குழந்தைப் போராளி - 34


கம்பாலா வீழ்ந்தது


ற்றோங்காவின் இரத்த ஆறு காய்வதற்கு முன்னமே மீண்டும் ஓர் இரத்த ஆற்றை சிருட்டிப்பதற்காக நாங்கள் பிரதான சாலை வழியாக "நடத்தி"ச் செல்லப்பட்டோம். கண்கொண்டு பார்க்குமிடமெல்லாம் குருதி வெள்ளம். எதிரிகளின் பிரேதங்களை நாய்கள் சுவைத்துக்கொண்டிருந்தன. இந்தக் காட்சி என் மனதில் அப்போது எந்தவிதச் சலனத்தையோ இரக்கத்தையோ அருவருப்பையோ ஏற்படுத்தவில்லை. இந்த இராணுவத்தினர் தானே எனது தோழர்களை கொன்றவர்கள் என நினைத்துக்கொண்டேன். என்டபே சர்வதேச விமான நிலையத்தையும் கம்பாலாவையும் இணைக்கும் நெடுஞ்சாலையைக் கைப்பற்ற எங்களின் படை நகர்ந்துகொண்டிருந்த போது அரச படையினரின் எறிகணை வீச்சுக்கள் எங்களைச் சற்றே வழி மறித்தன. அவர்களின் மோட்டார்த் தாக்குதலை முறியடிக்க நாங்கள் 37 கலிபர் ஆட்டிலரியால் ஓர் எறிகணை மழையே பொழிந்தோம். ஆட்டிலரித் தாக்குதலுக்கு முன்னால் நின்று பிடிக்க முடியாத எதிரி இராணுவம் நிலை குலைந்து விக்ரோறியா ஏரிப்பக்கம் சிதறி ஓடிற்று.

தொடர்ந்து போரிட்டுக்கொண்டிருந்த எங்களால் இந்தப் போர் எப்போது முடிவுறும் என்பதை அனுமானிக்க முடியவில்லை. இன்னும் சில கிலோ மீற்றர்கள் தொலைவை நாங்கள் வெற்றிகரமாகக் கடந்து விட்டால் கம்பாலா எங்களிடம் வீழ்ந்து விடும் என்ற புதிய நம்பிக்கை எங்களை இயக்கிக்கொண்டிருந்தது. எங்களின் எதிர்காலமென அவர்கள் வாக்களித்த பூமி எங்களின் கையெட்டும் தொலைவில் தானிருந்தது. என்டபே - கம்பாலா நெடுஞ்சாலையில் நிலைகொண்ட எங்கள் படையணி சர்வதேச விமான நிலையத்திற்கும் கம்பாலாவிற்குமான அரச படையினரின் போக்குவரத்தைத் துண்டித்து விட்டது. எதிரியும் நாங்களும் இன்னொரு முறை நேருக்கு நேராகச் சந்தித்துக் கொள்ள வெகு நேரமாகவில்லை. தொடர் தோல்விகளால் வெகுண்டிருந்த எதிரிகளின் மொத்தப் பலமும் எங்கள் எதிரே குவிக்கப்பட்டிருந்தன. அசைந்து வரும் ஆயுதக் கிடங்காக எதிரி இராணுவம் அணிவகுத்து வந்துகொண்டிருந்தது. நாங்களும் எங்கள் உயிர்களைப் பணயம் வைத்து யுத்தம் செய்ய ஆயத்தமாயிருந்தோம். எங்களது கட்டளைத் தளபதி கசிலிங்கி இன்னும் சில NRA படையணிகளிடம் உதவியைக் கோரிச் செய்தி அனுப்பியிருந்தார். அந்தப் படையணிகள் இன்னும் போர் முனைக்கு வந்து சேரவில்லை. பின் நாட்களில் கசிலிங்கியுடன் எனக்குக் கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டிருந்தாலும் அன்று அவர் சொன்ன வார் த்தைகளுக்கு இன்றும் நான் நன்றியுடையவள். "உங்களில் ஒருவர் தன்னும் இந்தப் போரில் இறப்பதை நான் விரும்பவில்லை துணிவுடன் போரிடுங்கள், ஆனால் உங்கள் உயிர்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்" என்றார் கசிலிங்கி. நாங்கள் எல்லோருமே பல சண்டைகளிலிருந்து உயிருடன் மீண்டிருந்தாலும் இந்தச் சமரிலிருந்து உயிர் தப்பிப் பிழைத்தோமானால் அது பேரதிசயமாகவே இருக்கும்.


சில வாரங்கள் தொடர்ந்த போரின் முடிவில் எதிரியின் வலுவான படைகள் எங்களின் உக்கிரமான தாக்குதல்கள்களால் சின்னாபின்னமாகின. எங்கள் முகங்களில் மகிழ்வும் பெருமிதமும் பொங்கி வழிந்தன. கம்பாலாவை நோக்கிய எங்களது வெற்றி அணிவகுப்பில் எந்தத் தடைகளுமில்லை. செல்லும் கடை வீதிகளில் எல்லாம் நாங்கள் எதை எடுத்தாலும் கேட்பார் யாருமில்லை. ஆனாலும் நாங்கள் யாருமே எதையுமே எங்களுக்கென்று எடுத்துக்கொள்ளவில்லை. இனி முழுக் கம்பாலா நகரமுமே எங்களுடையது தானே! கம்பாலா நோக்கிய பயணத்தில் நான் எப்படி மகிழ்ச்சியில் தத்தளித்தேன் என்பது எனக்கு இன்னும் நன்றாக நினைவிருக்கிறது. நிரந்தரமான வீடும் தரமான கல்வியும் ஒளிமயமான எதிர்காலமும் எனக்காகக் கம்பாலாவில் காத்திருக்கலாம். இவையெல்லாம் நிச்சயமாகவே எங்களுக்குக் கிட்டுமென முசேவெனி எங்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தார்.

அரச இராணுவத்தினரின் அட்டூழியங்களை நினைத்துப் பார்த்துக் கொண்டேன். இந்நகரத்தின் குடிமக்கள் இராணுவத்தினரால் எத்தனை தடவைகள் அடித்து உதைக்கப்பட்டிருப்பார்கள்! ஒவ்வொருவரும் மூன்று முறை இறப்பதற்குச் சமனாகச் சித்திரவதைப்பட்டிருப்பார்கள். அடி
உதைகளின் பின்னால் மக்கள் நாய்களுக்கு உணவாகத் தெருக்களில் வீசி எறியப்பட்டனர். இன்றோ தெருக்களில் அரச படையினரின் மரண ஓலம் இடைவிடாமல் ஒலித்துக்கொண்டிருக்கிறது. வீதிகள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தன. உயிருடன் பிடிபட்ட எதிரிகளின் கழுத்துக்களில் எரிந்துகொண்டிருக்கும் 'ரயர்'கள் மாலைகளாக அணிவிக்கப்பட்டன. நான் எனது கண்களையும் காதுகளையும் 'மூடி'க்கொண்டு நடந்தேன்.

கம்பாலா பூவுலகின் சொர்க்கம் என எங்களுக்குச் சொல்லப்பட்டிருந்தது. அந்த வனப்புக்கள் எங்குதான் போயின? ஏமாற்றங்களைப் பெரிதுபடுத்த எங்களுக்கு நேரமிருக்கவில்லை. நகரின் மத்தியினை நாங்கள் அடைந்தபோது கம்பாலா இனி எங்களது நகரம், எவராலும் எங்களை இங்கிருந்து அசைக்க முடியாது என்பதை உறுதி செய்யும் சம்பவங்கள் நிகழலாயின. மக்கள் ஆயிரக்கணக்கில் எங்களை வரவேற்பதற்காகக் கூடியிருந்தனர். அவர்கள் கண்ணீர் விட்டழுதும் முழந்தாளிட்டும் குழந்தைகளான எங்களுக்குத் தங்களது நன்றியைத் தெரிவித்துக்கொண்டனர். மூத்த போராளிகளுக்கும் அவர்களது வாழ்த்துக்கள் கிடைத்தன. உகண்டாவிலேயே முதல் முறையாக ஆயுதங்களை ஏந்திய பெண்கள் ஆண்களுக்கு இணையாகக் கம்பீரமாக அணிவகுத்து வந்துகொண்டிருந்த காட்சி மக்களைப் பரவசமடையச் செய்திருந்தது. பல போராளிகளின் முகங்களில், குறிப்பாகக் குழந்தைப் போராளிகளின் முகங்களில் இப்போது மூர்க்கமோ அச்சமோ தென்படவில்லை. எதிர்காலத்தைக் குறித்த நம்பிக்கைகள் அவர்களது ஆன்மாக்களை நிரப்பியிருந்தன.

நானோ எல்லாவற்றிலும் சந்தேகமுறப் பழகியிருந்தேன். எல்லாம் முடிந்து விட்டதென என்னால் நிம்மதியடைய முடியவில்லை. ஆபத்தும் துயரமும் என்னைத் தொடர்ந்து கொண்டேயிருக்குமென என் உள்ளுணர்வு சொல்லிற்று. எனது பட்டறிவு என்னை எப்போதும் கைவிட்டதில்லை.

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு