குழந்தைப் போராளி - 17


அச்சமும் துயரும்


ந்த நாட்களில் மக்கள் இனம் தெரியாதவர்களால் கடத்தப்படுவதும் எந்தவிதத் தடயமுமின்றிக் காணாமற் போவதும் வழமையாய் இருந்தன. ஹெலன் போனதற்கு மறு நாள் குழந்தைகள் நாங்களும் அப்பாவும் விறாந்தையில் அமர்ந்திருந்தோம். முன்பின் தெரியாத இருவர் வந்து இராணுவ முகாமுக்கு உடனடியாக வரவேண்டும் என அப்பாவிற்குக் கட்டளையிட்டனர்.
"எதற்காக - என்ன குற்றச்சாட்டின் பேரில் - என்னை முகாமுக்கு அழைக்கிறீர்கள்?" என அப்பா கேட்க
"நீ அங்கு வந்ததும் அதைத் தெரிந்து கொள்வாய்!" என அவர்கள் சொன்னார்கள்.
"ஏன் நீங்கள் ஒரு வாகனத்தில் வரவில்லை? சீருடைகள் அணியவில்லை?" அப்பா கேட்டார்.
"மடத்தனமான கேள்விகளைக் கேட்காதே! உடனடியாக எங்களுடன் புறப்படு! அங்கு வந்ததும் எல்லா விளக்கங்களும் உனக்குச் சொல்லப்படும்."

அப்பாவின் கண்களில் நான் அச்சத்தைப் பார்த்தேன். மிகவும் சிறு வயதினளான நான் கூட ஆட்கள் கடத்தப்படுவது பற்றிக் கேள்விப்பட்டிருந்தேன். அப்பாவிற்கு என்ன நடந்தாலும் எனக்குக் கவலையில்லை. என்னைப் பொறுத்தவரை அவர் தண்டிக்கப்பட வேண்டியவர் குறிப்பாக ஹெலனுடன் அவர் நடந்துகொண்ட விதத்திற்காக அவர் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். வந்த இருவரில் ஒருவரைக் கவனித்தேன். அவர் தனது கண்களை இடைவிடாமல் சிமிட்டிக்கொண்டிருந்தார். அவரின் கண்கள் அவரின் கட்டுப்பாட்டிலில்லை. இது அவரை அவ்வளவு நம்பகரமானவராகக் காட்டவில்லை.

அப்பா அவர்களோடு முண்டி விட்டார். "என்னை நீங்கள் இந்த இடத்திலேயே கொன்று போட்டாலும் கவலையில்லை. என்னால் உங்களுடன் வர முடியாது" என அப்பா விறைத்துக்கொண்டு நின்றார். வந்த மனிதர்கள் இதை எதிர்பார்க்கவில்லை. என்ன செய்வதென்று தெரியாது சிறிது நேரம் அங்கேயே நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் வீட்டை விட்டு வெளியேறும் போது தாங்கள் இராணுவத்தினருடன் திரும்பி வருவதாக மிரட்டிவிட்டுப் போனார்கள். அவர்கள் அங்கிருந்து சென்றதும் அப்பா வாழைத் தோட்டத்திற்குள் சென்று மறைந்தார். விரைவாகவே அவர் சில இராணுவ வீரர்களுடன் திரும்பி வந்தார்.

அவர்கள் எங்களிலிருந்து மாறுபட்ட உடலமைப்பைக் கொண்டவர்களாக இருந்தார்கள். அந்த இராணுவ வீரர்கள் வடக்கிலிருந்து வந்திருந்தார்கள். அவர்களது கண்கள் சிவப்பாகவும் அவர்களின் சருமம் அட்டைக் கறுப்பாகவுமிருந்தது . எங்கள் வாழ்க்கை முறையில் விவசாயமும் பண்ணை வாழ்வும் முக்கியமானது போல அவர்களுக்கு இராணுவ சேவையே வாழ்க்கை முறையாக இருந்தது. எங்களை அவர்கள் "பால் குடிக்கும் சோம்பேறிகள்" என ஏளனம் செய்வார்கள். அவர்கள் ஒரு விநோதமான மொழியில் தங்களுக்குள் பேசிக்கொண்டனர். எங்கள் தோட்டத்தில் பறித்த மிளகாய்ப் பிஞ்சுகளைகளை அவர்கள் வாயில் போட்டு மென்றதைக் கண்ட போது என் கண்களை நான் இறுக மூடிக்கொண்டேன்.

இச்சம்பவத்தின் பின்னர் வடக்கிலிருந்து வந்தவர்களுக்கு அப்பா ஒழுங்காகக் கப்பம் கட்டிக்கொண்டிருந்தார். புதினமான தோற்றமுடைய இராவணுத்தினரைக் கண்டதிலிருந்து எனது கற்பனை புதிய தளங்களுக்குத் தாவத் தொடங்கிவிட்டது. அப்போது கூட இப்படியான இராணுவ உடையை நானும் ஒரு நாள் அணியப்போகிறேன் என்று நான் கனவிற் கூட நினைத்ததில்லை.

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு