குழந்தைப் போராளி - 15


முதலாவது தப்பித்தல் முயற்சி

னது நிலைமை மேலும் மேலும் மோசமாகிக்கொண்டே போனது. சிற்றன்னையின் குற்றச்சாட்டுகள் ஓயந்தபாடில்லை. அப்பாவின் சித்திரவதைகள் நான் அங்கயீனமானவளாகப் போய்விடுனோ என அஞ்சுமளவுக்கு மோசமாகத் தொடர்ந்தன. நிலைமை இவ்வாறாகிப் போனதால் நாட்களைக் கவனமாக ஓட்டுவது மட்டுமின்றி, எனது மனதைத் திடமாக வைத்துக்கொள்ளவும் நான் கடுமையாகப் போராட வேண்டியிருந்தது. நாளாக நாளாகச் சிற்றன்னையின் வெறுப்பு வளர்ந்து கொண்டே போயிற்று. எனது தம்பியைப் பொறுத்த வரையில் என்னுடன் ஒப்பிடுகையில் அவனின் நிலைமை நன்றாகவேயிருந்தது.

ஒருநாள் நான் எனது புத்தகப் பையைத் தொலைத்துவிட்டேன்.மதிய உணவுக்காக வீட்டுக்குச் சென்றிருந்தபோது அதைப் பாடசாலையிலேயே விட்டுவிட்டுச் சென்றிருந்தேன். திரும்பி வந்ததும் குழப்பத்துடன் அங்குமிங்கும் அதைத் தேடினேன். புத்தகப் பை கிடைக்கவேயில்லை. பயம் என்னைக் கவ்விக் கொண்டது. புத்தகப் பையின்றி வீடு சென்றால் என்ன நடக்குமென்பது எனக்குத் தெரியும். மற்ற மாணவர்களெல்லோரும் வீடு சென்றுவிடப் பயப்பிராந்தியுடன் அழுது கொண்டே பாடசாலையிலிருந்து வெளியே வந்தேன். அழுகை எனக்கு உதவப் போவதில்லை. வீடு செல்லத் துணிவில்லாமல் அங்கேயே நின்றேன்.

மாலையாகியிருந்தது, வீட்டில் என்ன நடக்குமென்பதை மனக்கண்ணில் பார்த்துக் கொண்டேன். திடீரென எனது சினேகிதி ரெகேமாவின் ஞாபகம் வந்தது. அவள் தனது சித்தப்பாவின் வீட்டில் தங்கிப் படித்து வந்தாள். நான் அவளைத் தேடிப் போய்க்கொண்டிருக்கையில் வழியிலேயே அவளைச் சந்தித்தேன். அவளிடம் எனக்கு உதவி செய்யுமாறு கெஞ்சினேன். அவளென்னை வாழைத்தோட்டத்தினுள் ஒழிந்திருக்குமாறும், வாய்ப்பு வரும் போது என்னைத் தனது அறையினுள் கூட்டிச் செல்வதாகவும் சொன்னாள். நான் நீண்டநேரமாக வாழைத்தோட்டத்தினுள் ஒழிந்திருந்தேன்.இறுதியாக அவள் வந்து தனது அறைக்கு என்னைக் கடத்திச் சென்றாள். அவளது அறை ஆட்டுப் பட்டியை ஒட்டியிருந்தது. அவளால் சிறிது உணவையும் தேடிக்கொள்ள முடிந்திருந்தது. நாங்கள் சாப்பிடத் தொடங்கும் போது அவளின் சித்தப்பா அவளைக் கூப்பிட்டார். அவள் தான் திரும்பி வரும் வரை சாப்பிட வேண்டாமெனக் கூறி விட்டுச் சென்றாள். அவர்களின் வீட்டிற்குத் திடீர் விருந்தினர்கள் வந்திருந்தார்கள். அவர்கள் ரெகேமாவின் அறையில் அன்றிரவு தூங்கப் போகின்றார்கள். எனவே ரெகேமா என்னை ஆட்டுப் பட்டிக்கு மாற்றினாள். அதிகாலையில் மற்றவர்கள் தூக்கத்திலிருந்து விழிப்பதற்கு முன்னதாகவே ரெகேமா ஆட்டுப் பட்டிக்கு வந்து என்னை எழுப்பிவிட்டாள்.பதற்றத்துடன் எழுந்த நான் அவளை மிகவும் நேசிப்பதாகச் சொன்னேன்.

பற்றைக் காடுகளுக்குப் போவதென்று முடிவெடுக்கும் வரை வாழைத்தோட்டத்தில் அலைந்து திரிந்தேன். பசி வயிற்றைப் பிறாண்டத்தொடங்கியது. பிச்சையெடுக்கலாம் என்ற முடிவைச் சற்றுத் தள்ளிவைத்தேன். பிரதான சாலை மிக அருகாமையிலேயே இருந்தது. அங்கு சென்று கார்களை எண்ணத் தொடங்கினேன். எனது வயிறு பசியில் உறுமுவதை எனது செவிகள் கேட்காதிருக்க ஒரு தந்திரம் செய்தேன். எனக்குத் தெரிந்த பாடல்களையெல்லாம் உரக்கப் பாடினேன். தோல்விதான் கிடைத்தது. பாடுவதைக் கைவிட்டு மல்லாந்து படுத்துக்கொண்டே எனது சக்திகளை எல்லாம் திரட்டி என் உண்மையான தாயாரை உருவகப்படுத்தும் முயற்சியில் இறங்கினேன். அதுவும் சரிவரவில்லை. வயிற்றின் கூப்பாடு பெருகிக்கொண்டே போகச் சாலையோரத்தில் நின்று கையை நீட்டிப் பிச்சை கேட்க ஆரம்பித்தேன். யாருமே என்னைக் கவனிக்கவில்லை. பழுப்பு நிறக் காரொன்று என்னருகில் வந்து நின்றது. காரை நிறுத்திய மனிதர் நான் ஏன் பிச்சையெடுக்கின்றேன்? எனக் கேட்டார். நான் நடந்தவற்றைக் கூற அவர் கொஞ்சம் சில்லறைகளைத் தந்துவிட்டு அவர் திரும்பி வரும்வரை என்னை அங்கேயே காத்திருக்கச் சொன்னார். அவர் போனவுடனேயே ஓடிச் சென்று வாழைப்பழங்களையும் சிறிய பிஸ்கட்டுகளையும் வாங்கி வந்து அமைதியான ஓரிடத்தில் உட்கார்ந்துகொண்டு சாப்பிடத் தொடங்கினேன். வாழைப்பழத்தின் தோல்களைச் சாப்பிடும் தேவையின்றியே எனது பசி அடங்கிற்று. புல்லில் கைகளைத் துடைத்துக் கொண்டே மீண்டும் வீதிக்கு வந்து அந்த மனிதருக்காகக் காத்திருந்தேன். அந்த மனிதரிடம் அப்பாவின் பெயரையும் அவர் எங்கு வேலை செய்கிறார் என்பதையும் நான் சொல்லியுள்ளேன் என்பது என் மண்டையில் திடீரென உறைத்தது. உடனே மீண்டும் ஓங்கி வளர்ந்த புற்களினூடு புகுந்து தலை தெறிக்க ஓடினேன்.இறுதியாகப் பெரிய மைதான மொன்றை வந்தடைந்தேன். இங்கு யாரும் என்னைத் தேடி வர முடியாது.

சூரியன் உச்சிக்கு வந்து விட்டான். நான் வெயிலில் மயங்கி விழக்கூடிய தருணம் வெகு தூரத்திலில்லை. வீடுவீடாகச் சென்று வேலை தேடாலாமென முடிவெடுத்தேன். எங்கெல்லாம் சென்றேனோ அங்கெல்லாம் எனது வயதையும் அப்பாவின் பெயரையும் கேட்டார்கள். நாளோ முடிந்து விடும் போலிருந்தது. நானும் எல்லா வீட்டுக்கதவையும் தட்டிவிட்டேன். யாருமே எனக்கு வேலை கொடுக்கவில்லை.

மெல்ல மெல்ல வானம் இருளத் தொடங்கியது. நான் நீதிமன்றத்திற்கு முன்னால் நின்றிருந்தேன். நீதிமன்றம் தூங்கவதற்கு பொருத்தமான இடமில்லைத் தான், ஆனால் நண்பி வீட்டிலோ விருந்தினர்கள். எனவே இங்கேயே தூங்கிவிட வேண்டியதுதான் எனத் தீர்மானித்தேன். பாடிக் கொண்டே தூங்கிப் போனோன் திடீரென்று விழிப்புத் தட்டி நான் குழப்பத்துடன் சுற்றும் முற்றும் பார்த்த போது இரவு பிரச்சினையின்றியே கழிந்து போனதெனத் தெரிந்துகொண்டேன்.

நீதிமன்றக் கட்டிடம் ஆற்றங்கரையிலேயே அமைந்திருந்தது. ஆற்றில் மிதந்து வந்த குளிர் காற்று என் சோம்பலை முறித்தது. ஆடுகளின் நாற்றம் என் உடலிலிருந்து வீசியதால் ஆற்றில் குதிக்கத் தான் ஆசையாக இருந்தது. நீச்சல் தெரியாததால் ஆற்றில் கல்லெறிந்து என்னைத் தணித்துக்கொண்டேன். ஆற்றங்கரையோரமாக நடந்து சென்றுகொண்டிருந்த போது சிறிய வீடொன்று என் கண்ணிற் பட்டது. எனது அதிர்ஷ்டத்தைக் கடைசியாக ஒரு தடவை பரிசோதித்துப் பார்த்துவிடலாமென நினைத்தேன். அந்த வீட்டு வாசலில் கொஞ்ச நேரம் தயங்கி நின்றுவிட்டுப் பின் துணிவை வரவழைத்துக்கொண்டு கதவைத் தட்டினேன்.

"உள்ளே வரலாம்" எனக் குரல் கேட்டது. கதவு திறந்து கொண்டது.

அந்த வீடடிலிருந்த மனிதர் சிரித்துக்கொண்டே என்னை வீட்டிற்குள்ளே அழைத்துச் சென்றார். அவரும் மற்றவர்கள் மாதிரியே என் பெயர், வயது, ஊரை விசாரித்தார். ஆனால் மற்றவர்கள் மாதிரியல்லாமல் அவரென்னை வீட்டினுள் அழைத்து உட்கார வைத்து விசாரித்ததால் என்னால் முடிந்தவரை அவரின் கேள்விகளுக்கு நான் பதில் சொன்னேன். "எனது மனைவி வீடு திரும்பும்வரை நீ இங்கேயே காத்திரு" என அவர் சொன்னதும் நான் அவரிடம் கேள்விகளைக் கேட்கத் தொடங்கினேன். "நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்?" எனக் கேட்டேன். "வைத்தியர்" என்று பதில் வந்தது.

"ஏன் வேலைக்குச் செல்லவில்லை?"

"கால்களில் சிறு பிரச்சினை.. நான் பிறந்ததிலிருந்தே இந்தப் பிரச்சினையுள்ளது. அதனால் சிறிது ஓய்வெடுத்துக் கொள்கிறேன்."

"என்ன சொல்கிறீர்கள்? என்னைப் போலத் தானே இரண்டு கால்கள் உங்களுக்கும் உள்ளன."

"உண்மை தான் ஆனால் எனது ஒரு கால் மற்றக் காலை விடச் சின்னது."
"எந்த ஆஸ்பத்திரியில் வேலை செய்கிறீர்கள்?"

"எதற்காகக் கேட்கிறாய்?"

"எனது அப்பாவோ அல்லது சிற்றன்னையோ உங்களது ஆஸ்பத்திரிக்கு வந்தால் அவர்களுக்குப் பெரிய ஊசியாகக் குத்துங்கள். அவர்களும் ஒரு தடையாவது அழுது குழற வேண்டும்."

அவர் மெதுவாகத் தலையாட்டிக்கொண்டே என்னை உற்றுப் பார்த்தார். சிறிது நேரம் ஒன்றுமே பேசாமலிருந்த அவர் பின்பு "நீ உன் தந்தையை நேசிக்கிறாயா? எனக் கேட்டார்.

"ம்.. ஆனால் அவர் என்னை நேசிக்கவில்லை."

"உனது அப்பா இறந்துவிட்டால் நீ அழுவாயா?"

"இல்லை, அப்பாவும் சிற்றன்னையும் சேர்ந்து இறந்தால் அழ மாட்டேன், அப்பா மட்டும் இறந்து அவளிருந்தால் அழுவேன்."

எங்களது பேச்சு தடைப்பட்டது. அவரது மனைவி கையில் ஒரு குழந்தையுடன் வந்தார். அதுவொரு ஆண் குழந்தையாக இருக்க வேண்டும். அந்தப் பெண் எனது சிற்றன்னையைப் போலவே இருந்ததால் என்னைத் தனது குழந்தையைப் பார்த்துக் கொள்ளச் சொல்வார் என எண்ணினேன். அந்த எண்ணமே எனக்கு எரிச்சலூட்டியது. அவரெனக்கு வாழ்த்துச் சொல்ல நானும் எரிச்சலுடன் அவருக்குப் பதில் வாழ்த்துச் சொன்னேன். நான் வாழ்த்துச் சொன்ன தொனி அந்தப் பெண்ணுக்கு வருத்தத்தைக் கொடுத்திருக்க வேண்டும். அவர் மெதுவாக என்னைத் தொட்டு "ஏதாவது பிரச்சினையா?" எனக் கேட்டார்.

"இல்லை.. நான் உங்களது குழந்தையைப் பார்த்துக் கொண்டிருந்தேன்"

"குழந்தைகளென்றால் உனக்குப் விருப்பமா?"

"ம்.."

கணவனும் மனைவியும் என்னை வரவேற்பறையில் விட்டுவிட்டு உள்ளே ஆலோசனைக்காகச் செல்ல அவர்கள் என்ன முடிவெடுக்கப் போகிறார்களோ என்ற பதற்றத்துடன் காத்திருந்தேன்.

அந்தப் பெண் வெளியே வந்து என்னை அப்பாவிடம் தான் அழைத்துச் செல்வதாகக் கூற நான் ஒன்றும் சொல்லாதிருந்தேன். அது கட்டளையா அல்லது கேள்வியா என என்னால் சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. அவரது கண்களைப் பார்த்தவாறே "உங்களது கணவர் என் அப்பா பற்றி ஒன்றும் உங்களிடம் சொல்லவில்லையா?" என வாய்க்குள் முணுமுணுத்தேன். பின் உரக்க "எனது அப்பாவிடம் உங்களுக்குப் பயமில்லையா?" எனக் கேட்டேன். அவர் சிரிப்பை மட்டுமே பதிலாகத் தந்தார். அன்றிரவு அழகிய படுக்கை அறையில் மிருதுவான மெத்தையில் தூங்க எனக்கு அனுமதி கிடைத்தது. எனினும் அந்தப் பெண்ணின் சிரிப்பு எனக்குக் குழப்பத்தை விளைவித்தது. நாளை எனக்கு எப்படி விடியப் போகிறது?

காலையில் எழுந்து பதற்றத்துடனும் எதிர்பார்ப்புடனும் வரவேற்பறையில் உட்கார்ந்திருந்தேன். அந்தப் பெண் படுக்கையறையிலிருந்து வெளியே வந்தார். என்னைக் கடந்து சமையலறைக்குச் சென்றவர் அங்கிருந்தபடியே "தேனீர் வேண்டுமா?" எனக் கேட்க தலையாட்டி மறுத்தேன். அவர் தனது கையிலொரு கோப்பையுடன் வந்து என்னருகே உட்கார்ந்து கொண்டார். எனக்கு வயது குறைவாக இருப்பதால் என்னை வேலைக்கு வைத்துக்கொள்ள முடியாதெனச் சொன்னார். "உனக்கு ஒரு குடும்பமுண்டு, அதனால் நீ உன்னுடைய வீட்டிற்குத் திரும்புவது தான் நல்லதென நாங்களிருவருமே நினைக்கின்றோம்." வீடு திரும்புவது பற்றி நான் பேசவே விரும்பவில்லை. "எனக்குச் சம்பளமே வேண்டாம், வேலைக்கு வைத்துக்கொள்கிறீர்களா?" எனக் கேட்டேன். ஆனால் அவரோ " நீ மனவுறுதி கொண்டவளாக இருக்கவேண்டும், அடி உதைகளுக்கு நீ பயப்படக்கூடாது, அது மட்டுமல்லாது நீ உனது சிற்றன்னையிடம் தோற்றுவிடக்கூடாது, நீ தொடர்ந்து படிக்க வேண்டும், உன்னை என் வீட்டில் வைத்துக்கொண்டால் அது எந்த வகையிலும் நான் உனக்கு உதவுவதாக இருக்காது, நீ உன் குடும்பத்தைப் பிரிந்து தனியாக நிற்பதில் எனக்குச் சம்மதமில்லை." எனச் சொல்லி முடித்தார்.

நான் இங்கு இருப்பது சாத்தியமில்லை என எனக்குத் தெளிவாகவே விளங்கிவிட்டது. அழுத கண்ணும் சிந்திய மூக்குமாக நான் அந்தப் பெண்ணின் முன்னே நின்றேன். ஓர் அதிசயம் நடந்து அவரென்னை இங்கேயே தங்கிவிடச் சொல்லமாட்டாரா எனத் தவித்தேன். என்னிடம் எனது ஆடைகளையும் பொருட்களையும் வைத்திருக்கும் ஒரு பையாவது இருந்திருந்தால் நான் உடுப்புக்களை அடுக்கும் சாட்டிலாவது சிறிது தாமதித்திருக்கலாம். இப்போதோ நான் உடனடியாகவே புறப்பட வேண்டியிருந்தது. நான் இன்னும் கொஞ்ச நேரம் அங்கே இருப்பதற்கான உபாயங்களைத் தேடத் தொடங்கினேன். பாத்திரங்களைக் கழுவி வீட்டைச் சுத்தம் செய்வதாக அவரிடம் கூறினேன்.
"கட்டாயமல்ல, அதைச் செய்வதில் உனக்கு மகிழ்ச்சியென்றால் செய்யலாம்" எனச் சொன்னார். உடனடியாக வேலையைத் தொடங்கினேன். என் எண்ணங்களை ஒழுங்குபடுத்த வேலை உதவியது. வேலைகளை முடித்துக்கொண்டு நான் புறப்படும் போது அவர் எனக்குக் கொஞ்சப் பணம் தந்து "இது உனக்கு ஏதேனுமொரு வகையில் உதவலாம், கவனமாகப் போ!" எனச் சொன்னார். என் தொண்டையிலிருந்து எந்தச் சொல்லுமே வெளியே வரவில்லை. மெளனமாக அங்கிருந்து வெளியேறினேன்.

எங்கு செல்வதென்று எனக்குத் தெரியவில்லை. எங்களது வீடிருந்த பகுதிக்கு எனது கால்கள் தாமாகவே வந்த போது வழியிலே எனது சகோதரர்களைக் கண்டேன். அவர்கள் என்னை கண்டதால் தங்களுக்கு மகிழ்ச்சி என்றுதான் காட்டிக் கொண்டார்கள். அது எனக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. காலை உணவின் போது நான் அவர்களுக்குப் பரிமாறுவேன். நானில்லாததால் அவர்களுக்கு அந்தப் பணிவிடை கிட்டியிருக்காது. அதனாலேயே நான் திரும்பி வந்ததால் அவர்கள் மகிழ்கிறார்களோ? நான் எடுத்த எடுப்பிலேயே "அப்பா என் மீது கோபமாக இருக்கிறாரா?" என அவர்களிடம் கேட்டேன். "இல்லை... அவர் உனக்கு அடிக்க மாட்டார்." எனச் சொன்னார்கள். அவர்கள் என்னை பயப்படவேண்டாமெனச் சொன்னாலும் என்னால் அதை நம்ப முடியாதிருந்தது. அவர்கள் என்னை வீட்டிற்கு கூட்டிச் செல்வதில் ஆர்வமாக இருந்தபடியால் என்னை வீட்டிற்கு அழைத்து வரச் சொல்லி அவர்களிடம் அப்பா உத்தரவிட்டிருப்பாரோ என நினைத்துப் பார்த்தேன். ஒரு தம்பி தான் வீட்டிற்குச் சென்று சிற்றன்னையிடம் பிரச்சனையின்றி நான் வீட்டிற்கு வரலாமா எனக் கேட்டு வருவதாகச் சொன்னான். போன வேகத்திலேயே அவன் திரும்பி வந்தது எனக்குச் சந்தேகத்தினை வரவழைத்தது. ஆனாலும் எனக்கு வேறு வழியேது? நான் ஒரு பிச்சைக்காரியைப் போன்றவள். இரக்கத்தை யாசித்து நிற்பவள்.

சிற்றன்னை அமைதியாகவே காணப்பட்டார். எனது விளக்கங்கள், முக்கியமாக மன்றாட்டங்கள் அவருக்குத் திருப்தியளித்திருக்க வேண்டும். தான் அப்பாவைச் சமாதானப்படுத்துவதாக என்னிடம் சொன்னார். சிற்றன்னை குத்தி முறியாதபடியால் அவரை நான் நம்பினேன். அப்பா மதியத்திற்குப் பின் வீட்டிற்கு வருவதாயிருந்தது. நான் அவரின் கேள்விகளுக்காக என்னைத் தயார்படுத்திக் கொண்டேன். ஒரு தகப்பனாக நான் திரும்பி வந்ததற்காக அவர் சந்தோசப்பட்டு வீட்டில் என்னை இருக்க அனுமதிக்கலாமென நினத்துக் கொண்டேன். ஆனால் இந்த நம்பிக்கை பொய்த்துப் போயிற்று. அப்பா வந்ததும் வராததுமாக மூர்க்கத்துடன் ஒரு சடப் பொருளைக் கையாளுவது போல என்னைத் தூக்கித் தரையில் அடித்தார். எந்தக் கேள்வியும் என்னிடம் கேட்கப்படவில்லை. எந்த விளக்கமும் அளிக்க எனக்கு அவகாசம் தரப்படவில்லை. எல்லாமே மிக விரைவாக நடந்தேறியது. எனக்கு மீண்டும் சுய நினைவு வந்தபோது எனது முகத்தில் இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. நான் அறையில் வைத்துப் பூட்டப்பட்டிருந்தேன். நான் இருள்வெளியிற் கிடந்தேன். என் மனமும் இருண்டு கிடந்தது.

அடிபட்டதில் ஒரு கண் வீங்கி மூடிக்கொண்டது. அது என்னைக் கவலைப்பட வைத்தது எப்போதுமே அடிகள் விழும்போது என் கண்களைப் பாதுகாப்பதில் நான் மிகக் கவனமாயிருப்பேன். எனது சட்டையில் ஒரு துண்டைக் கிழித்தெடுத்து முகத்தில் வடிந்த இரத்தத்தில் நனைத்துக் கண்ணில் கட்டிக் கொண்டேன். இது என் கண்ணைத் திறக்க உதவுமென நம்பினேன். விலாப் பகுதியில் வலி எடுத்ததால் பயந்து அலறினேன். அப்பா ஒடி வந்து என்னைக் கண்டதும் அதிர்ச்சியில் உறைந்து நின்றார். "கடவுளே" எனக் கூவிக்கொண்டே எனது உடைகளைக் களையச் சொன்னார். என்னைக் குளியலறைக்குக் கூட்டிச் சென்று சுடுநீரால் என் இரத்தத்தைக் கழுவினார். அவரது முகத்தில் கவலையைக் கண்டதும் தான் விலாப்பகுதியில் வலியெடுப்பது பற்றிக் கூற எனக்குத் தைரியம் வந்தது. எனது உடல் முழுவதும் கன்றிப் போயிருந்தது. நாளை என்னை அவர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதாகச் சொன்னார். அங்கு என்னைக் கேள்வி கேட்டால் எப்படிப் பதில் கூற வேண்டுமென்றும் சொல்லித் தந்தார். இந்த முறை மரத்திலிருந்து தவறிக் கீழே விழுந்து விட்டேனென்று சொல்ல வேண்டுமாம். பின்பு நாங்கள் கடைக்குச் சென்று எனக்குப் புதிய சப்பாத்துக்கள் வாங்கலாமாம்.

இரவு முழுவதும் நான் அழுதுகொண்டேயிருந்தேன். அந்த இரவில் அடி உதைகளை நினைத்து நான் அழவில்லை. அப்பாவின் அன்பான வார்த்தைகளை நினைத்து, என்றுமே இல்லாதவாறு என் மீது பரிவு காட்டியதை நினைத்து அழுதேன். அழுதுகொண்டே தூங்கிப்போனேன்.

நான் தூக்கம் கலைந்து எழுந்தபோது உடல் முழுவதும் வலித்தது. எழ முயற்சித்தேன், ஆனால் என்னால் அசையவே முடியவில்லை. அப்பா வந்து எனது நெற்றியைத் தொட்டுப் பார்த்தார். வெளியே போனவர் சிறிது நேரத்தில் ஒரு வைத்தியருடன் திரும்பி வந்தார். வைத்தியர் என்னைப் பரிசோதித்து விட்டு உடைந்து போன விலா எலும்புகளைச் சரிப்படுத்த என்னை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்ல வேண்டும் எனச் சொன்னார். அப்பா வைத்தியரை யோசனையுடன் பார்த்தார். பின்பு ஆஸ்பத்திரியில் என்ன சொல்ல வேண்டுமெனக் கேட்டார்.

"இந்தப் பிரச்சனையைத் தீர்க்க ஒரு வழியுண்டு, ஆனால் அதற்குக் கொஞ்சம் பணம் செலவாகும்"

"எவ்வளவு செலவாகும்?"

"நிலைமை மோசமாய் இருப்பதால் என்னால் எவ்வளவு என்று சொல்ல முடியாது, ஆனால் என் நண்பனொருவன் அங்கு வேலை செய்கின்றான், அவனால் இந்தச் சிறுமியை மீண்டும் சரியாக்க முடியும்."

நான் குணமடைந்த பின்பு அப்பா என்னைக் கடைக்கு அழைத்துச் சென்றார். என் வாழ்வில் முதன் முறையாக என்னால் சந்தோசத்தைத் தாங்க முடியாது போயிற்று. அப்பா கை நிறைய மிட்டாய்களை வாங்கித் தந்தார். எனது சந்தோசம் நீடிக்கவில்லை. அப்பா போனதும் சிற்றன்னை என்னை வீட்டைவிட்டு வெளியே துரத்தி மிட்டாய்களைச் சாப்பிட்டு முடிக்காமல் வீட்டுக்குத் திரும்பி வரவேண்டாமெனக் கட்டளையிட்டார். மாஹி சொன்னது தான் நினைவுக்கு வந்தது "இந்தப் பெண் தனது வெறுப்பைத் தனது சவக்குளி வரை எடுத்துச் செல்வாள்"

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு