குழந்தைப் போராளி - 16
ஒரு கடினமான இதயம்
எனது ஓடிப்போன ஒவ்வொரு சகோதரியும் வீட்டிற்குத் திரும்பி வந்தபோது ஏதோ ஒரு வகையில் தங்கள் துன்பங்களைச் சுமந்தே வந்தனர். நாங்கள் ஒவ்வொருவரும் அவரவர் சுமையைச் சுமக்க வேண்டியிருந்தது. எப்போதாவது ஒருமுறை அவர்கள் வீட்டிற்கு வருவார்கள். ஒவ்வொரு முறையும் ஒருத்தி வரும்போது ' இவள் இம்முறை என்னையும் தன்னுடன் அழைத்துச் செல்வாள்' என நம்பினேன். அவர்கள் ஒவ்வொரு முறையும் தாங்கள் எவ்வளவு சிரமங்களை வெளியே அனுபவிக்கிறார்கள் என என்னிடம் சொல்வார்கள். ஆனால் அப்பாவிடமோ சிற்றன்னையிடமோ எதுவும் சொல்ல மாட்டார்கள். எந்த விதத்திலும் அவர்களது வாழ்க்கை சிரமானதெனக் காட்டிகொள்ள அவர்கள் விரும்பவேயில்லை. தாங்கள் வெளியே சந்தோசமாக இருப்பது போல நடிப்பார்கள். ஏதோ உண்மையும் அது போலத்தான் என்றிருக்கும். அப்பாவோ மடையன் போல அவர்களை நம்பினார். நான் எனது சகோதரிகளில் ஒருத்தி வந்து என்னை விடுவித்துச் செல்வாளென்று ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்த காலங்களுக்குக் கணக்கில்லை.அப்பாவின் நண்பரின் வீட்டில் தண்ணீர் எடுத்துக்கொண்டு வந்த நான் ஒரு வாகனம் வந்து நிற்கும் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்தேன். எனது மூத்த சகோதரி ஹெலன் ஒரு நீல நிறக் காரிலிருந்து இறங்கினாள். ஹெலனா அது? அவளை என்னால் அடையாளமே காண முடியவில்லை. அவளது சப்பாத்து அழகாகவும் புது மாதிரியாகவும் இருந்தது. தலை முடியை நீளமாக வளரவிட்டிருந்தாள். சந்தோசத்துடன் அவளிடம் ஓடினேன். காருக்குள் ஒரு புதிய மனிதன் அமர்ந்திருந்தான். வழமைபோல அப்பாவும் வாசலில் வந்து நின்றிருந்தார். ஹெலன் தன்னுடன் வந்தவனைப் பற்றிச் சொல்வதற்கு முன்னமே
"காரில் இருக்கும் மனிதன் யார்?" என அப்பா கேட்டார்.
"அவரைத்தான் நான் திருமணம் செய்துகொள்ளப் போகிறேன்" எனக் ஹெலன் சொன்னாள்.
"அவன் என்ன மொழி பேசுகிறவன்?" அப்பா அறிய விரும்பினார்.
"கிழக்கில் இருப்பவர்"
"மேற்கில், இங்கே எனது வீட்டில் அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான்?"
" நான் அவரை உங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்பியதால் தான் அவர் இங்கு வந்திருக்கிறார்."அப்பா உடனடியாகவே
"நீ அவனைத் திருமணம் செய்வதில் எனக்குச் சம்மதமில்லை" என்றார்.
"அவர் என்னை நன்றாகவே நடத்துகிறார், அவரைத் திருமணம் செய்து கொண்டால் எனது வாழ்க்கை மகிழ்சியாக அமையும்" ஹெலன் வாதம் செய்தாள்.
"நீ எனது மகளாகத் தொடர்ந்தும் இருக்கவேண்டுமென்றால் அவனைத் திருமணம் செய்துகொள்ளக் கூடாது!" அப்பா பயமுறுத்தினார்.
எனது சகோதரி அழத் தொடங்கினாள். காருக்குப் போவதற்குத் திரும்பிய அவள் ஏதோவொரு பெரும் சுமையைச் சுமப்பவள் போலத் துவண்டிருந்தாள். காரின் கதவத் திறந்து கொண்டு திரும்பி அப்பாவைப் பார்த்து
"குறைந்தபட்சம் இவருக்கு முகமனாவது கூறமாடீர்களா?" என அப்பாவைக் கேட்க
"இல்லை"
என உறுமிய அவர் "ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள் அவனை நீ திருமணம் செய்வதென்று முடிவெடுத்தால் என் வாசற்படி மிதிக்கக் கூடாது" என்றார். நான் அப்பாவைப் பார்த்தேன். அவரோ அரவமேயில்லாது ஒரு பாம்பைப் போல வீட்டினுள் நுழைந்தார்.
காரில் இருந்தவனைக் ஹெலன் அனுப்பி வைத்தாள். மெதுவாக நடந்து வீட்டிற்குள் வந்த ஹெலன் அழுது கொண்டேயிருந்தாள். அவளின் நடத்தையை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. என்னுள் துக்கமும் கோபமும் மாறி மாறி வந்து போயின.
"அப்பா கோபக்காரர் என்பது உனக்கு நன்றாகவே தெரியும். வந்த மனிதனுடன் சந்தோசமாக இருந்தாயென்று நீ சொல்கிறாய், பின்பேன் என்னையும் கூட்டிக்கொண்டு அவனுடன் நீ போகவில்லை?" அவள் அமைதியாக எனக்குப் புரிய வைக்க முயன்றாள்.
"ஒரு பெண்ணிற்குத் திரும்பிச் செல்ல ஒரு வீடில்லாவிடின் அவள் தனது கணவனிடம் எந்த மதிப்பையும் பெறமாட்டாள், பின்பு அங்கு நமக்கு எந்த உரிமையும் இருக்கப் போவதில்லை"
"இனி என்ன செய்யப் போகிறாய்?"
"என்ன செய்வதென்றே தெரியவில்லை, எனக்குப் போக்கிடமில்லை..."எங்களுடனேயே இருக்குமாறு நான் அவளைக் கேட்டுக் கொண்டேன்.சிற்றன்னையின் வெறுப்புக் கொப்பளிக்கும் அதிகாரத்திற்கு அவள் தன்னை அர்பணித்துக் கொள்ள வேண்டிய பரிதாப நிலை. அன்றிரவு தூங்குவதற்கு முன்னதாகப் பற்றீசியாவைப் பற்றிச் சொல்லி அவர் எங்களுக்கு எங்களது உண்மையான அம்மாவைக் கண்டு பிடிக்கச் சிலவேளை உதவாலாமெனச் சொன்னேன். அடுத்த நாள் காலையில் ஹெலன் தலை நிமிர்ந்து துணிவாக நின்றாள். "இனி ஒரு போதும் நான் இங்கு திரும்பிவரப்போவதில்லை" எனப் போகும்போது கூறிச் சென்றாள். அவள் எங்கள் அம்மாவைக் கண்டுபிடிக்க வேண்டுமென என் உள்ளத்திலிருந்து வாழ்த்தினேன்.
அப்பா குறை கூறத்தொடங்கினார். "எல்லோரும் வீட்டைவிட்டுப் போவதும் பிரச்சனைகள் வந்ததும் மீண்டும் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு திரும்பி வருவதும் வழமையாகிவிட்டது." இன்றும் அந்தச் சொற்கள் ஏதோ நேற்றுச் சொன்னது போல எனக்கு ஞாபகமிருக்கிறது. அவரது மடைமைக்கும் குழந்தைகளை விளங்கிக் கொள்ள முடியாத தன்மைக்கும் எதிராக என்னால் தலையை ஆட்டி அதிருப்தியைத் தெரிவிக்கத்தான் முடிந்தது. அதுவும் அவரின் முதுக்குப் பின்னால்.
2 மறுமொழிகள்:
i m expecting for this book
ram
i m expecting for this book
ram
Post a Comment
<< முகப்பு