குழந்தைப் போராளி - 25


இது குழந்தைகளின் விளையாட்டல்ல

ரச இராணுவத்தின் மிகப் பெரிய படையணி ஒன்றை நாங்கள் சில நாட்களிலேயே எதிர் கொண்டோம். எங்களுக்கிடப்பட்ட கட்டளைப்படியே நாங்கள் மணலில் "ஒன்றுமறியாது" விளையாடிக்கொண்டிருந்தோம். வந்துகொண்டிருந்த அரச படையினரின் வாகனத் தொடரணி விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளைக் கண்டதும் நிறுத்தப்பட்டது. படையினர் வாகனங்களிலிருந்து கீழே குதித்தனர். அதுதான் நாங்கள் விரித்திருந்த வலையில் அரச படையினர் விழுந்ததற்கான அடையாளம். நாங்கள் எங்கள் படைப் பிரிவினர் பதுங்கியிருந்த திசையை நோக்கி ஓட்டம் பிடித்தோம். நாங்களெல்லோரும் பாதுகாப்பான இடத்திற்கு ஓடிப் போனதும் மற்றவர்கள் அரச படையினரைத் தாக்கத் தொடங்க வேண்டும். ஆனால் திட்டமிட்டபடி காரியங்கள் நடக்கவில்லை. துப்பாக்கிகள் நாங்கள் பதுங்குமிடத்திற்குப் போய்ச் சேர்வதற்கு முன்னதாகவே வெடித்ததால் நாங்கள் மரங்களின் பின்னால் பதுங்கிக் கொண்டோம். வீதியும் அதன் மேலிருந்த எல்லாமும் துண்டு துண்டாக வெடித்துச் சிதறின. வெடிச் சத்தங்கள் காதைச் செவிடுபடுத்தின. இதுவரை இவ்வாறான ஒரு அனுபவமுமே இல்லாத எனக்கு ஈரற் குலை நடுங்கியது. இது விளையாட்டாகத் தெரியவில்லை. நான் எழுந்து செல்ல எத்தனிக்க என் தோழனொருவன் என்னைப் பிடித்திழுத்து மரத்தின் பின்னே அமுக்கி வைத்திருந்தான்.

சண்டை முடிவடைந்து எங்கள் படைப்பிரிவு தாக்குதலில் வெற்றி பெற்றது. கொல்லப்பட்ட இராணுவத்தினரின் உடைகளும் காலணிகளும் இடம் மாறி அவற்றின் புதுச் சொந்தக்காரர்களை அலங்கரித்தன. எனக்கோ தலை சுற்றியது. இதுதானா விடுதலை? இதைத் தானா நாங்கள் விடுதலைப் போராட்டம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்? இப்படியானவர்களுடன் நான் சேர்ந்திருப்பதையும் இறந்த உடல்களிலிருந்து பொருட்களை அபகரிப்பதையும் என்னால் ஒரு கெட்ட கனவில் கூட ஏற்றுக்கொள்ள முடியாது. காயமடைந்தவர்கள் வீதியில் கிடப்பதையும் உதவி கோரி அலறுவதையும் பார்த்த எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவர்களைப் பகைவர்களாகப் பார்க்க என் மனம் இடம் கொடுக்கவில்லை. சரணடைந்த இராணுவத்தினரின் கைகள் அவர்களின் முதுகுகளிற்குப் பின்னால் வளைத்துக் கட்டப்பட்டிருந்தன. அவர்கள் வலியால் துடித்துகொண்டிருந்தனர். எனது தோழர்கள் சரணடைந்த இராணுவத்தினரைச் சித்திரவதைகள் செய்துகொண்டிருந்தனர். தங்களது அதிகாரத்திற்குக் கீழ்ப்பட்டோரைத் துன்புறுத்துவதும் சித்திரவதை செய்வதும்தான் மனிதனுக்கு எல்லாவற்றையும் விட அதிக இன்பத்தைக் கொடுக்கும் என்ற எனது கருத்திற்குப் பலம் சேர்ப்பதாகவே நிகழ்வுகள் அமையலாயின. இந்தக் கோணத்தில் பார்த்தால் எனது புதிய "குடும்பம்" பழைய குடும்பத்திற்குக் கிட்டவே நிற்கமுடியாது.

பிடிபட்டவர்கள் உதைக்கப்பட்டும் முகத்தில் காறி உமிழப்பட்டும் முகாமிற்குக் கொண்டுவரப்பட்டர்கள். அங்கு அதிகாரிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். எங்களின் பெருந் தலைவர் யோவேரி முசேவெனி எங்களுக்காக முகாமில் காத்துக்கொண்டிருந்தார். அவர் எங்களை ஒரு புகழுரையுடன் வரவேற்றார். அவரின் பேச்சின்படி நாங்கள் சிறுபொழுது மண்ணில் விளையாடியே பெரிய விடுதலை வீரர்களாகியிருந்தோம். அன்று இரவுணவிற்காகத் தலைவருடன் ஒரே மேசையில் அமரும் 'பாக்கியமும்' எங்களுக்குக் கிட்டியது.

இரவுணவு முசேவெனியின் பிரத்தியோகக் குடிலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முடிவில் எங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பரிசு தரப்பட்டது. மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட இராணுவ அதிகாரிகளின் சீருடைகளும் காலணிகளுமே எங்கள் பரிசுப் பொதியினுள் இருந்தன. அன்றிரவு எங்களக்கு காவற் கடைமை தரப்படவில்லை நீண்ட நேரம் தூங்க அனுமதி கிடைத்தது.

அடுத்த நாள் காலையில் நாங்கள் எங்கள் பாசறையை ஒரு புதிய இடத்தை நோக்கி நகர்த்தும் ஆயத்தங்களில் இறங்கினோம். ஒரு தாக்குதலின் பின்பும் அதே இடத்தில் தொடர்ந்து நிலை கொண்டிருந்தால் இராணுவத்தினர் ஆட்டிலரிப் படைகளுடனும் உலங்கு வானூர்திகளுடனும் எங்களைச் சுற்றிவளைத்து விடக்கூடும்.

உயரே கயிற்றிலாடும் ஒரு 'சேர்க்கஸ்' கலைஞனின் லாவகத்தோடு எங்கள் படை நகரத் தொடங்கியது. காலணிகள் முழங்கால்கள் வரை உயர்ந்திருக்க அளவில் மிகப் பெரிய சீருடைகள் எங்களை முற்றாகவே விழுங்கிவிட்டிருந்தன. இந்தக் கோலத்துடன் காட்டுப் பாதையில் அணிவகுத்துச் செல்வதென்பது இலேசான காரியமல்லவே. குழந்தைகள் எல்லோரும் களைத்துப் போயிருந்தனர். நல்ல வேளையாக ஒரு பெண் போராளி தலைவருடன் துணிச்சலாக வாதிட்டு ஒரு சிறிய ஓய்விற்கும் உண்பதற்கும் அனுமதி வாங்கினாள். வழமையைப் போலவே பயறும் சோளமும் தான் சாப்பாடு. குழந்தைகள் நீரைத் தேடியும் நெருப்பிற்கு விறகு தேடியும் போகத் தலைவர் தனது தளபதிகள் புடைசூழ மர நிழலில் இளைப்பாறிக்கொண்டிருந்தார்.

தளபதிகள் குழாமில் ஒரு சிறுமியுமிருந்தாள். 'முக்கோம்போஸி' என இவள் அழைக்கப்பட்டாள். இதன் கருத்து 'விடுவிக்கப்பட்டவள்' என்பதாகும். அரச படையினர் இவளது குடும்பத்தை அழித்தொழித்தபோது NRA இவளைச் சுவீகரித்துக் கொண்டது. இராணுவத்திடமிருந்து இவள் தப்பித்தது ஏறத்தாழ ஒரு அதிசயம் தான். இராணுவத்தினரே இவளது உயிரைக் "காப்பாற்றியதாகவும்" பேசப்படுவதுண்டு. படையினர் தாக்கப்படும் ஒவ்வொரு முறையும் அவர்கள் இவளை ஜீப்பின் முன்னால் கட்டிவைப்பார்களாம். NRAயின் ஒரு வெற்றிகரமான தாக்குதலில் இராணுவத்தினர் கொல்லப்பட இவள் காப்பாற்றப்பட்டாள். வெடி குண்டுகளின் சத்தத்தில் அவள் தனது பெயரைக் கூட மறந்து போயிருந்தாள் . 'முக்கோம்போஸி' இரண்டு விடயங்களுக்காக எங்களிடையே பிரபலமா கியிருந்தாள். அவள் அசாத்தியமான நெஞ்சுரம் கொண்டவள். அடிபாட்டின் போது அவள் RPGயைத் தாங்கித் துணிச்சலுடன் போரிடுவாள். அவள் சிறிய ஆயதங்களைச் சீண்டுவதே கிடையாது. RPG ஒரு 'பஸூக்கா'அளவிற்குப் பெரியது.

முக்கோம்போஸி - நரோன்கோ இருவரும் உயிர்த் தோழிகள். நரோன்கோ முகண்டா பழங்குடியைச் சேர்ந்தவள். ருவேரோ மாவட்டத்திலிருந்து இவளைப் போல பலர் NRAயில் சேர்ந்திருந்தார்கள். ஓர் இரவு பாசறையில் நாங்கள் நெருப்பைச் சுற்றி உட்கார்ந்திருந்தபோது நரோன்கோ தான் ஏன் NRAயில் போரிடுகிறாள் என்று கூறினாள். NRA யினரைத் தேடி இராணுவத்தினர் இவளது வீட்டைச் சோதனையிட்டனர். இவளது கணவன் இராணுவத்தினரால் உதைக்கப்பட்டும் சித்திரவதை செய்யப்பட்டும் கைகள் முதுகின் பின்னே கட்டப்பட்ட நிலையில் வீட்டின் முன்னே சுட்டுக் கொல்லப்பட்டான். நரோன்கோவின் கண் முன்னேயே அவளது இரட்டைக் குழந்தைகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். தனது கணவனையும் குழந்தைகளையும் கொன்றவர்களுக்குத் தான் தண்டனை வழங்கப் போவதாக அவள் வெஞ்சினத்துடன் சங்கற்பம் செய்து கொண்டாள். அவள் தனது புதிய கணவனாக AK 47ஐ வரித்துக் கொண்டாள். அவள் தனது சங்கற்பத்தை என்றுமே மறந்ததில்லை. குழந்தைப் போராளிகளின் பெயரால் நான் கூறுகின்றேன், அவளது அன்பான நடத்தையை என்னால் என்றுமே மறக்கமுடியாது,

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு