குழந்தைப் போராளி - 24



இரண்டாவது பகுதி:


---------------------------------------------------------------
நான் குழந்தைப் போராளி
--------------------------------------------------------------


போராளி சைனா

நான் புகையிரதத்தை விட்டு இறங்கியபோது இன்னும் விடிந்திருக்கவில்லை. புகையிரத நிலையத்தில் ஆட்கள் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தனர். ஒரு வீடு கூட அந்தச் சுற்று வட்டாரத்தில் இல்லை. ஒன்றுமே யோசிக்காது நடக்கத் தொடங்கினேன். தூரத்தில் ஒரு வெளிச்சம் தெரிந்தது. நான் வெளிச்சத்தை நோக்கி நடந்தேன். ஒரு மனிதனின் முரட்டுக் குரல் என்னைத் தடுத்து நிறுத்தியது.
"நில்! யார் நீ?"
"நான்தான்" வெகுளித்தனமாகப் பதில் சொன்னேன்.
"கிட்டே வா" அந்த முரட்டுக் குரல் கட்டளையிட்டது. நான் இன்னும் சில அடிகளை முன்னே வைத்தேன்.
"நடுச் சாமத்தில் இங்கே என்ன செய்து கொண்டிருக்கின்றாய்?"
"நான் எனது அம்மாவைத் தேடுகின்றேன்"
"உனது அப்பா எங்கே?" கேட்டபடியே அந்த மனிதர் தன் கையிலிருந்த 'டோர்ச்'விளக்கை என் முகத்திற்குப் பிடித்தார்.
"அவர் இறந்து விட்டார்" நான் பொய் சொன்னேன்.

நான் அவரது கேள்விக்குப் பதிலளித்துக் கொண்டிருக்கும்போதே துப்பாக்கிகளுடன் பலர் புதர்களினுள்ளிருந்து வெளியே வந்தனர். அவர்களது உடைகள் அழுக்காகவும் கிழிந்துமிருந்தன. அவர்கள் தங்களுக்குள்ளே என்னைப் பற்றிக் கதைத்துக்கொண்டே ஆள் மாறி ஆள் என் முகத்தை உற்றுப் பார்த்தார்கள். என் கால்கள் நடுங்க தொடங்கின. இவர்கள் என்னை என்ன செய்யப் போகிறார்கள்? அவர்களில் ஒருவர் எனது மொழியிலேயே என்னை விசாரணை செய்தார். அது எனக்குச் சற்று ஆறுதலாக இருந்தது, எனது மறுமொழிகளும் அவர்களுக்குத் திருப்தியாக இருந்தன. அவர் என்னைத் தூங்கும்படி சொன்னார். என்னால் அவர் சொன்னதை விளங்கிக் கொள்ளமுடியவில்லை. ஏனெனில் தூங்குவதற்கு வீடெங்கே? கட்டிலெங்கே? அவர் சிரித்துக்கொண்டே தும்பாய்க் கிழிந்திருந்த இரண்டு போர்வைகளை நிலத்தில் விரித்து விட்டு அதில் படுத்துக்கொள்ளும்படி சொன்னார். போர்வைகளில் துர் நாற்றம் வீசியது. கொசுக்களின் தொல்லையிலிருந்து தப்பிக்க வேறு வழியின்றிக் கால் முதல் தலைவரை இழுத்துப் போர்த்திக்கொண்டேன்.

" லெப்ட்-ரைட்- லெப்ட்-ரைட்" என்ன இது காதைக் கிழிக்கும் சத்தம்? யார் கத்துகிறார்கள்? விடிகாலையிலேயே ஏன் என்னைக் கூச்சலிட்டு எழுப்புகிறார்கள்? தலையைத் தூக்கிப் பார்த்தேன். இராணுவச் சீருடைகளில் சிறுவர்களும் சிறுமிகளும் அணிவகுத்துச் சென்றனர். கனவு காண்கிறேனா அல்லது எனக்குத்தான் மூளை கலங்கி விட்டதா? கடந்த இரவு நடந்தவற்றைப் பற்றி யோசிக்கையில் நான் நிலைமையை மெதுவாகப் புரிந்து கொள்ளத் தொடங்கினேன்.இவர்கள் என்னையும் இந்த விளையாட்டில் சேர்த்துக் கொள்வார்களென நம்பினேன். நேற்றிரவு எனக்குப் போர்வைகளைக் கொடுத்த மனிதர் புன்னகையுடன் என்னிடம் வந்தார். நானும் அந்தச் சிறுவர்களுடன் சேர்ந்து லெப்ட்-ரைட் போடலாமா என நான் கேட்க எனது கால்கள் வீங்கியிருப்பதால் என்னைச் சிறிது ஓய்வெடுத்துக் கொள்ளும்படி அந்த மனிதர் கூறினார்.

சிறிது நேரத்தின் பின்பு பொருட்களையெல்லாம் தூக்கிக்கொண்டு வேறொரு இடத்திற்கு அந்தப் பாசறையை நகர்த்திச் சென்றார்கள். அங்கு என்ன நடக்கிறதென்று எனக்குப் புரியவேயில்லை. யாரும் எனக்கு விளக்கம் சொல்லிப் புரிய வைக்கவுமில்லை. மூன்று நாட்களின் பின் மற்றக் குழந்தைகளுடன் விளையாடுவதற்கு எனக்கு அனுமதி கிடைத்தது. எனக்குப் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. நான் அவர்களுடன் அணிவகுத்துச் சென்றேன். அணிவகுப்பு நடை இரண்டு மணி நேரங்கள் நீண்டு சென்றது. பின்பு பதினைந்து நிமிடங்கள் ஓய்வு வழங்கப்பட்டது. ஓய்வின் போது குழந்தைகள் ஒரு குழுவாகவும் பெரியவர்கள் ஒரு குழுவாகவும் அமர்ந்திருந்தோம்.

அங்குள்ள குழந்தைகளை நான் உன்னிப்பாகக் கவனித்தேன். பலர் அந்தச் சூழ் நிலைக்குப் பழக்கப்பட்டவர்களென்பது அவர்களின் முகங்களிலேயே தெரிந்தது. என்னைப் போல புதியவர்களும் அங்கிருந்தனர். அவர்களுடன் என்னால் சரிவரப் பேச முடியாமலிருந்தது. பெரும்பாலான குழந்தைகள் அந்நிய மொழி பேசுபவர்களாக இருந்தனர். பதினைந்து நிமிட ஓய்வின் பின் பன்னிரெண்டு சிறுவர்கள் துப்பாக்கிப் பயிற்சிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஒவ்வொருவருக்கும் ஒரு AK 47 தரப்பட்டது. கட்டளையிடப்பட்ட உடனேயே அந்தக் குழந்தைகள் துப்பாக்கிகளை அக்கு வேறு ஆணி வேறாகக் கழற்றிச் சில விநாடிகளிலேயே அவற்றை மீண்டும் முழுமையாகப் பொருத்தினார்கள். நான் வாயைப் பிளந்தவாறே அந்தக் குழந்தைகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

இடைவிடாத இராணுவப் பயிற்சிகளின் மூலம் அவர்கள் என்னை ஆயுதப் போராளியாக உருவாக்கத் தொடங்கினார்கள். மூன்றாவது நாள் நான் சிறுவர் சிறுமியர்களுடன் காலைப் பயிற்சிக்காக மைதானத்தில் நின்றிருந்த போது போது எனது பயிற்சியாளர் என் முன்னே வந்து நின்றார். அவர் ஓங்கு தாங்கான உடலமைப்பைக் கொண்ட கண்டிப்பான மனிதர். அவர் தன் கண்களால் என் இருதயத்தை ஊடுருவ முயன்றார். என்னிடம் பல கேள்விகளைக் கேட்டார். கடைசியாக நான் எனது பெயரைக் கூற வேண்டும். அவர் வட உகண்டாவிலிருந்து வந்திருந்ததால் எனது பெயரை உச்சரிப்பது அவருக்குக் கடினமாக இருந்தது. அவருடைய இயலாமை என் மீது கோபமாய்த் திரும்பியது. நான் தலையைத் தாழ்த்திக் கொண்டேன்.

"ஏய் உன்னைத்தான், சீனர்களைப் போல இடுங்கிய கண் உள்ளவளே என்னை நிமிர்ந்து பார்!" அவர் உறுமினார்.

சடுதியில் நான் தலை உயர்த்திப் பார்த்தேன். என் நாடி நரம்புகள் புடைத்துக்கொண்டன. என்னை வரிசையிலிருந்து முன்னே வரச் சொன்னவர் "சைனா லெப்ட்-ரைட்- சைனா லெப்ட்-ரைட்" என எனக்குக் கட்டளையிட்டார். நான் எல்லோர் கண் முன்னும் தண்டனையை அனுபவிக்க வேண்டியிருந்தது. 'சைனா' என்ற புதிய விநோதமான பெயர் எனக்கு ஒரு பிரபல்யத்தை எனது சக போராளிகளிடம் பெற்றுத் தந்தது. பல குழந்தைகள் என்னுடன் சிநேகிதம் பாராட்டத் தொடங்கினர். பாஷை இடம் கொடுத்த வரைக்கும் நாங்கள் பேசிக்கொண்டோம்.

'கிகாண்டா', 'சுவாஹிலி' ஆகிய இரண்டு மொழிகளையும் நான் வேகமாகப் பயில வேண்டியிருந்தது. எனது மொழியான 'கினியான்கோலே'யை வெகுசிலராலேயே இங்கு புரிந்து கொள்ள முடிந்தது. இங்கு அதிகமான குழந்தைகள் 'பகண்டா' இனக்குழுவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் 'கிகாண்டா' மொழி பேசுபவர்கள். 'சுவாஹிலி' ஓர் இனக்குழுவின் மொழியல்ல. முசேவெனி என்பவர் இதனை உகண்டாவின் தேசிய மொழியென அறிவித்திருந்தார். இதற்கு இரண்டு காரணங்களை அவர் முன்வைத்தார். ஒன்று பொது மொழியை நிறுவுவது, மற்றது இனக்குழு அடையாளங்களை இல்லாதொழிப்பது. அவர் இனக் குழுக்களுக்கு இடையிலான வித்தியாசங்களை மக்களிடமிருந்து அகற்றிவிட முயன்றார். "நாங்கள் எல்லோரும் ஒரு பொதுவான விடயத்திற்காக - எங்கள் விடுதலைக்காக மட்டுமே- போராட வேண்டும் " என்பதே முசேவெனியின் முழக்கமாயிருந்தது.

சைனா என்ற சிறுமி நீண்ட காலம் இராணுவப் பயிற்சியைப் பெறவில்லை. அவள் போராளிச் சிறுமியாகக் குறிப்பிடத்தக்களவு திறமையைக் காட்டியதற்காகவோ அல்லது மிக விரைவாகத் தனது பயிற்சிகளில் தேர்ச்சி பெற்றாள் என்பதற்காகவோ அல்லாமல் NRA யின் போர் முனைகளில் போராளிகள் அவசரமாகத் தேவைப்பட்டார்கள் என்ற காரணத்தினாலேயே போர் முனைக்கு அனுப்பப்பட்டாள். AK 47 துப்பாக்கியையே இன்னும் சரிவரத் தூக்க முடியாத சிறுமிகளில் ஒருத்தியான நான் ஒரு படைத் தளபதியின் பிரத்தியேக ஆயுத உபகரணங்களையும் பொருட்களையும் தூக்கிச் செல்லும் பணிக்கு நியமிக்கப்பட்டேன். நான் தளபதியின் ரவைக் கூடுகளையும் அவரின் சமையல் பாத்திரங்களையும் சுமந்து போர்முனைக்குச் செல்ல வேண்டியிருந்தது.

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு