குழந்தைப் போராளி - 1

ஒரு சிறிய முன்னுரை... - தியோ.J


When I was a kid with a gun I felt big, I felt powerful
China Keitetsi, ex-child soldier

"என் மூளையின் செல்களில் ரீங்காரமிட்டு அதிர வைக்கும் 'இடம்! வலம்! இடம்! வலம்!' அதிகாரக் குரல்கள். பையன்களும் சிறுமிகளும் பக்கம் பக்கமாக நின்று பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தோம். இது என் வாழ்நாளில் நான் இதுவரை கேட்டோ பார்த்தோயிராத ஒன்று. அரச படையினர் மிகவும் வேறுபட்டவவர்கள், எங்களிலும் வயது கூடியவர்கள். ஆச்சரியங்களின் மத்தியில், நான் இங்கு என்ன செய்கிறேன்? எனறு நினைத்துப் பார்க்க முடியாமல் இருந்தது."

China Keitetsi ஒன்பது வயதேயான சிறுமி. உகண்டாவின் Yoweri Museveni யின் National Resistance Army -NRA- யில் (தற்பொழுது UGANDA PEOPLES DEFENCE FORCE -UPDF-என்னும் பெயரில் அறியப்படுகிறது). வலுக்கட்டாயமாகச் சேர்க்கப்பட்ட குழந்தைகளில் ஒருத்தி. கைகளில் துப்பாக்கி திணிக்கப்பட்டு, உடல்களில் குண்டுகள் கட்டப்பட்டுப் போர்க்களங்களில் முன்தள்ளப்பட்டு உலகெங்கும் பலியாகிக் கொண்டிருக்கும் இலட்சக் கணக்கான குழந்தைப் போராளிகளில் இவளும் ஒருத்தியாகப் பத்துக் கொடிய ஆண்டுகள் Yoweri Museveniயின் படையில் தனது குழந்தைப் பருவத்தைத் தொலைத்தவள்.

இவர், தனது இருபத்தைந்தாவது வயதில் தனது வாழ்வில் குழந்தைப் பருவம் தொலைந்து போனதை உணர்சிகளின் விளிம்பிலிருந்து, தனது நீண்ட வருடங்களின் மெளனத்தை உடைத்துத் தன்வரலாறாக எழுதியிருக்கிறார்.

சய்னா வேண்டப்படாத குழந்தையாக 1976ம் ஆண்டு உகண்டாவில் பிறந்தார். இவரின் தாயார் பெண் குழந்தை பெற்றார் என்றவொரு காரணத்துக்காகவே தகப்பனால் துரத்தப்பட்டார்; அவலங்கள் அவர் வாழ்கையாயின. மிகவும் கேவலமான முறையில் அவர் குடும்பத்தினரால் வதைக்கப்பட்டு வேலைக்காரியாக நடத்தப்பட்டார். எட்டாவது வயதில் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய நிர்பந்ததிற்க்கு சய்னா உள்ளாக்கப்பட்டார். இக்காலகட்டத்தில் உகண்டா அதிபர் Milton Oboteக்கு எதிராகப் போராடிக்கொண்டிருந்த NRA யில் சய்னா கட்டாயமாகச் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

"எனது ஒன்தாவது வயதில் UZI என்ற முதலாவது துப்பாக்கியை ஏந்தி ஆயுதப் போராளியானேன், கொலைகாரியானேன்" என்கிறார் சய்னா.

"போர்க்களங்களில் நாங்கள் எப்போதும் முன்வரிசையில் பலிக்கடாகளாக அனுப்பப்பட்டோம். என்னையொத்த வயதுடைய -ஆகக் குறைந்த வயது ஆறு- போராளிகளின் மத்தியில் ஒரு போட்டி மனோபாவமே வந்துவிட்டது. முன்வரிசையில் நின்று மிகவும் கெட்டித்தனமாகக் கொலை செய்பவர்கள், அச்சமில்லாதவர்கள், கைதிகளாக பிடிபட்டவர்களைக் கொடூரமாகச் சித்திரவதை செய்யத் தெரிந்தவர்கள் பாராட்டப்பட்டார்கள். பயந்து பின் வாங்கியவர்கள் பரிகசிக்கப்பட்டார்கள்.
எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை, எங்கள் பொறுப்பாளர்கள், உயரதிகாரிகள் எங்கள் தோள் தொட்டு பாராட்டுவதற்காக அவர்கள் எங்களைப் பார்த்துப் புன்னகைப்பதற்காக மேலும் மேலும் கொடியமுறைகளில் கொலைகளைச் செய்தோம்."

"எங்கள் அம்மாக்களை எங்களிடமிருந்து பிரித்துக்கொண்டு, கனமான துப்பாக்கிகளை எங்களுக்குக் கொடுத்தார்கள்.

எங்கள் துப்பாக்கிகள் தொலைக்கப் படுவதிலும் பார்க்க எங்கள் மரணங்களே விரும்பப்பட்டன. நாங்களும் துப்பாக்கிகளும் ஓருயிர் ஈருடலானோம். இரவுகளில் நானும் சக குழந்தைப் போராளிகளும் எங்களது உயர் அதிகாரிகளால் வன் புணர்சிக்குள்ளாக்கப் பட்டோம். அவர்கள் எங்களை Random முறையில் தெரிவு செய்து கொண்டார்கள்." என்று சய்னாவின் குழந்தைப் பருவ அவலங்கள் சொற்களாகப் புத்தகம் முழுவதும் பரவிப் பயமுறுத்துகின்றன.


"அவர்கள் எங்களுக்கு ஆயுதங்கள் வழங்கினார்கள், அவர்களது போரை எங்கள் மேற் திணித்தார்கள், அவர்கள் எங்களை எதிர்க்க, கொல்ல, சித்திரவதை செய்யப் பழக்கினார்கள், எங்களைத் தங்கள் படுக்கைகளாக்கினார்கள்."


1986 ம் ஆண்டு Yoweri Museveni யின் வெற்றிக்குப் பின்னர் சய்னா உயரதிகாரிகளின் மெய்க்காப்பளராகப் பதவி உயர்த்தப்பட்டார். பின்னர் சில காலங்கள் இராணுவப் பொலிஸ் அதிகாரியாகப் பணிபுரிந்தார். இன்னமும் பாலியல் அத்துமீறல்ககளும், பலாத்காரங்களும் அவரது உயரதிகாரிகளால் தொடர்ந்த வண்ணமே இருந்தன. இக் காலகட்டத்தில் தனது பதினைந்தாவது வயதில் முதல் முறையாகத் தன்னை மதித்து அன்பு செய்யும் உயரதிகாரி கேணல்.Moses Dragoவுக்குக் கர்ப்பபமாகிச் சய்னா முதற் குழந்தையைப் பெற்றெடுக்கிறார். சில காலங்களிலேயே கவலைக்கிடமான முறையில் கேணல்.Moses Drago மரணத்தைத் தழுவிக் கொள்கிறார்.

"எனக்குப் பதினைந்து வயதான போது, என் உடம்பை எத்தனை உயரதிகாரிகள் அதுவரையில் அனுபவித்துக் குதறிக் குலைத்திருந்தார்கள் என்று எனக்கு எண்ணிக்கை தெரியவில்லை" எனும் சய்னா தனது பதினெட்டாவதுவது வயதில் மீண்டும் கருவுற்றார். இந்த நிலையில் ஒரு உயரதிகாரியின் காம இச்சைக்கு இணங்க மறுத்தாற்காகச் சய்னா மீது அந்த அதிகாரியால் பல பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. 'எதிரிகளுக்கு ஆயுதம் விற்றார்' எனும் மிகக் கொடூரமான குற்றச்சாட்டினால் சய்னா மிகவும் ஆபத்தான நிலைக்குத் தள்ளப்பட்டார்.

போரினாலும், கொலைகளாலும், பாலியல் வன்முறைகளாலும் உளரீதியாகவும் உடல்ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த சய்னா தனது மூன்றே வயதான மகனை ஒரு குடும்பத்தின் பொறுப்பில் விட்டுவிட்டு, வயிற்றில் குழந்தையுடன் உகண்டாவை விட்டு வெளியேற முடிவெடுக்கிறார்.

மூன்று கிழமைகள் நீண்ட பஸ் பயணத்தில் கென்யா- தன்சானியா- ஸாம்பியா- சிம்பாவே ஊடாகச் சய்னா தென் ஆபிரிக்காவை வந்தடைகிறார். மன அதிர்சிகளில் இருந்து விடுதலை பெற சிகிச்சைக்குள்ளாக்கப்படுகிறார். இவ் வேளையில் அவர் தனது இரண்டாவது குழந்தையும் பெற்றெடுக்கிறார். சய்னாவின் உடல் மனநிலை கருதி குழந்தை ஒரு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டு வளர்க்கப் படுகிறது. தனது இரண்டாவது குழந்தை பற்றிச் சய்னா கூறும் போது "Ashleyன் தகப்பன் யாரெ ன்பது எனக்குத் தெரியாது" என்கிறார்.


நான்கு வருடங்கள் தென் ஆபிரிக்காவில் கழிகிறது. இங்கிருந்து அய்க்கிய நாடுகளின் அகதிகளுக்கான ஆணையத்தின் (UNHCR) தென் ஆபிரிக்க அலுவலகத்துடன் தொடர்புகளை ஏற்படுத்தி அமெரிக்காவில் தஞ்சம் புகுவதே இவரது எண்ணமாக இருந்தது. இக் காலகட்டத்தில் சய்னா உகண்டாவின் இரகசியப் புலனாய்வுப் பிரிவினரால் பின் தொடரப்பட்டுக் கைது செய்யப்பட்டார். ஆறு மாதகாலம் தண்டனை முகாமில் அடைக்கப்பட்டுத் துன்புறுத்தப்பட்டார். UNHCRன் தலையீட்டின் பேரில், நீண்ட போராட்டங்களின் பின், தனது மகனை உகண்டாவிலும், மகளைத் தென் ஆபிரிக்காவிலும் விட்ட நிலையில், 1999 ம் ஆண்டு உடலும் மனமும் முற்றாக பாதிக்கப் பட்ட நிலையில், சய்னா, அய்க்கிய நாடுகளின் அகதிகளுக்கான ஆணையத்தால் டென்மார்க்குக்கு அழைத்து வரப்பட்டார்


"முதன் முறையாகச் சுதந்திரக் காற்றை சுவாசித்தேன்" என்கிறார் சய்னா. "வந்த ஆரம்ப காலங்களில், ஏன் நீண்ட காலங்களாக "NO" என்னும் சொல்லை நான் சொல்வதேயில்லை. எங்கே நான் 'இல்லை', 'மாட்டேன்' என்று சொன்னால் முன்னர் போல மீண்டும் தண்டனைக்குள்ளாக்கப் படுவேனோ என்று பயந்ததினால் "YES SIR" என்றே எப்போதும் சொல்லி வந்தேன்."

"இங்கு என்னை ஆதரித்து வழி நடத்திய மனநல மருத்துவரினதும், சமூக சேவகர்களினதும், என்னைப் பாதுகாத்த இரண்டு டென்மார்க் குடும்பத்தினரினதும் உதவியினாலேயே நான் கொஞ்சம் கொஞ்சமாகச் சுதந்திரமாக வாழப்பழகிக் கொண்டேன்.ஆனால் எனது நீண்ட கொடிய இறந்த காலங்களில் இருந்து முற்றாக விலகிவிட முடியவில்லை. கண்களை மூடினால் கொலைகள், சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட அந்த மனிதர்களின் உயிர்ப் பிச்சை கேட்கும் கண்கள், என்னை வதைத்துக் கொண்டேயிருந்தன."

"எப்பொழுதும் பயந்தவளாக பயங்கரக் கனவுகளிலிருந்து விழித்தெழுந்தவளாக எனது இறந்த காலங்களிலிருந்து விலக இயலாமல் மிகவும் சிரமப்பட்டேன்.
எனது மனநல மருத்துவரான Birgitte Kundsen சிகிச்சையின் ஒரு பகுதியாக "உனக்கு உண்டான வலிகளை, உனது உணர்வுகளை, உன் அச்சங்களை, உன் மன ஓட்டங்களையெல்லாம் எழுது!" என்று கேட்டுக் கொண்டதன் பெயரில்- சிகிச்சைக்காக- நான் எழுதத் தொடங்கினேன். ஒவ்வொரு முறை எழுதும் போதும் என் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்தோடும். என் கண்ணீர்த்துளிகள் பட்டுத் தெறிக்காத சொற்களேயில்லை" என்கிறார் சய்னா. "150 பக்கங்கள் எழுதிய நிலையில் என் மருத்துவரிடம் காட்டினேன். அவர் 'நீ Auto Biography எழுதிக் கொண்டிருக்கிறாய்' என்றார்."

சய்னாவின் இந்தத் தன்வரலாற்றை, அவர் தென் ஆபிரிக்காவில் வாழ்ந்த சொற்ப காலங்களில் பயின்ற ஆங்கில அறிவைக் கொண்டு, தனது சொந்த சொற்றொடர்களின் மூலம், அன்றாட மொழிவழக்கு உத்தியின் மூலம் நூலாகக் கொணர்ந்திருக்கிறார்.


இந் நூலை முதலில் டொச் மொழியில்
Sie nahmen mir die Mutter und gaben mir ein Gewehr எனும் தலைப்பில் வெளியிட்டார்கள். பின்னர் டெனிஷ் மொழியில் Mit liv som barnesoldati Uganda, டச் மொழியில் Ik was een kindsoldaat, ஆங்கிலத்தில் Child Soldier, செக் மொழியில் Musela jsem zabijet, பிரஞ்சில் La petite fille à la kalashnikov : Ma vie d'enfant-soldat, ஸ்பானிஷில் Mi Vida De Nina Soldado, என்ற தலைப்புகளில் மொழியாக்கப்பட்டு இப் புத்தகம் வெளிவந்துள்ளது. Miramax Pictures இப் பிரதியைத் தற்போது திரைப்படமாக்கிக் கொண்டிருக்கின்றனர்.


இன்று உலகெங்கும் 300 000 க்கும் அதிகமான குழந்தைப் போராளிகள் போர்முனைகளில் முன் தள்ளப்பட்டும் பாலியல் வதைகளுக்கு உள்ளாக்கப்பட்டும் இயல்பான குழந்தைத்தனங்கள் சிதைக்கப்பட்டும், ஏன்? எதற்கு? யாருக்கு? என்று தெரியாமலேயே சிதைந்து போகிறார்கள். ஆபிரிக்காவில் மட்டும் 120 000 குழந்தைப் போராளிகள் இருக்கிறார்கள்.

சய்னா இவர்களின் மறுவாழ்வுக்காகப் பலமாகக் குரல் கொடுத்து வருகிறார். ருவண்டாவில் வாழ்க்கையைத் தொலைத்த முன்னாள் குழந்தைப் போராளிகளுக்காகவும், ஆபிரிக்காவில் போரினால் பாதிக்கப் பட்டவர்களுக்காகவும் சய்னா மறுவாழ்வு இல்லமொன்றை UNICEF, Amnesty International, Terre Des Hommes, OXFAM, Coalition To Stop The Use Of Child Soldiers, IANSA. ஆகிய அமைப்புகளின் உதவியோடு நடாத்திவருகிறார். "நான் ஒரு பத்துப் பேருக்கு உதவி செய்தால் அவர்கள் இன்னமும் பலபேருக்கு உதவியாக இருப்பார்கள்" எனக் கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கிறார்.

சய்னாவின் தன்வரலாற்று நூலைத் தோழர் தேவாசுவிஸ் டொச்சிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறார். இம் மொழிபெயர்ப்பு, தொடராகச் "சத்தியக் கடதாசி"யில் வெளியாகிறது.

24.05.06

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு