குழந்தைப் போராளி - 12


மாஹியின் கலகம்

நான் மறுபடியும் வீட்டிற்குத் திரும்பி வந்தபோது மாஹியும் ஹெலனும் பாடசாலை விடுதிக்குத் திரும்பிவிட்டதாக மேரி சொன்னார். ஒரு வாரத்தின் பின்னர் எல்லாம் பழைய மாதிரியே இருந்தது. எனது தம்பி தனது பழைய நண்பர்களுடனும் நான் எனது பழைய எதிரிகளுடனும் சேர்ந்து கொண்டோம்.

தனிமை என்னை அழுத்தியது. முன்னைய எனது சினேகிதர்களெல்லாம் வேறு இடங்களுக்குப் போய் விட்டார்கள். புதிய சினேகிதர்களைத் தேடுவது எளிதாகயிருக்கவில்லை. நான் எப்போதும் தனியாகவே இருந்தேன். பின்பு மூன்றாவது வகுப்பில் படிக்கும் இரு சகோதரிகளைச் சந்தித்தேன். யூடித், முற்றோன், இருவரும் அழகிய கழுத்துப்பட்டைகளும் சப்பாத்துகளும் அணிந்திருந்தனர். கைச் செலவிற்கும் அவர்களிடம் தாராளமாகப் பணமிருந்தது. முழுப் பாடசாலையும் அவர்கள் மீதே கண்ணாக இருந்தது. அவர்கள் என்னை அவ்வளவு சுலபமாகச் சினேகிதியாக ஏற்றுக்கொள்ளவில்லை. நானாகத் தான் அவர்களிடம் போனேன். அவர்களும் என்னுடன் ஏனோதானோ என்றுதான் பழகினார்கள்.

ஒருநாள் அவர்களது அம்மா பாடசாலைக்கு வந்திருந்தார். பற்றிசியா என்பது அவரின் பெயர். 'எனது அப்பாவை அவருக்குத் தெரியுமென்பது' என்னை ஆச்சரியத்திற்குள்ளாக்கியது. அதுமட்டுமல்ல, எனது உண்மையான அம்மாவையும் அவருக்குத் தெரிந்திருந்தது. என்னால் அமைதியாக இருக்க முடியவில்லை, நான் துடித்துக்கொண்டிருந்தேன். அவரின் பிள்ளைகள் "இவளின் அம்மா இருக்குமிடம் தெரியுமா?" எனக் கேட்கச் சிரிப்பையே பதிலாகத் தந்தவர் அவர்கள் போன பின் அம்மாவின் முகவரியை எனக்குத் தந்தார். நான் எந்தக் காரணத்தைக்கொண்டும் அப்பாவிற்கு முகவரியைக் காட்டக் கூடாதென்பது அவரது கட்டளை. நான் அவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடந்து கொள்வது எனத் தீர்மானித்தேன். மீண்டும் மீண்டும் அவரென்னை எச்சரித்ததால் முகவரியைக் கவனமாக மறைத்து வைத்தேன். மிகவும் சிரத்தை எடுத்து விடுமுறைக்கு வரும் சகோதரிகள் கூடக் கண்டுபிடிக்க முடியாதபடி அம்மாவின் முகவரியை மறைத்து வைத்தேன்.

பாடசாலை விடுதியிலிருந்து வீடு திரும்பிய எனது சகோதரி மாஹி எங்கள் எல்லோரையுமே ஆச்சரியப்படுத்தினாள். சிற்றன்னையை எதிர்த்து ஒரு பெரிய பெண் போல மாஹி நடந்து கொண்டாள். எங்கள் சிற்றன்னை நாளுக்கு நாள் உடலால் மெலிந்து போனாலும் தகப்பனுக்கும் பெண்மக்களுக்குமான இடைவெளியைப் பெருக்குவது அவளால் முடிந்த காரியமாகவே இருந்தது. ஏறத்தாழ ஒவ்வொரு நாளும் எனது சகோதரிகள் அடி வாங்கினார்கள். மாஹி மாத்திரம் அடி உதைகளுக்கு அஞ்சவில்லை. அடி விழ ஆரம்பித்தவுடனேயே ஹெலன் அலறத் தொட்ங்கிவிடுவாள். அடிக்கவேண்டாமென மன்றாடுவாள். மாஹியோ பல்லைக்கடித்துக்கொண்டு கடைசிவரை பொறுமையுடன் அடிகளைத் தாங்குவாள். அடிகளை வாங்கியபின் "ஒரு காரணமுமின்றி எனக்கு மீண்டும் மீண்டும் அடிக்கிறாய்" என அப்பாவை முகத்துக்கு முகம் பார்த்துக் கூறுவாள். அப்பா அடிக்கத் தொடங்கியதும் சிற்றன்னை தளபாடங்களை நகர்த்தி அப்பா அடிப்பதற்கு இடைஞ்சலில்லாமல் இடவசதி செய்து கொடுப்பதையும் நான் கவனித்துள்ளேன்.

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு