குழந்தைப் போராளி - 4

ஆபிரிக்காவில் சிங்கம் மக்கள் மனத்தில் பயத்தை ஏற்படுத்தும் அதே நேரம், ஆச்சரியம் கலந்த மதிப்பையும் பெற்றுள்ளது. சிங்கம் பசியெடுத்தால் பயங்கரமானது. எனினும் அதன் துணிவு, பலம்,போன்றைவைக்காக ஆபிரிக்கர்கள் சிங்கத்தை மிகவும் நேசிப்பார்கள். யார் ஒரு சிங்கத்தை வெல்கின்றானோ அவன் தோற்க்கடிக்கப்பட்ட சிங்கத்தின் துணிவு, பலம் என்பவற்றின் ஒரு பகுதியைத் தனதாக்கிக் கொள்கின்றான். யார் தோற்கின்றானோ அவன் சிங்கத்திற்கு இரையாவதுடன் இருந்த இடமே தெரியாது போய்விடுவான். ஆகவே சிங்கத்துடன் உறங்குவதென்பது இயலாத காரியம். ஏற்கனவே நான் ஆடுகளுடன் படுத்துக் கொள்ள முடிவு செய்து விட்டேன்.
புளோரிடா மாமி சென்ற பின்பு எனது வாழ்க்கை ஓர் புதிய திருப்பத்தைச் சந்தித்தது. அவர் போனதுடன் நேசமும் பரிவும் போய்விட்டது. அவர் வீட்டினில் செய்த வேலைகளெல்லாம் என் தலைமேற் தான் சுமத்தப்பட்டன. எனது வயதோ மூன்றுதான். ஆபிரிக்காவிற்கும் டென்மார்க்கிற்கும் நிறைய வித்தியாசங்களுண்டு. அங்கு பார்வையே வித்தியாசம்தான். இரண்டு, மூன்று வயது நிரம்பிய குழந்தைகள் கூடப் பலமான உடலமைப்பைக் கொண்டிருந்ததனால் அவர்கள் வேலை செய்யத் தகுதியானவர்களாகக் கொள்ளப்பட்டார்கள். பெரும்பாலான ஆபிரிக்கக் குழந்தைகளின் நிலை இதுதான். நிச்சயமாகக் கிராமப்புறக் குழந்தைகளின் நாளாந்தம் இதுதான்.

ஒரு பின்னேரம் பாட்டி என்னை உலுக்கினார். நான் எனது உடைகளை மூத்திரத்தால் நனைத்திருந்ந்தேன். ஒரு வெறி பிடித்த வேட்டையாடும் மிருகம் போல என்னை நோக்கிப் பாட்டி பாய்ந்தார். என் காலிலும் கையிலும் பிடித்துத் தூக்கித் தரையிலே வீசினார். "மழுக்" என்ற முறிவுச் சத்தம் எனக்குக் கேட்டது. தொடர்ந்து முழங்கையிலிருந்து கழுத்துவரை அதீதமான நோவு கிளம்பியது. எனது கையைத் தூக்க முயற்சித்தேன். ஆனால் கை மேலெழும்பாது கீழேயே தொங்கிற்று. வெண்நிறமான எலும்பொன்று தோலைக் கிழித்துக்கோண்டு வெளியே தெரிந்தது. அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டே நின்றேன். இரத்தம் வடிந்தோடத் தொடங்கியது; எனது இரத்தம்! உடனே எனது ஆடுகளின் ஞாபகம் தான் வந்தது. அவைகளை அறுக்கும்போது வழிந்தோடிய இரத்தம்! பயத்தினால் அலறத் தொடங்கினேன். எனது இறுதி நேரம் வந்துவிட்டதென நினைத்துக்கொண்டேன்.
ஆனால் பாட்டி எனக்கு மேலாகக் கத்தினாள். நான் வாயை மூடிக்கொள்ள வேண்டுமாம். பாட்டி திரும்பவும் எனது கை எலும்பைச் சரியாகப் பொருத்தினார். முறியும்போது வலித்தது போலவே இப்போதும் வலித்தது. ஆயினும் எனது வாயிலிருந்து சின்னச் சத்தமும் எழவில்லை. போய்ப் படுத்துக்கொள்ளக் கட்டளை பிறந்தது. அவர் போய்விட்டார். நான் சத்தமின்றி அழுதேன். அப்போதே மெளனமாக அழுவதற்கு நான் கற்றுக்கொண்டேன்.
தொடரும்
1 மறுமொழிகள்:
தேவையான தொடர்.நன்றி.
Post a Comment
<< முகப்பு