குழந்தைப் போராளி - 44


எதுவுமே இலவசமல்ல

ரொனால்டின் கண்களில் பட்டுவிடாமலிருக்க நாங்கள் காட்டு வழியூடாக நடந்து சென்றோம். சிறிது தூரம் தான் சென்றிருப்போம், எனக்கு வழித்துணையாய் வந்தவனின் நடவடிக்கைகளில் வித்தியாசங்கள் தோன்றுவதை நான் கவனித்தேன். தயக்கத்துடன் நான் கால்களை இழுத்துக்கொண்டு நடந்தேன். அவன் என்னுடன் பேசிய முறையும் என் சந்தேகத்தை வலுவாக்கியது. இவன் எனக்காக இரக்கப்படுபவனல்ல. காட்டு வழியில் பாதியை நாங்கள் கடந்திருந்த போது அவன் எனது கையைப் பிடித்து நிறுத்தி 'இப்போது இங்கேயே நீ என்னுடன் படுக்க வேண்டும்! நீ சம்மதிக்காவிட்டால் உன்னைப் படுக்க வைக்கும் வழி எனக்குத் தெரியும்' என்று மிரட்டினான். தான் கேட்டதைச் "செலுத்துவது" முறையானதும் மலிவானதும் என்பது அவனது நியாயம். அவனிடமிருந்து தப்பி ஓடுவதற்கான வழி ஏதாவது இருக்கிறதா எனப் பார்த்தேன். இருண்ட வனம் தனது இரகசியங்களைத் தனக்குள்ளேயே புதைத்து வைத்துக்கொண்டிருக்கிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக ஓரிரு சூரியக் கதிர்கள்தான் இருண்ட காட்டுக்குள் இலைகளை ஊடறுத்து நெளிந்துகொண்டிருந்தன. எந்த அலறலும் அடுத்த மரம் வரைதான் கேட்கும். யாருமே எனது அலறலைக் கேட்டு வரப் போவதில்லை, யாருமென்னைக் காப்பாற்றப் போவதில்லை.

எனது முந்தைய இழிவுகளை எதுவித எதிர்ப்புகளும் காட்டாமல் நான் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை. ஆனால் இப்போது எதிர்த்துப் போராடுவதென்று முடிவெடுத்துக் கொண்டேன். எனது வாழ்விற்காக நான் போராடப் போகிறேன். நானும் அவனும் எதிரெதிராக ஒருவர் முகத்தை ஒருவர் உற்றுப் பார்த்தவாறே நின்றுகொண்டிருந்தோம். பயிற்சி இராணுவத்தினர் தங்கள் பயிற்சிக் காலம் முடியும் வரை எந்தவிதமான பாலியல் தொர்புகளும் வைத்துக்கொள்ளக் கூடாது என்றொரு 'விதி' இருப்பது எனக்குத் தெரியும். நான் என் குரலில் ஒரு நெகிழ்ச்சியை வரவழைத்துக்கொண்டு அவனிடம் 'நீ கேட்பதைக் கொடுப்பதற்கு எனக்கும் விருப்பம்தான் ஆனால் அதன் பின்விளைவுகளைப் பற்றியும் நீ யோசித்துப் பார்க்க வேண்டும். எனக்குச் சிபிலிஸ் நோயுண்டு. என்னுடன் பாலியல் தொடர்பு வைத்துக் கொண்டால் அது உன்னையும் தொற்றிக்கொள்ளும்' எனச் சொன்னேன். உடனேயே அவனின் பேச்சும் நடவடிக்கைகளும் தலைகீழாக மாறின. அவன் எனது வெளிப்படையான பேச்சிற்கு நன்றி கூடச் சொன்னான். மெல்ல மெல்ல என் மனம் பிரச்சினையிலிருந்து விடுபட்டு இலேசானது. அவன் என்னை ரயில் நிலையத்தில் விட்டுச் சென்ற பின்புதான் என்னை நடுக்கம் பிடிக்கத் தொடங்கியது.

அம்மாவின் வீடு நோக்கிச் செல்லும் வழி முழுவதும் நான் அழுதுகொண்டும் சிரித்துக்கொண்டும் பயணித்தேன். அந்த இரவில் எனது அம்மாவின் அரவணைப்பில் அவரது மார்பு மீது தலைவைத்து ஒரு கைக் குழந்தையைப் போலத் தூங்கினேன். அது என்னவொரு நிம்மதியான உணர்வு! என்னவொரு உன்னதமான தருணம்! நான் ஏன் வீடு திரும்பினேன் என்று அம்மாக்கு நான் எதுவுமே சொல்லவில்லை. ஏனெனில் அம்மாவே தன்னைச் சுற்றியுள்ள பிரச்சினைகளுக்குள் அமிழ்ந்து கிடக்கையில் நான் எனது சுமைகளையும் உடனடியாகவே அவரின் தலையில் ஏற்றி வைக்க விரும்பவில்லை.தவிரவும் பிரிவதும் சேர்வதும் மறுபடியும் பிரிவதுமாய் நாங்கள் வாழ்ந்துகொண்டிருந்த பரிதாப வாழ்க்கை உண்மையிலேயே அம்மாவையும் என்னையும் மனதால் முழுமையாக நெருங்க விடவில்லை, ஒரு நெருக்கமான உறவை எங்களால் வளர்க்க முடியவில்லை.

1 மறுமொழிகள்:

Anonymous Anonymous மொழிந்தது...

http://unicef.fr/images/unicef/40ans_Petition.pdf

Tue Nov 14, 05:38:00 PM 2006  

Post a Comment

<< முகப்பு