புதன், ஜூன் 28, 2006

குழந்தைப் போராளி - 5



5.அப்பாவின் புதுமனைவி

கிழட்டுச் சூனியக்காரி எனது கையை முறித்தது ஒரு வியாழக்கிழமையாக இருக்க வேண்டும், சனிக்கிழமை அப்பா வருவதாக இருந்தது. அவர் தனது கால்நடைகளைப் பார்வையிடவும் வேலையாட்களுக்குச் சம்பளம் கொடுக்கவும் வரவிருந்தார். சனி காலையில், பாட்டி என்னிடம் " நீ கட்டிலிலிருந்து விழுந்துதான் கையை முறித்துக்கொண்டாய் என உன் அப்பாவிடம் சொல்லவேண்டும், இல்லையேல் அப்பா நகரத்திற்குத் திரும்பியதும் உன்னை நான் உதைப்பது நிச்சயம்" என்றார்.

நான் தெருவுக்குச் சென்றபோது காரின் சத்தம் கேட்டது. இது அப்பாவாக இருக்கலாமென நான் நினைத்துக் கொண்டேன் என் கை வலித்துக் கொண்டேயிருந்தது. நான் இது வரை பார்த்திராத ஓர் கார் வந்து கொண்டிருந்தது. நீல நிற சுஸுக்கி வாகனமது. வாகனம் நின்றதும் அதிலிருந்து உயரமான மிக அழகிய பெண்ணொருத்தி கையில் வெள்ளை நிறப் பொதியொன்றுடன் கீழே இறங்கினார். பளீரெனப் பால் வெள்ளை நிறத்தில் அவரது பல்வரிசை மின்னியது. ஒர் ஆணும் இறங்கினார், அது என் அப்பா. அவர்களிருவரும் சிரித்துக்கொண்டும் பேசிக்கொண்டும் வந்துகொண்டிருந்தனர். அப்பாவின் பல்வரிசை அவர் சிரிக்கும்போது முழுவதுமாகத் தெரிந்தது. கூடிய சீக்கிரம் அப்பா அந்தப் பெண்ணைக் கல்யாணம் செய்யப் போகிறார் என்று நான் நினைத்துக் கொண்டேன். அவர்களிருவருமே ஒருவரில் ஒருவர் மூழ்கியிருந்ததால் என்னை அவர்கள் கவனிக்கவே இல்லை.

வீட்டிற்குச் செல்லும் வழியில் எனது நீளக் கைச்சட்டையைத் தூக்கி எனது கையை அப்பாவிற்குக் காட்டினேன். கேள்வி கேட்டால் அந்தப் பொய்யைச் சொல்ல ஆயத்தமாயிருந்தேன். அவர் நீண்ட நேரமாக எனது கையைப் பரிசோதித்து விட்டு யார் எனது கையில் தடி வைத்துக்கட்டியதெனக் கேட்கப் பாட்டி எனப் பதில் சொன்னேன். அது குணமாகிவிடுமெனக் கூறிக் கொண்டே அப்பா வீட்டினுள் சென்றார். நான் வீட்டினுள் அறையின் ஒரு மூலையில் ஒடுங்கிக் கொண்டு யாராவது என்னுடன் பேசுவார்களா எனப் பார்த்துக் கொண்டிருந்தேன். யாருமே பேசாததினால் வெளியே சென்றபோது அந்த அழகிய பெண் என்னைக் கூப்பிட்டுக் "குழந்தையைச் சிறிது நேரம் தூக்கிக் கொள்கின்றாயா?" எனக் கேட்டார். குழந்தை? எந்தக் குழந்தை? சிலவேளை இவளும் பைத்தியக்காரியோ? எல்லோர் பார்வையும் என் மீதே இருந்தது. 'நான்தானே இந்த வீட்டின் ஒரே குழந்தை'யென நான் கூற, ஏதோ பெரியதொரு நகைச்சுவையை நான் கூறியது போல அவர்கள் உரக்கச் சிரிக்கத்தொடங்கினர். அந்தப் பெண் என்னைத் தன் பக்கத்தில் இருக்கச் சொல்லி என் மடியில் அந்த வெள்ளைப் பொதியை வைத்தார். அது ஒரு குழந்தை எனத் தெரிந்து கொண்டேன். அது ஆணா - பெண்ணா என நான் கேட்பதற்கு முன்னமே குழந்தை என்னை நனைத்தது, நானே தெரிந்து கொண்டேன், அது ஒரு ஆண் குழந்தை. எனது
எல்லாத் தைரியங்களையும் ஒன்று திரட்டிக்கொண்டே அந்தப் பெண்ணிடம் "நீங்கள் யார்?" எனக் கேட்டேன். "நான் உனது தாய்" என அந்தப் பெண்
பதில் தந்தார்.

சிறிது நேரத்தின் பின் நான் ஆட்டுக்குட்டிகளைத் தேடி சென்ற போது எனது மனம் நிர்மலமாயிருந்தது. என்னுள் புதிய நம்பிக்கை தோன்றத் தொடங்கியது.கடைசியில் பாட்டியின் பிடியிலிருந்து என்னைக் காப்பாற்ற ஒருவர் வந்து விட்டாரென நினைத்துக்கொண்டேன்.அப்பா, நானும் அம்மாவும் வசிப்பதிற்குப் புதிய வீடொன்றைக் கட்டப்போவதாகக் கூறினார்.இந்தச் செய்தியைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியாக அவர்கள் பக்கத்திலேயே இருந்து அப்பாவின் மிகுதித் திட்டத்தையும் கேட்டுக் கொண்டேயிருந்தேன்.

தொடரும்

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு