குழந்தைப் போராளி - 2
_____________________________________________________________________________
முதலாவது பகுதி:
களவாடப்பட்ட குழந்தைப் பருவம்
____________________________________________________
கடந்த காலத்தின் தடங்களில்
இன்று இருபத்தைந்து வயது நிறைந்த இளம் பெண்ணாகப் பாதுகாப்புடனும் அமைதியுடனும் உலகின் ஒரு பகுதியில் வாழ்வதையும், இன்று இந்தப் புத்தகத்தை எழுதி முடித்திருப்பதையும் என்னால் நம்பவே இயலாமல் இருக்கின்றது. எனது குழந்தைப் பருவத்தைப் பற்றிப் பேசப் போவதிலும், அது பற்றிய நினைவுகளைக் கோர்வைப்படுத்தி மீண்டும் ஒருமுறை அவ் வாழ்க்கையை ஞாபங்களில் மீளக் கட்டி எழுப்புவதிலும் நான் விருப்பமின்றித்தான் ஈடுபடவேண்டியுள்ளது. நினைவுகளைக் கட்டி நிறுத்துவதும் மீளப் பிடிக்குள் கொண்டுவருவதும் சந்தேகமின்றிக் கடினமானதே. நினைவுகள் நாம் நினையாத நேரங்களிலும் எதிர்பாராத வேளைகளிலும் மனதில் எழுவதாலும் வீழ்வதாலும் ஓடும் மின்னலைக் கை கொண்டு பிடிப்பதற்கு இது ஒப்பானது. நினைவுகள் கனவுகளைப் போன்றவை. தமக்கென்ற ஒரு பிரத்தியேக விதியில் இயங்குபவை.
எனது முந்திய வாழ்க்கை ஓர் போராளிச் சிறுமியாகப் பல தடங்களில் சென்றுள்ளது. அவைகளினூடு மீண்டும் நான் கால் பதித்தாக வேண்டும். ஆனால் என்னுள் இருக்கும் சிறுமி அப் பாதையினை மீண்டும் பார்ப்பதற்கு முரண்டு பிடித்தும், அழுதும் தனது எதிர்ப்பைத் தெரிவிக்கின்றாள். அந்த வாழ்க்கையைத் திரும்பச் சந்திக்க அவள் விரும்பவில்லை. அது அவளைப் பொறுத்தவரை ஒரு கெட்ட கனவு.
இன்று கூடத் தாயின்றி வளர வேண்டிய தனிமையெனும் பயம், ஈடு செய்ய முடியாத அந்த இழப்பின் துயர் பல வேளைகளில் என்னைத் துன்புறுத்தும். அன்று நான் மிகச் சிறியவளாக இருந்ததால் தாயின்றி வளர வேண்டிய நிலையின் தாற்ப்பரியத்தை என்னால் அப்போது புரிந்து கொள்ள முடியவில்லை. இந்த இழப்பின் துயர் என்னைத் துரத்திக்கொண்டே உள்ளது. துயரும் கையறு நிலையும் என்னைத் தாக்கி நிலைகுலையச் செய்துவிடுவன. பொதுவாக இந்த எண்ணங்களைத் தள்ளிவைக்கவே விரும்புகின்றேன். அல்லது மறந்து விட முயற்சிக்கின்றேன். ஏனெனில் அதுவே இலகுவானதாக இருக்கின்றது.
ஒரு சிறுமியாக எனது கனவுகள் என்னாவாக இருக்கும்? மற்றைய சிறுமியரின் கனவு எதுவாகவிருக்கும்? அன்பும், அரவணைப்புமென்றுதான் நான் நம்புகின்றேன். எனது தந்தையின் கனவோ அதிகாரமும் பெரிய மனிதனாவதும். ஒரு வெறி பிடித்த அரசியல்வாதியின் கனவது. தனது அதிகாரத்திற்கும் புகழுக்குமிடையில் எதுவுமே தடையாக இருக்ககூடாதென்ற இவர்களின் கனவுகளின் கைதியாக நான் இருந்தேன். அடி உதைகளிலிருந்தும் எல்லாப் பிழைகளினதும் காரணி நான் தானென்ற தவறான வாதத்திலிருந்தும் நான் தப்பியோடி விளையாடிய மற்றைய விளையாட்டுத்தான் ஆயுதமேந்திய விளையாட்டு. காலம் இவர்களின் கனவால் என்னிடமிருந்து நானே தப்பி ஓடவேண்டிய நிலைக்கு என்னைத் தள்ளியது. இவர்களின் கனவு எனது வாழ்வின் அதிபயங்கரக் கனவாக மாறியது.
இன்று எனது கனவென்ன? எல்லாவற்றிலும் முதன்மையாக எனது வாழ்க்கைப் பாதையை நானே தேர்ந்த்தெடுக்கும் சுதந்திரம். அச்சத்திலிருந்து விடுதலை, வாழ்க்கைக்கும் நேசத்திற்கும் தடைவிதிக்காத சுதந்திரம்.. இன்று இந்தக் கனவினை ஈட்ட எவ்வளவு தூரம் பயணித்துள்ளேன் என்பதை உணருகிறேன். எனது வாழ்வை எனது கைகளில் எடுத்துக்கொள்ள என்னால் முடிகிறது. ஆனாலும் எனது கடந்த காலத்தை எண்ணும் போது பல தடவைகள் ஓர் இருண்ட ஆழம் தெரியாத படுகுழியில் விழுந்து விடுகின்றேன். என் கடந்த கால வாழ்வின் ஞாபகங்களிற் பெரும்பாலானவை பயங்கரமானவை. அவைகளிலிருந்து தப்புவது கடினம். அவை எனது ஆன்மாவை வருத்துவதும், நான் எனது தாயைப் பிரிந்த உணர்வும் என்னை விட்டு என்றும் அகலாதவை. காயங்கள் மிக ஆழமானவை. கடந்த காலம் பல தழும்புகளை விட்டுச் சென்றுள்ளதால் நினைவுகளைக் கழுவி விட என்னால் முடியாதிருக்கிறது.
தொடரும்..
0 மறுமொழிகள்:
Post a Comment
<< முகப்பு