குழந்தைப் போராளி - 23


அம்மா

நாங்கள் நீண்ட தூரம் நடந்ததன் பின்பாக இரண்டு பெண்கள் தூரத்தில் நடந்து வருவது தெரிந்தது. " ஆஹா நல்லது! அங்கே வருபவர்களில் ஒருத்தி உனது அம்மா" என எனது பஸ் நண்பர் சத்தமிட்டார். நான் அதிர்ந்து போய் வந்த வழியே திரும்பி ஓடிவிடலாமா என நினைத்தேன். அந்தப் பெண்கள் எங்கள் பக்கத்தில் வந்துவிட்டார்கள். எனது நண்பர் அவர்களில் ஒரு பெண்ணிடம் என்னைக் காண்பித்து நான் அவரைத்தான் தேடி வந்திருப்பதாகச் சொன்னார்.

நானும் அந்தப் பெண்ணும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம். அவரின் பார்வையில் நான் உறைந்து போனேன். பற்றீசியா படத்தில் காட்டிய பெண்ணிற்கும் இவருக்கும் சம்பந்தமே இல்லாத வித்தியாசமான தோற்றம். வயது வேறு அதிகமாயிருந்தது. உனது அப்பாவின் பெயர் என்ன? உனது சகோதரர்களின் பெயர்கள் என்ன? என அவர் கேள்விகளை அடுக்கினார். எனது மறுமொழிகளுக்கு ஒவ்வொரு முறையும் அவர் தனது புருவங்களை தூக்கினாரே தவிர வேறொன்றும் சொல்லவில்லை. என்னுடன் வந்தவரை அவர் அனுப்பிவிட எத்தனிக்க எனக்குப் பயம் பிடித்துக்கொண்டது. நான் அந்த மனிதருடனேயே திரும்பிப் போய்விடலாமா என யோசித்துக் கொண்டு நிற்கச் சிரித்தபடியே அந்தப் பெண் எனது கைகளைப் பிடித்துக்கொண்டார். தனது பெண் குழந்தைகளில் தனக்கு முன்னால் நின்று கொண்டிருப்பவள் எந்தக் குழந்தையென அவருக்கு நிச்சயமாகவே தெரிந்திருக்கவில்லை. அவரின் முகத்தில் அணு அணுவாய் மகிழ்ச்சி தொற்றி அது அவர் முகமெங்கும் பூரணமாய்ப் படர்ந்தது. அவர் எனது கையை வாஞ்சையுடன் பிடித்துக்கொண்டே நடக்கத் தொடங்கினார்.

"அந்த நாய் எனது குழந்தைகளை ஒருமுறை தன்னும் பார்க்க என்னை அனுமதிக்கவில்லை என்னால் உன்னை அடையாளமே கண்டுகொள்ள முடியவில்லை மகளே" அப்பாவைக் குற்றம் சாட்டியவாறே அவர் வேகமாக நடந்தார். நான் அமைதியாக அவருடன் நடந்தேன். இவர் எனது தாய். நான் உண்மையாகவே எனது அம்மாவைக் கண்டுபிடித்துவிட்டேன்.
மலர்களும் நிழல் தரும் மரங்களும் நிறைந்த பெரிய தோட்டத்தின் மத்தியிலிருந்த பெரிய வீடொன்றிற்கு நாங்கள் வந்து சேர்ந்தோம். அம்மா வேலையாட்களைக் கூப்பிட்டுக் கன்றொன்றை வெட்டி விருந்து சமைக்குமாறு உத்தரவிட்டார். அதன் பின்பு என்னைத் தனியாக விட்டுவிட்டு வந்த வழியிலேயே அம்மா திரும்பிச் சென்றார். வீட்டினுள் நுழைவதற்கு முன்பாக வீட்டை ஒருமுறை சுற்றி வந்தேன். வீட்டினுள் நுழைந்து அம்மாவின் கணவர் இருக்கின்றாரா என ஒவ்வொரு அறையாக எட்டிப் பார்த்தேன். வீட்டினுள் யாருமே இருக்கவில்லை. ஒரு அறையினுள் சென்றபோது மேசை மேல் பணம் கிடப்பதைப் பார்த்தேன். சில நிமிடங்கள் பணத்தைப் பார்த்துக்கொண்டே நின்றேன். திரும்பிப்போக எத்தனிக்கையில் 'ஏதாவது பிரச்சனைகள் வந்தால் பணம் உதவி செய்யும்' என எனது உள்மனம் சொல்லியது. கொஞ்சம் பணத்தினை எடுத்து வைத்துக்கொண்டேன்.

சிறிது நேரத்தில் அம்மா ஆண்களும் பெண்களுமாக ஒரு கூட்டத்தையே அழைத்து வந்தார். பெண்கள் பானைகளுடன் தங்கள் வேலையை ஆரம்பிக்க ஆண்கள் நெருப்பை மூட்டத் தொடங்கினர். அம்மா என நம்பப்பட்ட அந்தப் பெண் கூட்டத்தினரிடையே செல்வதும் ஓடி ஓடிக் கதைப்பதுமாகயிருந்தார். அந்தக் கூட்டத்தினிடையே என் பெயர் பலமாக அடிபட்டது.மெதுவாக இருள் பரவத் தொடங்கியது. விருந்தினர்களில் சிலர் மேசையில் உட்கார்ந்தனர். எஞ்சியவர்கள் தோட்டத்தில் உட்கார்ந்திருந்தனர். எல்லோருமே என்னைப் பார்த்துச் சிநேகிதமாகச் சிரித்தனர். ஆனாலும் அச்சம் என்னைவிட்டு அகன்றதாகயில்லை. இவர்கள் என்னைப் பார்த்து மகிழ்கின்றார்களா? அல்லது என்னையே தின்றுவிடப் போகிறார்களா? குழந்தைகளைச் சாப்பிடும் மனிதர்கள் இருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கின்றேன். மறுபுறத்தில் பார்தால் மேசை மீது இருக்கும் உணவை அவர்கள் சாப்பிட்டுக்கொண்டிருப்பது தெரிந்தது. எல்லோருக்கும் போதுமான அளவு உணவு வகைகள் மேசையில் குவிந்து கிடப்பதால் தற்சமயத்துக்குக் கவலையில்லை.

விருந்து முடிவடைந்து எல்லோரும் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிச்செல்ல இரவு வெகு நேரமாயிற்று. இப்போது இந்தப் பெண்ணுடன் நான் தனிமையில் விடப்பட்டுள்ளேன். இவர் தான் எனது அம்மா என உறுதியாகவே நம்பலாம். அம்மா என்னைப் படுக்கைக்குக் கொண்டுவந்து விட்டுவிட்டுத் தனது படுக்கை அறைக்குச் சென்றார். படுக்கையில் படுத்துக்கொண்டே விருந்துக்கு வந்திருந்த மனிதர்களைப் பற்றியும் அவர்கள் திரும்பி வந்து என்னைச் தின்பார்களோ என்றும் சிந்தித்தவாறே படுக்கையில் புரண்டுகொண்டிருந்தேன். வீட்டில் கேட்கும் சிறிய சத்தங்களை எல்லாம் கூர்ந்து கவனித்தேன். யாரோ கத்தியைத் தீட்டுவது போலல்லவா சத்தம் கேட்கிறது? தோட்டத்தில் காலடிச் சத்தமா கேட்கிறது? எல்லாச் சத்தங்களும் அடங்கியும் என் பதற்றம் குறையவில்லை. அது வரவரக் கூடிக்கொண்டே போயிற்று. ஒரு கணத்தில் சத்தம் போடாமல் எழுந்து மெதுவாகத் தோட்டத்தினுள் சென்றேன். பிறகு விறுவிறுவென வெளியே நடக்கத் தொடங்கினேன்.

எந்த வழியால் சென்றால் நேற்றிரவு சந்தித்த அந்த முதியவரின் வீட்டிற்குச் செல்லலாம்? பிரதான சாலையை நினைவில் கொண்டுவந்தேன்.அவருக்கு என் கதை முழுவதையும் சொல்லி அவரின் வீட்டிலேயேயே நான் நிரந்தரமாகத் தங்கிவிடலாம். அவருக்கான பணிவிடைகளையும் வீட்டு வேலைகளையும் என்னால் செய்ய முடியும். அந்த இரவில், அந்த அந்நியமான வழியில் நிலவும் நட்சத்திரங்களும் தான் எனக்கு நம்பிக்கை அளித்தன. தெருவிளக்குகளிலும் பார்க்க நட்சத்திரங்கள் தான் பிரகாசமாயிருந்தன. அவைகள் எனக்குத் துணைவரும் என நம்பிக்கொண்டு நடந்தேன். சிறிது நேரம் நடந்த பின்பு நான் போகும் வழி சரியானதல்ல எனத் தோன்றியது. அந்த முதியவரின் வீடு இன்னும் வரவில்லை. திரும்பி வந்த வழியே போவது நல்லதா? அல்லது இரவென்றபடியால் இடம் வேறுமாதிரித் தெரிகிறதா? நான் தொடர்ந்தும் நடந்தேன். களைப்பு என்னைத் தெளிவாகச் சிந்திக்கவிடவில்லை. கடந்த இரண்டு நாட்களாக ஒரு பெரிய பெண்ணப் போல வேசம் கட்ட வேண்டியிருந்தது. இப்போதோ ஒரு சோம்பேறியைப் போல இலக்கின்றி அலைந்து கொண்டிருக்கிறேன். நான் எங்கு செல்லவேண்டும்? மயக்க மருந்தை உட்கொண்டதைப் போலத் தலை சுற்றியது. ஆனால் நான் தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கவேண்டும்.

கடைசியில் தொடருந்து நிலையமொன்றை வந்தடைந்தேன். ஏறும் தளத்தில் நின்று கொண்டு அடுத்ததாக என்ன செய்யலாமென யோசித்தேன். ஒன்றுமே புலப்படாததால் அடுத்து வந்த ரயிலில் ஏறிக்கொண்டேன். அது எங்கு போகிறது? நான் எங்கு போகிறேன்?எதுவுமே எனக்குத் தெரியவில்லை. ஒரு பயணச் சீட்டை வாங்கியபின் தூங்கிப் போனேன். புகையிரதம் ஒரு தரிப்பிடத்தில் நின்ற போது எனது தூக்கம் மெல்லக் கலைந்தது.

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு