குழந்தைப் போராளி - 45



குடும்பச் சங்கிலி

சில நாட்களின் பின் அம்மா என்னைக் கம்பாலாவிற்குத் தனது சகோதரனொருவனிடம் அழைத்துச் சென்றார். அம்மாவின் சகோதரனுக்கு இருபத்தைந்து வயதிருக்கலாம். அவரின் பெயர் கராவெல். அவர் 21வது படையணியில் ஓர் அதிகாரியாகக் கடமையாற்றினார். உகண்டாவின் சர்வதேச விமான நிலையம் 'என்டபே'யின் பாதுகாப்புப் பணியில் 21வது படையணி ஈடுபடுத்தப்பட்டிருந்தது. உடனடியாகவே நானும் மாமாவும் ஒருவருடன் ஒருவர் ஒத்துப் போனோம். நான் மாமாவுடன் தங்கியிருப்பதைச் சொந்த வீட்டிலிருப்பது போலச் சுதந்திரமாக உணர்ந்தேன். என்னைத் தன்னுடன் வைத்திருப்பதில் மாமாவுக்கும் மகிழ்ச்சி தான் என்பதையும் தெரிந்துகொண்டேன். அவர் எல்லாவகையிலும் என்னை மரியாதையாகவே நடத்தினார்.

எனது மாமன் ஒரு திறமையான தலைவர், மிகுந்த மதிநுட்பமுள்ளவர், மிகவும் கவர்ச்சியான தோற்றம் கொண்டவர். குமரிகள் அவர் மீது படையெடுத்தனர். அவரது வாழ்கை இனிமையாகவே கழிந்தது. வாழ்க்கையைப் பற்றிய கவலையே அவரிடமில்லை. எங்கள் குடும்பத்தில் யாரிடம்தான் அந்தக் கவலையிருந்தது? இவரும் அவர்களைப் போலவே கையில் கிடைத்ததையெல்லாம் செலவழித்துக்கொண்டிருந்தார்.

ஒருநாள் நானும் மாமாவும் வீட்டின் முன்னே உட்கார்ந்து கதைகள் பேசிக்கொண்டிருந்தோம். நான் அவரது சுருண்ட தலைமுடிகளை அளைந்து விளையாடிக்கொண்டிருந்தேன். திடீரென ஓர் இளம்பெண் வேகமாக எங்கள் முன் வந்து நின்று 'இப்போது இந்தப் பெட்டை நாயும் உனது வைப்பாட்டியாகிவிட்டாளா?' எனப் பைத்தியம் பிடித்தவள் போல மாமாவைப் பார்த்துக் கத்தினாள். மாமா எந்தவிதத் தயக்கமுமின்றித் தனது பிஸ்டலை உருவி அந்தப் பெண்ணின் மார்பில் சுட்டார். 'இவள் எனது மகள்' என இரத்த வெள்ளத்தில் துடித்துக்கொண்டிருந்த அந்தப் பெண்ணிடம் என்னைக் காட்டிச் சொன்னார். அம்புலன்ஸ் வந்து காயப்பட்ட பெண்னை எடுத்துச் சென்றது. நல்லவேளையாகக் கடுங் காயமடைந்த பெண் உயிர் தப்பினாள். கராவெல்லின் மீது எந்தக் குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை. இதிலிருந்தே இராணுவத்தினரின் வானளாவிய அதிகாரத்தைத் தெரிந்து கொள்ளலாம்.யாரிடம் அதிகாரமுள்ளதோ அவர்கள் மற்றவர்களின் வாழ்கையை நிர்ணயிக்கின்றனர்.

இந்தச் சம்பவத்தின் பின் கராவெல்லின் நடத்தை வித்தியாசப்படத் தொடங்கியது. உதாரணமாக நான் இராணுவச் சீருடை அணிவதில் அவருக்கு விருப்பமில்லை எனப் பல தடவைகள் சொன்னார். அது என்னைக் குழப்பியது. இவர் என்னிடமிருந்து எதை எதிர்பார்க்கிறார்? வேறெந்த உடையைத்தான் நான் அணிந்துகொள்வது? என்னால் நிறைவேற்ற முடியாத வேண்டுகோள்களை அவர் என்னிடம் வைக்கின்றார். அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பது போல நான் சாதாரண உடைகளை அணிவதை முற்றாகவே கைவிட்டேன். இப்படியே சில நாட்கள் சென்றன. ஒருநாள் வேலை முடிந்து வந்த அவர் என்னை இராணுவ உடைகளைக் களைந்துவிட்டு வேறு உடைகளை அணியச் சொன்னார். எனது சகோதரி மார்ஜி பொன்பொன்ஸ் என்னை அழைத்துச் செல்வதற்காக அன்று மாலை அங்கே வரவிருப்பதாக மாமா சொன்னார். மார்ஜி என்னை மறுபடியும் பாடசாலையில் சேர்த்துவிட முயற்சி செய்வதாகத் தெரிந்தது. இது என்னை மிகவும் வருத்தமடையச் செய்தது. எனது சகோதரிக்குப் போதுமானளவுக்குப் பிரச்சினைகள் ஏற்கனவேயுள்ளன. அத்தோடு நானும் சேர்ந்து கொண்டால் இருவரது பிரச்சினைகளையும் நிச்சயமாக அவளால் சமாளிக்க முடியாது. ஆனால் மார்ஜி சொன்னது போலவே அன்று பின்னேரம் வந்தாள். கராவெல் என்னை எனது பொருட்களை எடுத்துக் கொள்ளும்படி சொன்னார். எனது உடுப்புக்களுக்கிடையில் இராணுவச் சீருடை ஒன்றையும் மறக்காமல் கடத்திச் சென்றேன்.

எனது கணிப்பீடுகள்கள் சரியாகவேயிருந்தன. அவளது வீட்டில் குளியலறை இல்லை. கழிப்பறையும் வீட்டிற்கு வெளியேதான் இருந்தது. இரவில் வரவேற்பறைச் சோபாவில் தான் என் படுக்கை. அது போதாதென்று வீட்டுக்காரி வேறு எனது வாழ்கையை இன்னும் துன்பமாக்கிக் கொண்டிருந்தாள். வயதிலும் உருவத்திலும் கிட்டத்தட்ட என் பாட்டியைப் போலவேயிருந்த அவள் சாதாரண தொனியில் என்றுமே கதைத்ததில்லை. இரவு பகலாகக் கத்திக்கொண்டும் குத்தி முறிந்துகொண்டுமிருப்பாள். தன்னை ஓர் அரசியைப் போல நடத்த வேண்டும் என்பது அவளது கட்சி. அவள் தனது தர்பாரில் இழிவில் உழலும் அடிமை என்ற பாத்திரத்தையே எனக்கு வழங்கியிருந்தாள். அந்த இம்சை அரசி நான் தன்னை இடையறாது மகிமைப் படுத்திக்கொண்டேயிருக்க வேண்டுமென்று ஆசைப்பட்டாள். நாளடைவில் அவளை நான் முழுமையாக வெறுக்கத் தொடங்கினேன்.

பாடசாலையிலும் எனக்கு அனுமதி கிடைக்கவில்லை. எனது சகோதரி கம்பாலாவின் அரச பாடசாலைகளினது எல்லாப் படிகளிலும் ஏறி இறங்கிவிட்டாள். எல்லாப் பாடசாலைகளிலும் ஒரே பதில்; காத்திருக்க வேண்டியவர்கள் பட்டியலில் எனது பெயர் பதியப்பட்டுள்ளது. இவ்வாறாக ஒரு மாதம் ஓடிப்போய் விட்டது. அதுவே எனக்கு ஒரு வருடம் போலத் தெரிந்தது. நேரமோ சவ்வு மிட்டாய் போலத் தொங்கிக்கொண்டு கிடந்தது. என்னால் வீட்டுக்குள் தனிமை நெருப்பில் அவிய முடியவில்லை. நான் இப்போது ஏதாவதொரு வழியைக் கண்டுபிடித்தாக வேண்டும். நான் கம்பாலாவிற்கு அருகாமையிலிருக்கும் இராணுவத் தளங்களின் விலாசங்களை இரகசியமாகத் தேடத் தொடங்கினேன். எனது சகோதரி என்னை ஒரு பாடசாலையில் சேர்த்துவிடத் தன்னாலான மட்டும் முயன்று கொண்டுதான் இருக்கிறாள். ஆனால் நான் பொறுமையை இழக்கத் தொடங்கி விட்டேன்.

ஒருநாள் காலையில் மார்ஜி வேலைக்குப் புறப்பட்டுச் சென்றதன் பின்னாக நான் குளிக்கத் தொடங்கினேன். குளிக்கும் போது என் கால்களிடையே இரத்தம் பெருகுவதைக் கண்டேன். ஆனால் எனது உடலில் வலியிருக்கவில்லை. நேற்று என்ன நடந்ததென்று தலையை உடைத்துக்கொண்டு யோசித்தேன். என்னால் எதையுமே ஞாபகத்திற்குக் கொண்டுவர முடியவில்லை. மண்டையைக் குடைந்து குடைந்து யோசித்துப் பார்த்தேன், எதுவுமே பிடிபடவில்லை. நேரம் செல்லச் செல்ல என்னைப் பயம் பிடிக்கத் தொடங்கியது. வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டுமென நினைத்தேன். ஆனால் வெட்கம் என்னைத் தடுத்தது. அத்தோடு எனக்கு உடலில் வலியுமில்லை. குற்ற உணர்வுடன் என்னைக் காட்டிக் கொடுக்கக் கூடிய தடயங்களைத் தோட்டத்தில் குழி தோண்டிப் புதைத்துவிட்டு மீண்டும் படுத்துத் தூங்கிவிட்டேன். நான் தூக்கம் கலைந்து எழுந்து பார்த்தபோது நான் படுத்திருந்த சோபாவில் இரத்தம் பெருகிக் கிடந்தது. நான் அச்சத்தால் உறைந்து போனேன். எனது சகோதரி என்னைக் கொல்லப் போகிறாள். நான் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டைவிட்டு ஓடிப் போனேன். பிரச்சினைகள் என் தலைக்கு மேற் போனால் நான் செய்வது அது தானே.

1 மறுமொழிகள்:

Anonymous Anonymous மொழிந்தது...

Enfants soldats, des machines à tuer
http://actionssolidaires.msn.fr/Decouvrir/CoupDeCoeur/enfancediap.asp

Tue Nov 14, 05:34:00 PM 2006  

Post a Comment

<< முகப்பு