குழந்தைப் போராளி - 8
குடும்ப இரகசியம்
நான் மரத்தினடியில் இருந்து குளிர்ந்த மெல்லிய காற்றை அனுபவித்துக் கொண்டிருந்தபோது ஓர் இளைஞன் என்னை நோக்கி நடந்து வருவதைக் கண்டேன். எங்கள் கண்கள் சந்தித்துக் கொண்டன. என்னைத் தொடுமளவு தூரத்தில் நின்று கொண்டு எனக்கு முகமன் கூறிய அவன் எனது நலம் பற்றி விசாரித்தான். 'நான் நன்றாக இருக்கின்றேன்' எனக் கூறிய போது என் கண்கள் அவன் கண்களை ஊடுருவிக்கொண்டேயிருந்தன. 'உனது அப்பா வீட்டில் இருக்கிறாரா?' என அவன் கேட்டான். எனக்கு அப்பாவே இல்லை எனச் சொல்ல நினைத்த நான் அறிமுகமில்லாத இவனிடம் அதைச் சொல்லக் கூடாதென நினைத்துக் கொண்டு அவனைச் சிறிது காத்திருக்கும்படி கேட்டேன். நான் வீடு செல்ல எத்தனிக்கும் போது அவன் எனது பெயரையும் பாட்டி எங்களுடன்தானா இருக்கிறார்? எனவும் கேட்டான். நான் பாட்டி எங்களுடனில்லாது வேறு வீட்டிலிருக்கிறார் என்றவுடன் அவன் முகத்திலே மாறுதல் எற்பட்டது. அவனின் கண்கள் பிரகாசித்து ஒளிர்ந்தன.
ஓர் இளைஞன் இங்கு வந்திருப்பதாகவும் அவன் அப்பாவுடன் பேசப் பிரியப்படுவதாகவும் சொன்னவுடன் "அவனை இங்கு வரச் சொல்" என்றார் அப்பா.நான் அவனை அழைத்து வந்தபோது, அவனை அடையாளம் காண முயற்சிப்பதுபோல அப்பா யோசனையுடன் தனது நெற்றியைச் சுருக்கியவாறு வாசற் கதவருகே நின்றுகொண்டிருந்தார். அப்பா அவனை வரவேற்றவிதம் எனது ஆவலைத் தூண்டி விட்டது. நான் ஒழிந்திருந்து இவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்களெனக் கவனித்தேன்.
"ஏன் இங்கு வந்தாய்?" அப்பா கேட்டவுடனேயே அந்த வாலிபன் அழத்தொடங்கினான்.
" நான் எங்கு போவதென்று எனக்குத் தெரியவில்லை" திக்கியபடி அவன் பதில் சொன்னான்.
"இங்கு வரவேண்டாமென நான் உனக்குக் கூறியுள்ளேன், என் வந்தாய்?"
"எனக்கிருக்கும் ஒரே சகோதரன் நீதான்" என்று அந்த இளைஞன் மெதுவாகச் சொன்னான். சகோதரன் என்ற சொல்லைக் கேட்டதும் இந்த வாலிபன் எனது சித்தப்பா என எனக்குத் தெளிவாகியது. அதனால் இன்னும் என் காதுகளைக் கூர்மைப்படுத்திக் கொண்டு ஒரு சொல்லைத்தானும் விட்டுவிடாமல் உன்னிப்பாகக் கவனித்தேன். எனது தந்தை அவனைத் திட்டிக் கொண்டே அந்த இடத்தை விட்டு உடனடியாகப் போகும்படி கூறினார்.
"நான் எங்கு போவது? தயவு செய்து எனக்கு உதவி செய்" என வாலிபன் அப்பாவைக் கெஞ்சினான்.
கையறுநிலை எனக்கு நன்றாகவே தெரிந்ததொரு உணர்வு. அவனுக்காக எனது இருதயம் நெகிழ்ந்து போனது. சித்தப்பா எவ்வளவுக்கெவ்வளவு கெஞ்சினாரோ அந்தளவுக்கு அப்பாவின் பிடிவாதமும் வளர்ந்தது. இறுதியாகச் சித்தப்பா முழந்தாளிட்டுத் தனக்கு இங்கே இடமளிக்கும்படி கேட்டார். நான் சத்தமின்றி அழுது கொண்டே வெளியே ஒடினேன். சில நிமிடங்களின் பின் சித்தப்பா வீட்டை விட்டு வெளியேறினார். என்ன நடந்ததென்று தெரியவில்லை. அறிந்து கொள்ள நான் அவர் பின்னால் ஓடினேன்.
"சித்தப்பா, சித்தப்பா" என நான் கூப்பிட்டதும் அவர் நின்றார்.
"உனது அப்பா தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டாரா?"
"இல்லை.. நான் இங்கு வந்ததே அவருக்குத் தெரியாது"
"பின்பேன் வந்தாய்?" எனச் சித்தப்பா கேட்க, என்னால் முடிந்த உதவிகளை அவருக்குச் செய்ய நான் தயாராகவுள்ளேன் எனச் சொன்னேன். அதைகேட்டுப் புன்னகைத்த அவரிடம் அவரின் பெயரைக் கேட்டேன். தனது பெயர் நயின்டோ (மூக்கு எனப் பொருள்படும்) என்றார் சித்தப்பா. அப்போது தான் அவரது பெரிய மூக்கைப் பார்த்தேன். நாங்களிருவரும் உட்கார்ந்து கொண்டோம் "ஏன் அப்பா உங்களை விரட்டிவிட்டார்" எனச் சித்தப்பாவிடம் கேட்டேன்.
" நீ ஒரு சிறுமி, அதை உன்னால் புரிந்து கொள்ள முடியாது" மென்மையான குரலில் சித்தப்பா சொன்னர்.
அவர் சொன்னால் என்னால் புரிந்து கொள்ள முடியுமெனெச் சொன்ன நான் அவர் கண்களைப் பார்த்ததும் அவர் எதையும் சொல்லத் தயாரில்லை என்பதைப் புரிந்து கொண்டேன்.
" நான் என்னைப் பற்றிச் சொல்லவா?" எனக் கேட்டேன். "அது நல்லது" எனச் சித்தப்பா சொன்னார். நாங்கள் இருவரும் நெருக்கமாக அமர்ந்து கொண்டோம்.
"உங்களை மட்டும் அப்பா வெறுக்கவில்லை, என்னையும் வெறுக்கின்றார் என்பது உங்களுக்குத் தெரியவேண்டும்" என்ற ஆரம்பத்தோடு எனது கதையைக் கூறத் தொடங்கினேன். எவ்வாறு நான் நடத்தப்படுகிறேன் என்று சொல்லிக்கொண்டிருக்கும் போது அழுகை என்னை முடக்கியது. என்னால் பேச முடியாமல் போகச் சித்தப்பா தனது கையை நீட்டி எனது கண்ணீரைத் துடைத்துவிட்டார். சிறிது நேரம் கழித்து அவர் தன்னைப் பற்றிக் கூறத் தொடங்கினார். அப்பாவின் இழிவான நடத்தை பற்றியெல்லாம் அவரின் கதையில் வந்தது.
எனது தந்தைவழிப் பாட்டன் தனது மனைவியை (பாட்டியை) விவாகரத்துச் செய்ததுடன் எனது தந்தையையும் வீட்டை விட்டுத் துரத்தி வீட்டிற்கு என்றுமே திரும்பிவரக்கூடாதென்று தடையுத்தரவும் பிறப்பித்திருந்தார். பதின்நான்கு வயதில் எனது தந்தை அதே சுற்று வட்டரத்திலுள்ள ஒரு செல்வந்தக் குடும்பத்தினால் தத்தெடுக்கப்பட்டார். எனது பாட்டன் மீண்டும் திருமணம் செய்து எனது நயின்டோ சித்தப்பாவைப் பெற்றார். நயின்டோ பிறந்து சிறிது காலத்தில் எனது பாட்டன் நோயுற்று மரணமானார். சொத்துக்களை அவர் தனது புது மனைவிக்கும் மகன் நயின்டோவிற்கும் கொடுத்திருந்தார். எனது தந்தைக்கு அவரின் சொத்தில் எந்தப் பங்கும் கிடைக்கவில்லை. சித்தப்பா அப்போது வயதில் குறைந்தவராக இருந்ததால் சொத்துக்களின் பராமரிப்பை அவரின் தாயார் கவனித்துக்கொண்டார். இவ்வளவு சொத்துக்களிருந்தும் சித்தப்பா ஏன் அப்பாவிடம் கையேந்தி நிற்க வேண்டுமெனெ நான் கேட்க 'உனது அப்பா என் சொத்துக்களையெல்லாம் களவாடி விட்டார்' எனச் சித்தப்பா பதில் சொன்னார்.
"எங்கள் தந்தையின் மரணச்சடங்கிற்கு உனது அப்பாவும் வந்திருந்தார். வந்தவர் எனது அம்மாவிடம் அவளில் தான் காதல் கொண்டுள்ளதாகச் சொல்லி அவளைத் தான் திருமணம் செய்து கொள்வதாகவும் பொய் வாக்குறுதி அளித்திருக்கிறார். இதற்கிடையில் எனது தாய் மீண்டும் கருவுற்றார். சொத்துக்களைத் தன் பெயருக்கு மாற்றி எழுதுமாறு உனது தந்தை கேட்க எனது தாயாரும் அவ்வாறே செய்தார்.
நான் ஆடாது அசையாது கதையைக் கேட்டுக்கொண்டிருந்தேன். சொத்துக்கள் கைக்கு வந்து சேர்ந்ததும் அப்பா தனது சுயரூபத்தைக் காட்ட ஆரம்பித்தார் முதலில் சிறிய நயின்டோவை வீட்டை விட்டுத் துரத்தியதோடு நயின்டோவின் தாயார் ஒரு பெண் குழந்தையைப் பெற்றதும் அவளையும் துரத்திவிட்டார். இந்த இடத்தில் சித்தப்பா கதையை நிறுத்தி அழத் தொடங்கினார். நான் இவருக்கு எவ்வாறு உதவலாமென யோசிக்கத் தொடங்கினேன். சடுதியாக எனக்கொரு வழி தென்பட்டது. எனது ஞானத்தாயும் அவரது கணவரும் பரிதாபத்துக்குரிய எனது சித்தப்பாவின் நிலையைப் புரிந்து கொள்வார்கள். அவர்களால் சிலவேளை சித்தப்பாவுக்கு உதவ முடியலாம். என்னை எனது குடும்பம் எவ்வாறு நடத்துகிறது என்பதும் அவர்களுக்குத் தெரியும்.
நான் ஞானத்தாய் பற்றிச் சொன்னவுடன் சித்தப்பாவின் கண்களில் நம்பிக்கை துளிர்விடத் தொடங்கியது. இருவரும் சிறுகுன்றின் சாலையில் ஏறி எனது ஞானத்தாய் வீட்டை நோக்கி நடந்தோம். சித்தப்பா தனது அழுகையை நிறுத்திச் சிரித்துக்கொண்டே என்னக் கட்டியணைத்துக்கொண்டார். இதற்கிடையில் நானெனது தாயார் பற்றிச் சித்தப்பாவிற்குக் கூறினேன். எனது தாய் என்ற சொல்லை இரண்டாம் முறை கூறும் போது "அவர் உனது உண்மையான தாயாக இருக்க முடியாது" எனச் சித்தப்பா கூறினார். நானோ கோபத்திலும் வெறுப்பிலும் அவர் இப்படிக் கூறுகிறாரென நினைத்துக்கொண்டேன்.
எனது ஞானத்தாய் தனது மகன்களில் ஒருவருடன் தோட்டத்தில் உட்கார்ந்திருந்து துணியொன்றைத் தைத்துக்கொண்டிருந்தார். அவரது அன்பான புன்னகை எங்களது வரவை அவர் விரும்பியதாகக் காட்டிற்று. அழகிய பூக்கள் பதித்த கோப்பையில் எங்களுக்குப் பால் தரப்பட்டது. அது எனக்கு மிகவும் பிடித்தமானதாயிருந்தது. எங்கள் வீட்டிலும் இவ்வாறான அழகிய கோப்பைகள் இருப்பினும் நான் பிளாஸ்டிக் கோப்பையைத்தான் உபயோகிக்க வேண்டியிருந்தது.
நான் ஞானத்தாயாருக்கு நிலைமையை விபரிக்கத் தொடங்கினேன். சித்தப்பா ஒன்றுமே பேசாது தனக்கு நன்மை கிடைக்குமென்ற நம்பிக்கையுடன் உட்கார்ந்திருந்தார்.சித்தப்பாவைச் சில நாட்கள் தனது வீட்டில் தங்கியிருக்கும்படி கேட்டுக்கொண்ட ஞானத்தாயார் எனது தகப்பனாரின் நடத்தை பற்றிக் குறை கூறினார். இதைக்கேட்டதும் எனது சித்தப்பா மிக மகிழ்வாகச் சிரித்துக் கொண்டார். நானும் புன்னகைத்தேன். நாங்களிருவரும் அப்பாவின் மீதான சிறிய வெற்றியைச் சாதித்திருந்தோம். இனி ஒரு போதும் நான் சித்தப்பாவைப் பார்க்கப்போவதில்லை என்று என் உள்ளுணர்வு சொல்லிற்று. அப்பாவின் கண்களில் இருந்த வெறுப்பினால் சித்தப்பா இனி ஒரு போதும் எங்களைத் தேடி வரமாட்டார் என எனக்குப்பட்டது.
நான் வீட்டுக்குச் செல்ல வேண்டியிருந்ததால் சித்தப்பாவைக் கண்ணீருடன் பிரிந்து சென் றேன். வீட்டில் அம்மா உணவை மேசை மேல் வைத்திருந்தார். அப்பா வரும் நேரங்களில் மாத்திரம் நான் வயிறு நிறைய உண்ண அம்மா அனுமதிப்பார். ஆனால் அன்றிரவு நான் கவலையாக இருந்தபடியால் எவ்வளவு முயன்றும் என்னால் சாப்பிட முடியவில்லை. ஒவ்வொரு முறையும் நான் அம்மாவைப் பார்க்கும்போது மேலும் உணவு தட்டில் விழுந்தது.என்றாவது ஒருநாள் சித்தப்பாவை விரட்டியது போல் அப்பா என்னையும் விரட்டினால் நான் என்ன செய்யப்போகிறேன்?
இந்த எண்ணம் என்னை அலைக்கழிக்கத் தொடங்கியது. பயம் மிகவும் அதிகமாகி இறுதியில் நான் வெளியே சென்று சாப்பிட்ட உணவையெல்லாம் வாந்தி எடுக்கும்படியாகிவிட்டது. பின் தொடர்ந்து வந்த அப்பா எனனைப் பிடித்து உலுக்கித் தரையில் தூக்கியெறிந்துவிட்டு " நீ என்ன இழவைச் சாப்பிட்டாய்?"எனக் கூச்சலிட்டார்ர். அம்மா பின்னால் நின்றுகொண்டு "நான் எவ்வளவு தான் சாப்பிடக் கொடுத்தாலும் இவள் போதாதென்று மாம்பழங்களையும் வாழைப்பழங்களையும் திருட்டுத்தனமாகச் சாப்பிடுகிறாள். இவளால் நான் உங்களை விட்டுப் பிரிந்து போக நேரிடும்.. நீங்கள் அவளை வைக்குமிடத்தில் வைக்கவேண்டும்!" என்று முணுமுணுத்தார். அம்மா அப்பாவை எப்படி உருவேற்றி விடுகின்றார் என்பதைக் கண்டு கொண்டேன். அப்பாவின் கண்களில் பசு மாட்டிற்காகச் சண்டையிடும் காளையின் பார்வை மின்னியது. என்ன நடக்கப்போகிறது என்பதைப் பார்க்காமலிருக்கக் கண்களை மூடினாலும் அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை ஊகித்துக் கொண்டேன். சுவரின் மீது அவரென்னைத் தூக்கி வீசியபோது 'அப்பா உங்களால் வஞ்சிக்கப்பட்ட சித்தப்பாவின் கண்ணீர் என் மனதைத் தொட்டது' எனச் சொல்ல நினத்தேன். எல்லாம் முடிந்தபின் இருளில் அழுது கொண்டே சித்தப்பா சொன்னதை யோசித்துப் பார்த்தேன். எனது உண்மையான தாயார் இவரில்லை என்பது மெதுவாக எனக்குப் புலனாயிற்று. இப்போது சித்தப்பாவை முழுமையாக நம்பினேன்.
அடுத்தநாள் காலையில் அப்பாவின் பிள்ளை வளர்ப்புமுறை எவ்வளவு கடினமானதெனத் தெரிந்தது. என் உடல் முழுவதும் நோவும், வாயில் இரத்தப் பிசுபிசுப்பும், உடையெல்லாம் இரத்தக்கறையுமாயிருந்தது. ஆனாலும் நான் உடைகளை மாற்றவில்லை. அப்பா இதைப் பார்த்து என்மேல் இரக்கபடவேண்டுமென நினைத்தேன். குளிர்ந்த நீரில் என்னைக் கழுவிக்கொண்டு வீட்டைச் சுற்றி எனது துப்பரவு செய்யும் வேலையை ஆரம்பித்தேன். சூரியன் உதித்தது, அத்துடன் வெப்பமும் மெதுமெதுவாய் அதிகரிக்க எனக்குத் தலை சுற்றத் தொடங்கியது. விடாது நான் எனது வேலையைத் தொடர்ந்தேன். தொடர்ந்தும் சித்தப்பாவையும் அவருக்கு நடந்ததையும் நினைத்துக் கொண்டிருந்தேன். அதுவே எனக்கும் நடக்கலாமென்ற பயமும் என்னைத் தொடர்ந்தது. பசியான சிங்கத்தின் கால்களில் என் சித்தப்பா அகப்பட்டுக்கொண்டது போல எனது மூளைக்குள் படம் ஓடத்தொடங்கிப் பின் எல்லாமே கருமையானது.
எனக்கு உணர்வு வந்த போது நான் ஒரு மரத்தடியில் கிடந்தேன். யாரோ என்னை ஒரு துணியால் மூடியிருந்தார்கள். நான் எப்படி இங்கே வந்தேனென்று எனக்குத் தெரியவில்லை. அப்படியே சிறிது நேரம் கிடந்தேன். சில வேளை அப்பா என்னை வந்து பார்கலாம். சிறிது நேரத்தின் பின்பு துணியை உதறிவிட்டு எழுந்து கொண்டேன். எங்கு போகலாம்? தாகத்திற்கும் பசிக்கும் எங்கு உணவும் நீரும் கிடைக்கும்? எனது அப்பாவின் மனைவியிடம் சென்று மாட்டுக்கன்றுகளைப் பார்த்து வருவதாகச் சொன்னேன் அவர் ஒரு பதிலும் கூறவில்லை.
மாட்டுக்கன்றுகளைப் பார்ப்பதற்குப் பதிலாக வாழைத்தோட்டத்தை நோக்கி நடந்தேன். வாழைப்பழங்களைத் தேடி மரங்களிடையில் வந்த போது திடீரென உலர்ந்த சருகுகளின் மீது யாரோ நடந்து வரும் காலடியோசை கேட்டது. அதே வேளையில் ஓரளவு பழுத்திருந்த வாழைக்குலை ஒன்றையும் கண்டேன். கவனமாகப் பழங்களைப் பறித்து உண்பதற்காகச் சத்தமின்றித் தரையில் உட்கார்ந்தேன். காலடிகள் இப்போது என்னை நெருங்கி வந்தன. எனது உடையில் தேவையானளவு பழங்களைப் பொதிந்து கொண்டேன். மெதுவாக எழுந்து போக நினைக்கையில் அப்பா இன்னும் மூவருடன் கதைத்தவாறே தோட்டத்தில் வந்துகொண்டிருப்பதைப் பார்த்தேன். அவர்கள் என்னை நோக்கி நடந்து வந்தனர். நான் வளைந்து வளைந்து ஓடத் தொடங்கினேன். ஒரு வாழைப்பழத்தைத் தன்னும் இழக்காது, அவர்களிடம் பிடிபடாமல் என்னால் தப்ப முடிந்தது. அன்றிரவு அப்பாவும் அவர் மனைவியும் இது பற்றி என்ன பேசிக்கொள்கின்றார்கள் எனக் கவனித்தேன். "சிலவேளை அது ஒரு நாயாக இருந்திருக்கலாம்" அம்மா சொன்னார்.
உனது கண்ணீரை நான் துடைக்கவில்லை என் அன்பான சித்தப்பாவே! நீ எங்கிருந்தாலும் என் நேசம் உன்னைத் தொடர்ந்து வரும் அது எனக்குத் தெரியும். எனது இதயத்தால் உன்னை என் கனவுகளில் காண்பேன். எனக்குத் தெரியும் நீயும் என்னை உன் இதயத்தில் சுமப்பாய். ஆனால் உன் ஆன்மா எங்குள்ளது என்று எனக்குத் தெரியாது.
எனது கண்ணீர் உன் கவலைகளுக்காக விழும்
எனது ஆன்மா உன்னிடமும் உனது சொற்கள் என்னிடமும்.
தொடரும்..
2 மறுமொழிகள்:
வணக்கம் தியோ
மிகவும் அருமையான புஸ்த்தகம் கட்டாயமாக தமிழில் கொண்டுவர வேண்டிய புஸ்தகமும் கூட. டிடழப ல் மட்டம் போடுவதோடு நிறுத்தி விடாமல் நூல் வடிவமாகவும் கொண்டு வரவும்
சுவிஸ் தேவாவுக்கும் வாழ்த்துக்கள்
வணக்கம் தியோ
மிகவும் அருமையான புஸ்த்தகம் கட்டாயமாக தமிழில் கொண்டுவர வேண்டிய புஸ்தகமும் கூட. blog ல் மட்டம் போடுவதோடு நிறுத்தி விடாமல் நூல் வடிவமாகவும் கொண்டு வரவும்
சுவிஸ் தேவாவுக்கும் வாழ்த்துக்கள்
Post a Comment
<< முகப்பு