குழந்தைப் போராளி - 11


சாவும் துரத்தப்படுதலும்

1982ல் உகண்டாவின் ஜனாதிபதியும் சர்வாதிகாரியுமான மில்டன் ஒபோடே பல்வேறு அரசியற் பிரச்சினைகளைச் சந்திக்கத் தொடங்கினார். NRA (National Residency Army) எனப்படும் போராட்ட அமைப்பு துற்சி இனக்குழுவினரதும் மேற்கு உகண்டாவில் ஒரு பகுதியினரதும் ஆதரவைப் பெற்று நாட்டின் பல பகுதிகளிலும் ஒபோடேயின் அரசுக்கு எதிரான ஆயுதக் கிளர்ச்சிகளை நடத்தியது. அரசியலில் தனக்குப் பாதகமான விளைவை துற்சிகளின் ஆதரவைப் பெற்ற NRA ஏற்படுத்துவதைக் கண்ட ஒபோடே உகண்டாவிலிருந்து துற்சிகளை விரட்டியடிக்கும்படி பொதுமக்களைத் தூண்டினார். பிரச்சனைகளுக்குத் தீர்வுகளைக் காண்பதை விட்டுவிட்டு இந்தக் குறுக்குவழி மூலம் அரசியல் எதிர்ப்பின் மூச்சுக் காற்றை அறுத்துவிடலாமென அவர் நம்பியிருக்க வேண்டும். தானே பிரச்சினைகளின் மூலகாரணமாக இருக்கலாம் என்ற எண்ணம் அவருக்கு வரவே இல்லை. பெரும்பாலான ஆபிரிக்க நாட்டுத் தலைவர்கள் போலவே அதிகாரத்திற்கான வேட்கை அவரிடமும் இருந்தது. அதேயளவு மிகப்பெரிய செல்வந்தனாக வேண்டுமென்ற பேராசையும் அவருக்கிருந்தது. அதிகார வெறி கொண்ட எல்லாத் தலைவர்களுமே தங்கள் பைகளை நிரப்பிவிட வேண்டுமென்ற வெறி கொண்டவர்களாக இருக்கின்றனர். அவர்கள் நிரப்ப நினைத்த பைகளில் ஓட்டைகள் இருந்தன போலும்.

ருவண்டாவின் கொலைகார இராணுவத்தினரிடம் துற்சிகளைத் துரத்திவிடுவதன் மூலம் தனது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள முடியாது என்பதை அவர் என்றுமே புரிந்து கொள்ளவில்லை. உகண்டாவிலிருந்து துற்சிகளை வெளியேற்ற எடுத்த முடிவு அவரின் அரசியற் தவறுகளில் மிகப் பெரிய தவறாக உருவெடுத்தது. NRAயின் பலம் பெருகப் பெருக தானே அமைத்துக்கொண்ட தனது சிம்மாசனத்தில் இறுதிவரையில் கோலோச்சுவதற்கான சாத்தியங்கள் மில்டன் ஒபோடேவுக்கு அருகத் தொடங்கின. ஒபோடே மதுவில் மூழ்கத் தொடங்கினார். விஸ்கி அவரது சிந்தனையை ஆளத்தொடங்கியது. அவரது கையெட்டும் தூரத்தில் எப்போதும் விஸ்கிப் போத்தல் இருந்து கொண்டேயிருக்கும். அவரின் கீழ் அணி திரண்டவர்கள் அவரின் கோரிக்கையை நிறைவேற்றுவதில் முனைப்பாகவே நின்றனர். அவர்கள் ஒபோடேயின் படையினரின் நேரடியான ஆதரவுடன் துற்சிகளை விரட்டியடித்தனர்.

துற்சியினரின் வீடுகள் கொள்ளையடிக்கப்பட்டன. கால்நடைகள் அழித்தொழிக்கப்பட்டன. வீடுகள் எரிந்து தரைமட்டமாயின. பெண்கள் மீது பாலியல் வல்லுறவுகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. இருதயத்தை உருக்கும் குழந்தைகளின் ஓலம் எவரின் காதுகளையும் எட்டவில்லை. அரசு ஒன்றுமே செய்யாது வேடிக்கை பார்த்தது. துற்சிகள் உகண்டாவிலிருந்து ருவண்டாவிற்குத் துரத்தியடிக்கப்பட்டபோது துற்சிக் குழந்தைகள் தாய் தந்தையரிடமிருந்து பிரித்தெறியப்பட்டுத் திக்குத்திசை தெரியாமல் ருவண்டாவில் எங்கெங்கோ அலைந்து திரிந்தனர். சிறுமிகளும் பாலியல் வல்லுறவுகளிலிருந்து தப்பவில்லை. ருவண்டாவில் மரணம் துற்சிகளுக்காக நிச்சயமாகக் காத்திருந்தது. மரணம் அவர்களின் கவலையாக இருக்கவில்லை. பயம்! மரணத்தின் முன் கொடூரமான சித்திரவதைகளுக்கு ஆளாகப்போகும் பயமே என்ன செய்தென்று தெரியாத நிலையில் NRA யில் அவர்களைச் சேரவைத்தது. இவ்வாறு இணந்து கொண்டவர்கள் சிறு தொகையினரல்ல, ஆயிரக்கணக்கில் சேரத் தொடங்கினர்.

ஜனாதிபதி மில்டன் ஒபோடே நாட்டுக்கு விடுத்த செய்தியின் சாரம் பின்வருமாறிருந்தது: "உகண்டாவில் அமைதியையும் ஒருமைப்ப்பாட்டையும் காக்க இந்த நடவடிக்கை அவசியமானது". உகண்டாவின் அயல் நாடுகள் இந்த நடவடிக்கெதிராக எந்தக் கண்டனத்தையும் தெரிவிக்கவில்லை. ஏனெனில் பல ஆபிரிக்க நாட்டுத் தலைவர்கள் இவ்வாறான நடவடிக்கைகளை ஏற்கனவே தமது நாடுகளில் மேற்கொண்டிருந்தார்கள் அவர்களது நடவடிக்கைகள் ஒபோடேவினதுடன் ஒப்பிடுகையில் சிறியதாகவும் குரூரத்தில் குறைந்ததாகவுமிருப்பினும் அவர்களால் ஒபோடேவைக் குற்றஞ் சாட்ட முடியவில்லை. ஏனெனில் முதலில் அவர்கள் அவர்களின் சொந்த நடவடிக்கைகளுக்குப் பதில் கூற வேண்டியிருக்குமல்லவா?

துற்சிகள் 'இடிஅமீன் காலத்தில் இந்தியர்களின் நிலை' போன்ற நெருக்குவாரத்திற்கு உட்படுத்தப்பட்டனர். இந்தத் துன்பங்கள் எனது குடும்பத்தின் மீதும் விரிந்தன. நான் துற்சி இனத்தவள். நாடெங்கும் துற்சிக் குடும்பங்களுக்கு என்ன நடந்ததென்பதை நான் அறிந்தபோது, விரைவில் எனது தந்தைக்கும் அவரின் மனைவிக்கும் இதே துன்பங்கள் நேரிடப்போகின்றதென்பதை நினக்க ஒரு பக்கம் எனக்கு மகிழ்வாகவுமிருந்தது. பழி தீர்ப்பது எவ்வளவு இனிமையானது! ஆனால் நானும் இந்தத் துன்பங்களிலிருந்து தப்பிக்க முடியவில்லை. நான் நினைத்தது போலப் பழிவாங்கல் அவ்வளவு இனிமையாகவும் இருக்கவில்லை.

இன்று நினைத்தாலும் அந்தப் பயங்கரமும் அதன் பின்விளைவுகளும் என்னை உலுக்கி எடுக்கின்றன. பொஸ் (Boss) என்று நான் அழைக்கும் மனிதர் வழமையாக எங்களது வீட்டைத்தாண்டிச் செல்வபர். அவர் எங்களது சிறிய நகரத்தின் ஆளுனர். என்னையோ அல்லது எனது சகோதரிகளில் ஒருத்தியையோ தனது காமப் பசிக்கு இரைபோடுவதற்கு அவர் தருணம் பார்த்திருந்தார். இவரின் தொல்லைகள் தொடங்கியதிலிருந்து நாடகள் எனக்கு நரகமாக மாறிவிட்டன. இந்த மனிதர் என்னக் குறிவைத்துவிட்டார். ஒவ்வொரு முறையும் இந்த மிருகத்தின் விகாரப் பார்வைக்கு முன்னே நான் கூனிக்குறுகிப் போய்விடுவேன்.

ஒருநாள் இந்தக் கிழவர் ஒதுக்குப்புறமாயிருந்த குண்டுகள் விழுந்து பாழடைந்திருந்த கட்டிடத்திற்குள் வலுக் கட்டாயமாக என்னை இழுத்துச் சென்றார். என்ன நடந்ததென்பதை யாருக்காவது சொன்னால் என்னைக் கொன்றுவிடப்போவதாகப் பயமுறுத்தினார். அப்போது எனக்கு ஏழு வயதுதான், ஆயினும் நான் எனது குடும்பதிற்கு இதைப்பற்றிக் கூறினாலும் கூறாவிட்டாலும் இந்தப் பாலியல் துன்புறுத்தல்கள் என்மீது தொடருமென என் உள்ளூணர்வு எனக்குச் சொல்லிற்று. இது எனது மரணம் வரை தொடரலாம்.

எனது தந்தை அரசின் முடிவை அறிந்தவுடன் பண்ணைக்குச் சென்றார். அங்கு எவற்றைக் காப்பாற்றிக்கொள்ள முடியுமோ அவைகளைக் காப்பாற்ற முயன்றார். பண்ணைக்குச் செல்லும் வழியில் அவரது வேலையாள் ஒருவரைச் சந்தித்துள்ளார். அவரும் துற்சி இனத்தைச் சேர்ந்தவர்தான். வேலையாள் அவரை அங்கு போகவேண்டாமென எச்சரித்துள்ளார். என்னால் இப்போதும் தெளிவாக நினைத்துப் பார்க்க முடிகின்றது... எனது நண்பி சோபியாவுடன் நான் விளையாடிக்கொண்டிருக்கும் போது அப்பா தனது வேலையாள் ஒருவருடன் கையில் ஒரு பையுடன் மட்டுமே வருவதைக் கண்டேன். உடனேயே பண்ணையில் நிலமை மோசமாகிவிட்டதென்பதைத் தெரிந்து கொண்டேன். எங்கள் பண்ணையின் அயலவர்களுக்கு எனது அப்பா விரும்பத்தகாதவர் என்பதும் எனக்குப் புரியும். எனது தந்தைக்குச் சொந்தமாகப் பெருமளவு நிலங்களுண்டு, அத்துடன் சட்டம் படித்தவர். அதுவே அவரின் மிகப் பெரிய பலம். அவரின் இந்த அதிகாரநிலை அயலவர்களைத் துன்புறுத்தி அவர்களது நிலங்களில்லிருந்து வெளியேற்ற அவருக்குப் பெரிதும் உதவியது. இவையெல்லாம் இப்போது அவருக்கெதிராகத் திரும்பலாம். அவரை எதிர்பவர்களுக்கு இப்போது பயமில்லை. ஏனெனில் சந்தர்ப்பம் அவர்களின் கைகளைப் பலப்படுத்திவிட்டிருந்தது. பசித்த சிங்கம் போல அவர்கள் இவர் மீது பாயத் தயாராக இருந்தனர். இவர் உதவி செய்தவர்கள் கூட இவரை எதிர்த்தனர். அப்பாவின் கன்றுகளைக் கைப்பற்றியவர்களும் ஆடுகளைக் கவர்ந்து சென்றவர்களும் அவரின் உதவிகளைப் பெற்றவர்கள்தான். வீட்டைக் கொள்ளையடித்தனர், வாழைத்தோட்டத்தையும் அழித்தொழித்தனர். "துற்சிகள் மீண்டும் திரும்பி வரக்கூடாது! அப்படியும் மீறி வந்தால் கொல்லப்படுவார்கள்!" இதுவே அவர்களது முழக்கம்.

அவர்கள் மாடுகளை விரட்டிவிட்டுக் கன்றுகளை ஓட்டிச் சென்றனர். கன்றுகளைப் பாதுகாக்க முயன்ற சில பசுக்களைக் கொன்றனர். வயல்களிலும் வீட்டிலும் அப்பாவைத்தேடி அவர்கள் கொலைவெறியுடன் அலைந்தனர். எங்கள் இரு பண்ணை வீடுகளையும் அந்தக் கூட்டம் அழித்தது. கல்லின் மேல் கல் நில்லாத அழிவு. அப்பாவின் மேல் உள்ள வெறுப்பு அங்கே தீயாய்க் கொழுந்து விட்டெரியலாயிற்று. எங்கள் அயலவர்கள் அப்பாவின் நிலத்தைத் தங்களுக்குள்ளே பங்கு போட்டுக் கொண்டனர்.

நான் எனது நேசமான ஆடுகளை நினைத்துக் கொண்டேன். வேலையாட்கள் எனது அப்பாவினதோ பாட்டியினதோ கையோ காலோ போய்விட்டதென்று சொல்லியிருந்தால் ஒருவேளை நான் மகிழ்ந்திருப்பேன். மாறாக நான் இப்போது எனது பிரியமான ஆடுகளை இழந்துவிட்டேன்.

அப்பா உடைந்து போய்விட்டார். என்ன செய்யலாமென்றே அவருக்குத் தெரியாது போயிற்று. ஒரு கையைக் காற்சட்டைப் பையினுள்ளும் மறுகையைத் தலைமேலும் வைத்துக்கொண்டு வீட்டைச் சுற்றி நடந்து கொண்டேயிருப்பார். பின்பு வரவேற்பறையில் உட்கார்ந்து கண்ணீர் வடிப்பார். தானே தனக்குள் பேசிக்கொண்டிருந்த அவர் வெறிபிடித்தவராய் வீட்டுப் பொருட்களையெல்லாம் அடித்து நொருக்கியதை நான் ஜன்னலிற்குள்ளால் பார்த்தேன்.

சில நாட்கள் கழித்து எனது சகோதரிகள் பாடசாலை விடுதிகளிலிருந்து வந்து சேர்ந்தனர். அப்பாவின் நண்பர்களின் வீடுகளில் பாதுகாப்பாக அவர்கள் விடப்பட்டனர். நானும் தம்பி ரிச்சட்டும் அப்பாவுடன் தொலைவிலுள்ள புதிய பண்ணையொன்றிற்குப் போவதாக முடிவெடுக்கப்பட்டது. இந்த முடிவு பற்றி முதலில் யாரும் எங்களுக்கு எதுவுமே கூறவில்லை. பண்ணையை நோக்கிய பிரயாணத்தில் அப்பாவின் கண்களில் ஆறாத ஆத்திரம் கண்ணீராகப் பெருகியது. எல்லாக் கோபங்களையும் அவர் எங்கள் மீதுதான் தீர்த்துக்கொண்டார். பண்ணையை நோக்கிய பிரயாணம் எல்லையில்லாது நீண்டுகொண்டே சென்றது. நரகத்திற்குப் போவது போலயிருந்தது. நான் அப்பாவைப் பார்ப்பதற்கு முகத்தைத் திருப்பினால் அவர் எனது முகத்தில் காறியுமிழ்ந்தார். இடையிடையே தனது சொத்துக்களைக் கொள்ளையடித்தவர்களைத் திட்டுவார்.அவரின் சொத்துக்களுக்கும் எங்களுக்கும் எந்தவித சம்மந்தமுமில்லாதது போல அவரின் சொற்கள் எனது செவிகளில் ஒலித்தன.

இன்று அதனை மீட்டிப் பார்க்கையில், ஒரு சிறுமி அவளைச் சூழ்ந்திருந்த எல்லாப் பிரச்சினைகளுக்கு நடுவிலும் தனது பட்டறிவினை வளர்க்கவே முயன்றாள்.. எது நல்லது? எது தீயது? என மனம் பகுத்துணர முயன்றது. அப்பா தனது ஏட்டுக் கல்வியிலும் சொத்துச் சேர்ப்பதிலும் பெரிய திறமையாளராக இருந்தது போல ஏன் அவரால் தனது குடும்பத்தைப் புரிந்து கொள்ளமுடியவில்லை? தனது குழந்தைகளப் புரிந்து கொள்ளவில்லை? அப்பா மீண்டும் மீண்டும் எனது தாயை ஏசிக்கொண்டே வந்தார். "ஒன்றுக்குமே உதவாத பெண் ஜென்மம், எல்லாமே பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தையைப் பெற்றுப்போட அவளுக்கு வக்கில்லைல்லை, இன்று நான் தனியாக நிற்கிறேன்".

எனது நம்பிக்கை புத்துயிர் பெற்றது. தனது பலவீனமான ஒருகணத்தில் அப்பா எனது உண்மையான தாயார் பற்றிக் கூறுகிறார். நான் எனது கண்களையும் காதுகளையும் அகலத் திறந்து வைத்தேன். அம்மா எங்கே இருக்கின்றார்? எனது ஆன்மா அம்மாவினுள் புகுந்து கொள்ள முயன்றது. மூடிய கண்களுக்குள் வெள்ளை மேகத்தை வானத்தில் உருவாக்கினேன். சிலவேளை அங்குதான் அம்மா இருக்கிறாரோ? எங்களை இந்தப் பயணத்தில் வழி நடத்தும் நட்சத்திரம் அம்மாவாகத் தான் இருக்க வேண்டும். எங்களிருவரையும் இணைக்கும் வழிகாட்டி நட்சத்திரம் அப்பாவாக இருக்கலாம்.

அப்பா புதிய பண்ணையில் தம்பியையும் என்னையும் விட்டு விட்டுத் திரும்பினார். பழைய பண்ணை மாதிரி இது அழகான பண்ணையல்ல. எனது பாட்டி இப்போதும் கொடுமைக்காரியாகத்தான் இருந்தார். நானும் ரிச்சட்டும் முயல்களை வேட்டையாடுவோம். ஒவ்வொரு தடவை முயலை அடிக்கும்போதும் பாட்டியையே வென்றதாக நாங்கள் குதித்தோம். எங்கள் சந்தோசத்தைப் பாட்டியால் தடுக்கமுடியவில்லை.

ஒருநாள் எங்கள் முயல் வேட்டை ஒன்றிலிருந்து பண்ணை திரும்பியபோது எங்களது சிற்றன்னை அங்கிருந்தார். இனிப் பண்ணையில் நாங்கள் மாத்திரமே வேட்டைக்காரர்களாக இருக்க மாட்டோமென நினைத்துக்கொண்டேன். இரண்டு நாட்கள் கழித்து அப்பா பண்ணைக்கு வந்து சேர்ந்தார். பின்னேரம் வேலையாட்களைக் கூட்டி இந்தப் புதிய சிறிய பண்ணையில் அவர்களுக்குப் போதியளவு வேலை இல்லயெனவும் அவர்களை வேலை தேடச் சொல்லியும் அறிவுறுத்தினார். சற்று நேரம் கழிந்து என்னையும் தம்பியையும் நகர வீட்டிற்குச் செல்ல ஆயத்தமாகுமாறு சொன்னார். காலை உணவாகச் சில கோப்பைகள் பால் குடித்து விட்டு அப்பாவும் அவர் மனைவியும் அவசர அவசரமாகத் தங்களது பொருட்களை ஒன்று சேர்த்தனர். நானும் தம்பியும் அதனை பார்த்துக்கொண்டிருந்தோம். எங்களிடம் எடுத்துச் செல்ல எந்தப் பொருட்களும் இருக்கவில்லை.

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு