குழந்தைப் போராளி - 10


















அம்மாவின் உண்மை முகம்

நான் அடுத்த நாள் நகரத்திற்குச் சென்றபோது மூன்று சிறுமிகளும் ஒரு சிறுவனும் என்னை வரவேற்றனர். நான் அவர்களைக் கேள்விக்குறியுடன் பார்க்க அப்பா "இவர்கள் உனது சகோதரர்கள்" எனச் சொன்னார். அவர்களது அழகிய ஆடைகள் என்னை ஈர்த்தன. அவர்களது உடை அவர்களைப் பகட்டானவர்களாய்க் காட்டிற்று. முதல் பார்வையிலேயே அவர்களை நான் வெறுப்பாகப் பார்த்திருக்கவேண்டும். என் விநோதமான சகோதரர்கள் விநோதமான கேள்விகளைக் கேட்டனர்.
"முற்றெஸி உன்னை எப்படி நடத்துகிறார்?"
"முற்றெஸி" இந்தச் சொல்லை நான் கேள்விப்பட்டதே இல்லை. எனவே எதுவும் விளங்காது அவர்களைப் பார்த்து முற்றெஸி என்றால் என்ன அர்த்தமெனக் கேட்டேன்.
" முற்றெஸி" என எல்லோரும் பதிலளித்தனர்.
"உங்கள் அம்மாவைச் சொல்கிறீர்களா?" என அவர்களைக் கேட்டேன்.
"இல்லை,அவர் எங்களது அம்மா அல்ல, அவர் பெயர் முற்றெஸி"
"சரி யார் எங்களது அம்மா?" என அவர்களைக் கேட்டேன். அவர்களுக்கும் அம்மா எங்குள்ளார் என்று தெரியவில்லை.
"எங்களுக்குத் தெரிந்தது முற்றெஸி அம்மா அல்ல என்பது தான்"

நான் எவ்வாறு கீழ்தரமாக நடத்தப்படுகிறேன் எனச் சொன்னதும் அவர்களுக்குக் கவலையாய்ப் போயிற்று.
"இங்கு உங்களைப் பார்க்க வரும்போது அவர் உங்களை மோசமாக நடத்துவாரா"? எனக் கேட்க "இல்லை" என்று சொன்னார்கள்.

நான் சிறிது தனியாகச் சென்று யோசிக்க வேண்டியிருந்தது. அவர் எனது உண்மையான தாயில்லை என்பதை ஏற்றுக் கொள்ளும் போது அவரின் கோபச் செயல்களும் மூர்க்கமும் என் நினைவில் வந்து போயின. எனது இதயத்தில் தாய் என்பதை மாற்றி வளர்ப்புத் தாய் எனப் பதித்துக்கொண்டேன். இரண்டு நாட்கள் கழிந்து இன்னுமொரு சகோதரியும் வந்து சேர்ந்தாள். இவள் எனக்கு மூத்தவள். அவளின் பெயர் அனெற். எனது தந்தைக்கும் நயின்டோவின் அம்மாவிற்கும் பிறந்தவள் தான் இந்த அக்கா. இவளும் எனது இதயத்தில் ஓர் இடத்தைப் பிடித்துக்கொண்டாள். மற்றைய எனது சகோதரிகளுக்கு - சகோதரி கிறேஸைத் தவிர - அனெற் ஒரு வேண்டப்படாதவள். கிறேஸ் அமைதியும், மிக மன உறுதியும் கொண்டவள். யாராவது நியாயத்திற்குப் புறம்பாக நடந்து கொண்டால் மிகத் தீவிரமாகத் தனது எதிர்ப்பைத் தெரிவிப்பாள். மற்றச் சகோதரிகளின் கூட்டான நடவடிக்கைக ளுக்கு எதிராக என்னால் எதுவும் செய்ய முடியவில்ல. ஏன் அனெற்றை அவர்கள் துன்புறுத்துகிறார்கள் என என்னால் சரிவரப் புரிந்து கொள்ள முடியாதிருந்தது. ஒவ்வொரு நாளையும் அனெற் அழுகையிலேயே வாழ்ந்தாள். நானோ ஒன்றும் செய்யமுடியாது தவிக்க வேண்டியிருந்தது. எங்களைக் கவனித்துக் கொண்ட செவிலித்தாய் மேரி அனெற்றுக்கு ஆறுதல் சொல்வது என் மனதிற்குச் சற்றே நிம்மதியைக் கொடுத்தது.

எனது புதிய உலகம் எனக்குப் பிடித்திருந்தது. குறிப்பாக எனது சகோதரனுடன் நல்ல உறவைக் கொண்டிருந்தேன். எனது சகோதரிகள் தங்கள் பாடசாலை விடுதிகளுக்குத் திரும்பிச் செல்ல நான் சகோதரன் ரிச்சட்டுடன் அவன் படித்துக்கொண்டிருந்த பாடசாலையில் முதலாம் வகுப்பை ஆரம்பித்தேன். அங்கு ரிச்சட் என்னை 'பேபி' என்று மற்றவர்களுக்கும் சொல்லி வைக்க பிரச்சினைகள் உருவாகி, என்னை 'பேபி' என்பவர்களுடன் சண்டை பிடித்து அநேகமாக ஒவ்வொரு நாளும் கீறல்களுடனும் காயங்களுடனும் நான் வீடு திரும்ப வேண்டியிருந்தது.

நானும் சகோதரனும் தனியாக நகர வீட்டில் விடப்பட்டிருந்தோம். செவிலித் தாயார் மேரி எங்களை அன்பாகக் கவனித்துக் கொண்டிருந்தார். திடீரென அப்பா தன் மனைவியுடனும் அவரின் குழந்தைகளுடனும் வந்து சேர்ந்தார். இப்போது இன்னுமொரு ஆண்குழந்தை புதிதாக வந்திருந்தது. பாடசாலை முடிந்ததும் புதிய சகோதரனைப் பார்துக்கொள்ளும் வேலை என் தலைமேல் விழுந்தது. விளையாடவோ சண்டையிடவோ நேரமில்லாது போயிற்று. எனக்கு வந்த கோபத்தில் சிறியவனை எங்காவது தொலைத்துவிட வேண்டும் போலிருந்தது. நான் குழந்தையைப் பார்த்துக் கொள்ள முடியாததற்குச் சாட்டுகளை யோசிக்கத் தொடங்கினேன்.

ஒரு நாள் குழந்தையுடன் வீட்டிற்கு வெளியே உட்கார்ந்திருந்தேன் மற்றக் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தார்கள். எனக்கு விளையாட முடியவில்லயே என்ற ஆத்திரம்! சின்னவனின் பெருவிரலைப் பிடித்துக் கிள்ளினேன். அவன் வீறிட்டு அழத் தொடங்க எனக்குப் பயம் பிடித்துக் கொண்டது. கிள்ளிய அடையாளம் தெரிந்து விடுமோ? அவனது அம்மா வெளியே வந்து பார்ப்பாரோ? மறுபக்கத்தில் அவள் வெளியே வந்து பார்த்துக் குழந்தையை வாங்கிக் கொண்டால் நான் விளையாடப் போகலாம். இரண்டும் நடக்கவில்லை. இம்முறை குண்டிப்பகுதியில் ஒருதரம் கிள்ளக் குழந்தை மீண்டும் அழத் தாயார் வந்து வாங்கிக்கொண்டார். என்னிலும் ஒருபடி அவர் மேலே போய் என்னைக் குழந்தையின் சாணத்துண்டுகளைத் துவைக்கும்படி சொல்லிவிட்டார். எல்லாக் குழந்தைகளும் என்னக் கேலி பண்ணிச் சிரித்தார்கள். இது என்னை மேலும் ஆத்திரமூட்டியது. நான் அவர்கள் எல்லோரையும் வெறுத்ததுடன் ஒரு சின்ன விடயத்திற்கும் மூர்க்கத்தோடு அவர்களுடன் அடிதடியில் இறங்கத் தொடங்கினேன்.

ஒருநாள் சாணத்துண்டுகளைத் துவைத்துக்கொண்டிருக்கும்போது காய்ந்த மலம் கருகப்பொரித்த முட்டைத்துகள்கள் போல எனக்குப் பட்டது. அதில் சிறிதளவு எடுத்துச் சென்று உப்புத்தூவி எனது சகோதரர்கள் இம்மனுவேலுக்கும் ரேய்க்கும் கொடுத்தேன். அவர்கள் இன்னும் வேண்டுமெனக் கேட்க எனது சிரிப்பை அடக்க முடியாது தொடர்ந்து சிரித்துக்கொண்டே நாளைவரைக் காத்திருக்கவேண்டுமெனக் கூறினேன்.

எல்லவற்றிற்கும் மேலாக எனது சகோதரிகள் தங்கள் பாடசாலை விடுதிகளிலிருந்து திரும்பி வந்து எனது வேலையைப் பொறுப்பெடுத்துக்கொள்ள வேண்டுமென்பது எனது ஆசை. அதற்கு இன்னும் சில வாரங்கள் நான் பொறுத்திருக்க வேண்டியிருந்தது.

அப்பாவின் மனைவி தான் சுகயீனமாக இருக்கிறாரெனப் பாசாங்கு செய்து கொண்டு கட்டிலிலேயே காலத்தைக் கழிப்பார். அல்லது அப்பாவைத் தூண்டிவிட்டு அவரது பெண்களுக்கு உதை கிடைக்கும்படி செய்வாள். அனேற்றும் கிறேசும் நல்ல நண்பிகளாகவும் எல்லா நேரமும் ஒன்றாகவே இருந்ததற்கும் இது கூடக் காரணமாயிருக்கலாம். ஒரு சனிக்கிழமை காலையில் அவர்கள் இருவரும் காணாமற் போனார்கள். காத்திருந்துவிட்டு அப்பாவும் அவர்களைத் தேடிப் போனார். அவர்கள் திரும்பி வரவேயில்லை. இப்போதாவது அப்பாவின் கண்கள் திறந்துகொள்ள வேண்டுமென நான் மனதார விரும்பினேன். அவரின் மனைவியின் உண்மையான சொரூபத்தை அவர் கண்டறிய இதுவே பொருத்தமான நேரமாக எனக்குப்பட்டது.

எனது சிற்றன்னையின் குழந்தைகள் பாடசாலை செல்லத் தொடங்கினர். ஒவ்வொருவரும் இரண்டு சோடிச் சப்பாத்துக்களை வைத்திருந்தனர். என்னிடமோ நல்ல உடை ஒன்று கூட இல்லை. நான் சிற்றன்னையிடம் ஒரு உடுப்பு வாங்கித்தரும்படி கேட்க அவரென்னை அப்பாவிடம் அனுப்பினார். ஒரு பின்னேரத்தில் அப்பா வரவேற்பறையில் இருந்து கொண்டு சுங்கான் புகைத்துக்கொண்டிருந்தார். திடீரென அவரின் முகத்தில் புன்னகை தொற்றியது. நான் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எனது விருப்பத்தைச் சொன்னேன். சிரித்துக் கொண்டே நாளை எனக்கொரு அழகான உடை வாங்குவது பற்றி யோசிப்பதாகச் சொன்னார். இரவு முழுவதும் என்னால் உறங்கமுடியவில்லை. அடுத்த நாள் பகலும் விரைவில் கழிவதாக இல்லை. மாலை, அப்பா வருவது தெரிந்ததும் அவரின் முன் போய் நின்றேன். ஒரு சிறிய பொதியை அவர் என்னிடம் தந்தார். நான் அவர் என்னை அந்தப் பொதியைப் பிரிக்கச் சொல்லும்வரை மரியாதையாகக் காத்திருந்தேன். பொதியைச் சுற்றியிருந்த காகிதத்தைக் கிழிக்க ஒரு கறுத்த உடை வெள்ளைக் கோடுகளுடன் வெளியே வந்தது. கறுப்பில் வெள்ளைக் கோடுகள் பளிச்சென்று தெரிந்ததுடன் அதன் வடிவமைப்பு மார்புப் பக்கத்திதும் முதுகுப் பக்கத்திதும் மிகத் தாழ்வாக இருந்தது. ஏமாற்றம் எனது முகத்தில் எழுதி ஒட்டப்பட்டது. எடுத்ததெற்கெல்லாம் அடிக்கும் அப்பா சிறிது ஓய்ந்துள்ளார். பழையதை மீண்டும் கிளறிவிடுவேனோ என்ற பயத்தில் ஒன்றும் சொல்லாது தனியாகச் சென்று அழத் தொடங்கினேன். என்னைத் தொடர்ந்து வந்த என் சகோதரி மாஹி "நீ அந்த உடையில் மிக அழகாக இருக்கின்றாய், அத்துடன் அது மிக நாகரிகமான உடை" என்றும் சொன்னாள். அந்த உடையில் நான் பாதி நிர்வாணமாகவும் பரிதாபமாகவும் இருந்தேன்.ஆனால் எனது உடலை என் விருப்பத்திற்கு மாறாக மற்றவர்கள் பார்ப்பதற்கெதிரான எனது போராட்டம் தோற்றுப் போய்விட்டதென்பது இன்று எனக்குப் புரிகிறது.

1 மறுமொழிகள்:

Anonymous Anonymous மொழிந்தது...

In April, in British-occupied Basra, the European aid agency Saving Children from War reported: "The mortality of young children had increased by 30 percent compared with the Saddam Hussein era." They die because the hospitals have no ventilators and the water supply, which the British were meant to have fixed, is more polluted than ever. Children fall victim to unexploded U.S. and British cluster bombs. They play in areas contaminated by depleted uranium; by contrast, British army survey teams venture there only in full-body radiation suits, face masks, and gloves. Unlike the children they came to "liberate," British troops are given what the Ministry of Defense calls "full biological testing."

Was Arthur Miller right? Do we "internally deny" all this, or do we listen to distant voices? On my last trip to Palestine, I was rewarded, on leaving Gaza, with a spectacle of Palestinian flags fluttering from inside the walled compounds. Children are responsible for this. No one tells them to do it. They make flagpoles out of sticks tied together, and one or two climb on to a wall and hold the flag between them, silently. They do it, believing they will tell the world.

Sun Jul 09, 05:31:00 PM 2006  

Post a Comment

<< முகப்பு