குழந்தைப் போராளி - 22



அம்மாவைத் தேடி

னக்கு மெதுவாக உடல் தேறி வந்தது. அதுகூட அப்பாவின் மனைவிக்குப் பிடிக்கவில்லைப் போலும். அவர் புயலுக்குப் பின் தோன்றும் கொடூரமான அமைதி போல அலைந்து கொண்டிருந்தார். அப்பாவும் அமைதியாகவே இருந்தார். என்னுடன் சிறிது அன்பாகக் கூடயிருந்தார். அவர் எனது முறிந்த விரல்கள் குணமாகும் வரை காத்திருந்தார் போலும். விரைவிலேயே பாடசாலை விடுமுறை வந்தது. நாள் முழுதும் வீட்டிலிருப்பதை நினைக்கவே பயமாயிருந்தது.

விடுமுறைக்கு முந்தைய நாளில் மகிழ்வும் துக்கமும் கலந்த உணர்வுடன் பாடசாலைக்குச் சென்றேன். எல்லோரும் பாடசாலை மண்டபத்தில் கூடியிருந்தனர். மாணவர்களின் பெற்றோர்களும் அங்கு வந்திருந்தனர். என்னருகில் யாருமில்லை. மாணவர்களின் பெறுபேறுகள் அறிவிக்கப்படத் தொடங்கும் போது என் மனதை அச்சம் படிந்த நம்பிக்கை சூழ்ந்திருந்தது. நான் வகுப்பின் முதன் மாணவியானால் எனக்கும் பரிசு கிடைக்கும். தலைமையாசிரியர் மேடையிலேறி முதலாம் இடங்களைப் பிடித்திருந்த மாணவ மாணவிகளுக்கு நன்றி கூறினார். தராதர அறிக்கை வாசிக்கும் நேரமும் வந்தது. இரண்டு பெயர்கள் அறிவிக்கப்பட்டன. மூன்றாவதாக எனது பெயரும் வாசிக்கப்பட்டது. எனக்குப் பாடப்புத்தகங்கள், வண்ணம் தீட்டும் பென்ஸில்கள் பரிசாகக் கிடைத்தன.

தலைமைசிரியர் விடுமுறையை அறிவித்ததும் நாங்கள் மரபான விளையாட்டொன்றைத் தொடங்கினோம். ஒவ்வொருவரும் ஒரு மரக் கிளையைத் தேடி எடுத்துக்கொண்டோம். எங்களுக்குப் பிரியமில்லாத ஒவ்வொருவருக்காவும் ஒரு சிறிய கிளையை மண்ணில் நாட்ட வேண்டும். அடுத்த பருவ காலத்தை மாணவர்கள் மன்னித்தல் மறத்தலுடன் தொடங்குவதே இந்த விளையாட்டின் நோக்கம். அது முடிவடைந்ததும் எனது தோழிகளுடன் கதைத்துக் கொண்டே வீட்டை நோக்கிச் சென்றேன். வழியில் என்னை இடைமறித்த சோபியா சிற்றன்னையும் அவரது தாயாரும் வீட்டின் முன்னால் தெருவில் கோபத்துடன் எனக்காகக் காத்திருப்பதாகவும் நான் வீட்டிற்கு நேரங் கழித்துச் செல்வதால் அவர்கள் அப்பாவிடம் சொல்லி என்னைத் தண்டிக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் என்னிடம் சொன்னாள்.

சிறிது நேரம் கண்ணீருடன் போராடிய நான் செய்வதறியாது எனது உண்மையானத் தாயைத் தேடிப் பற்றீசியாவின் வீட்டை நோக்கிப் போனேன். வழி முழுவதையும் எனது கண்ணீரால் நனைத்தபடியே நடந்து சென்றேன். பற்றீசியாவும் அவரது இரண்டு மகள்களும் வீட்டின் முன் புறத்தில் நின்றிருந்தனர். என்னைக் கண்டதும்
"நீ இங்கு வந்தது உனது அப்பாவிற்குத் தெரியுமா?" என்பதே பற்றீசியாவின் முதற் கேள்வியாக இருந்தது. இல்லையெனத்
தலையை அசைத்துக்கொண்டே எனது முறிந்த விரல்களை அவருக்குக் காட்டி "என்னை எனது உண்மையான அம்மாவிடம் கூட்டிச் செல்லுங்கள்" எனப் பற்றீசியாவிடம் மன்றாடினேன். பற்றீசியா தலையைக்குனிந்து கொண்டே "இல்லை ...என்னால் முடியாது உனது அப்பாவை நினைத்தால் எனக்கு அச்சமாயிருக்கிறது. நீ உடனடியாக உன் வீட்டுக்குத் திரும்பிப் போய்விடு" என்றார்.
"என்னை அங்கு திருப்பி அனுப்பினால் விசம் குடிப்பேன்" என்று உறுதியான குரலில் சொன்னேன். பற்றீசியாவின் மகள்கள் என்னைத் தங்கள் அறைக்கு அழைத்துச் சென்றனர். இரவுணவு முடிந்ததும் பற்றீசியா எனது அம்மாவின் படத்தைக் காட்டினார். நான் தோற்றத்தில் அம்மாவையே உரித்து வைத்திருப்பதாகக் கூறி அம்மாவிடம் எப்படிச் செல்ல வேண்டுமென்று வழியையும் விபரித்தார்.

1984ம் ஆண்டு, அப்போது எனக்குப் பத்து வயது, பற்றீசியா பேருந்து நிலையம் வரை என்னுடன் வந்து பயணச் சீட்டொன்றும் வாங்கித் தந்து என்னை வழியனுப்பி வைத்தார். ஓடும் பஸ்சினுள் இருந்து கொண்டு கடைசித் தரிப்பிடத்தில் அம்மா எனக்காகக் காத்திருப்பது போலக் கற்பனை பண்ணிக்கொண்டேன். என் கண்ணீரை என்னால் நிறுத்தமுடியவில்லை.
நடு வழியில் பஸ் இராணுவச் சோதனைச் சாவடியில் நிறுத்தப்பட்டது. எல்லாப் பயணிகளும் பஸ்சிலிருந்து இறங்கி வரிசை கட்டி நின்றோம். என்னைப் பயம் பிடித்துக் கொண்டது. இராணுவத்தினர் பயணிகளைச் சோதனையிடத் தொடங்கினர். கைப்பைகளும் பயணப் பொதிகளும் சோதனைக்குள்ளாயின. சில பயணிகள் துப்பாக்கியின் பின் புறத்தால் அடிக்கப்பட்டனர். யாரிடம் அடையாள அட்டை இல்லையோ அவர் பயங்கரவாதி எனக் குற்றம் சாட்டப்பட்டுப் பற்றைகளின் பின்னால் இழுத்துச் செல்லப்பட்டார். பயங்கரவாதிகள் எல்லாப் பொதுப் போக்குவரத்து வாகனங்களையும் கடத்தத் திட்டமிட்டிருப்பதால் அந்தப் பாதையில் போக்கு வரத்துத் தடை செய்யப்படுவதாக இராணுவத்தினர் அறிவித்தார்கள். பஸ் சாரதி எல்லோருக்கும் பயணக் கட்டணத்தைத் திருப்பிக் கொடுக்கத் தொடங்கினார். இந்த அமளிக்குள் நான் எனது பயணச் சீட்டைத் தொலைத்துவிட்டிருந்தேன். எவ்வளவு கெஞ்சிக்கேட்டும் எனது பணத்தைத் திருப்பித் தர பஸ் சாரதி மறுத்துவிட்டார்.

எனது பக்கத்தில் நின்றிருந்த மனிதர் நான் ஏன் அழுகின்றேன் எனக் கேட்டார். நான் அவருக்கு அம்மாவைத் தேடிப் புறப்பட்டதைப் பற்றிச் சொன்னேன்." உனது அம்மாவின் வீடு எங்கேயுள்ளது என உனக்குத் தெரியுமா?" என அவர் கேட்க நான் ஆம் எனத் தலையசைத்தேன். அவர் எனது அம்மாவின் பெயரைக் கேட்டார். நான் அம்மாவின் பெயரை உச்சரித்ததும் எனக்கொரு ஆச்சரியம் காத்திருந்தது. ஆம்! அந்த மனிதருக்கு என் அம்மாவைத் தெரிந்திருந்தது. அம்மாவின் கணவர் நகரசபையில் முக்கிய பதவியை வகிப்பவரென்றும் மிகவும் செல்வாக்கான மனிதரென்றும் அவர் கூறினார். அம்மாவின் கணவர் செல்வாக்கு மிக்கவராயின் அம்மா அதனைப் பயன்படுத்தி ஏன் தனது குழந்தைகளைக் காப்பற்றிக்கொள்ளவில்லை? எனக்கு எரிச்சலாக இருந்தது.

சில மணித்தியாலங்கள் நடந்ததன் பின்பாக சந்தை போன்ற ஓர் இடத்தினை அடைந்தோம். எனது புதிய நண்பர் என்னை வெளியே விட்டுவிட்டு உணவு விடுதி ஒன்றில் புகுந்து கொண்டார். எனக்கும் பசியாக இருந்தது. எனவே பசியை மறக்கப் பராக்குப் பார்க்கலாமெனப் புறப்பட்டேன். சிறிது தூரத்திலேயே காவல் நிலையமொன்றும் சில கட்டடங்களுமிருந்தன. பற்றீசியா சொன்ன அடையாளங்களை அவை ஒத்திருந்தன. காவல் நிலையத்தின் முன்னால் இரண்டு பெண்கள் நின்று கொண்டிருந்தனர். நான் அவர்களிடம் அம்மாவைப் பற்றி விசாரித்தேன். அவர்களுக்கு அம்மாவைத் தெரிந்திருக்கவில்லை. எனவே மீண்டும் சந்தையடிக்கே திரும்பினேன். என்னை விட்டுவிட்டுச் சாப்பிடச் சென்ற புதிய நண்பருக்காகக் காத்திருந்தேன்.

சிறிது நேரத்தின்பின் பஸ்ஸில் பயணம் செய்த மற்றப் பிரயாணிகளும் அங்கு வந்து சேர்ந்தனர். அங்கிருந்து பற்றைக் காடுகள் வழியாக நடக்கத் தொடங்கினோம். அதுதான் குறுக்குப் பாதை எனச் சொல்லப்பட்டது. அந்தப் பாதை முடிவின்றி நீண்டுகொண்டே சென்றது. ஆங்காங்கே சில பற்றைகள், சில மரங்கள், வெறுமை என எங்கள் பயணம் சலிப்பூட்டியது. இந்த நடைப் பயணத்தில் எனது மனமும் உடலும் தளர்ந்து போயின. நான் நீண்ட தூரம் நடந்திருந்ததால் எனது கால்களில் வலியெடுத்தது. வேகமாக நடக்கமுடியாது மற்றவர்களிடமிருந்து பின் தங்கத் தொடங்கிய நான் ஒரு கட்டத்தில் முற்றாகத் தளர்ந்து போய்த் தரையில் உட்கார்ந்து கொண்டேன். எனது புதிய நண்பர் என்னை எழவைக்க முயற்சிகள் செய்து களைத்துப் போய் என் கன்னத்தில் பளீரென ஒர் அறை விட்டார். அந்த அடி எனக்கு வழிகாட்ட நான் தொடர்ந்து நடக்கத் தொடங்கினேன். எனது கால்களின் வலியைப் பொருட்படுத்தாது தொடர்ந்து நடக்க என்னை நானே கட்டாயப்படுத்திக் கொண்டேன். ஒரு 'ரோபோ'வைப் போல ஒருகால் மாறி ஒருகாலென நடந்து சென்றேன்.


இருளில் ஒரு வீட்டின் முன்னால் வந்து நின்றோம். என்னுடன் வந்தவர் நான் அங்கு இரவைக் கழிக்கலாமெனக் கூறினார். அந்த வீடு ஒரு முதியவருக்குச் சொந்தமானது. அவர் அங்கே தனியாக வசிக்கிறாராம். எனக்குச் சரியாக ஒன்றும் விளங்கவில்லை. களைப்பு எனது சிந்தனையை மழுங்கடித்துவிட்டிருந்தது.அந்த முதியவரும் என்னிடம் ஒரு வார்த்தை தன்னும் பேசவில்லை. அவர் மேசையில் உணவை வைத்தார். இருவருமே அமைதியாகச் சாப்பிட்டோம். இந்த அமைதி எனக்கு நிம்மதியாக இருந்தது. சாப்பிட்டதும் என் கண்கள் சொக்கிப் போயின. நான் அந்த நிமிடத்திலேயே தூங்கிவிட்டேன்.

அடுத்த நாள் காலையில் நான் புத்துணர்ச்சியுடன் இருந்தேன். அந்த முதியவரைக் கவனமாகப் பார்த்தேன். குள்ளமான உருவமுடைய அவர் ஆடைகளைத் தாறுமாறாக அணிந்திருந்தார். அவரின் தலை வழுக்கையாக இருந்தது. அவரின் எஞ்சியிருந்த முடிகள் நரையோடிக் கிடந்தன. நாங்கள் காலையுணவைச் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது கதவு தட்டும் சத்தம் கேட்டது. என்னை இங்கு அழைத்து வந்திருந்த மனிதர் உள்ளே வந்தார். முதியவருக்கும் அவரின் உபசரிப்புக்கும் நன்றி கூறி நான் எனது வழிகாட்டியுடன் புறப்பட்டேன். பழத் தோட்டங்களினூடாகப் பிரதான வீதிக்கு நடந்து செல்லும்போது அந்த முதியவருக்கு என் இருதயத்தால் நன்றிகளைச் சொல்லிக் கொண்டே நடந்தேன்.

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு