குழந்தைப் போராளி - 28



குழந்தைகளே என்னிடம் வாருங்கள்

தொடர்ந்து நகர்ந்து கொண்டேயிருந்த எங்கள் படைப் பிரிவு மழை நீர் தேங்கி நின்ற ஒரு குட்டையை வந்தடைந்தது. அங்கே சிறிது ஓய்வெடுப்பதென முடிவாயிற்று. நாங்கள் தரையில் உட்காருவதற்கு முன்னேயே பற்றைக்காடு சலசலத்தது. அங்கிருந்து எங்களை நோக்கித் தலைவர் யோவேரி முசேவெனி ஒரு படைப் பிரிவுடன் வந்து கொண்டிருந்தார். முசேவெனி இராணுவ உடையிலிருந்தார். அவரது கையில் கறுப்பு - வெள்ளை முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட சிறியதொரு கோலை வைத்திருந்தார். இந்தக் குறுந் தடியின்றி முசேவெனி எங்குமே போவதில்லை. 'கிம' இனக் குழுவைச் சேர்ந்த மந்திரவாதி ஒருவரிடமிருந்து முசேவெனி பெற்றுக்கொண்ட இந்தக் குறுந்தடி மந்திர சக்தி வாய்ந்ததெனப் பரவலாக நம்பப்பட்டது. தலைவர் குழந்தைகள் எல்லோரையும் தன் அருகாமையில் வரும்படி அழைத்தார். அவரது வார்த்தைகளில் வசியமிருந்தது.

" NRA எமது மக்களின் விடுதலைக்காகவும் உகண்டாவின் இனக்குழுக்களுக்குள் அய்க்கியத்தை ஏற்படுத்தவும் உறுதியோடு போராடிக் கொண்டிருக்கிறது. அரசினால் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் எந்தக் குற்றமுமே புரியாத நமது மக்களை விடுதலை செய்வதற்காக நாமெல்லோரும் ஒற்றுமையுடன் இறுதி வரை போரிட வேண்டும்"

உண்மையிலேயே எங்கள் தலைவரால் நன்றாகப் பேச முடியும். ஆபிரிக்கக் கிளர்ச்சித் தலைவர்களிலேயே எங்கள் தலைவர் தான் முதன் முதலாகக் குழந்தைப் போராளிகளைக் களத்தில் இறக்கியவர். விரைவிலேயே மற்றவர்களும் இந்த "முற்போக்கான" சிந்தனையைப் பின்பற்றத் தொடங்கினர். இந்த வகையில் ஒபோடே முசேவெனி குழந்தைப் போராளி முறைமையின் தந்தை. பெரும்பாலான குழந்தைப் போராளிகளுக்குக் காணாமற் போன அவர்களது பெற்றோர்களுக்குக்கு என்ன நடந்ததெனத் தெரியாது. முசேவெனியோ அவர்களை அரச இராணுவம்தான் கொன்றொழித்தது எனச் சாதித்தார். அது மட்டுமல்லாது அவர் இன்னொரு துருப்புச் சீட்டையும் அடித்தார்." உங்களின் தாய் தந்தையர்களில் சிலர் சிறையில் இன்னும் உயிருடன் இருக்கலாம், நீங்கள் போய்ச் சிறை மீட்பதற்காக அவர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்" எனக் குழந்தைகளின் மண்டையைத் தலைவர் மேலும் மேலும் கழுவினார்.

தலைவரின் உரையின் முடிவில் நாங்கள் எல்லோரும் எழுந்து நின்று எங்கள் துப்பாக்கிகளை வானத்தை நோக்கித் தூக்கிப் பிடித்து "முன்னோக்கிச் செல்வோம்! ஒரு நாளும் ஓய மாட்டோம்!" என முழக்கமிட்டோம். தலைவர் சிரித்துக்கொண்டே தனது கறுப்பு வெள்ளை மந்திரக்கோலை ஆகாயத்தை நோக்கி உயர்த்தினார். தாய் தந்தையர் சிறையில் உயிரோடு இருக்கிறார்கள் என்ற வார்த்தை பல குழந்தைகளைத் தொடர்ந்து போரிடவும் தங்கள் உயிரைத் தியாகவும் செய்யவும் உருவேற்றும். எனது நிலையோ வேறு மாதிரியானது. எனது பெற்றோர்கள் எங்கேயிருக்கிறார்கள் என எனக்குத் தெரியும். நான் உயிருடன் இருக்க விரும்புவதற்கு அவர்களின் இருப்பு மட்டுமே காரணமாயிருக்கிறது.. என்றோ ஒரு நாள் நான் வீடு திரும்பி என் அப்பாவையும் சிற்றன்னையையும் கொல்ல வேண்டும். இதுதான் எனது இலட்சியம். எனது தந்தையும் சிற்றன்னையும் எனக்களித்த துயரங்களுக்காகத் தண்டனையை அனுபவித்தே தீரவேண்டும். அவர்களின் செயல்களுக்கு மன்னிப்பே கிடையாது.மனிதர்களைக் கொல்வதும் கொல்வதற்குத் திட்டமிடுதலும் எனது அன்றாடச் செயற்பாடாகவே ஆகிவிட்டது.

முசேவெனி ஏன் திடீரென வந்தார்? எங்கள் தோழர்களை நாங்கள் சாகக் கொடுத்த போது எங்களிடம் மின்னி மறைந்த அச்சமும் விரக்தியும் கலந்த உணர்வை எங்கள் தளபதிகள் கண்டு கொண்டார்களோ? குழந்தைப் போராளிகள் களத்திலிருந்து பின்வாங்கினால் தாங்களே போர்க் களத்தின் முன்னரங்கத்தில் நிற்க வேண்டி வரும் எனத் தளபதிகளுக்குப் பயம் வந்துவிட்டதா? குழந்தைகளான நாங்கள் துணிவானவர்கள்! மிகத் துணிச்சலானவர்கள்! விட்டுக் கொடுக்காத போராளிகள்! தலைவர் எங்களை விட்டுச் செல்ல நாங்கள் காய்ந்த பருப்பையும் சோளத்தையும் சமைக்க ஆயத்தமானோம்.

எங்களில் சிலர் மரங்களில் சாய்ந்து கொண்டும் மற்றவர்கள் புற்தரையில் மல்லாந்து படுத்துமிருந்தோம். எல்லோருக்குமே தூக்கக் கலக்கம். எல்லோரது கண்களும் வீங்கிச் சிவந்திருந்தன. உணவு வேகும் வரை காத்துக்கொண்டிருந்த நாங்கள் யாருமே அடுப்பிலிருக்கும் கிடாரத்திலிலிருந்து கண்களை எடுக்கவில்லை. திடீரென ஓர் அலறல். எல்லோரும் திடுக்கிட்டுத் திரும்பி எங்கள் விருந்தினர் யாரெனப் பார்த்தோம். எதிரி சத்தமில்லால் எங்களுக்கு மிக அருகிலேயே வந்து விட்டான் என அடித் தொண்டையால் குழறிக்கொண்டே ஒரு தோழன் தலை தெறிக்க ஓடிவந்தான். மரணம் சில மீற்றர்கள் தொலைவில் அணிவகுத்து வருகிறது. எங்களில் சிலர் அடுப்பில் கொதிக்கும் கிடாரத்தினுள் கைகளை விட்டு வெந்தும் வேகாத பருப்பை அள்ள முயன்றோம். நாங்கள் எங்களது அடுத்த வேளை உணவுக்காக இனிச் சில நாட்கள் கூடக் காத்திருக்க வேண்டியிருக்கலாம். கைகளிலும் நாவுகளிலும் சுடுநீர் வழிய வழிய நாங்கள் எங்களால் தூக்கக் கூடியவைகளைத் தூக்கிகொண்டு தப்பி ஓடினோம். மரங்களின் மறைவில் தரையில் படுத்துக்கொண்டோம். ஒரு நல்ல பாதுகாப்பான இடத்திற்கு வந்து சேர்ந்ததும் தான் எங்களால் நிதானிக்க முடிந்தது. எங்கள் தோழர்களில் சிலர் காணாமற் போயிருந்தார்கள். அவர்களின் பசி அவர்களை பருப்புக் கிடாரத்தைக் கைவிட்டு எங்களுடன் ஓடிவர அனுமதிக்கவில்லைப் போலும்

பல வாலிப வயதுப் போராளிகளால் நாங்கள் போரில் வெற்றி பெறுவோமென நம்பமுடியவில்லை. தங்கள் தோழர்கள் ஒருவர் பின் ஒருவராக மரணிப்பதை அவர்கள் கண்டார்கள். அவர்களின் முறை வருவதற்காகச் சாவு காத்துக்கொண்டிருப்பதும் அவர்களுக்குத் தெரியும். சாவின் நிழல் அவர்களின் தலைகள் மீதும் கவிந்திருந்தன. அவர்களில் பலர் NRAயிலிருந்து தப்பிபோடுவதற்கான தருணங்களுக்காகக் காத்திருந்தனர். குழந்தைப் போராளிகளின் கதையோ வேறு மாதிரியானது. எங்களால் அப்போது நாங்கள் எதிர் கொண்டிருந்த ஆபத்துக்களின் பரிமாணங்களைச் சரிவரப் புரிந்து கொள்ள முடியவில்லை. தவிரவும் குழந்தைப் போராளிகளின் விசுவாசம் எல்லையற்றது. இறுதி வெற்றி குறித்து அவர்கள் கண்மூடித்தனமான நம்பிக்கையை வைத்திருந்தார்கள். எங்களிடம் இழப்பதற்கு எதுவுமில்லை. எங்களுக்கு NRAயை விட்டால் போக்கிடமுமில்லை. போர் முனைகளில் ஏற்படக் கூடிய ஆபத்துக்களைப் பற்றிப் பெரியவர்களுக்கு முழுமையாகத் தெரிந்திருந்தது. அவர்கள் களங்களில் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவே தங்களது முழுச் சக்தியையும் செலவழித்தார்கள். எதிரிக்குப் பதில் சொல்வதற்குக் குழந்தைப் போராளிகள் நாங்களே களங்களில் முன் வரிசையில் நிறுத்தப்பட்டடோம்.

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு