குழந்தைப் போராளி - 14


கோடை விடுமுறை

கோடைகால விடுமுறைக்காகப் பாடசாலை மூடியவுடன் அப்பா புதிய பண்ணைக்குப் பாட்டியுடன் விடுமுறையைக் கழிக்க எங்களைக் கூட்டிச் சென்றார். பிரயாணத்தின் போது அப்பா ரிச்சட்டிற்கு ஒரு குட்டிப் பிரசங்கமே நிகழ்த்தி விட்டார். ரிச்சட் பெரியவனாகி விட்டதாகவும் இனி அவன் எங்களைக் கவனித்துக் கொள்ள வேண்டுமென்பதுவும் அவரின் நியாயங்கள். ரிச்சட்டின் வயதிலே அவர் பல பொறுப்புக்களை ஏற்றிருந்ததாகவும் கூறினார். நானும் ரிச்சட்டும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம்.
நாங்கள் பண்ணயை அடைந்தது அப்பாவின் தலைக் கறுப்பு மறைந்ததுமே நாங்கள் மெதுவாக நழுவினோம். ரிச்சட் தேனெடுக்கப் போவோமெனச் சொன்னான். மாஹி "முதலில் நாங்கள் பிளாஸ்டிக் பைகளைச் சேகரித்துக் கொண்டால் தான் தேனீக்களின் தாக்குதல்களிலிருந்து தப்பிக்கலாம் அத்துடன் நெருப்புக் குச்சிகளும் ஒரு கத்தியும் தேவை" என்றாள். எல்லாவற்றையும் சேகரித்துக் கொண்டு காட்டை நோக்கிச் சென்றோம் .நிலவு மாத்திரமே எங்கள் பாதையில் வெளிச்சத்தைத் தீற்றிக்கொண்டிருந்தது. கடுமையான தேடலுக்குப் பின்பாக ஒரு தேன் கூட்டைக் கண்டு பிடித்தோம். தேனீக்கள் மூர்க்கமாக எங்களை எதிர் கொண்டன. தலையை மூடி நாங்கள் போட்டிருந்த பிளாஸ்டிக் பைகளில் சரமாரியாக வந்து கொட்டின. பயத்தினால் எனக்கு வியர்வை வழிந்தோடத் தொடங்கியது. தேனீக்களை எதிர்கொள்ளத் தேவையான அளவு புகையை உருவாக்குவதில் நாங்கள் முனைந்திருந்தோம். அதிர்ஷ்டவசமாக அதில் நாங்கள் வெற்றியும் பெற்றோம். எங்கள் கண்களின் முன்னே தேனடைகள். ஆனால் எங்களது அதிர்ஷ்டம் தொடரவில்லை. தேனடை முழுக்கச் சிறிய புழுகள் ஊர்ந்து கொண்டிருந்தன. நாங்கள் பெருத்த ஏமாற்றத்துடன் வீடுதிரும்பினோம்.

இரவு உணவிற்காகப் பாட்டி பால் காய்ச்சிகொண்டிருந்தார். எங்களைத் திரும்பிப்பார்த்து விட்டு ஒன்றுமே பறையாமல் மெளனமாயிருந்தார். ஒன்றில் அவருக்குக் கோபம் எல்லை மீறியிருக்கவேண்டும், அன்றேல் இனி அவரால் ஒன்றுமே செய்ய முடியாததென்று அவர் நினத்திருக்கவேண்டும். ஓர் அழகிய சிறிய வெற்றி! பாலைக் குடித்த பின்பு பாட்டிக்கு இரவு வணக்கம் கூறிவிட்டுப் படுக்கைக்குப் போனபோது சிரிப்பு எங்களின் உதடுகளில் விளையாடிக்கொண்டிருந்தது. அப்பா சென்ற பின்பு அதிகாரத்தை நாங்கள் கைப்பற்றிக் கொண்டோமென மகிழ்ந்து போனோம்.

காலையில் பால் கறப்பதற்கு மாஹி வேலையாட்களுக்கு உதவி செய்தாள். நானும் ரிச்சட்டும் கன்றுகளைப் பார்த்துக்கொண்டோம். பால் கறப்பு முடிந்ததும் ஐந்து நாய்களையும் கூட்டிக்கொண்டு நாங்கள் முயல் வேட்டைக்குக் கிளம்பினோம். துரிதமாகவே நாய்கள் முயல்களைக் கண்டுகொண்டன. முயல்களை நாய்கள் துரத்த நாங்களும் நாய்களின் பின்னே தொடர்ந்து ஓடினோம். முயலொன்று வேகமாகச் சென்று ஒரு பொந்தினுள் புகுந்து கொண்டது. ஒரு நாயைப் பொந்தின் மறுபுறத்தில் காவல் வைத்துவிட்டுப் பொந்தைத் தோண்டத் தொடங்கினோம். திடீரென பொந்தின் மறுபகுதியில் வெளிப்பட்ட முயல் மின்னல் வேகத்தில் நாயின் கால்களிடையே புகுந்து வேகமாக ஓடியது. மீண்டும் பழையபடி துரத்துதல் ஆரம்பமானது. ஓரு பெரிய சாகசத்தின் பின்பு நாய் முயலைப் பிடித்துவிட்டது. முயலை நெருப்பிலே வாட்டி நாய்களுக்குக் பிய்த்துப்போட அவை தமக்குள் சண்டைபோட்டுக் கொண்டே தின்றன. நாங்கள் முயலைச் சாப்பிடவில்லை. முயல் வேட்டை தான் எங்களுக்குப் பிடித்தமானது.

முடிவில் சகோதரர்கள் எல்லோரும் நெருப்பைச் சுற்றி உட்கார்ந்து கொண்டு எங்களுக்கு உடுத்திக் கொள்ள உடுப்புகள் குறைவாகவே இருப்பது பற்றியும் பணத்தை எவ்வாறு சம்பாதித்துக் கொள்ளலாமெனவும் பேசிக் கொண்டோம். ரிச்சட் ஒரு பசுவை விற்கலாமென்றான். மாஹி நாங்கள் பால் விற்கலாமென்றாள். எனக்கு வேறொன்றும் யோசனை தோன்றாததால் நான் மாஹியின் திட்டத்தை ஆதரித்தேன்.
நாங்கள் வீடு திரும்பியபோது போது பாட்டி கையில் தடியுடன் நின்றார். "நாள் முழுக்க எங்கே போய்த் தொலைந்தீர்கள்?" எனக் கோபமாகக் கேட்டார். மாஹி ஒன்றுமே சொல்லாது பாட்டியைக் கடந்து சென்றாள். பாட்டியைப் பற்றி எனக்கு நன்றாகவே தெரியும். அத்துடன் பாட்டி பற்றிய பயம் மாஹியை விடக் கூடுதலாகவே எனக்குண்டு. அனுபவம் தந்த பாடத்தால் நான் அங்கேயே நின்றேன். தனது முலையொன்ன்றைப் கையிலெடுத்து அதை வானை நோக்கிப் பிடித்துக் கொண்டே பாட்டி மாகியை நோக்கி "இந்த முலையில்தான் உன் தகப்பன் பால் குடித்தான், இந்த முலையால் நானுக்குச் சாபமிடுகின்றேன்" என்று கத்தினாள்.தொடர்ந்து பாட்டி மாஹியைப் பார்த்து "நீ வீட்டைவிட்டு ஓடி வீதிகளில் அலைந்து திரிந்து தெருவிலேயே செத்துக் கழுகுகளுக்கு இரையாவாய்!" எனச் சாபமிட்டார். அவரது வற்றியுலர்ந்த முலையைப் பார்த்து நான் தலையைக் குனிந்து கொண்டேன். மாஹியோ பெரிதாகச் சிரித்துக்கொண்டே பாட்டியின் சாபத்தைத் தான் கணக்கில் எடுக்கவேயில்லை எனக் கூறினாள்.அடுத்த நாள் எங்கள் திட்டத்தை நிறைவேற்றுவதென முடிவெடுத்துக்கொண்டோம்.

காலையில் மாஹி கறந்த பால் எல்லாவற்றையும் வீட்டின் பின்னால் உயர்ந்து வளர்ந்திருந்த புற்களிடையே நாங்கள் ஏற்கனவே மறைத்து வைத்திருந்த பாத்திரத்திற்குள் ஊற்றி வைத்தோம். காலை ஒன்பது மணியளவில் பிரதான வீதிக்கு அதனைக் கொண்டு வந்து சேர்த்தோம். அங்கு ஒரு லொறிச் சாரதிக்குப் பாலை விற்றக் கூடியதாயிருந்தது. பணத்தை எங்களில் மூத்தவளான மாஹியிடம் கொடுத்தோம். மறு நாள் காலையில் மீண்டும் வீதிக்கு வந்து அவளை ஒரு மினி ரக்சியில் ஏற்றி அனுப்பிவிட்டு, அவளுக்காகக் காத்திருந்தோம்.

வெகு நேரம் கழித்து ஒரு நீலநிற வண்டி சாலையோரத்தில் வந்து நின்றது. மாஹி ஒரு சிறிய பையுடன் கீழே இறங்கி நடந்து வந்தாள். அவள் தனது புதிய அழகிய பாவாடையிலும் குதி உயர்ந்த காலணிகளுடனும் மிகக் கவர்ச்சியாயிருந்தாள். அவளின் நடையில் ஒருவித போலித்தனம் தொற்றியிருப்பதையும் நாங்கள் கண்டுகொண்டோம். " எங்களுக்கான ஆடைகள் எங்கே?" என நாங்கள் கேட்டவுடன் மாஹி தன் பையினுள் கைவிட்டு இனிப்பு வகைகளையும் கேக்குகளையும் எடுத்து எங்களுக்குப் பகிர்ந்து தந்து விட்டுப் "பணம் எல்லாம் தீர்ந்து விட்டது" எனச் சொன்னாள். பின்பு சாலையின் மத்தியில் சென்று தலையைக் குனிந்து வணங்கிவிட்டு முன்னேயும் பின்னேயும் நடக்கத் தொடங்கினாள் "நான் ஒரு 'மொடல்' போல இருக்கிறேனல்லவா?" என அவள் கேட்டாள்.எனக்கு கெக்களமிட்டுச் சிரிக்கத்தான் தோன்றியது. அவள் அப்போதுதான் பிறந்த கன்றுக் குட்டியைப் போல நேராக நடக்க முடியாது தடுமாறிக்கொண்டிருந்தாள். நானும் தம்பியும் இனிப்புகளைச் சாப்பிடுவதற்குத் தொடங்கியபோது மாஹி "நானும் இதுவரை ஒன்றும் சாப்பிடவில்லை" என்றாள். எனக்கும் தம்பிக்கும் வெறுத்துப் போய் விட்டது. தனக்கு மாத்திரம் உடுப்பும் சப்பாத்துக்களும் வாங்கிவிட்டு இப்போது எங்களிடம் இனிப்புகளையும் கேட்கிறாள். வீடு திரும்பியதும் அவளைப் பாட்டியிடம் காட்டிக்கொடுக்கப் போவதாக் கோபத்துடன் மிரட்டினோம். இப்போது அவளது கண்களில் பயம் குடிகொள்ளத் தொடங்கியது. அவள் மன்னிப்புக் கேட்டுக்கொண்டாள். ஆனால் நாங்களோ விடாப்பிடியாகச் சொன்னதைச் செய்தோம்.

வீட்டிற்கு வந்தவுடனேயே கொள்ளியை வைத்துவிட்டோம். பாட்டி ஆத்திரத்தில் கத்திக் கொண்டும் துள்ளிக் குதித்துக் கொண்டுமிருந்துவிட்டு முடிவில் வேலையாள் ஒருவரைக் கூட்டிவருமாறு என்னை ஏவினார். வேலையாள் உடனடியாகவே அப்பாவிற்கு செய்தி கொண்டு செல்லுமாறு பணிக்கப்பட்டார். மாஹியும் ஹெலன், கிறேஸ் போலவே வீட்டைவிட்டு ஓடிவிட முடிவெடுத்துவிட்டாள். அன்றிரவே அவள் போவதாகத் தீர்மானித்தாள். நாளைக் காலையில் அப்பா வரும்போது அவள் இங்கிருக்கப் போவதில்லை. இன்னுமொரு சகோதரியையும் இழப்பதை நினைக்க எனக்கு அழுகை வந்தது. அவளது முடிவை மாற்றிவிட நான் முயற்சி செய்தேன். எனது சகோதரனும் அவளைப் போக வேண்டாமெனக் கெஞ்சினான். நாங்களிருவரும் மாஹி திருடியதாகப் பொய் சொன்னோமென்று அப்பாவிடம் சொல்வதாகச் சொன்னோம். ஒன்றுக்கும் அவள் மசியவில்லை. "நீ இபோது வீட்டைவிட்டுப் போனால் உன்னால் மேற்கொண்டு படிக்க முடியாது, அதனால் நீ இங்கிருப்பதுதான் நல்லது" என மாஹியிடம் சொன்னேன்."நான் எனது முடிவை எடுத்து விட்டேன் அதிலிருந்து பின் வாங்கப் போவதில்லை" என அவள் சொன்னாள். "உன்னிடம் பணமிருக்கின்றதா?" எனக் கேட்டோம். மாஹி நேராகப் பதில் சொல்லாது "அதற்கு ஏதாவது ஒரு வழியைக் கண்டு பிடிப்பேன், கிரேஸாலும் ஹெலனாலும் முடியுமாயின் என்னாலும் முடியும்" என்றாள். ஏதோ ஒரு வகையில் சிறிதளவு பணம் அவளிடம் சேர்ந்துள்ளதென நான் நினைத்தேன். எனது கவலையும் எனக்கு மறந்து விட்டது.

இதன் பின்பு மாஹி பாட்டியைத் திட்டிக் கொண்டேயிருந்தாள் .அதிசயமாகப் பாட்டியின் மற்றைய கண்ணும் கண்ணீரில் மிதந்தது. பாட்டியின் கண்ணீர் கூட மாகியின் வசைச் சொற்களிலிருந்து தப்பவில்லை. "நான் வீட்டைவிட்டு ஓடிப்போகப் போகிறேன் என்பதைத் தெரிந்துகொள்! நீ இறந்த பிறகு உன்னைப் புதைப்பதற்குக் கூட யாரும் இருக்கமாட்டார்கள்" எனப் பாட்டியைத் திட்டிய மாஹி அன்றிரவு ஒன்றுமே சாப்பிடாது படுக்கைக்குச் சென்றாள். அடுத்த நாள் காலை அவள் போய்விட்டிருந்தாள். அப்பா மாஹியைத் தேடிக் கண்டு பிடிப்பாரென நானும் தம்பியும் நினத்துக்கொண்டோம். அவர் அப்படிச் செய்யவே இல்லை. நாங்கள் அழுதுகொண்டிருந்தோம். ஒன்றுமே சொல்லாது அப்பா எங்களைக் கடந்து போனார். மாஹி தொலைந்து போனது அவரை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை. ஏதோ கோழியொன்று தொலைந்தது மாதிரித்தான் அவர் நடந்து கொண்டார்.

விடுமுறை முடிந்து நகர வீட்டிற்குச் செல்லும் நேரமும் வந்தது. சிரிப்புடனேயே சிற்றன்னை எங்களை வரவேற்றார். அது ஒரு அசாதரணமான காட்சி. தொலைந்துபோன எங்கள் சகோதரிக்காக அவர் சிரித்தித்திருக்க வேண்டும். எது எப்படியாயினும் கடைசியில் சிற்றன்னையின் விருப்பப்படியே சம்பவங்கள் நடந்தேறியிருந்தன. எங்களைத் தொலைத்து விடுவதற்கு அவரெடுத்த முயற்சியில் அவர் வெற்றி பெற்றிருந்தார்.
எங்களின் கடைசிப் பிணைப்பான செவிலித் தாயார் மேரியும் வீட்டைவிட்டு போகப் போகிறார் என்பதனையும் கேள்விப்பட்டோம். அவரிடம் எங்களை விட்டுப் போகவேண்டாமென அழுகையுடன் கெஞ்சிக்கூடப் பார்தோம். அவர் எங்களுக்குத் தந்த நேசமும் கருணையும் தாயினுடையதைப் போன்றது என்பது எங்களுக்கு விளங்கியுமிருந்தது. சிற்றன்னையுடன் முரண்பட்டுக்கொண்டுதான் எங்கள் அன்பான மேரி வீட்டைவிட்டு வெளியே போகிறார். காலை உணவு மேசையில் தயாராக இருந்தது. ஆனால் மேரியைக் காணவில்லை. தோட்டத்தில் தேடிப் பார்த்தோம், அவரை எங்குமே காணவில்லை. பாடசாலைக்குச் செல்லும் வழியில் அவர் எங்களுக்குச் செய்தவை பற்றியெல்லாம் நானும் தம்பியும் பேசிக்கொண்டே போனோம். ஒருவேளை பாடசாலை முடிந்ததும் அவரைக் காணக் கூடியதாயிருக்கும் என நினைத்தோம். ஆனால் நாங்கள் அதன் பின்பு எப்போதுமே அவரைக் காணவில்லை.

மேரியின் இழப்பு எனக்குப் பெரியதென்பதைச் சிற்றன்னையிடம் காட்டிக்கொள்ளாது கவனமாகவே இருந்தேன். நான் உறுதியானவள் போன்றும் மேரியின் வெற்றிடம் எனக்குப் பொருட்டேயில்லை என்பது போலவும் நாடகமாடினேன். பிரச்சினைகளில் அமிழ்ந்து விடாது தப்பி வாழ்வதற்கு உணர்வுகளை மழுங்கடிக்க வேண்டியிருந்தது. எனது பிற்கால வாழ்க்கையில் அதுவே வழமையாகவும் விட்டுவிடமுடியாத பழக்காமாகவும் மாறியிருந்தது.

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு