குழந்தைப் போராளி - 9


புதிய கவலையும் புதிய நம்பிக்கையும்
அப்பா தனது மனைவியின் தாய் ஜேனிற்குப் பண்ணையில் ஒரு வீட்டை ஒதுக்கியிருந்தார். ஜேன் தனது மகள்களுடனும், ஒரு மகனுடனும் சில பசுக்களுடனும் அங்கு குடியேறினார். பெண் பிள்ளைகளை நான் சின்னம்மா என்றும் ஆண்பிள்ளையை மாமா எ ன்றும் அழைக்கவேண்டும். அவர்களோ என்னையொத்த வயதினராகத்தான் இருந்தனர். அம்மாவின் சகோதரிகள் அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வருவார்கள். அவர்களுடன் அம்மா நன்றாகவே கதைப்பார். ஆனால் மிரட்டல் பார்வை பார்ப்பதைத் தவிர அம்மா வேறெதுவும் என்னுடன் பேசுவதில்லை. அது என்னை மிகவும் வருத்தியது. வெறுக்கப்பட்ட, வேண்டப்படாத ஒரு தொற்றுநோய் போல நான் ஒதுக்கப்பட்டேன்.

இந்த உணர்வே வெறுப்பைத் திருப்பிக் கொடுக்கும் தன்மையை என்னுள் தூண்டிவிட்டது. நான் எப்போதும் அன்பையே செலுத்தும் சிறுமியாக இருந்த போதிலும் எனது குடும்பம் எனக்கு எந்தவிதத்திலும் நேசத்தைத் திருப்பி அளிக்கவில்லை. இவ்வுணர்வு என்னுள் அலை மோதிக்கொண்டேயிருந்தது. ஏதாவதொரு வடிகால் கிடைக்காவிடில் நான் நிலை தடுமாறவேண்டிய நிலை உருவாகிக்கொண்டிருந்தது. என் வாழ்வு நேசத்திற்காகவும் அரவணைப்புக்காகவும் தவிக்கும் ஒரு பரிதாப வாழ்நிலையாக இருந்தது. எனது தாகத்தினை எவ்வாறு தணிப்பதென்று தெரியாது நான் நிலைதடுமாறினேன். ஒரு சுவரில் முதுகு பதியக் கைகால்களை என் விதி கட்டிவைத்திருந்தது. ஒரு பக்கத்தில் அம்மாவும் மற்றைய பக்கத்தில் நானுமாக இழுபறிப்பட்டுக்கொண்டே என் ஆன்மாவைக் காப்பாற்றிக் கொள்ளவும் பலப்படுத்தவும் நான் முயன்றுகொண்டிருந்தேன். என்றோ ஒரு நாள் என் விலங்குகள் தெறித்து விழத்தான் போகின்றன. இங்கிருந்து ஒடிவிட வேண்டும். இம்முயற்சியில் என் வாழ்வே பறிபோனாலும் நான் ஒடிவிட வேண்டும்.

ஒரு பிற்பகல் நேரம் ஜேன் வீட்டிற்கு வந்து அம்மாவிடம் புலம்பிக் கொண்டிருந்தார். மாட்டுச் சாணங்களைச் சேகரிக்க அவருக்கு உதவ யாருமில்லை என்பதும் தனது குழந்தைகள் இந்த வேலையைச் செய்தால் அவர்கள் பாடசாலைக்குப் பிந்திப்போக நேரிடும் என்பதும் அவர் கவலையாய் இருந்தது. அம்மா நாளைக் காலையில் என்னை அங்கு அனுப்புவதாகச் சொன்னார். இவ்வாறு இந்த வேலையும் தொடங்கியது. இந்த வேலையைப் பல வாரங்களாக நான் தொடர்ந்து செய்தபோது தான் ஒன்றை கவனிக்கத் தொடங்கினேன். என் கால்கள் உருமாறத் தொடங்கின. பின்னேரங்களில் களைப்பின் காரணமாக நான் கால்களைக் கழுவாமல் விட்டுவிடுவதுண்டு. இப்போது கழுவும் போது ஒட்டி உலர்ந்த சாணம் கால்களில் தோலையும் உரித்துக்கொண்டு வந்தது. கல்லால் தேய்த்துக் கால்களைக் கழுவினால் கால்களில் கறுப்பாகப் புள்ளிகள் தோன்றின. அத்துடன் இரத்தமும் வடியத் தொடங்கியது. இப்போது ஜேனின் பிள்ளைகளுக்காகவும் நான் அடிமை வேலை செய்தாக வேண்டியுள்ளது. நான் அவர்களையும் தீவிரமாக வெறுக்கத் தொடங்கினேன். ஒருநாள் அம்மா தனது அம்மாவிற்கு ஒரு கூடை வாழைப்பழங்களைக் கொண்டுசென்று கொடுக்கும்படி எனக்குக் கட்டளையிட்டார். வாழைப்பழக் கூடையை வாங்கிய ஜேனின் பெண்கள் அதனைப் பார்துவிட்டு நான் சில வாழைப்பழங்களைச் சாப்பிட்டு விட்டதாகக் குற்றம் சாட்டினர். நான் கோபத்தோடு அவர்களின் குற்றச்சாட்டை மறுக்க அவர்கள் என்னைத் தரித்திரம் பிடித்தவளெனச் சொன்னார்கள். "இங்கு வராவிட்டால் பட்டினி கிடக்கவேண்டிய நீங்கள் எனது அப்பாவின் உணவைச் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்" என ஆத்திரத்துடன் கூறினேன். இரு சிறுமிகள் கத்திக்கொண்டே என்பின்னே ஓடி வர நானும் விடாது திட்டிக்கொண்டே மயிரிழை வெளியில் தப்பி ஓடிவந்தேன்.

நான் வீட்டிற்கு வந்த போது அம்மா அங்கிருக்கவில்லை. எனவே நான் சிறிது களைப்பாறிக் கொள்ளலாமென நினத்தேன். திரும்பிப் பார்க்கும்போது என்னத் துரத்திக் கொண்டு வந்த இரு சிறுமிகளும் தூரத்தே வந்து கொண்டிருப்பதைக் கண்டேன். குசினிக்குள் ஓடிச் சென்று வாழைப்பழங்களை அள்ளிக்கொண்டு அப்பாவின் கட்டிலுக்கு அடியில் ஒழிந்து கொண்டேன். வயிறு நிறைய வாழைப்பழங்களைத் திணித்துக்கொண்டு அப்படியே உறங்கிப்போனேன். திடீரென அப்பாவின் குரல் எனது தூக்கத்தைக் கலைத்தது. இவர் நகரத்திலல்லவா இருக்கவேண்டும்? கனவு காண்கிறேனோ? ஒரு வழியாக வெளியே நழுவி இப்போது தான் வெளியேயிருந்து அறைக்குள் வருவதுபோல் வந்தேன். அவருக்கு முகமன் கூறிவிட்டு யாரும் கட்டிலுக்குக் கீழே கிடக்கும் வாழைப்பழத்தோல்களைக் கண்டுவிடக் கூடாது என மனதினில் வேண்டிக் கொண்டே வீட்டிற்கு வெளியே வந்தேன்.

வீட்டுத் தரையை எப்போதாவது சுத்தமாக்கும் அம்மா அடுத்த நாளே தோல்களைக் கண்டு கொண்டார். மற்றக் குழந்தைகளெல்லாம் பாட்டியிடம் போய் விட்டதால் சந்தேகம் முழுவதும் என்மீதே விழுந்தது. தோற்குவியல் சற்றுப் பெரியதாகவே இருந்தது. அதனால் அம்மாவே தோல்களை அங்கு போட்டு விட்டதாகக் குற்றஞ் சாட்டினேன். அம்மா கடுகடுப்பாக என்னப் பார்த்துக் கொண்டு நின்றார். இறுதியில் நான் அப்பாவைப் பரிதாபமாகப் பார்தேன். தனது தலையை ஆட்டிய அவர் என்னை அமைதியாகப் பார்த்தார். "யார் இந்தப் பழங்களைச் சாப்பிட்டதென்று சொன்னால் நான் உன்னை அடிக்கப் போவதில்லை" எனச் சொன்னார். வேறு வழியின்றி உண்மையைச் சொன்ன நான் இரு சிறுமிகளும் என்னைத் து ரத்தி வந்த செய்தியையும் சொன்னேன். ஏதோ சொல்ல வாயெடுத்த அப்பா ஒன்றுமே சொல்லாது என்னை அங்குவிட்டுவிட்டு அறையை விட்டு வெளியேறினார். உள்ளே வரவேற்பறையில் அப்பா அம்மாவிடம் அவரது தாயைப் பண்ணையைவிட்டுப் போகும்படி கேட்கப் போவதாகச் சொல்ல அம்மா ஏறக்குறைய மயக்கமே அடைந்துவிட்டார். அப்பாவின் எண்ணத்தை அம்மா மாற்ற முயற்சி செய்வதை நான் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்பாவோ பிடிவாதமாகத் தன் முடிவிலேயே நின்றிருந்தார். எனது உணர்வுகளெதையும் மறைக்காமல் எனது வெற்றியைக் காட்ட அம்மாவின் பக்கம் மிதப்பாகத் திரும்பினேன். அம்மாவின் மீதான அப்பாவின் கோபம் எல்லைமீறிய போது நான் ஒரே ஓட்டமாகக் கட்டிலைத் தேடி ஓடினேன்.

அலறல் சத்தங்கள் கேட்டுக்கொண்டிருந்தன. இருவரும் சண்டையிடுவதைப் பார்த்தேன். அம்மா தோற்றுக்கொண்டிருந்தார். கதவருகே அம்மா விழுந்து கிடந்தார். அவளது அலறல் பயங்கரமாக இருந்ததால் நான் காதுகளைப் பொத்திக் கொண்டேன். அப்பா தனியாகப் படுக்கறைக்குச் செல்ல அம்மா அடுத்த நாள் வரை கதவருகே தரையிலேயே கிடந்தார்.

நான் நித்திரை விட்டெழுந்து பார்க்கும்போது அப்பா மீண்டும் நகரத்திற்குப் போய்விட்டிருந்தார். எனது வளர்ப்புத்தாய் தனது முகத்தில் ஒர் ஈரத்துணியுடன் நின்றிருக்க ஒரு சத்தமும் செய்யாது நான் வெளியே சென்று வானத்தில் பறவைகள் அமைதியாகப் பறந்து செல்வதைப் பார்த்துக் கொண்டு நின்றேன். வருடம் முடியும் தருவாயில் அப்பா மீண்டும் பண்ணைக்கு வந்தார். மாடு வெட்டுபவர்களை அழைத்துவரும்படி அப்பா எனக்குக் கூற நான் வெளியே புறப்பட்டேன். மாடு வெட்டுபவர்களில் ஒருவரை வழியிலேயே சந்த்திதேன். இருவருமாகச் சேர்ந்து மற்றயவரையும் தேடிச் சென்றோம். இருவருமே எத்தனை மிருகங்கள் வெட்ட வேண்டியிருக்குமெனக் கேட்டனர். அதில் ஒருவர் சப்புக் கொட்டிக்கொண்டே வந்தார். ஏறத்தாழ ஒரு மணித்தியாலத்தின் பின்னர் இருவருடனும் வீடு திரும்பினேன். அப்பா அவர்களை மாடுகள் பக்கம் அழைத்துச் செல்ல மாடு வெட்டுவதைப் பார்ப்பதில் எந்த ஆர்வமுமில்லாத நான் தோட்டத்தில் இலைகளைச் சேகரிக்கத் தொடங்கினேன்.

சில மணித்தியாலங்களின் பின் நான்கு விருந்தினர்கள் வந்தனர். நால்வரில் ஒருவர் மிக வித்தியாசமாயிருந்தார். அவரின் தோல் ஓர் ஒளிக்கற்றை போல் வெண்மையாக இருந்தது. அவர் போகுமிடமெல்லாம் அவரை என் பார்வை தொடர்ந்து கொண்டேயிருந்தது. ஏனெனில் நான் அப்படி ஒருவரை இதுவரை கண்டதில்லை. அவரின் அருகில் செல்வதற்காக எல்லா முயற்சிகளையும் செய்து கொண்டிருந்தேன். அவரின் அருகாமையில் சென்று ஏன் அவர் இவ்வளவு வெளுப்பாக இருக்கிறார் என அறிய வேண்டும்! அவரின் பழுப்பு நிறக்கண்களும் பெரிய காதுகளுடன் கூடிய அவரது முகமும் பெரிய மூக்கின் கீழ் வளர்ந்த மீசையும் என்னைக் கவர்ந்தன. அவரை என்னால் தொட்டு விட முடியும். கிள்ளினால் தோல் கழன்று விரலோடு வந்து விடுமோ?

ஒளிவீசும் தோல்களுடைய மனிதர் என் எண்ணங்கள் முழுவதையும் ஆட்கொள்ளத் தொடங்கினார்.

மாலையில் அவர்கள் விருந்தினை முடித்துச் செல்லும்போது ஒழுங்குபடுத்துவதும் கழுவுவதுமாக எனக்கு வேலைகளை விட்டுச் சென்றனர். அப்பா வேலை செய்யும் என்னையே பார்த்துக் கொண்டு நின்றார். பின்பு நாளை என்னை நகரத்திற்குக் கூட்டிச் செல்வதாகக் கூறிச் சிரித்துக் கொண்டே போனார். விவரிக்க முடியாத மகிழ்வுணர்வு புயலாக என்னுள் வீசியது. சிரித்துக்கொண்டே என்ன செய்வதென்று தெரியாது நான் நிற்க, அவரின் மனைவி அவரை உள்ளே அழைத்துச் சென்றது எனக்கு ஆறுதலாகவேயிருந்தது. அன்றிரவு என் கனவுகள் வழமையைவிட ஒளி பொருந்தியதும் அழகானதுமாயிருந்தன.


0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு