குழந்தைப் போராளி - 19


சிங்கத்தின் குகைக்குள்


ரு வாரத்தின் பின்பு பாட்டியிடமிருந்து ஒரு செய்தி வந்தது. பாடசாலைக்கு நான் இனி போகப் போவதில்லையானால் என்னைப் பண்ணைக்கு அனுப்பிவிடுமாறு பாட்டி கேட்டிருந்தார். மறுநாளே அப்பா என்னைப் பண்ணைக்கு அழைத்துச் சென்றார். பண்ணையையும் பாட்டியையும் குறித்த துன்பங்கள் நிறைந்த பழைய நினைவுகள் பயணம் முழுவதும் என்னை அலைக்கழித்தன. பண்ணையில் பாட்டி விருந்து சமைத்து வைத்திருந்தார். என்னால் சாப்பிடவே முடியவில்லை. மறுநாள் அப்பா நகரத்திற்குத் திரும்பிப் போனார். துயரிலும் விரக்தியிலும் நான் அல்லாடிக் கொண்டிருந்தபோது எனக்கு சிறிதேனும் ஆறுதலைத் தர மைக் வந்தார். மைக் பண்ணை வேலையாள். அவர் நெடுநெடுவென வளர்ந்த உயரமான மனிதர். அவர் அழகாகச் சிரிக்கும் போது அவரின் வெண்ணிறப் பற்கள் பளீரிட்டன. இவை எல்லாவற்றிற்கும் மேலாக அவர் அன்புள்ளம் கொண்டவர். மெல்ல மெல்ல மைக் மீது எனக்கு நம்பிக்கை வளரத் தொடங்கியது. இவரிடம் நான் என் கவலைகளைப் பகிர்ந்து கொள்ளலாம். இவரை நான் நம்பலாம்.

எனது சகோதரன் ரிச்சட்டும் பண்ணைக்கு அனுப்பப்பட்டான். எங்கள் வேலைகள் முடிந்ததும் நான்,ரிச்சட், மைக் மூவரும் வீட்டின் பின்னே அமர்ந்திருந்து பல கதைகளைப் பேசிக்கொள்வோம். ஒருமுறை மைக்கின் குடும்பம் பற்றி நான் கேட்டேன். தனக்குக் குடும்பம் இல்லையென மைக் சொன்னதை நான் நம்பவில்லை. குடும்பத்தைப் பற்றி அவர் கதைக்க விரும்பவில்லை. நான் விடாமல் கேட்டுக்கொண்டேயிருக்க மைக் சோர்வுடன் "அதைப் பற்றிப் பேச நான் விரும்பவில்லை" எனச் சொல்லிக்கொண்டே எழுந்து போய்விட்டார். 'மைக்கின் குடும்பமும் நமது குடும்பம் போல பிரச்சினைகள் நிறைந்ததாக இருக்குமோ?' என ரிச்சட்டிடம் கேட்டேன். இரவுணவிற்காக அழைத்த பாட்டியின் குரல் அப்போதைக்கு எங்கள் பேச்சைத் துண்டித்தது.

ஒரு நாள் அப்பா சில மனிதர்களுடன் பண்ணைக்கு வந்தார். இவர்கள் எங்கள் கால் நடைகளை வாங்கி விற்கும் வியாபாரிகள். அப்பா அன்றிரவு பண்ணையிலேயே தங்கி விட்டார். மறு நாள் மேய்ச்சல் நிலத்திலிருந்து திரும்பி வந்த ரிச்சட் மாட்டுக் கன்றொன்று காணாமற் போய்விட்டதாகப் பதற்றத்துடன் பாட்டியிடம் சொன்னான். அதைக் கேட்டதும் பாட்டி போட்ட கூச்சலால் பண்ணை வீட்டின் கூரையே பொறிந்து விழும் போலிருந்தது. வீட்டின் பின்புறத்தில் வேலியைச் சரி செய்து கொண்டிருந்த அப்பாவை நோக்கிப் பாட்டி நான்கு கால் பாய்ச்சலில் ஓடுவதைப் பார்த்தேன். அப்பா அதிலும் வேகமாக வீட்டினுள் புகுந்தார். அவரின் முகம் கடுங் கோபத்தால் விறைத்திருக்க அவர் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டார். ரிச்சட் முன்னெச்சரிக்கையாக வாசற் பக்கம் நகர்ந்தான்.

"சிங்கங்கள் மாட்டுக் கன்றினை இப்போது சாப்பிட்டு முடித்திருக்கும் இல்லையா?" அப்பா தம்பியைப் பார்த்து உறுமினார். அவரிருந்த நாற்காலி பின் நகர்ந்தது. அறையில் மயான அமைதி நிலவியது. தம்பி மூச்சுப் பேச்சில்லாமல் பொம்மை மாதிரி நின்றிருந்தான்.
"வேசி மகனே எனது மாட்டுக் கன்றைச் சிங்கத்திற்குத் தாரை வார்த்து விட்டாயே" சடுதியாக அப்பாவின் குரல் வெறியுடன் எழுந்தது. நான் பயத்தில் தரையில் மல்லாக்க விழுந்தேன். அப்பா பாய்ந்து சென்று வெட்டுக் கத்தியை எடுத்தது தான் தாமதம் தம்பி ஒரு மானைப் போல வெளியே தாவி ஓடத் தொடங்கினான். அப்பா கொலை வெறியுடன் கத்தியை உயர்த்திப் பிடித்தபடியே அவனைத் துரத்திக்கொண்டு ஓடினார். நானும் அவர்களின் பின்னால் ஓடத்தான் முயற்சித்தேன். ஆனால் அச்சத்தில் என் கால்கள் பின்னிக்கொண்டன. அப்பா எனது தம்பியை நிச்சயமாகக் கொல்லத்தான் போகிறார். நான் பாட்டியின் பக்கம் திரும்பி அவரின் முகத்தைப் பார்த்தேன். அவரின் கண்களை ஊடுருவிப் பார்க்குமளவிற்கு எனக்குத் தைரியம் இருந்தது. பாட்டியால் அப்பாவைத் தடுத்து நிறுத்த முடியும் என நினைத்தேன்.

என்னை அழுகையை நிறுத்துமாறு உணர்சியற்ற குரலில் சொன்ன பாட்டி"உனது கண்ணீர் பாலா? இல்லை இரத்தமா?" எனக் கேட்டார். அவர் என்ன கேட்கிறார் என்று எனக்கு விளங்கவில்லை. ஒன்றுமே சொல்லாது படுக்கைக்குச் சென்றேன். காத்திருப்பதைத் தவிர வேறெதுவும் செய்யாமுடியாது. சிறிது நேரங் கழித்துத் திரும்பிவந்த அப்பா இரத்தம் தோய்ந்த வெட்டுக்கத்தியை எனக்குக் காட்டித் தான் ரிச்சட்டைக் கொன்றுவிட்டதாகக் கூறினார். அந்தக் கணத்தில் அச்சம் என்னை விட்டுப் போயிற்று. எங்கிருந்தோ வந்த தைரியம் என் ஆன்மாவை நிறைத்தது. இனி இழப்பதற்கு என்னிடம் எதுவுமே இல்லை. நான் அழவில்லை.இநத உலகத்தில் இனி நான் தனியானவள் என்ற உணர்வே என்னுள் இனம் புரியாத வைராக்கியத்தை ஊட்டிற்று. இனி யாராலும், எதனாலும் என்னை அழவைக்க முடியாது. நான் படுக்கையில் கிடந்தவாறே வற்றிய கண்களுடன் ரிச்சட்டை நினைத்துக்கொண்டேன். நானும் அவனும் விளையாடி மகிழ்ந்திருந்த தருணங்களை நினைத்துப் பார்த்தேன்.

மறுநாள் அதிகாலையிலேயே நான் எழுந்து என் சகோதரனின் உடலைத் தேடிப் புறப்பட்டேன். சிறிது நேரத் தேடுதலின் பின்பு எறும்புப் புற்றின் மேல் யாரோ விழுந்து கிடப்பது போலத் தெரிந்தது. அருகே சென்று பார்த்த போது அது யாரோ அல்ல எனது தம்பி தானெனத் தெரிந்து கொண்டேன். நான் எதையும் கேட்பதற்கு முன்னமே ரிச்சட் திரும்பி தனது இரத்தம் தோய்ந்த புட்டத்தை எனக்குக் காண்பித்தான். அவன் உயிருடன் இருப்பதைக் கண்டதும் நான் அவனை இறுகத் தழுவிக்கொண்டே மனப் பாரம் அகன்றவளாகப் பெரிதாகச் சிரிக்கத் தொடங்கினேன். அவனை முத்தமிட்டேன். அவன் உயிருடன் இருப்பது எனக்கு மிக மிக முக்கியமானது. அவனை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு சிறிது உணவும் குடிப்பதற்குப் பாலும் வீட்டிலிருந்து யாருக்கும் தெரியாமல் எடுத்து வரச் சென்றேன். அதன் பின்பு அப்பாவை நான் முகத்துக்கு முகம் சந்திக்க நேரும் போதெல்லாம் கோபத்துடன் அவரைப் முறைக்க நான் மறந்ததில்லை. அவர் எங்களைவிட்டு நகரத்துக்குச் செல்லும் வரை இது தொடர்ந்தது.

1 மறுமொழிகள்:

Blogger Jeyapalan மொழிந்தது...

தொடருங்கள். வாழ்த்துக்கள்.

Fri Jul 28, 08:33:00 PM 2006  

Post a Comment

<< முகப்பு