குழந்தைப் போராளி - 27
உரசிச் சென்ற மரணம்
கிராமத்தை நோக்கி நடக்கையில் நிலைமை சுமுகமாகவில்லை என எங்கள் உள்ளுணர்வு கூறிற்று. அந்தக் கிராமவாசிகளில் ஏறத்தாழ எல்லோருமே NRAயின் ஆதரவாளர்கள் தான். நாங்கள் சுற்றுப்புறத்தினைக் கூர்ந்து கவனித்துக்கொண்டே நகர்ந்தோம். கிராமத்தை நெருங்க நெருங்கத் துர் நாற்றம் அதிகரித்துக் கொண்டே வந்தது.
கிராமத்தினுள் நுழைந்தபோது நாங்கள் கண்ட கோரக் காட்சி மனதை உலுக்கிப் போட்டது. எங்கள் தோழர்களின், ஆதரவாளர்களின் பிரேதங்கள் அங்கே சிதறிக் கிடந்தன. அவர்களின் உடலிலிருந்து குருதியும் நிணமும் வழிந்து கொண்டிருந்ததன. என் கண் முன்னே விரிந்து கிடந்த உண்மையை ஜீரணிக்க முடியாமல் நான் திணறிப்போனேன். இது ஒரு ஆரம்பம் மட்டுமே என எனது உள்ளுணர்வு சொல்லிக்கொண்டது. இனி எது வந்தாலும் போனாலும் எனது நிலைமை மாறப்போவதில்லை. எனது வாழ்க்கையில் சில விடயங்கள் என்றுமே மாறப் போவதில்லை. தப்பியோடுவதற்கு இடமே இல்லை. தப்பியோடிய சில வாலிப வயதுப் போராளிகளும் NRAயால் உடனடியாகவே கண்டு பிடிக்கப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்டு எல்லோரது கண் முன்னேயும் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். அந்தச் சாவொறுப்புகள் இயக்கக் கட்டுப்பாட்டைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளாம். இதனால் எந்தக் குழந்தையுமே தப்பியோட முயலவில்லை.
என்னைப் போலவே மற்றக் குழந்தைகளும் அதிர்ச்சி தரும் அந்த இழவுக் கிராமத்தைப் பார்த்துத் திடுக்கிட்டுப் போய் மரணம் பற்றிய அச்சத்தில் மூழ்கியிருந்தனர். என்ன நடந்திருக்கலாமென நாங்கள் ஆராய்ந்து கொண்டிருக்கும் போதே வானத்தில் உலங்கு வானூர்திகளின் இரைச்சல் எழுவதைக் கேட்டுப் பதறிப் போனோம். நாங்கள் தரையில் விழுந்து படுத்துக்கொள்ள வேண்டும். பாதுகாப்பான இடங்களைத் தேட வேண்டும். அல்லது வானம் இடிந்து தலையில் விழும். உலங்கு வானூர்திகள் ஆகாயத்திலிருந்து மூர்க்கமான தாக்குதல் ஒன்றை நிகழ்த்திவிட்டு வந்த வேகத்திலேயே திரும்பிப் போயின. எல்லோரும் எழுந்து நின்று உலங்கு வானூர்திகளின் தாக்குதலிலிருந்து தாங்கள் காயமின்றித் தப்பித்தார்களா எனப் பார்த்துக்கொண்டனர். நானும் எனக்குக் காயமேதும் படவில்லை என உறுதிப்படுத்திய பின் தோழர்களுக்கு என்ன நடந்தது என ஓடியோடிப் பார்த்தேன். ஒரு தோழன் தரையிலிருந்து எழ மனமில்லாதவன் போலக் கிடந்தான். நான் அவனருகில் சென்று பார்த்தபோது தூங்குபவன் போல அவன் சலனமில்லாமல் கிடந்தான். மற்றய தோழர்களும் வந்து வீழ்ந்து கிடந்தவனைச் சூழக் கண்களைத் தாழ்த்திக்கொண்டு நின்றார்கள்.எங்கள் எல்லோருக்கும் நேசமான, எப்போதும் உற்சாகமாகக் காணப்படும் சிறுவனவன். எந்த நேரமும் அவனிடம் ஆறுதல் வார்த்தைகள் தயாராகயிருக்கும். நாங்கள் துணிச்சலானவர்களாக இருக்க வேண்டும், அச்சத்தை எங்களிடம் அணுகவே விடக்கூடாதென அவன் எப்போதும் சொல்லிக் கொண்டேயிருப்பான்.
எங்களை அழைத்துச் செல்ல வந்த எங்களது சார்ஜன் அந்தச் சிறுவன் இறந்து விட்டான் எனச் சொன்னார். இறந்தவனுக்காகக் கண்ணீர் விட அவகாசமில்லை. எங்களது படைப் பிரிவோடு போய் இணைந்து கொள்வதற்காக நாங்கள் உடனடியாகவே புறப்பட வேண்டும். அவனுக்காக என்னிடமிருந்த கண்ணீரைச் சிந்துவதற்குக் கூட நிலைமைகள் என்னை அனுமதிக்கவில்லை. இறந்த எங்கள் தோழர்களின் நினைவுகள் எங்களின் பசியையும் தாகத்தையும் மறக்கடிக்கச் செய்துவிட்டன. மீண்டும் மீண்டும் உயிரற்ற உடல்கள் என் கண்களுக்குள்ளேயே நின்றன. ஒரு நாளில்லாவிட்டாலும் ஒரு நாள் என் கதையும் இப்படித்தான் முடியுமென நினைத்துக்கொண்டேன்.
1 மறுமொழிகள்:
தியோ
சுவிஸ் தேவாவின் மொழி பெயர்ப்பான குழந்தைப் போராளி சோபா சக்தியிடம் புஸ்தகமாக கொணடு வருமாறு கொடுக்கப்பட்டதாக நான் அறிந்தேன். திருத்தங்களுடன் வெளிவருவதால் சோபா சக்தியின் உதவியுடன் நிச்சயமாக நூல் வடிவில் கொணடு வருவீர்கள் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.
நன்றி
Post a Comment
<< முகப்பு