குழந்தைப் போராளி - 32


போரும் விடுப்பும்

துவரை யுத்தம் - மரணம் - அழிவு ஆகியவற்றைப் பற்றி நிறையவே சொல்லிவிட்டேன். எனினும் என் கதையில் இடையிடையே ரசமான சம்பவங்களும் நடைபெறாமலில்லை. நாங்கள் ஆயுதங்களைத் தாங்கி மரணத்தைத் தேடிச் சென்றுகொண்டிருக்கும் தருணங்களில் கூடப் பகடி சேட்டைகள் செய்யத் தவறுவதில்லை. இந்தப் பகடிச் சம்பவம் நாங்கள் லுக்காயா எனும் சிறு நகரத்தில் தங்கியிருந்தபோது நிகழ்ந்தது.

யுத்தத்துக்கு நடுவே, சில நாட்களுக்கு அரிதாகக் கிடைத்திருந்த ஒய்வை அந்தச் சிறு நகரத்தில் நாங்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடிக்கொண்டிருந்தோம். சாலையோரத்து மர நிழலில் நானும் தோழர்களும் குந்தியிருந்து சாலையில் போய் வருபவர்களைக் கவனித்துக்கொண்டிருந்தோம். அப்போது பருத்த தேகங்களைக் கொண்ட மூன்று பெண்கள் எங்களை நெருங்கி எங்களை மதுவருந்த வருமாறு அழைத்தனர். என்னையும் ஓர் ஆண் என்றே அவர்கள் நினைத்திருந்தனர். ஒர் ஆணாகத் தோற்றமளிப்பதில் எனக்கும் மகிழ்சியாகவேயிருந்தது. எனது தோழர்களிடம் இது பற்றி ஒன்றும் பேச வேண்டாமெனக் கேட்டுக்கொண்டேன். அவர்களும் நமட்டுச் சிரிப்புடன் தங்கள் வாய்களை மூடிக்கொண்டார்கள்.
மதுச்சாலையில் மேசை மேல் எதை வைத்தாலும் நாங்கள் குடித்துக் கொண்டேயிருந்தோம். மது அருந்துவது அதுதான் எங்களுக்கு முதல் முறை. மதுச்சாலையில் இருந்தவர்களுக்கும் எங்களை நன்றாகப் பிடித்துக்கொண்டது. எங்களிடம் சிரிப்புக்குப் பஞ்சமே இல்லை. அங்கிருந்தவர்கள் போட்டி போட்டுக் கொண்டு எங்களுக்கு மதுவை வாங்கிக் கொடுத்துக் கொண்டேயிருந்தனர். போதை ஏறுவதைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. எங்கள் மேலதிகாரிக்கு நாங்கள் அஞ்ச வேண்டியதில்லை. எங்களைக் கண்காணிப்பதை விட அவருக்கு வேறு 'முக்கியமான' வேலைகளிருந்தன.

போதை தலைக்கேறிய நிலையில் எங்களைக் கூட்டி வந்த பெண்கள் எங்களைத் தடவத் தொடங்கினர். என்னைத் தடவிக் கொண்டிருந்த பெண் 'உண்மை'க்குப் பக்கத்தில் வருவதற்கு முன்னமே நான் அவளின் கையைத் தட்டி விடுவேன். அவள் சிரித்துக்கொண்டே "பெண்களைக் கண்டு நீ பயப்பிடுகிறாய்" எனச் சொன்னாள். எனது தோழர்கள் குழாமோ விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருந்தது. அவர்களது நிலைமையும் அவ்வளவு நன்றாக இருக்கவில்லை. ஆனாலும் நாங்கள் பொறுமையுடன் சமாளித்துக்கொண்டிருந்தோம்.

பெண்களோ பொறுமையை இழந்துகொண்டிருந்தனர். அவர்களால் எங்கள் தொடைகளுக்கு நடுவே தடவாமல் இருக்க முடியவில்லை. நாங்களும் பொறுமையிழந்து விட்டோம். ஆத்திரம் தலைகளுக்கேற எழுந்து துப்பாக்கிகளை நீட்டி எங்களைத் தொந்தரவு செய்யக் கூடாதென அந்தப் பெண்களை மிரட்டினோம். அந்தப் பெண்கள் வெலவெலத்துப் போய்விட்டனர். இந்த நேரத்தில் ஒரு மூத்த போராளி மதுச்சாலைக்குள் நுழைந்தார். அவரது வாய் ஆச்சரியத்தில் திறந்து மூடிக் கொண்டதை என்னால் கவனிக்க முடிந்தது. வந்த வேகத்தில் திரும்பிக் கீழே தடுக்கி விழுந்து எழுந்து சென்ற அவர் ஒரு நொடியில் ஒரு அதிகாரியையும் அழைத்துக்கொண்டு மீண்டும் மதுச்சாலைக்குத் திரும்பி வந்தார். அதிகாரியோ முழு மப்பில் இருந்தார். அவர் தள்ளாடிக்கொண்டே "பொது மக்களுக்கு இடைஞ்சல் செய்யாதீர்கள்" என எங்களுக்கு அறிவுரை சொல்ல எங்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
மதுச்சாலைக்கு வெளியே எங்களை அழைத்து வந்த அதிகாரி "என்ன நடந்தது?" என விசாரித்தார். "அந்தப் பெண்கள் எங்களைப் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர்" என்றோம். அதை அவர் அப்படியே நம்பி விட்டார். அவரால் எங்களது செய்கையைப் புரிந்து கொள்ள முடிந்தது. "ஒரு குழந்தைக்குத் தைரியத்தையும் தன்நம்பிக்கையையும் ஆயுதம் மட்டுமே வழங்கும்" எனச் சொன்னவர் திடீரென வீதியின் நட்ட நடுவாகக் குந்திக்கொண்டு அடக்க மாட்டாமல் சிரிக்கத் தொடங்கினார். என்னைக் காட்டிக்கொண்டே "சைனாவையும் பலாத்காரம் செய்ய முயன்றார்களா?" எனக் கேட்டார்.

வீதிப் புழுதியில் விழுந்து கிடந்து சிரித்த அவரின் சிரிப்பு அடங்கியதும் நாங்கள் இன்னொரு மதுச் சாலையினுள்ளே போனோம் . திரும்பவும் அதே கதை தான். பல பெண்கள் எங்களைத் தேடி ஓடி வந்தனர். இங்கே என்னை வளைக்க முயன்ற புதிய பெண் வெகு அவசரக்காரியாக இருந்தாள். "உனது கவர்ச்சியான சிரிப்பு என்னை மயக்குகிறது, நீ என் அன்புக்குரிய பையன்" என்றெல்லாம் அவள் என்னிடம் புலம்பத் தொடங்கிவிட்டாள். எங்களுடன் கூடவே வந்திருந்த அதிகாரி அவளின் அலம்பலைக் கவனித்துவிட்டு நான் ஆணல்ல என்ற உண்மையை அவளின் தலையில் போட்டு உடைத்து விட்டார். அதன் பின்பு அங்கே நடந்தது நாங்கள் களத்தில் எதிரியைத் தாக்கும் வேகம், தீவிரம் என்பவற்றை ஒத்திருந்தன. அவள் எழுந்து சுற்றிச் சுற்றி நடந்து மேலும் கீழுமாக என்னை வெறித்துப் பார்த்தாள். பிடரியைச் சிலிர்த்துக்கொண்டு தாக்குதலுக்குத் தயாரான சிங்கம் ஒன்றைப் போல அவள் நின்றாள். ஆத்திரத்தில் அவள் துள்ளியபோது அவளது கனத்த முலைகள் மேலும் கீழுமாகத் துள்ளி விழுந்தன. அவளது வலிய தேகத்துக்குள் சிக்கி நான் நசுங்காமலிருக்க வேண்டுமானால் நான் இப்போது ஓட வேண்டும். அவளது ஆங்காரம் தோய்ந்த கர்ச்சனை என் முதுகுப்புறத்திலிருந்து கேட்டது. அவளது கூச்சலில் மதுச்சாலையின் கண்ணாடிகள் கூட உடைந்திருக்கலாம். என்னால் எவ்வளவு வேகமாக ஓடமுடியுமோ அவ்வளவு வேகமாக வெளியே ஓடினேன். என்னைத் துரத்தி வந்த அவள் தன்னிலும் பார்க்கத் தனது இரை வேகமாக ஓடும் வல்லமையுள்ளது என்பதைப் புரிந்துகொண்டிருக்க வேண்டும்.அவளின் கூச்சல் தேயத் தொடங்கியது. அவள் தனது திசையை மாற்றிக்கொண்டு வீதியில் ஒதுக்குப்புறமாயிருந்த இன்னொரு மதுச்சாலைக்குள் புகுந்து கொண்டாள்.

திடீரென எனது உற்சாகம் வடிந்து என்னுள் சினம் மூண்டது. இந்தச் சம்பவம் இன்னுமொரு பெண்ணைக் குறித்து என்னைச் சிந்திக்க வைத்தது. எனது தாயும் இப்படிச் செய்வாளா? கோபம் என் தலைக்கேறியது. எனது துப்பாக்கியால் எல்லோரது வாயினுள்ளும் சுட வேண்டுமென்ற வெறி வந்தது. என்னை நானே அடக்கிக்கொண்டேன். இந்தக் கொண்டாட்டங்களும் கூச்சல்களும் காதில் விழாத ஓர் இடத்தைத் தேடி ஒரு மரத்தினடியில் சாய்ந்து கொண்டேன். அந்த இரவில் எல்லோருமே தங்களுக்குத் துணைகளைத் தேடிக் கொண்டதாகவே எனக்குப் பட்டது. எனக்கோ தனிமை துணையிருந்தது.

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு