புதன், ஆகஸ்ட் 02, 2006

குழந்தைப் போராளி - 20



கைது செய்யப்பட்ட அப்பா

ரு சனிக்கிழமை காலையில் மாடுகளைக் கணக்கெடுத்தபோது பண்ணயில் இன்னொரு பிரச்சினை ஆரம்பமாயிற்று. பதினைந்து மாடுகள் குறைந்திருந்தன. பண்ணையாட்கள் பாட்டியிடம் ஓடினர். அவர் இந்தச் செய்தியைக் கேட்டதுமே "மைக் எங்கே போய்த் தொலைந்தான்?" என ஆத்திரத்துடன் கத்தினார். மைக் தான் மாடுகளின் பராமரிப்பிற்குப் பொறுப்பானவர். சிலர் மைக்கைத் தேடிச் செல்ல ஆயத்தமாகையில் மைக்கே அங்கு வந்து சேர்ந்தார். ஏன் எல்லோரும் இங்கு கூடி நிற்கிறார்கள் என்ற கேள்வி அவரின் முகத்தில் இருந்தது. பாட்டி "நீ குற்றமற்றவன் போல் நடிக்காதே" என மைக் மீது எரிந்து விழுந்தார். திருட்டுப் பழி அவர் மேல் விழும்வரை அங்கு நடப்பதொன்றையும் மைக்கால் புரிந்து கொள்ள முடியவில்லை. தான் மாடுகளைத் திருடவில்லை எனத் திரும்பத் திரும்பச் சொன்ன மைக் "அப்படித் திருடியிருந்தால் நான் ஏன் இங்கு திரும்பிவர வேண்டும்?" எனக் கேட்டார். பாட்டி மைக்கை நம்பவேயில்லை. அப்பாவைக் கூட்டி வர ஆள் அனுப்பப்பட்டது. நானும் ரிச்சட்டும் பண்ணையை விட்டு ஓடிப்போய் விடும்படி மைக்கிற்கு 'புத்தி' சொன்னபோது மைக் பரிதாபமாக "நானும் உங்களைப் போல துற்சி இனத்தவன் தான் உங்கள் அப்பா என்னைப் புரிந்து கொள்வார், தன் இனத்தவர்களிடமே திருடுவது சரியல்லவே" என்றார்.

மதியம் அப்பா பண்ணைக்குப் பொலிஸ்காரர்களோடு வந்து சேர்ந்தார். மைக்கின் நியாயமும் மன்றாட்டமும் அப்பாவின் காதுகளில் ஏறவில்லை. வந்த பொலிஸ்காரர்களில் ஒருவன் காலை மாற்றி மாற்றி வைத்துக்கொண்டே நின்றான். ஏதோ எரியும் நெருப்பின் மீது அவன் நிற்பது போல இருந்தது. மைக்கை யாருமே நம்பவில்லை.பொலிஸார் மைக்கைத் தரையிலே தள்ளிச் செருப்புக் கால்களால் மிதித்தார்கள். முடிவில் பொலீசார் அவரைக் கைது செய்து அழைத்துச் சென்றனர். அன்றிரவு அப்பா என்னையும் ரிச்சட்டையும் இனி மாடுகளை மேய்ப்பதற்குப் போக வேண்டாமெனவும் திருடர்கள் எங்களைத் தாக்கலாமெனவும் சொல்லிக்கொண்டிருந்தார். நான் மைக்கைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தேன். இழுத்துச் சென்றவர்கள் அவரை இன்னும் அடித்துக் கொண்டிருக்கலாம்.

மறுநாள் காலையில் அப்பா ஒரு பண்ணையாளுடன் 'களவு கொடுத்த' மாடுகளைத் தேடிப் போனார். திருடர்களில் ஒருவன் அப்பாவைக் கொன்றால் நன்றாக இருக்குமென நினத்துக் கொண்டேன். இரண்டு நாட்கள் கழித்து அவர்கள் வெறுங்கையுடன் திரும்பி வந்தார்கள். இதற்கிடையில் மைக் விடுதலை செய்யப்பட்டார். அப்பாவின் கண்களில் நான் கண்டதெல்லாம் பழிவாங்கும் வெறிதான். அவர் தனது வேலையாட்களிற்கு மைக் பற்றித் தகவல் தரச் சொன்னதுடன் அயல் பண்ணைகளில் உள்ளவர்களுக்கும் பணம் கொடுத்துத் தகவல் தர ஏற்பாடு செய்திருந்தார். மைக்கை எல்லோரும் தேடத் தொடங்கினர்.
மறுநாள் நாங்களெல்லோரும் மாட்டுக் கொட்டடியில் நின்றபோது ஒருவர் வந்து மைக் தனது பண்ணைக்கு வேலை தேடி வந்திருப்பதாகச் சொன்னார். உடனடியாக அப்பா வேலையாட்களைச் சேர்த்துக்கொண்டு கயிற்று வளையமொன்றையும் தூக்கிக் கொண்டு மைக்கைத் தேடிச் சென்றார். நாங்கள் மதியம் கழித்து வீடு திரும்பியபோது மைக்கை மீண்டும் கண்டோம். மைக் அடையாளமே தெரியாதவாறு உருக்குலைந்து கிடந்தார். அவர் உடுத்திருந்த உடைகள் இரத்தத்தில் தோய்ந்து கிடந்தன. அவரின் கைகளிரண்டும் முதுகுக்குப் பின்னே சேர்த்துக் கட்டப்பட்டிருந்தன. அப்பாவும் அவரது கைக்கூலிகளும் மைக்கைச் சுற்றிவர நின்றிருந்தனர். எங்களைக் கண்ட மைக் குடிப்பதற்கு ஏதாவது தருமாறு கேட்க தம்பி ரிச்சட் ஒரு பாத்திரத்தில் பால் கொண்டு வந்தான். மைக் தனது தலையைத் தூக்க எத்தனிக்க அப்பா ரிச்சட்டிடமிருந்து பால் பாத்திரத்தைப் பறித்து அவன் மீதே வீசினார். "நீ தானே எனது மாடுகளைத் திருடினாய்? மரியாதையாக உண்மையை ஒத்துக்கொள்!" அப்பா கத்திக் கொண்டே நீண்ட இரும்புக் குழாயை எடுத்து மைக்கின் முதுகில் தாறுமாறாக அடித்தார். மைக் ஓங்காளித்து வாந்தியெடுத்தார். அவரின் வாயிலிருந்து இரத்தம் தோய்ந்த தசைத் துணுக்குகள் தெறித்து விழுந்தன. அவரின் அலறல்கள் என்னை நடுங்க வைத்தன. வீட்டினுள் சென்று ஒளிந்து கொண்டேன்.

திடீரென எல்லாம் ஓய்ந்து பயங்கர அமைதி நிலவியது. என் எல்லாத் தைரியங்களையும் திரட்டிக்கொண்டே வெளியே வந்து பார்த்த போது மைக் தரையில் கோணல் மாணலாக மல்லாந்து கிடந்தார். அவரின் உடலில் அசைவில்லை. அப்பாவைப் பார்த்தேன், அவரின் கண்களில் அச்சம் தெரிந்தது. அவர் என் கண்களைச் சந்திப்பதைத் தவிர்த்துக் கொண்ட மாதிரித் தெரிந்தது. அவர் பதற்றத்துடன் வேலையாட்களைக் கூப்பிட்டு மைக்கை ஒரு தள்ளுவண்டியில் ஏற்றிச் சென்று காட்டில் பாறைகளிடையே போட்டு விட்டு வரும்படி உத்தரவிட்டார்.

மறுநாள் பண்ணைக்குப் பொலிஸ்காரர்கள் வந்தார்கள். இவர்கள் முதலில் மைக்கைக் கைது செய்து கொண்டு போன பொலிஸ்காரர்களல்ல. மைக் மீண்டும் திருட வந்ததாகவும் வேலையாட்கள் அதனைக் கண்டு அவனைப் பிடித்து அடிக்க மைக் எதிர்பாராத விதமாக இறந்து போய்விட்டதாகவும் அப்பா பொலிஸாருக்குச் சொன்னார். இந்த அப்பட்டமான பொய்யைக் கேட்டவுடன் நான் அப்பாவை எரித்து விடுவது போல் பார்த்தேன். பார்வை கொல்லுமாயின் நிச்சயமாக அப்பா சாம்பலாகியிருப்பார்.

அப்பா வீட்டினுள் சென்றவுடன் நான் வந்திருந்த பொலிஸாருக்கு உண்மையில் என்ன நடந்ததெனச் சொல்லிவிட்டு என்னைக் காட்டிக் கொடுக்க வேண்டாமென அவர்களிடம் கெஞ்சிக் கேட்டுக்கொண்டேன். அப்பாவின் கைகளில் விலங்கு மாட்டி அவர்கள் இழுத்துச் சென்றனர். இம்முறை அவரால் தப்பிக்க முடியவில்லை. பாட்டி அவரது மகனைப் பொலிஸார் இழுத்துச் செல்வதைப் பார்த்து பைத்தியம் பிடித்தது போல அலறத் தொடங்கினார். நான் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டேன். இனி நானும் ரிச்சட்டும் நாங்கள் விரும்பியபடி வாழலாம்.

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு