையால் கேட்டேன். அவள் 'ஆம்' எனத் தலையசைத்தாள். நான் உடனடியாக அந்தக் காரினுள் ஏறினேன். நான் காரின் கண்ணாடி ஜன்னல் வழியே குண்டு வீச்சக்களால் சிதிலமான கட்டடங்களையும் தெருக்களையும் பார்த்துக்கொண்டிருந்தேன். பின் மெதுவாக அந்தப் பெண்ணைக் கவனிக்கத் தொடங்கினேன். அவள் ஓர் அழகியல்ல, கசகசவென வியர்த்த முகமும் தொந்தியும் தொப்பையுமாக அவள் இருந்தாள். வெயில் அவளைக் கடுமையாக வறுத்திருந்தது.

திடீரென அந்தப் பெண் -எந்தப் பீடிகையும் போடாமல்- தான் என்னை காதலிப்பதாகச் சொன்னாள். இதைக் கேட்டதும் எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. தனது காதலைச் சொன்ன அவள் நான் தனது வீட்டில் தங்கியிருக்க எந்தத் தடையுமில்லை எனக் கூறினாள். "இந்தப் பெண்ணிற்குப் பைத்தியம் பிடித்திருக்கவேண்டும்" என என் தலைக்குள் அசரீரி ஒலித்தது. ஆனால் எனக்கும் இப்போது ஒரு தங்குமிடம் தேவை. சரி, அவளின் காதல் அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்! நான் அவளுக்கு நன்றி சொல்லி அந்த அழைப்பினை ஏற்றுக் கொண்டேன். பின்விளைவுகளைப் பற்றிச் சிந்திக்கும் நிலையில் நானில்லை.

அவளின் வீட்டில் ஒரு 'குஷன்' இருக்கையில் உட்கார்ந்துகொண்டு அந்த அறையை நிறைத்திருந்த ஆடம்பரங்களை நான் நோட்டமிட்டேன். என்னைப் பொறுத்தவரை ஒரு நாட்டின் தலைவருக்குத் தேவையானளவு ஆடம்பரம் அங்கே கொட்டிக் கிடந்தது. தனது உடையை மாற்றிக்கொண்டு வந்த அவள் தன்னுடன் கடைவீதிக்கு வர விருப்பமா? எனக் கேட்டாள். நான் ஒரு விநாடியும் தாமதிக்காமல் குதித்தெழுந்து எனது பயணப் பையைத் திறந்தேன். பையினுள் எனது ஆயுதம் குண்டுகள் நிரப்பப்பட்டுத் தயாராகயிருந்தது; இது பற்றி அவளுக்குத் தெரியத் தேவையில்லை. நானும் எனது உடைகளை மாற்றிக்கொண்டு வெளியே புறப்படத் தயாரானேன். அந்தப் பெண் தான் ஒரு பெரிய துணிக்கடைக்குச் சொந்தக்காரியென்றும் தனது கடையில் இரண்டு அழகிய இளம் பெண்கள் விற்பனையாளர்களாக வேலை பார்ப்பதாகவும் சொன்னாள். சிறிது நேரத்தில் நாங்கள் அவளது கடையிலிருந்தோம். என் முன்னே விலையுயர்ந்த அழகிய ஆடைகள் குவிக்கப்பட்டன. அவளின் கடையிலிருந்த விற்பனைப் பெண்கள் கூட என்னைக் கண்களாலேயே விழுங்கிவிடுவது போல ஆசையுடன் பார்த்தனர்.

நாங்கள் மீண்டும் அந்தப் பணக்காரப் பெண்ணின் வீட்டிற்குச் சென்றோம். அந்தப் பெண் என்னிடம் "நாங்கள் மதுவருந்துவோம், கொஞ்ச நேரம் இசை கேட்டுத் தனிமையில் மகிழ்ந்திருப்போம், அதற்குள் பணிப் பெண்கள் உணவைத் தயார் செய்து விடுவார்கள்" என்றாள். அவள் என்னிடம் எதை எதிர்பார்க்கிறாள் என்பது எனக்குப் புரிந்து விட்டது. நான் இப்போது ஏதாவது ஒரு சாக்குப் போக்கைச் சொல்லி அவளுக்கும் எனக்குமான இடைவெளியை நீடித்துக் கொள்ளவேண்டும். எனது முந்தைய 'லூக்கயா' நகரத்து அனுபவம் இப்போது எனக்குக் கை கொடுத்தது. பொருத்தமான தருணத்தில்தான் நான் எனது பொய் மூட்டையை அவிழ்க்க வேண்டும். இதோ மெல்ல மெல்ல என்னை நெருங்கிய அந்தப் பெண் என்மேல் படுத்துக்கொண்டாள். என் பொய் மூட்டையை அவிழ்ப்பதற்கு இதுதான் சரியான சமயம்.

"போர் முனையிலிருந்து வைத்திய சிகிச்சை பெறுவதற்காகவே ஒரு சில நாட்களுக்கு நான் இங்கு அனுப்பப்பட்டுள்ளேன். இங்கு நான் சிகிச்சை பெற வேண்டியுள்ளது. எனது - அந்த இடத்தில் - வாழைப்பழத்தில் சிறிது பிரச்சினையுள்ளது. நுனித் தோலைச் சிறிதளவு அகற்றினால்தான் பிரச்சினை சரியாகும் என வைத்தியர் சொல்லியுள்ளார்."

உணவு தயாராவதற்காகக் காத்திருந்த நாங்களிருவரும் கொஞ்சம் அதிகமாகவே பியரைக் குடித்திருந்தோம். எனக்குத் தலை இலேசாகக் கிறுகிறுத்துக்கொண்டிருந்தது. சாப்பிடும் போது நாங்கள் ஓரிரு வார்த்தைகளுக்கு மேல் எதுவும் பேசவில்லை. ஆனால் உணவை முடித்துக் கொண்ட போது அவள் என்மேல் அதிருப்தியாய் இருப்பது தெரிந்தது. என்னால் அவளது பாலியல் விருப்பத்தை நிறைவேற்ற முடியாதெனச் சொல்லிய பின்பும் என்னுடன் படுத்துக் கொள்வதிலேயே அவள் குறியாயிருந்தாள். அவள் என்னை இலேசில் விடுவதாயில்லை. எங்களது விவாதம் தள்ளுமுள்ளில் எங்களைக் கொண்டுபோய் விட்டபோது நான் மெல்ல எனது பயணப் பையைத் திறந்து ஆயுதத்தைக் கையிலெடுத்தேன். பணிப்பெண்கள் அலறத் தொடங்கினர்.

"வாயை மூடுங்கள்" எனக் குரலில் கடுமையை வரவழைத்துக்கொண்டே உறுமிய நான் "ம்! பணத்தை எடு!" எனக் கத்திக்கொண்டே வீட்டுக்காரியின் குரல் வளைக்குத் துப்பாக்கியை நிமிர்த்தினேன். அவள் தன் மார்பைப் பிடித்துக்கொண்டே தடதடவென ஓடிச்சென்று ஒரு சிறிய மேசையின் இழுப்பறையைத் திறந்து கை நிறையப் பணத்தை அள்ளி என் முன்னே நீட்டினாள். அவளது கையிலிருந்து பணத்தை ஒத்திப் பறித்துக்கொண்ட நான் அதன் பின்பு என்ன செய்வதென்று தெரியாமல் நின்றிருந்தேன். அவளைக் குறி பார்த்துத் துப்பாக்கியைப் பிடித்துக்கொண்டேயிருந்த நான் சற்று நேரத்தின் பின்பு அங்கிருந்து வெளியேற முடிவெடுத்தேன்.

"நான் விடியம் வரைக்கும் இங்கே வெளியில் தான் காவலிருப்பேன், எவராவது என்னைக் கோபப்படுத்தினால், இதோ! இது தான் பதில் சொல்லும்!" என சொல்லித் துப்பாக்கியைத் தூக்கிக் காட்டி விட்டு வாசற் கதவைத் திறந்து வெளியே வந்தேன். சிறிது நேரம் அங்கேயே நின்றுகொண்டு ஓரிரு தடவைகள் செருமி நான் அங்கேயே இருப்பதாக அவர்களுக்குக் காட்டிக்கொண்டேன். மெதுவாக வெளிப் படலையின் மேல் ஏறித் தெருவில் குதித்து நகரத்தினை நோக்கி நடந்தேன். யாராவது எனக்குக் குறுக்கே வந்தால், என்னை இடையூறு செய்தால் துப்பாக்கியைப் பிரயோகிக்கவும் தயாராகவே இருந்தேன். போராளி வாழ்கையிலிருந்து இயல்பு வாழ்க்கைக்கு மாறுவது என்பது எல்லாவற்றையும் விடக் கடினமானது.

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு