சனி, ஜூலை 01, 2006

குழந்தைப் போராளி - 7


திருமுழுக்கு

கால ஓட்டத்தில் எனது நான்கு ஆடுகளும் குட்டிகள் போட்டு, மீண்டும் குட்டிகள் போட்டு எல்லாமாகப் பன்னிரெண்டு ஆடுகளுக்கு நான் சொந்தக்காரியானேன். எனது திருமுழுக்கு விழாவிற்காகக் குடும்பம் முழுவதும் பண்ணையில் கூடியிருந்தனர். கடைசியாக அந்த நாளும் வந்தது. விடிகாலையிலேயே எழுந்த நான், அப்பா பண்ணையாள் பையோமாவிற்கு இரண்டு ஆடுகளை வெட்டும்படி சொல்வதைக் கேட்டேன். என் ஆடுகள்! எனது ஆடுகளில் இரண்டுடன் அப்பாவும் பையோமாவும் மரத்தடிக்கு அவற்றை வெட்டுவதற்காகப் போவதைப் பார்த்தேன். நான் என்ன சொன்னாலும் செய்தாலும் இதனைத் தடுத்துவிடமுடியாது. கையலாகத்தனத்துடன் அதைப் பார்த்துக்கொண்டு நின்றேன். பையோமா ஆடுகளின் கால்களைச் சேர்த்துக் கட்டுவதைப் பார்த்து என் கண்களில் கண்ணீர் பெருகத் தொடங்கியது.

'ஞானத்'தாயும் தந்தையும் எனக்காகக் காத்திருந்தார்கள். நானும் பாட்டியும் தேவாலயத்துக்குச் செல்லும்போது கூட என்னால் அமைதி பெற முடியவில்லை. எருபேட் சுவாமிக்காக நாங்கள் காத்திருந்தபோது தேவாலயத்தில் ஒலித்த அமுங்கலான இசை என்னை இன்னும் கவலை கொள்ள வைத்தது. பீடத்திற்குக் குருவானவர் செல்ல எல்லோரும் எழுந்து நின்றனர். எனது புதிய பெயர் அழைக்கப்படும்வரை எனக்கு அங்கு நிகழ்ந்த ஒன்றுமே ஞாபகமில்லை. ஒன்று மட்டும் நினைவிருக்கிறது. அது, எனது பெயர் அழைக்கப்பட பாட்டி என்னைச் சற்றே நெட்டித் தள்ளிவிட நானும் முடுக்கிவிட்டது போல் பீடத்திற்குச் சென்றது.

நான் திரும்பி வந்ததும் எனது 'ஞான'த்தாய் என்னை கட்டிய ணைத்து 'நான் ஏன் கவலையாக இருக்கிறேன்?' எனக் கேட்டார். நான் சரியாக நினவுபடுத்திப் பார்க்கும்போது தேவாலயத்தில் நான் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. சிறிது நேரத்தின் பின்பு தேவாலயத்திலிருந்து மெதுவாக நழுவி வழிபாடு முடிவடைவதற்கு முன்னமே வெளியே வந்தேன். இப்போதைக்கு வீட்டுக்குத் திரும்புவதில்லை என்ற முடிவை எடுத்துக்கொண்டேன். வாழைத்தோட்டத்தில் ஒழிந்துக் கொள்ள எனக்கு ஓர் இடமிருந்தது. அங்கே நிறைய வாழைப்பழங்களுடன் போய் ஒழிந்துகொண்டேன். எந்த நிலையிலும் நான் வீடு திரும்புவதாக இல்லை. அங்கு சென்றால் எனது நன்பனான ஆடுகளில் ஒன்றைச் சாப்பிட நான் நிர்பந்திக்கப்படுவேன். அப்பாவிற்கும் பையோமாவிற்கும் என்ன தண்டனை தரலாமென யோசித்தேன். நான் திடீரெனக் காணாமற் போய்விட்டால் பொலிசார் வந்து அவர்களைக் கைது செய்வார்களா? அப்படியாயின் நன்றாகத்தானிருக்கும்.ஆனால் நான் திடீரெனக் காற்றில் கரைந்து போய்விட முடியாதே! எனவே வீடு செல்லத்தான் வேண்டும். இப்போது நான் ஒரு கதை தயார் பண்ணிக் கொண்டு சிங்கத்தின் குகைக்கு மீண்டும் திரும்பிச் செல்ல வேண்டும்.

நான் எனது அறைக்கு வருவதைப் பாட்டி, அம்மா, அப்பா மூவரும் பார்த்தனர். அப்பா எழுந்து நின்று என்னைப் பார்த்துத் தலையாட்டினார். என் காதில் பிடித்திழுத்து எல்லோரும் என்னைத் தேடியதாகச் சத்தமாகத் திட்டினார். அறையிலிருந்து வெளியே இழுத்து வந்து வேகத்துடன் அடிக்கத் தொடங்கினார். பாட்டியும் அம்மாவும் ஜன்னலினூடாகப் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்ததுமே நான் எனது கண்ணீரை அடக்கிக் கொண்டேன். இந்த அடி, உதைகள் என்னை நோகச் செய்யுமென்று அவர்கள் நம்பி விடக்கூடாது. ஆனால் எனது மெளனம் அப்பாவை மேலும் வெறி கொள்ள வைத்தது என்பதை நான் புரிந்துகொள்ளவில்லை. அவரின் கைகள் ஓய்ந்த பின்னர் நான் தோட்டத்திற்குச் சென்று என் கண்ணீரைத் தங்குதடையின்றி வழியவிட்டேன்.

நான் நித்திரை கலைந்து எழுந்தபோது என்னைச் சுற்றி இருள் கவிழ்ந்திருந்தது. நான் எங்கிருக்கிறேன் என்றே எனக்குப் புரியவில்லை. அதை இரவின் குளிர் காற்று எனக்குப் புரிய வைத்தது. ஆச்சரியத்துடன் இரவின் ஒலிகளைக் கேட்டேன். தவளைகள் கத்திக்கொண்டிருந்தன. ஓநாய்களின் ஊளையும் கேட்டுக்கொண்டிருந்தது. இருளில் எனக்குப் பயமாகத்தான் இருந்தது. ஆனால் வீட்டிற்குச் சென்று கதவைத் தட்டுவதை நினக்கையில் அந்தப் பயம் ஒன்றுமேயில்லாது போய்விடும். சிறிது நேரம் மாறி மாறி யோசித்த பின்னர் ஆடுகளுடன் படுத்துக் கொள்வதென முடிவெடுத்தேன். ஆடுகளின் வீச்சம் பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால் அவை என்னை மிதித்துவிடலாம் என்பதுதான் சிறிது கவலையூட்டியது. ஆனால் ஆடுகள் தங்கள் கொட்டிலில் அமைதியாகப் படுத்து உறங்கிக்கொண்டிருந்தன. காலையில்தான் எனது உடையில் இரத்தக்கறைகளையும் விரல்களில் ஒன்று முறிந்து போனதையும் கண்டு கொண்டேன். வீட்டினுள் சென்று ஓர் மூலையில் முடங்கிக் கொண்டு மற்றவர்கள் நித்திரை விட்டெழும் வரை அங்கு காத்திருந்தேன். எனது நோவுகளை மீண்டுமொரு முறை நினைவில் கொண்டுவர முயன்றேன். எனக்கு வந்ததெல்லாம் ஆற்றமுடியாத கோபம் தான். மீண்டும் மீண்டும் எனக்கு ஆறுதல் கூற ஒருவருமில்லையே என்ற வருத்தம் தான் மேலோங்கியது. காற்று மாத்திரமே என்னை மெல்லத் தழுவிப்போனது. எனது இருதயம் நானும் அதைப்போல சுதந்திரமானவளென எனக்குச் சொன்னது.

அப்பா வெளியே வந்தார். நான் அவரைப் பார்க்கும் போது வானத்திலிருந்து ஒரு பெரிய பாறாங்கல் அவர் தலை மீது விழுந்தால் எவ்வளவு நன்றாகயிருக்குமென நினைத்தேன். எனது கோலத்தைப் பார்த்து அவர் தன்னுள் வெட்கப்படுகிறார் என்பது எனக்குத் தெரிந்தது. 'எனது விரல் முறிந்து விட்டது' என நான் சொன்னேன். அப்பா ஒன்றுமே சொல்லாது ஆடுகளை வெட்டிய மரத்தடிக்குச் சென்று ஆகாயத்தை நிமிர்ந்து பார்த்தார். சிறிது நேரத்திற்குப் பின்பு மெளனமாக என்னைக் கடந்து வீட்டினுள் சென்றர். திரும்பி வரும்போது கையில் கத்தியும் கம்புமாக வந்து மெளனமாகக் கம்பைச் சீவிக் கொண் டிருந்தார். என்ன செய்யப் போகிறார்? ஆடுகள் மாதிரி என்னையும் தடியில் சொருகி நெருப்பில் வாட்டப்போகிறாரா? கம்பைச் சீவி முடித்ததும் அப்பா ஒன்றுமே பறையாது வீட்டினுள் என்னைக் கூட்டிச் சென்று விரல் முறிந்திருந்த எனது கையைக் கழுவினார். சீவிய கம்புத் துண்டுகளை வைத்து என் விரலை நிமிர்த்திக் கட்டினார். வலி தாங்க முடியவில்லையாயினும் நான் அழுவதைப் பார்க்கும் சந்தோசத்தை அவருக்குக் கொடுக்க நான் தயாரில்லை. எனவே அழுகைக்குப் பதிலாக இருமலைப் பயன்படுத்திக்கொண்டேன். பழிவாங்கும் தாகமும் துயரமும் கலந்த ஓர் உணர்வு என்னுள் உருக்கொண்டது. நான் பெரியவளாக வளர்ந்ததும் எனது சினேகிதர்களைக் கொண்டு இவர்களைப் பழிவாங்க வேண்டுமென்று சங்கற்பம் செய்து கொண்டேன்.

எனது நண்பர்களைச் சாப்பிட என்னைக் கட்டாயப்படுத்தியதற்கு பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் என்னுள் பெரிதாகிக் கொண்டே வந்தது. ஒன்றன்பின் ஒன்றாக என் நண்பர்கள் இவர்களால் கொல்லப்படுகிறார்கள், உணவாக்கப்படுகிறார்கள். ஆடுகளின் கதறல் எனது நினைவுகளையும் கனவுகளையும் ஆக்கிரமிக்க எனக்குக் கிட்டத்தட்டப் பைத்தியமே பிடித்த நிலை. என்னால் சரிவரத் தூங்கமுடியவில்லை. பூச்சிக்கொல்லி மருந்து பற்றிச் சிந்திக்கத் தொடங்கினேன். அப்பாவின் எல்லா மாடுகளுக்கும் நஞ்சு வைக்கலாமா என யோசித்தேன். ஆயினும் வரிசையாக மாடுகள் இறந்து கிடக்கும் காட்சியையும் அதனால் வரக் கூடிய பிரச்சினைகளையும் நினைத்ததுப் பார்த்து என் திட்டத்தைக் கைவிட்டேன்.

தொடரும்..

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு