குழந்தைப் போராளி - 6


ஏமாற்றமாகிய நம்பிக்கைகள்

உண்மையிலேயே வீடு கட்டப்பட்டது. பாட்டியின் வீட்டிலிருந்து இரண்டு கிலோ மீற்றர்கள் தூரத்தில் பெரிய வீடு. பல அறைகள், சமயலறை, அத்துடன் ஆடு மாடுகளும் எங்களுடன் வந்தன. புதிய பண்ணையின் சுற்றாடலும் பழையதைப்போலவே இருந்ததால் பெரிய மாற்றமொன்றும் இல்லாதிருந்தது.

புதிய வீட்டில் வாழ்க்கை வேறு மாதிரி இருந்தது. பாட்டி வாழைத்தோட்டத்தை முன்பு போலவே பார்த்துக் கொண் டிருந்தாலும் அம்மா அது தொடர்பாகப் பாட்டிக்கு ஏராளமான நிர்வாகக் கட்டளைகளைப் பிறப்பிப்பார். இது ஒரு முக்கியமான மாற்றம். அப்பா எங்களுடன் இருக்கவில்லை. தனது நகரத்து வீட்டிற்குப் போய்விட்டார். இந்த வீட்டில் நான், புதிய அம்மா, புதிய குழந்தை மூவரும்தான். அம்மா என்மீது அன்பும் விருப்பமும் வைத்திருந்தார் என்றே நினக்கின்றேன். மெல்ல மெல்ல நானும் மகிழ்ச்சியை உணரத் தொடங்கினேன். அத்துடன் மெதுவாக எனது தன்நம்பிக்கையும் வளரத் தொடங்கி அம்மாவிற்குப் பாட்டி வீட்டில் நடந்தவைகளையெல்லாம் சொல்லத் துணிந்தேன். எவ்வளவு கொடுமைகளை நான் தாங்க வேண்டியிருந்ததெனக் கூறி அம்மாவின் மனதில் இடம் பிடிக்க முயன்றேன்.

எனக்கு ஐந்து வயதிருக்குமென நினைக்கிறேன். அம்மா மீண்டும் கருத்தரித்தார். எனக்கு இது பற்றி ஒன்றுமே தெரியவில்லை. யாரும் இது பற்றி எனக்கு எதுவும் கூறவில்லை. எங்கு எப்படி அம்மாவின் இரண்டாவது குழந்தை - பமிலா என்ற பெண்குழந்தை- பிறக்கப்போகிறது என்பது எனக்குப் புரியாத புதிர். ஆரம்பத்தில் மகிழ்வாகவே இருந்தது. இன்னுமொரு சிறிய குழந்தையுடன் நான் இருக்கலாம், இன்னும் சிறிது காலத்தில் அம்மா இல்லாத வேளைகளில் நான் பமிலாவைக் கவனித்துக்கொள்ளலாம் என்றெல்லாம் நினைக்க உற்சாகமாகயிருந்தது.

ஒரு நாள் அம்மா வெளியே போக வேண்டியிருந்தது. எங்கு என்பது எனக்குத் தெரியாது. என்னிடம் தங்கையைப் பார்த்துக்கொள்ளவும் அவளை அழவிட வேண்டாமென்றும் சொல்லி விட்டுப்போனார். அழவிடவேண்டாம் என்றால் என்ன என்றே எனக்கு விளங்கவில்லை. எல்லாம் நன்றாகவே நடந்தது. முதலில் இருவரும் விளையாடினோம். பின்பு பமிலா நித்திரையாகிப் போனாள். சிறிது நேரத்தில் எழும்பிய பமிலா அழத் தொடங்கினாள். நான் பால் புகட்ட முயற்சித்தேன், என்னாலான எல்லாவற்றையும் செய்து பார்த்துவிட்டேன். பமிலா அழுகையை விட்டபாடில்லை. அம்மா திரும்பி வரும்வரை பமிலா அழுது கொண்டேயிருந்தாள். வீட்டிற்கு வந்த அம்மா குழந்தைக்குப் பால் கொடுக்கவில்லை என என்னைக் குற்றம் சாட்டினார். என்னை அது வெகுவாகப் பாதித்ததாயினும் - ஆத்திரத்தில் அவரின் முகம் கிட்டத்தட்ட பாட்டியின் முகம் போல் மாறியிருக்கவே - எனது நியாயத்தைச் சொல்லத் துணிவு வரவில்லை. முதலில் பமிலா அம்மாவின் முலையில் பால் குடித்துத் தூங்கிப்போனாள். பின்பு அம்மா ஒரு கடி நாயாக உருமாறி என்னைத் தாக்கத் தொடங்கினார். எனது காது மடல்கள், உதடுகளைப் பிடித்துத் திருகினார். பின் என்னைத் தூக்கித் தரையில் வீசியெறிந்தார். எனது வாயில் இரத்தம் கரித்தது. ஏன் அம்மாவிற்க்கு என் மேல் இவ்வளவு கோபமென்று எனக்குப் புரியவேயில்லை. ஆனால் பாட்டியிடம் நான் ஏற்கனவே கற்றுக்கொண்டபடி எதிர்ப்பெதுவும் தெரிவிக்காது அசையாது தரையில் கிடந்தேன்.

எனது குழந்தைத்தனமான பார்வையில் எனது சிறிய தங்கையே குற்றம் செய்தவள். அவள் அழாமாலிருந்திருந்தால் எனக்கு இந்தத் தண்டனை கிடைத்திருக்காது. அதன் பின்பு நான் எனது சகோதரியை வெறுக்கத்தொடங்கினேன். ஒவ்வொரு முறையும் அவள் அழும்போது அவளது காதுகளையும் உதடுகளையும் இறுகத் திருகவேண்டும் போலிருந்தது. ஒவ்வொரு முறையும் அவள் அழும்போதும் அவளது அழுகைக்கு எனக்குத் தண்டனை கிடைக்குமென அஞ்சினேன்.

தாயன்பு என்றுமே வற்றாது என நான் நம்பியது பிழை போலும். சில நாட்களின் பின்பு அப்பா தனது நகரத்து வீட்டிலிருந்து வந்திருந்தார். சாப்பாட்டு மேசையில், "இவள் ஒவ்வொரு நாளும் கட்டிலை நனைக்கின்றாள், கட்டில் விரிப்புக்களை மாற்றுவதே எனது முழுநேர வேலை" என அப்பாவின் மனைவி கூறினார். இது உண்மையல்ல ஆனாலும் நான் ஒன்றும் சொல்லாதிருந்தேன். நான்தானே எனது கட்டில் விரிப்புகளை மாற்றுகிறேன்... அப்பாவின் கண்களிலுள்ள கோபம் என்னை அமைதி காக்கச் செய்தது.

இரவு உணவிற்குப் பின், நான் சோபாவில் படுக்கவேண்டுமென்றும், படுக்கையை நனைத்தால் தானே நாளைக்கு என்னை உதைக்கப் போவதாகவும் அப்பா கூறினார். அந்த இரவு நான் மிகப் பரபரப்பாக இருந்தேன். படுக்கையில் கிடந்துகொண்டே, நித்திரை கொள்ளக்கூடாதெனத் தீர்மானித்தேன். ஆயினும் என்னால் நித்திரையை வெல்ல முடியவில்லை. அடுத்த நாள் காலை எழுந்தவுடன் சோபாவைத் தொட்டுப் பார்த்தேன். ஈரமாகயிருந்தது. எனக்கு வந்த அழுகையை அடக்கிக் கொண்டு சூரிய உதயத்தைப் பார்க்கக் கிளம்பினேன். அப்பா வந்து தனது நேற்றைய உறுதிமொழியை நிறைவேற்றும்வரை நான் அங்கேயே இருந்தேன். அவர் என்னை உதைத்த பின்பு நாள் முழுதும் எனக்குச் சாப்பாடு கிடைக்கவில்லை. இரவு தான் மீண்டும் சாப்பிட்டேன்.

எனது அம்மாவிற்குக் கோபம் தலைக்கேறினால் சில நாட்கள் தொடர்ந்து என்னைப் பட்டினி போட்டு விடுவார். ஒரு முறை இரவு உணவின்றி நான் படுக்கைக்குச் செல்ல நேரிட்டது. எனது வயிறு பசியால் இரைச்சலிட்டுக் கொண்டிருந்தபடியால் தூங்கமுடியாமல் போயிற்று. இரவு இரண்டு மணியளவில் என்னால் பசியைப் பொறுக்க முடியாமல் போயிற்று. நான் எழுந்து சென்று ஏதாவது உணவு தேடியே ஆகவேண்டிய நிலை. என்னைக் கரும் இருள் சூழ்ந்திருந்தது. இருளிலிருக்கும் கெட்ட ஆவிகளை எழுப்பிவிடாதிருக்க விரல்களால் என் கண்களைக் கிள்ளிவிட்டுக்கொண்டே மெதுவாக நடந்து சாப்பாட்டறைக்குச் சென்றேன். இங்குதான் இரவுணவின் மீதிகளை வைத்திதிருப்பார்கள். எனது விரல்கள் பாத்திரமொன்றைத் தொட்டதும் வாயினுள் உணவைத் திணிக்கத் தொடங்கினேன். காதுகளை எப்போதும் கூர்மையாகவே வைத்திருந்தேன். என்னை யாரும் கண்டு கொள்வதை நான் தவிர்த்தாக வேண்டும். சத்தமின்றி எனது படுக்கைக்குத் திரும்பினேன். இனிச் சிறிது நேரம் நன்றாக நித்திரை கொள்ளலாமெனெச் சிரித்துக்கொண்டே நினைத்தேன்.

அடுத்த நாள் காலையில் சாப்பாட்டறைக்குப் போவதை நான் தவிர்த்துக்கொண்டேன். அப்படியாவது இரவு நான் சாப்பிட்டதை மறைத்து விடலாமென நினைத்தேன். ஆனாலும் பாத்திரத்தினுள் நான் எடுத்த உணவு குறைந்துதானே இருக்கும்? எப்படியும் களவு தெரிந்துவிடப் போகிறதென நினைத்துக் கொண்டு களவு பிடிபடும் வரை காத்துக் கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் என்னைத் தயார்படுத்திக் கொண்டு நான் உள்ளே சென்ற போது அம்மா என்மேல் பாயப்போகிறார் என்ற எதிர்பார்ப்புடனேயே சென்றேன். எதுவுமே நடக்கவில்லை! நான் வரும் சத்தம் கேட்டுக் கொஞ்சம் பால் சூடாக்கித் தரும்படி அம்மா கேட்டார். இராப் பட்டினிக்குப் பின் காலை உணவு கேட்க எனக்குத் தைரியம் வரவில்லை. எனவே பாலை வெளியே கொண்டுவந்து காய்ச்சி எனது பாத்திரத்திலும் கொஞ்சம் ஊற்றிக் கொள்வதென முடிவெடுத்தேன். பிடிபடாமல் இருக்கவேண்டுமென்ற பயத்தில் இதை மிக விரைவாகச் செய்ய வேண்டியிருந்தது. இந்தப் பரபரப்பில் பாத்திரத்தில் சுடுபாலை ஊற்றுவதற்குப் பதிலாக அதை என் காலில் ஊற்றிக்கொண்டேன். பாத்திரம் கவிழ்ந்து நிலத்தில் விழுந்தது. நானோ எரிவில் கத்திக் கொண்டிருந்தேன்.

அம்மா கதவடியில் வந்து பார்த்தார். பார்வை என்னமோ சாதாரணமாகத்தானிருந்தது. 'உனது பெரிய வயிறு ஒருநாளில்லை ஒருநாள் உன்னை கடுமையான சிக்கலில் கொண்டு போய் விடப்போகிறது' எனச் சொல்லிக் கொண்டே சிந்திப்போன பாலிற்காக எதுவுமே சொல்லாது வீட்டினுள் சென்றார். காலில் கொப்புளம் வந்து தோல் உரிந்து விடாதிருக்க மரத்திலிருந்து இரு இலைகளைப் பறித்து எனது காலில் வைத்து எனது சட்டையில் கிழித்தெடுத்த துணியினால் கட்டிக் கொண்டேன். அழுதுகொண்டே இதைச் செய்து முடித்த நான் என்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு மரத்தின் கீழ் ஆடு மாடுகளுடன் அமர்ந்துகொண்டேன்.

எனது காயமும் வேதனையும் அம்மாவை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை. வேலை செய்வதற்குத் தகுதியானவளாகவே அவர் என்னைப் பார்த்தார். மூன்று நாட்களின் பின்பு அம்மா என்னை மேய்ச்சல் நிலத்தின் தொங்கலுக்குச் சென்று மாட்டுக்கன்றுகளைப் பார்த்து வரும்படி சொன்னார். மாட்டுக் கன்றுகளைத் தேடிப் புறப்பட்ட நான், எனது காலில் கட்டியிருந்த துணிக்கட்டின் மேல் வெள்ளை வெள்ளையாக எதோ தொங்குவதைப் பார்தேன். முதலில் துணியின் நூல்கள் தான் தொங்குவதாக நினத்த நான் அவற்றைத் தொடும் போது அவை புழுக்கள் என்பதைக் கண்டு கொண்டேன். பெரிதாக அலறிக்கொண்டே வீட்டை நோக்கி ஓடினேன். எனது கால் அழுகிப் போய்விட்டதென்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இருக்கவில்லை. அம்மா புண்ணிலிருந்து புழுக்களை அகற்ற உதவினார். புண் மீது பஞ்சு வைத்துக் கட்டி விட்டார். ஆனாலும் எனது பயம் என்னை விட்டுப் போகவே இல்லை. காலை இழந்து விடுவேனென்ற பயத்தில் அடிக்கடி என் காலைப் பார்த்துக்கொண்டே இருப்பேன். நல்ல வேளையாகக் கால் சீக்கிரமாகவே குணமாகியது, எனது மனப்பாரமும் என்னைவிட்டு நீங்கியது.

என்னைத் தண்டிப்பதற்காகவே அம்மா ஆடுகளை மேய்க்கும்படி கட்டளையிடும்போது அவளென்னை எவ்வளவு மகிழ்விக்கின்றாள் என்பதை அவள் அறியவேயில்லை. காலை தொடங்கி மாலை வரை என் பிரியமான ஆடுகளைப் மேய்ப்பது, அப்போது அடிகள், உதைகள், ஏச்சுக்களிலிருந்து விடுதலை எல்லாமே எனக்கான மோட்சத்தின் பரிசாகவே நினைத்துக் கொள்வேன். ஆடுகள் என் சொற்படி கேட்பதுடன் எனக்குப் பெரிதாக எந்தப் பிரச்சனையும் தருவதில்லை. ஆயினும் முகத்தைச் சுருக்கிக்கொண்டு ஆடுகளைப் மேய்ப்பது ஒரு பெரிய தண்டனை போலவே நடிப்பேன். மனதிலோ மகிழ்ச்சி கரைபுரண்டோடும். ஆனாலும் சில வேளைகளில் தனிமை என்னை வாட்டும். ஆடுகளால் கதைக்க முடியாதல்லவா! அத்துடன் மற்றக் குழந்தைகள் போலவே எனக்கும் கலகலப்பாக இருக்கவேண்டுமென்ற உள்ளார்ந்த ஆசை இருக்கத்தான் செய்தது.

ஒருநாள் காலை, அம்மா காலை உணவாகப் பாலைக் கொடுத்து, விரைவாகப் பாலைக் குடித்துவிட்டு ஆடுகளை மேய்ச்சலுக்கு இட்டுச் செல்லும்படி சொன்னார். பின்பு அவர் வெளியே போய்விட்டார். அவரது காலடிச் சத்தம் மறைந்த உடனே நான் ஓர் துண்டு இறைச்சியை என் வாயினுள் திணித்துக்கொண்டேன். தொண்டையில் சிக்கிக் கொண்ட இறைச்சியை ஒரு கோப்பைத் தண்ணீரின் உதவியுடன் விழுங்கியபடி எனது மூச்சைச் சரிப்படுத்த ஒரு நிமிடம் உட்கார வேண்டியிருந்தது. ஆடுகளும் நானும் பச்சைப்பசேலெனப் புற்கள் அடர்ந்து வளர்ந்திருந்த ஓரிடத்திற்கு வந்து சேர்ந்தோம். ஆடுகளை அங்கேயே மேயவிட்டு நான் காளான் சேகரிக்கச் சென்றேன்.காளான்கள் அவ்வளவாகக் கண்ணில் படவில்லை. திடீரென ஆட்டுக் குட்டியொன்று கத்தும் சத்தத்தை நான் அவதானித்தேன். அப்போது நான்கு குட்டிகள் ஒரு புதருக்குள்ளிருந்து வெளியே வந்தன. கண்ணில் கண்ணீருடன் கவனித்தேன். அவைகளும் என்னைப் போலவே மறிக் குட்டிகள். மந்தையுடன் அவைகளைச் சேர்த்துச் சாய்துக்கொண்டு போகும்போது எனக்கு மிகவும் மகிழ்வாயிருந்தது. இவைகள் எனது ஆட்டுக்குட்டிகள். நான் தான் இவைகளைக் கண்டு பிடித்தேன். இப்போதுதான் எனக்கு மட்டுமே சொந்தமெனச் சொல்லிக்கொள்ள ஏதோ கிடத்துள்ளது. எனது ஆட்டுக்குட்டிகள்!

மாலையில் மற்றவர்களுக்கும் இது பற்றிச் சொல்ல ஆவலுடன் காத்திருந்தேன். அவர்களும் உண்மையாகவே மகிழ்வார்கள், என்னைப் பெருமைப்படுத்துவார்கள். ஆனால் ஒருமுறை கூட அவர்கள் சிரிக்கவேயில்லை. அம்மா தான் நாளக் காலையில் புதிய ஆட்டுக்குட்டிகளை ஒருமுறை பார்க்கவேண்டுமெனச் சொன்னார். வேறொருவரும் ஒன்றும் சொல்லாதபடியால் ஆட்டுக்குட்டிகள் எனக்குச் சொந்தமா? அல்லது முழுக் குடும்பத்திற்குமா? எனக் கணக்குப் பார்க்கத் தொடங்கினேன். சிலவாரங்கள் கழித்து அப்பா வீட்டிற்கு வந்தார் அவரை வரவேற்கக் கூட எனக்கு நேரமிருக்கவில்லை. அவரின் கையைப்பற்றி ஆட்டுக் குட்டிகளிடம் அவரை அழைத்துச் சென்றேன்.

தொடரும்

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு