குழந்தைப் போராளி - 3


முதல் ஞாபகம்

எனது தந்தை ஜோண் மேற்கு உகண்டாவில் ஓர் கிராமத்தில் பிறந்தவர். அங்கு அவர் வளர்ந்து பள்ளி சென்று அதிகாரப் படிகளில் மெல்ல மெல்ல ஏறினார். தனது முதலாவது நிர்வாகப் பதவியை "கோப்பி" நிறுவனமொன்றில் பெற்றுக்கொண்டார். எனது தாயின் அறிமுகம் கிடைத்த பின்னே அவர் சட்டம் படிப்பதற்கான முடிவை எடுத்தார். பிராந்திய அளவில் எனது தந்தை ஓர் முக்கிய புள்ளி. அது தவிர பண்ணை ஒன்றினையும் நடத்தினார். பண்ணையை என் தாயார் நிர்வகித்தார்.


நான் பிறந்தவுடன் என் அம்மாவை என் தந்தை விவாகரத்துச் செய்து விட்டார். ஒருவேளை நான் ஆணாகப் பிறக்காதது காரணமாயிருக்கலாம். ஆயினும் இரண்டாவது தடவையாக எனது தாய் கருத்தரித்து எனது சகோதரன் ரிச்சர்ட்டைப் பெற்றார்.
எனது தாயார் நான் ஆறு மாதக் குழந்தையாக இருக்கும் போதே என்னையும் வீட்டினையும் விட்டு விலகுமாறு நிர்பந்திக்கப்பட்டார். எனது தாயார் திரும்பி வந்திருந்தால் அவர் ஒருவேளை தனது உயிரை இழந்திருப்பார். ஓர் ஆணுக்கும் பெண்ணுக்குமிடையிலான உறவில் பலம் பொருந்தியவரின் சட்டங்கள் தான் செல்லுபடியாகும். எனது குடும்பத்தில் என் தந்தை தனது அதிகாரத்தை வேறு யாருடனும் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை.

யார் யாரிற்கு என்னென்ன துன்பங்களையும் துயரங்களையும் தான் கொடுக்கின்றேன் என்பதை எனது தந்தை நன்றாக அறிந்துதானிருந்தார். தனது வாழ்க்கையைத்தான் அவர் முக்கியமாகக் கருதினாரே தவிர, மற்றவர்களுக்கு மேலாக நிற்க நினைத்த அவரால் வேறு மாதிரி நடந்து கொள்ள முடியவில்லை.

எனது தாய் என்னை விட்டுப் பிரிவதனால் ஓர் சராசரி குழ்ந்தையாக நான் வளர்வதற்கான சந்தர்ப்பத்தை என் அம்மா எனக்கு மறுக்கின்றார் என்று தெரிந்திருந்தும் -அவருக்குத் தெரிந்திருக்குமென நான் நினைக்கின்றேன்- என்னைப் பிரிவதைத் தவிர அம்மாவுக்கு வேறெந்த வழியும் இருக்கவில்லை. ஒரு மனுசியுடன் இல்லாது திருடி உண்ணும் மிருகமொன்றுடன் தான் வாழ்ந்ததாக நினைக்கும் என் தந்தையின் அதிகாரத்தின் கீழ் நான் வளர்ந்தேன். அவரைப் பொறுத்தவரை என்னை ஓர் சுமையாகக் கருதினாரென்றுதான் நான் நினைக்கின்றேன். இந்தச் சுமையிலிருந்து விடுபட அவர் என்னைத் தனது தாயார் வாழ்ந்த பண்ணைக்கு அனுப்பி வைத்தார். யாரும் எனக்கு அது என் தந்தையின் பண்ணையெனச் சொல்லவில்லை. எனது வயது கூடி வரும் போது தான் பெரிய வாழைத் தோட்டமும் நிறைய நிலங்களும் ஏராளமான கால்நடைகளும் அவருக்குச் சொந்தமானதென அறிந்துகொண்டேன்.

பாட்டி என்றால் அன்பான முதியவர் என்று எண்ணிக் கொண்டிருப்பவர்கள் என் பாட்டியைப் பார்த்திருக்க மாட்டார்கள். வயது சென்றவர்தான். ஆனால் அவர் அன்பாக என்றுமே இருந்ததில்லை. குள்ளமான உருவம், பருத்த தேகம், ஓர் சூனியக்காரியைப்போல தான் அவரது தோற்றம் இருந்தது. அவரது ஒரு கண் எப்போதுமே கண்ணீரில் மிதந்துகொண்டிருக்கும். வாய் கோணலாகவும் அவர் வாய் திறந்து ஏதாவது பேசினால் அவரின் வாய் அவரது கட்டுப்பாட்டினுள் இல்லாமலும் போய்விடும்.

நான் அவரை முத்தமிட வேண்டுமென்று யாரும் கட்டாயப்படுத்தாதவரை அவரது தோற்றம் பற்றி எனக்கு எவ்விதக் கரிசனமுமில்லை. அவரது பரிவற்ற கடுஞ் சொற்கள் தான் எனது இதயத்தைத் துளைத்தன. சிறு குழந்தையான என்னால் அவரிடமிருந்து என்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை. சுடு சொற்கள்! அவை எனக்கும் அவருக்குமிடையில் மீண்டும் மீண்டும் இரும்புச் சுவர்களாக நின்றன. எனக்கு என் பாட்டி மீதிருந்த வெறுப்பு இன்றும் என் மனதில் ஆழப் புதைந்து கிடக்கிறது. ஐந்து அறைகளைக் கொண்ட பண்ணை வீடு செங்கற்களாலும் தகரக் கூரையாலும் கட்டப்பட்டடிருந்தது. சமையலறை வழமை போல் பெரிய அடுப்புடன் வீட்டிற்கு வெளியே இருந்தது. நாங்கள் தரையில் அமர்ந்து தான் எங்கள் உணவை உண்போம். வீட்டில் மேசையோ கதிரையோ இருக்கவில்லை. இந்த ஐந்து அறைகளில் ஓர் அறையில் பாட்டியின் பெறுமதி வாய்ந்த பொருட்கள் இருக்கும். எனக்கு வாழைப்பழமென்றால் எவ்வளவு விருப்பமென்பது சொல்லி மாளாதது. வாழைப்பழச் சுவை என்றும் எனக்குத் திகட்டிப் போய்விடாது. வீட்டின் ஓர் ஜன்னல் பூசணிக்காய்கள் நிறைந்த பகுதியில் இருந்தது. நிலத்திலிருந்து தானே மேலெழுப்பியது போன்ற வட்டமான பூசணிக்காய்கள். ஆனால் பூசணிக்காய்களைச் சாப்பிடலாம் என்பது எனக்குத் தெரிந்திருக்கவில்லை. எனெனில் நான் பூசணிக்காயை ஒரு நாளும் சாப்பிட்டிருக்கவில்லை.

முழுப் பண்ணை வீட்டிலும் நான் தான் ஒரேயொரு குழந்தை. பக்கத்துப் பண்ணை வீட்டுக் குழந்தைகளை அரிதாகத்தான் பார்க்க முடிந்தது. நாங்கள் துற்ஸி இனத்தவர்கள். எனது தந்தை அந்த வட்டாரத்திலேயே மக்களால் அதிகமாக வெறுக்கப்பட்டவர். அதற்கான காரணமும் உண்டு. தனது அதிகாரம், படிப்பு என்பவற்றை உபயோகித்து பக்கத்து நிலச் சொந்தக்காரர்களின் நிலங்களையும் பெறுமதிவாய்ந்த உடமைகளையும் சிறிதளவு பணத்திற்கு விற்றுவிட நிர்பந்திப்பார். என்னை அவர்கள் "சின்ன ஜோண்" என அழைப்பார்கள். நிச்சயமாக அது நல்ல பெயரல்ல என்பது எனக்கு தெரியும்.

எங்கள் பண்ணையில் பருவ காலத்திற்கு மட்டும் வேலை செய்யும் தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டிருப்பார்கள். பருவகாலம் முடிந்ததும் அவர்கள் போய்விடுவார்கள். அவர்களுடன் பெரிதாக எந்த உறவையும் என்னால் வைத்துக் கொள்ளமுடியப்வில்லை. பல நல்ல இதயம் படைத்தவகர்கள் அவர்களினுள் இருந்தார்கள். இன்றளவும் அவர்களின் ஞாபகங்கள் என்னில் மகிழ்வைக் கிளர்த்துகின்றன. ஆனால் நான் பண்ணைத் தொழிலாளருடன் தொடர்பு கொள்வதையோ பேசுவதையோ என் பாட்டி விரும்பவில்லை.

வேறு குழந்தைகளுடனான தொடர்பற்ற நிலையில் மிருகங்கள் எனது விளையாட்டுத் தோழர்களாயினர். பாட்டியின் சட்ட திட்டங்களில் நான் வீட்டின் அருகாமையில் பாதுகாப்பான இடத்தில் இருக்க வேண்டுமென்பது முதன்மையானது. எனக்கும் அது நன்றாகவே இருந்தது. அவரிடமிருந்து சற்றுத் தொலைவில் என்னால் இப்போது இருக்க முடியும். பண்ணையின் மிருகங்களில் ஆடுகள் முதன்மையானவை. நானும் ஆடுகளை மிகவும் நேசித்தேன். எனது ரகசியங்கள் எல்லாவற்றையும் அவைகளுக்கும் சொல்லி வைப்பேன். எனது தனிமை என்னை அழுத்தும் போதெல்லாம் ஆடுகள் எனக்குத் துணையாயிருந்தன. அன்பு, பரிவு என்பவற்றின் முழு வடிவமாக ஆடுகள் எனக்கிருந்தன.

பாட்டியின் பண்ணையில் எனது முதலாவது வருடம் இப்படிச் சென்றது. துருதுருப்பான ஆடுகள், சுவையான வாழைப்பழம், அலைந்து திரிய பரந்த நிலப்பரப்பு! தங்கு தடையின்றி என்னால் ஓடித்திரிய முடிந்தது. ஒருவேளை இங்கு தான் எனது "கட்டுப்பாடற்ற" தன்மைக்கான அடிப்படை உருவாகியிருக்கலாம். இன்றுவரை அதிலிருந்து என்னால் முழுமையாக விடுபட முடியமலிருக்கின்றது.

இந்த இனிமையான நினைவுகளுக்கு எனது தந்தையின் சகோதரியான புளோரிடாவிற்கு நன்றி சொல்ல வேண்டுமென நினைக்கின்றேன். வயது முதிர்ந்த அவரது உருவம் எனது பாட்டிக்கு நேர் எதிரானது. அழகான முகமும் வாளிப்பான தோற்றமும் கொண்டவர் எனது மாமி. மிகவும் மென்மையான அவர், தனது புறத்தோற்றம் போலவே உள்ளேயும் அழகானவர். நல்லிதயம் கொண்ட அற்புதமான பெண்மணி. என்னைப் போலவே போக்கற்ற அவர் அங்கு விரும்பப்படாத மனுஷி. எனது பாட்டி எப்போதும் அவரை உரத்த தொனியில் ஏசுவதும் கோபமாகக் கத்துவதுமாயிருப்பார். எனது மாமியோ பாட்டியின் ஏச்சுப் பேச்சிற்கு எந்தவொரு எதிர்ப்பும் தெரிவிக்காது இருப்பார். எனது பாட்டியின் கடின இதயம், நேசமற்றதன்மை, மாமியை துன்புறுத்துவது எல்லாமே நான் அவரை வெறுக்கக் காரணங்களாயிருந்தன. நான் ஓர் ஆண் பிள்ளையாயிருந்தால் நன்றாகவிருக்குமென்று
நான் சிலவேளைகளில் நினைப்பதுண்டு.


பெண் குழந்தைகளுக்கு ஒரு வழிகாட்டி தேவை. அது பெரும்பாலும் தாயாகவிருக்கும். நான் யாரை முன்மாதிரியாக எடுத்துக்கொள்வது? பாட்டியை? அன்றேல் மென்மையான எந்த விதமான உரிமைகளுமற்ற புளோரிடா மாமி? புளோரிடா மாமி மாத்திரம் தன் உரிமைகளுக்காகப் போராடுபவளாய் இருந்தால்? தனது பரிதாப நிலையைப் பலம் பொருந்தியதாக மாற்ற முடிந்தால்? ஆனால் யாரிடம் அதிகாரமிருக்கின்றதோ அவர்களே மற்றவர்களைப் பற்றிய முடிவுகளை எடுக்கலாம். யார் மற்றயவர்கள் பற்றி முடிவெடுக்கின்றார்களோ அவர்களுக்கு எல்லாம் முதல் தரமானவைகளே கிடைக்கும். இதனை நான் மிகச் சிறு வயதிலேயே புரிந்து கொண்டேன்.

புளோரிடா தனது உரிமைகளை விட்டுக் கொடுத்துக் கொண்டிருப்பதை என்னால் பொறுத்துக் கொண்டிருக்க முடியவில்லை. ஏதாவது செய்தாகவேண்டும், சரியான சந்தர்ப்பம் வாய்க்கவேண்டும். பாட்டியின் கோபத்தைக் கிளறிவிடும் முக்கியமான இரண்டு விடயங்கள்; சேகரிக்கப்பட்டுள்ள உணவைத் திருடுவது மற்றது கட்டிலில் மூத்திரம் பெய்வது. இவை இரண்டிற்கும் நிச்சயமாகத் தண்டனையாக உதை கிடைக்கும். எனது கற்பனை உலகத்தில் பொய்யான குற்றச்சாட்டொன்றை உருவாக்கி அதைப் புளோரிடா மீது திணிக்கவேண்டும். மாமி அதற்கெதிராகத் தன்னை விட்டுக் கொடுக்காது பாட்டியுடன் சண்டையிட வேண்டும். பாட்டியையும் புளோரிடா செய்யாத குற்றத்திற்காகக் கோபப்பட வைக்கவேண்டும்.

காலைப் பொழுதில் தூக்கம் கலைந்து எழுந்தபோது நன்றாகப் பிந்தி விட்டது. வீட்டில் யாரும் இல்லை. பால் சேகரித்து வைக்கும் அறைக்குச் சென்று ஒரு பெரிய குவளையில் பாலை ஊற்றிப் பாட்டியின் படுக்கை அறைக்கு எடுத்து வந்தேன். கட்டிலின் மீது பாலைச் சரித்து ஊற்றி விட்டுப் பாட்டியின் கோணலான வாயை நினைத்துப் பார்த்தேன். பாட்டி கோபத்தில் அடித்த பின்னர்-நிச்சயமாக நல்ல உதை கிடைக்குமென்பதில் எனக்கு எந்தவித சந்தேகமுமில்லை- வாய் எப்படி இருக்குமென்று நினைத்துப் பார்த்துக்கொண்டேன். பாட்டி புளோரிடாவைக் குற்றம் சாட்ட வேண்டும்; அதுவும் நடக்குமென நினைத்துக்கொண்டேன். புளோரிடாவிற்கு அடி கிடைத்த பின்பு பாட்டியின் வாய் மேற்குப் பக்கம் திரும்பியிருக்கும் அதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லாமலிருந்தது.

திடீரெனெ இந்த மகிழ்வினூடே குற்ற உணர்வும் பயமும் என்னைப் பிடித்துக் கொண்டன. இப்போது பாட்டி என்னைக் கையும் களவுமாகப் பிடித்துக்கொண்டால் என்ன நடக்குமென்பதை நினைத்துப் பார்த்தேன். இந்த நினைவு வந்ததுமே பண்ணையின் புதருகளுக்குள் நான் பாதுகாப்பைத் தேடி ஓட்டமாக ஓடினேன். ஆடுகளையும் கன்றுக்குட்டிகளையும் யோசனையுடன் பார்த்துக்கொண்டிருந்தேன். சிலவேளை இவைகளுக்கு இந்தப் பிரச்சினைக்கான முடிவு தெரிந்திருக்கலாம்.

சிறுமியாக புளோரிடா மாமிக்குத் துணிவை ஏற்படுத்த செய்த இந்தச் சம்பவம் இன்று நினைத்துப்பார்க்கும்போது வினோதமாகப்படுகிறது. அதற்கும் காரணம் உண்டென நினைக்கின்றேன். என்மேல் யாரும் அன்பு காட்டவில்லை என்ற உணர்வும் என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியாததுமாய் இருக்கலாம். எனது மூலம், எனது உடல், எனது பால்நிலை, எனது அம்மாவுக்கு நடந்தது எல்லாமே எனக்குப் புரியாத புதிராக இருந்தது. எனது கேள்விகளுக்கு யாரும் பதில் சொல்லவில்லை. யாரும் எனக்கு எதையும் விளக்கிச் சொல்லவில்லை. ஒரு குடும்பமெனில் பலவிடயங்களில் பங்களிப்புக்கள், சேர்ந்து காரியங்களைச் செய்தலென்று இருக்குமல்லவா? யாரும் என்னைச் சேர்த்துக் கொண்டு எதுவும் செய்ததில்லை. கேள்வி கேட்டால் அடி, வேலை செய்யாவிட்டால் உதை. சில வேளைகளில் ஏன் என்னை அடிக்கிறார்கள் என்பது கூட எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

புளோரிடா மாமி துணிவுள்ளவளாக இருக்க வேண்டுமென்ற எனது விருப்பத்தை இன்று நினைத்துப் பார்க்கையில் ஒரு வகையில் நான் துணிவுள்ளவளாக இருக்க வேண்டுமென்பதன் அடிப்படையில் இருந்து அவ் விருப்பம் எனக்குள் எழுந்திருக்கலாம் என்று நினைக்கின்றேன். புளோரிடா மாமி என் மீது அன்பு கொண்டிருந்தார் என்பதில் எனக்கு எந்தவிதச் சந்தேகமுமில்லை. பாட்டியைவிட அவர் துணிவுள்ளவராக இருந் திருந்தால் நிச்சயமாக நானும் நன்றாக நடத்தப்பட்டிருப்பேன். கோபக்காரியான பாட்டிக்கும் அன்பான மாமிக்குமிடையிலான சண்டை நடக்காமலேயே போயிற்று. பாட்டியின் கட்டிலில் பால் ஊற்றியதை அவர் கவனிக்கவே இல்லை. ஆனால் பால் குறைந்தது தெரிந்து அதற்காக நான் தண்டனை பெற்றேன்.

மீளப் பார்க்கும்போது என் அறியமை நம்ப முடியததொன்று. எனது உடல் பற்றி ஒன்றுமே எனக்குத் தெரிந்திருக்கவில்லை. அதனால் அது பற்றிய கரிசனை ஏதுமில்லதிருந்தது. எங்கள் வீட்டில் கண்ணாடியுமில்லை. புகைப்படங்கள் எதுவுமில்லை. நானே பல விடயங்களை என்னளவில் அறிந்து கொள்ளவேண்டியிருந்தது. அதனால் இந்த விடயங்களில் பொதுவாக சிறுவர் சிறுமியருக்குரிய இரகசியங்களை அறிந்து கொள்ளும் ஆவல் எனக்கிருந்ததுடன் வெட்கம் என்பதையே என்னவென்று அறியாதிருந்தேன்.

எனது அறியாமை பல தடவைகளில் என்னைத் தர்மசங்கடமான நிலைக்குள்ளாக்கியுள்ளது. அதிலொன்று இந்தச் சம்பவம்: நான் பாட்டிக்குச் சமையலில் உதவ வேண்டும். இது எனக்கு எவ்வாறான ஒரு விடயத்தைப் புரியவைத்தது!

வெளியே சமைப்பதற்கு நிலா வெளிச்சம் போதுமாயிருக்கும். எனினும் சில இரவுகள் வெறும் கருமை சூழ்ந்ததாயிருக்கும். மேகமூட்டங்கள் நிலவை மறைத்திருக்கும். பாட்டி என்னைக் கூப்பிட்டு சமைப்பதற்கு உதவியாக விளக்கைப் பிடிக்கச் சொன்னார். ஓர் துணி விரித்து அதன்மேல் அவர் உட்கார்ந்திருந்தார். நான் துணியின் ஓரத்தில் உட்கார்ந்திருந்தேன். எண்ணை கொதிக்கத் தொடங்கியவுடன் பாட்டி வெங்காயத்தை வெட்டத் தொடங்கினார். இதனால் அவரது இரண்டாவது கண்ணிலும் கண்ணீர் சுரந்தது. இது எனக்கு மிக வேடிக்கையாகப்பட சில நிமிடங்களில் சிரிப்புப் பொங்கி வந்தது. குடும்பத்தின் தலைமைப் பொறுப்பு மாமி புளோரிடாவிடம் இல்லாது பாட்டியிடமிருப்பது பற்றி எனக்கு மிகவும் கோபம். அதனை நான் மறக்கவில்லை, அவரது கண்ணீர் சாப்பாட்டில் விழுந்தால்? அதைச்சாப்பிடும் எங்களுக்கு நோய் வராதென்பது என்ன நிச்சயம்?

கையில் வைத்திருந்த தக்காளி தவறி விழுந்ததால் விளக்கைத் திருப்பி வெளிச்சத்தைக் காட்டுமாறு பாட்டி கேட்டுக்கொண்டார். அவரின் கால்களுக்கிடையில் தக்காளி உருண்டு போனதால் நான் தலையைக் குனிந்து தேடத் தொடங்கினேன். தேடி முடிந்து தலை தூக்க முயலும்போது கறுத்த மயிர்களுடன் கூடிய ஒரு சிறு பிராணி பாட்டியின் கால்களுக்கிடையில் புகுந்திருப்பருப்பதைக் கண்டு பயத்தில் அலறினேன். ஒன்றும் விளங்காத பாட்டி "என்ன விடயம்?" எனக் கேட்க "அங்கே ஓர் பிராணி" என நான் அலற, "ஏன் பார்த்துக்கொண்டிருக்கிறாய்? நெருப்பால் பொசுக்கிவிடு" என அவர் சொன்னார்.

உண்மையிலேயே ஓர் எலியைப் பார்த்துத்தான் நான் அலறினேன் என்பதுவே பாட்டியின் எண்ணம். அவசர அவசரமாக நெருப்புக் கொள்ளி ஒன்றை எடுத்து அந்தப் பிராணியருகில் கொண்டு செல்லப் பாட்டி "சுடாதே சுடாதே" என வலியில் அலறினார். நானோ இருண்ட மூலைக்குள் இருக்கும் அந்தப் பிராணியை நெருப்பால் சுட மீண்டும் முயற்சிக்கக் கன்னத்தில் ஓர் பலமான அறை விழுந்தது. நான் சுடும் வேலையைக் கைவிட்டதுடன் எந்தவித விளக்கமுமின்றி அங்கிருந்து துரத்தப்பட்டேன். நல்ல கூத்துத் தான்!

புளோரிடா மாமியும் இவ்வாறு "கருமயிருடன் கூடிய சிறு பிராணியை" எங்காவது ஒளித்து வைத்துள்ளாரா? என அறிய ஆவலுடன் அவரிடம் சென்றேன். மிகப் பலமாக மறுத்த அவர் எனக்கு எந்தவித விளக்கத்தையும் தரவில்லை. பெண்ணின் உடல் பற்றிய ரகசியம் மேலும் பல ஆண்டு காலங்கள் தொடர்ந்து புரியாத புதிராகவே எனக்கிருந்தது.

சில மாதங்கள் கழிந்து புளோரிடா மாமி சுகவீனமுற்று கட்டிலிலேயே காலத்தைக் கழிக்க நேர்ந்தது. உண்பதற்கோ குடிப்பதற்கோ ஏதாவது கேட்கும் ஒவ்வொரு முறையும் பெரிதாகச் சத்தம் போடுவார். நான் மிகவும் மன வேதனையடைந்தேன்.

ஓர் மாலைப்பொழுதில் கட்டிலில் இருந்து கொண்டு புளோரிடா மாமியின் கையைப் பிடித்து என்னுடன் வைத்துக் கொண்டேன். அவரிடம் எந்த மாற்றமும் தெரியவில்லை. பாட்டியிடம் சென்று கூறிய போது அவர் பாத்திரஙளைக் கழுவிக் கொண்டிருந்தாள். இது பற்றி எவ்விதத்திலும் அலட்டிக் கொள்ளவேயில்லை. தொடர்ந்து பாத்திரம் கழுவுவதிலேயே பாட்டி கவனமாக இருந்தார். இறுதியில் நான் அழத் தொடங்கினேன். அப்போதாவது பாட்டி ஏதாவது செய்வார் என்பது என் எண்ணம். ஆயினும் கிடைத்த பதில் "வாயை மூடு" என்பதுதான். பாத்திரம் கழுவும் வேலை முடிந்ததும்தான் பாட்டி வீட்டினுள் சென்றார். நானும் அவருக்குப் பின்னால் சென்றேன்.

அடுத்ததாக என் நினைவில் வருவது எனது தகப்பன் ஓர் வெள்ளைக் காரில் வாகனத் தொடரணி பின்பற்ற பாட்டியின் பண்ணைக்கு வந்து சேர்ந்தது. வீட்டினுள் அப்பா அழுதுகொண்டிருப்பதைப் பார்த்தேன். அவரைச் சூழ்ந்திருந்த அவரது சகாக்கள் செய்வதறியாதது நின்றிருந்தனர். பின்பு ஒருவர் பின் ஒருவராகப் புளோரிடாவின் அறைக்குச் சென்று திரும்பினர். அப்பா திரும்பி வரும் போது தலை தாழ்ந்து உடல் சோர்ந்து சத்தமின்றி அழுதபடி வந்ததால் முன்பிலும் பார்க்க அப்பாவை நெருங்க முடியாத ஓர் சங்கட நிலை. யாருமே என்னைக் கவனிக்கவில்லை. என்ன நடக்கின்றது என்பதை விளக்கவுமில்லை. நானும் வழமை போல ஆத்திரமும் கையாலாகாத்தனமுமான கலவையான உணர்வுடன் நின்று கொண்டிருந்தேன். அது மட்டுமில்லாது பாட்டியும் அழத் தொடங்கினார். பாட்டியின் அழுகை என்னை ஒரு தரம் உலுக்கி எடுத்தது. ஒருவேளை இது ஒரு அருமையான காட்சிப் பிழையோ? அவரின் கண்ணீர்க் கண்ணைப் பார்த்து அழுவதாக நினைக்கின்றேனோ? பாட்டியா இன்னொருவருக்காக அழுவது? பாட்டி அழுவது என்பது எனது கற்பனைக்கே எட்டாத நடப்பதற்கு எந்தவித சாத்தியமுமற்ற ஒரு விடயம்.

எல்லோரினதும் கண்ணீர் புளோரிடாவைத் திரும்ப சுய நிலைக்குக் கொண்டு வந்தது. உடனே வீட்டின் தொனி மாறி ஒலிக்கத் தொடங்கியது. அழுது கொண்டிருந்தவர்கள் மகிழ்வாக மாறியிருந்தனர். எல்லோரும் குடித்துக் கொண்டும் சிரித்துக் கொண்டும் பாடிக்கொண்டும் இருந்தனர். எனக்கோ ஒன்றும் புரியாத நிலையாயினும் நிலைமை பிடித்துத்தானிருந்தது. எனது தந்தைக்கும் அவரது நண்பர்களுக்கும் ஒருக்கால் பைத்தியம் பிடித்திருக்குமோ? வேலைக்காரனுக்கு "இரு ஆடுகளை வெட்டு" என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது. ஓ! எனது ஆடுகள்... அவ ற்றின் பக்கத்திலேயே நான் நின்றேன். நான் நேசித்த ஆடுகள் கழுத்துக்கள் அறுபட்டு இரத்தம் ஓடிக் கிடந்தன.. அவைகளுக்கு நான் பெயர்கள் கூட வைத்திருந்தேன். இப்போது அழுவது என்னுடைய முறை. நான் வீட்டினுள் ஓடிச் சென்று போர்வையினுள் என்னைப் புதைத்துக்கொண்டேன். இந்தப் பைத்தியகாரக் கும்பலிடமிருந்து தப்பிக்க அதுதான் எனக்கு ஒரே வழி.

அடுத்த நாள் காலையில் புளோரிடா மாமி முன்னறையில் இருந்தார். இன்னும் அவர் சோர்வாகவே காணப்பட்டார்.அவரைச் சிறிது உற்சாகப்படுத்த நானும் அவர் பக்கத்தில் போயிருந்து "நேற்று எல்லோரும் அழுதது உங்களுக்குக் கேட்டதா?" எனக் கேட்டேன், "நான் மிக நன்றாகத் தூங்கியிருக்கவேண்டும் அதனால் ஒன்றுமே எனக்குக் கேட்கவில்லை" எனச் சொன்னார். அவரை நிமிர்ந்து பார்த்தபோது அவரின் கண்களில் கண்ணீர். எனது தந்தை அவரை நகரத்திற்கு அழைத்துச் செல்ல விரும்புவதாகவும் என்னை விட்டுப் பிரிய வேண்டியிருப்பது தனக்கு மன வருத்தமாயிருக்கின்றதென்றும் சொன்னார். இந்தச் செய்தி என்னைப் பயத்திற்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியது. நான் கெஞ்சியும் தயவாகவும் என்னுடன் இருக்கும்படி மாமியைக் கேட்டேன். எனது வேண்டுகோள் அவரை சங்கடப்படுத்தியிருக்க வேண்டும். கொஞ்ச நாட்களுக்குத்தானென அவரென்னைச் சமாதானப் படுத்தினார்.கொஞ்ச நாட்கள் என்பதன் அர்த்தமென்ன? சில நாட்கள்?ஒரு மாதம்? ஒரு வருடம்? சிறுமியான எனக்கு என்னால் விளங்கமுடியாத ஓர் கணக்கு. வழமை போல என் உணர்வுகள் என்னை உலுக்கி எடுக்க ஆடுகளைக் கன்றுகளைத் தேடி ஓடினேன். எனது பயத்தை வெல்ல ஆடு மாடுகளுக்காக நானே இட்டுக்கட்டிய பாட்டைப் பாடிக்கொண்டிருக்க மேய்ச்சல் நிலத்தில் என் கண்ணீர் துளிகள் ஒன்றின்பின் ஒன்றாக உதிர்ந்தன.

நான் வீடு திரும்பிய போது புளோரிடா மாமியுடன் அவர்கள் சென்றுவிட்டார்கள். அதன் பின்பு நான் அவரைக் காணவேயில்லை.

தொடரும்....

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு